Saturday, December 1, 2007

சமூகசேவைகள் அமைச்ர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை.– 29.11.2007

29 November 2007

* கட்டுரைகள்

கௌரவ சபாநாயகர் அவர்களே
விழிப்பு ஆசிரியரின் கருத்து பின்னால் வெளியிடப்பட்டுள்ளதுDauglas_0.jpg

சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் என்ற வகையில் எனது மக்களுக்கான பிரச்சினைகள் தொடர்பில் இங்கு நான் உரையாற்ற விரும்புகின்றேன்.எனது அமைச்சு இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்ற, ஏனைய சமூகத்தில் அவதானத்தை முழுமையாகப் பெறாத நிலையில் வாழ்ந்து வருகின்ற மக்களுக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்ற ஓர் அமைச்சாக செயற்பட்டு வருகின்றது.

முதியவர்கள், அங்கவீனமுற்றவர்கள், கணவரை இழந்தவர்கள் போன்றவர்களுக்கு இந்த சமூகத்தில் சுய முயற்சியுடன் நல்லதொரு வாழ்க்கையினை அமைத்துக் கொடுப்பதிலும் ஏனைய சமூகப் பணிகளிலும் எனது அமைச்சு அயராது பணியாற்றி வருகின்றது. இந்த நிலையில் இன்று வடக்கு கிழக்கிலே எமது மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி நிற்கும் சந்தர்ப்பத்தில் முதலில் அவர்களுக்கான அன்றாட பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டிய அவசர நிலையிலும் நாம் இருந்து வருகின்றோம்.

இம்மக்களது பிரச்சினைகளை இயன்றவரையில் தீர்ப்பதற்காகவே நான் அடிக்கடி யாழ் விஜயத்தை மேற்கொண்டு அம்மக்களை நேரில் சந்தித்தும் வருகின்றேன். அதுமட்டுமல்லாது புலிகளின் பல்வேறு உயிரச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல அரசியல் அலுவலகங்களை அமைத்து அம்மக்களுக்கான பணிகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றேன்.

அத்துடன் வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமை நாட்களையும் முழுமையாக ஒதுக்கி இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்ற அனைத்து மக்களுக்குமான எனது அமைச்சின் பணிகளையும் என்னால் இயன்ற ஏனைய பணிகளையும் மேற்கொண்டு வருகின்றேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!....

சத்தியங்கள் சாவதில்லை!

சத்தியங்களின் உண்மையுள்ள சாட்சியங்களும் வீழ்வதில்லை!

தனிமனித சர்வாதிகாரங்களின் சாம்ராச்சிய கனவுகள் மனித குலத்திற்கு எதிராக ஏவி விடப்படும் மனித வெடி குண்டுகளையும், மனித மண்டையோடுகளையும், மனித சதைத்துண்டுகளையும் எமது இலங்கைத்தீவின் தெருக்களெங்கும் வீசி எறிந்து வருகின்றன.

ஒரு சாதாரண குடிமகனில் இருந்து இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் வரை மனித இரத்தம் குடிக்கும் மானிட விரோதிகளின் கொடிய முகங்களை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குள் எமது தேசம் சிறைப்பட்டு கிடக்கின்றது. இத்தகைய ஒரு சூழலில்தான் இந்த வரவு செலவு திட்ட விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது.

தனிமனித பாதுகாப்பிற்கும், அரசியல் தலைவர்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கும் சவால் விட்டுக்கொண்டிருக்கும் இந்த யுத்த சூழலில் நிறைவேற்றப்பட இருக்கின்ற இந்த வரவு செலவுத்திட்டத்தை நான் இன்றைய யதார்த்த சூழ்நிலைக்குள் இருந்துதான் பார்க்கின்றேன்.இலங்கைத்தீவில் வாழும் அனைத்து இன மக்களினதும் சமூக பொருளாதார வளர்ச்சியை மட்டும் நோக்காக கொண்டு செயற்பட வேண்டிய நாம், இன்று இருக்கின்ற சமூக பொருளாதாரங்களை மேலும் சீரழிவு நிலைக்கு இட்டுச்செல்ல விடாது பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கின்றோம்.

முதலில் இருப்பதை பாதுகாக்க வேண்டும். பின்னர் அடுத்ததை நோக்கி நகர வேண்டும். இன்று இலங்கைத்தீல் வாழுகின்ற அனைத்து இன மக்களினதும் வாழ்வியல் உரிமைக்கும் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பது இந்த யுத்தமேயாகும். ஒரு இனத்தின் பெயரால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இந்த அழிவு யுத்தத்தை எதிர் கொள்ள வேண்டிய பொறுப்பில் முழு இலங்கைத்தீவுமே இருக்கின்றது. இத்தகைய துர்ப்பாக்கிய சூழலிருந்துதான் இந்த வரவு செலவு திட்ட விவாதத்தில் நான் பங்கெடுக்கின்றேன்.
முதலில் இந்த யுத்த சூழலை நாம் மாற்றியமைக்க வேண்டும். மனிதர்களின் உயிர் வாழும் உரிமைக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற சூழலை விமர்சிப்பதை விடுத்து, இந்த சூழலை மாற்றியமைப்பதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்வரவேண்டும். மக்கள் சேவையின் மகத்தான பணிக்கும், ஜனநாயகத்திற்கும், சமாதானத்திற்கும், அமைதிக்கும், தமிழ்பேசும் மக்களுக்களுக்கான அரசியலுரிமை சுதந்திரத்திற்குமான முன்னெடுப்பிற்கு விரோதமாக புலித்தலைமையின் யுத்ததாண்டவம் எந்த வகையில் துரோகமிழைத்து வருகின்றது என்பதை நேற்றைய அனர்த்தங்கள் மறுபடியும் ஒரு முறை உலகிற்கு எடுத்துக்காட்டியிருக்கின்றது.

என்மீது தற்கொலைக் குண்டுதாரியை ஏவிவிட்டு என்னை கொன்றொழிப்பதின் மூலம், மக்களின் நலன்களை ஏறி மிதித்து தங்களது ஏகத்தலைமை வெறியை வெற்றி கொள்ளலாம் என புலித்தலைமை கனவு காண்கிறது.கொழும்பில் மக்கள் நடமாடும் இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து மனித உயிர்களை பலியெடுப்பதின் மூலம் இனங்களுக்கிடையிலான பகமை உணர்வை தோற்றுவித்து அதில் அரசியல் இலாபம் தேடலாம் என கனவு காண்கிறது புலித்தலைமை!

புலித்தலைமை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த இரண்டு நோக்கங்களுமே ஒரு போதும் நிறைவேறப்போவதில்லை. புலித்தலைவர் பிரபாகரன் தான் விரும்பி உண்ணும் நரமாமிசம் இதுதான் என்று தனது பிறந்த நாளில் எனக்கும் இந்த தேச மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் காண்பிக்கும்பொருட்டே மனித வெடிகுண்டை என்னிடமும், வெடிகுண்டை நுகேகொடையில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

தற்கொலை குண்டுதாரிகளை ஏற்கனவே சந்தித்த அனுபவம் எனக்கு உண்டு. பலதடவைகள் புலித்தலைமை என்னை கொன்றொழிப்பதற்கு முயற்சி எடுத்திருக்கின்றது.புலித்தலைவர் பிரபாகரனின் எடுபிடிகளான தரகு கூட்டமைப்பினர் இந்த சபையில் இருப்பார்கள் என்று நான் எண்ணுகின்றேன்.

பிரபாகரனிடம் போய் சொல்லுங்கள். பனங்காட்டு நரி சலசலப்பிற்கு அஞ்சாது! பிரபாகரனின் சலசலப்பிற்கெல்லாம் ஒரு போதும் நான் அஞ்சப்போவதில்லை என்று புலித்தலைவர் பிரபாகரனிடம் போய் சொல்லுங்கள்.மரணம் ஒரு முறைதான் வரும். மரணத்திற்கு அஞ்சி எமது மக்களையும் மண்ணையும் விட்டு ஓடுவதற்கு நான் ஒன்றும் கோழை அல்ல என்று பிரபாகரனிடம் போய் சொல்லுங்கள்.

மனிதவெடி குண்டுகளை என் மீது ஏவிவிடுவதால் எமது மகத்தான மக்கள் பணியையும், எமது மக்களுக்கான அரசியலுரிமைச் சுதந்திரத்திற்கான பயணத்தையும் இடைநடுவில் நிறுத்துவதற்கு நாம் ஒன்றும் கொள்கை கோட்பாடு அற்றவர்கள் அல்ல என்று பிரபாகரனிடம் போய் சொல்லுங்கள். நேற்றைய தினம் எமது அமைச்சின் வெகுஜன தொடர்பு அதிகாரியாக பணி புரிந்து வந்த எமது இன்னுயிர் தோழர் ஸ்டீபன் பீரிஸ் அவர்களை புலிப்பாசிசம் பலியெடுத்திருக்கின்றது.

மக்களுக்காக உழைத்த அந்த மகத்தான தோழனுக்கு இந்த சபையில் நான் அஞ்சலியையும், மரியாதையையும் செலுத்துகின்றேன். கொழும்பு நுகேகொட பகுதியில் வைத்து பாசிசப்புலிகளின் குண்டு வெடிப்பினால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களையும், சிங்கள சகோதரர்களையும் இந்த சபையில் நினைவுகூர விரும்புகின்றேன். அவர்களது உறவினர்களுக்கும் சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கும் தமிழ்பேசும் மக்களின் சார்பாகவும், அவர்கள் சார்ந்துள்ள ஈ.பி.டி.பியின் சார்பாகவும் ஆறுதல் கூறுகின்றேன்.

இதேபோல் வடக்கு கிழக்கில் புலித்தலைமையால் தினம் தினம் கொல்லப்பட்டும், பழியெடுக்கப்பட்டும் வரும் மனித உயிர்களை இந்த சபையில் நினைவு கூருகின்றேன். அவர்களது உறவுகளுக்கு ஆறுதல் கூறுகின்றேன். மரணத்தின் விளிம்பில் இருந்து தப்பித்து வந்திருந்த என்னை ஆனந்த முகத்தோடு ஆரத்தழுவி வரவேற்ற இந்த சபையின் அமைச்சர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், கௌரவ ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களுக்கும் தமிழ்பேசும் மக்களின் ஜனநாயகத் தலைமைக்கு வழங்கும் மரியாதை குறித்து நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

புலித்தலைமை தமிழ்பேசும் மக்களுக்காக போராடுவதாகக் கூறிக்கொண்டு அழிவு யுத்தம் நடாத்தி வருகின்றது. அவர்கள் கூறுவது போல் அவர்கள் தமிழ்பேசும் மக்களுக்காகவே ஆயுதம் ஏந்தி நிற்பது உண்மை என்றால், தமிழ்பேசும் மக்களுக்காகவே உழைத்து வந்த தமிழ் தலைவர்களை புலித்தலைமை ஏன் கொன்றொழித்து வருகின்றது என நான் கேட்க விரும்புகின்றேன்.

தேசியத்தலைவர் அமிர்தலிங்கத்தை கொன்றதின்மூலம் தமிழ்பேசும் மக்களுக்கு விமோசனம் கிடைத்தா?....

ரெலோ தலைவர் சிறீசபாரத்தினத்தைக் கொன்றதின்மூலம் தமிழ்பேசும் மக்களுக்கு விமோசனம் கிடைத்ததா?....

எமது தோழர் பத்மநாபாவை கொன்றார்கள் அதன்மூலம் தமிழ்பேசும் மக்களுக்கு விமோசனம் கிடைத்ததா?....

யோகேஸ்வரனை, சறோஜினி யோகேஸ்வரனை, மூதூரின் விடிவெள்ளி தங்கத்துரையை, கிழக்கின் இளந்தலைவர் விமலன் சௌந்தரநாயகத்தை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலத்தை, அதிசிறந்த புத்திஜீவியான நீலன் திருச்செல்வம், முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் என பல்வேறு அரசியல் சக்திகளை புலித்தலைமை கொன்றொழித்தது. தமிழ்பேசும் மக்களுக்கு விமோசனம் கிடைத்துவிட்டதா என்று நான் இந்தச் சபையில் கேட்க விரும்புகின்றேன்.

இந்தத் தலைவர்களை கொன்றொழித்ததின் மூலம் தமிழ்பேசும் மக்களுக்கான விடிவு காலத்தை புலித்தலைமை பின்னோக்கித் தள்ளி விட்டுள்ளது.என்மீது புலித்தலைமை மனிதவெடி குண்டை ஏவிவிட்டிருக்கின்றது. என்னை கொல்வதால், தமிழ்பேசும் மக்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்றால், அதற்காக நான் மரணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளவும் தயாராகவுள்ளேன்.

ஆனால் உண்மை அதுவல்ல. மக்களுக்காக உழைக்கின்ற ஒவ்வொரு தலைவர்களும் புலித்தலைமையால் கொன்றொழிக்கப்படும் போது எமது மக்களுக்கான அரியலுரிமை சுதந்திரம் என்பது பின்னோக்கியே தள்ளப்படுகின்றது. தமிழ்பேசும் மக்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்வை ஏற்படுத்தி கொடுக்கும் வரை, எமது மக்களை இலங்கை தீவில் சமஉரிமை பெற்ற சுதந்திர பிரஜைகளாக வாழ வைக்கும் வரை, என்னைப் புலித்தலைமையால் ஒருபோதும் கொன்றொழித்துவிட முடியாது.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

தமிழ்பேசும் மக்களின் பிரச்சினை வேறு! புலித்தலைமையின் பிரச்சினை வேறு!
இந்த உண்மையை புலித்தலைவர் பிரபாகரன் தனது வருடாந்த உரையின் மூலம் மறுபடியும் அடையாளப்படுத்தியுள்ளார்.கார்த்திகை 27 என்றால் யுத்தத்திற்கு பலிகொடுத்த தமது இயக்க உறுப்பினர்களின் புதிய எண்ணிக்கைக் கணக்கை உலகிற்கு தெரிவிக்கும் நாள் என்பதன் அர்த்தம் என்றே தமிழ்பேசும் மக்கள் கருதுகின்றார்கள்.

தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்காக நாமும் அன்று ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் தான்.தாடியை சவரம் செய்வதற்கோ, தலைமுடியை அழகுபடுத்துவதற்கோ, இளமையின் வசீகரத்தை அனுபவிப்பதற்கோ நேரம் அற்றவர்களாகவும் விருப்பம் இல்லாதவர்களாகவும் அந்த உரிமைப் போராட்டத்திற்காக நாம் ஓய்வொளிச்சலின்றி அல்லும் பகலும் உழைத்திருக்கின்றோம்.

உலகில் எங்கும் இல்லாதவாறு எமது இரத்தத்தை விற்றும் எமது தோழர்களுக்கு நாம் உணவு பரிமாறியிருக்கின்றோம். தெருவிலும், திண்ணையிலும், காட்டிலும், மேட்டிலும், சிறைகளிலும் எம் வாழ்நாட்களைக் கழித்திருக்கின்றோம். ஆயிரம் பூக்கள் மலர்வது போல், அங்கொன்றும் இங்கொன்றுமாக தோன்றிய பல்வேறு விடுதலைப்போராட்ட அமைப்புகளின் போராளிகளும் களமுனையில் தங்களை ஆகுருதி ஆக்கியிருக்கின்றார்கள். அந்த தியாக வரலாறுகள் கொச்சைப்படுத்துவதற்கான ஒன்றல்ல என்பதை இச் சபையில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

ஆனாலும், விடுதலையின் பெயரால், மக்களின் பெயரால், அராஜக மனநோய் பிடித்து, ஆயுத பலத்தைக்;கொண்டு, தங்களது ஏகத்;தலைமை வெறிக்காக, இலட்சியப் பிடிப்புடன் போராட முன்வந்த சக இயக்க போராளிகளையும், முரண்பட்டுநின்ற தமதியக்கப் போராளிகளையும், தலைவர்களையும் புலித்தலைமை கொன்றொழித்தது.

ஆயுதப்போராட்டம் அழிவுகளை மட்டும் தருவதாக முடிவற்று தொடர்ந்து கொண்டிருந்ததே தவிர, ஆக்கபூர்வமான எந்த நகர்வுகளையும் ஏற்படுத்தவில்லை. இதனால், எமது மக்களின் விடுதலைப்போராட்டம் திசைமாறிச் சென்றது.புலிகளின் ஏகத்;தலைமை வெறியினால் கொன்றொழிக்கப்பட்ட தலைவர்கள் தவிர, எஞ்சியிருந்த நாம் என்ன செய்யலாம் என்றும் எமது மக்களுக்கான அரசியல் உரிமைப் போராட்டத்தை எப்படி நகர்த்தலாம் என்றும் சிந்தித்துக் கொண்டிருந்த வேளைதான் இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.
அன்றிலிருந்து, இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்ற பொன்னான வாய்ப்பினை ஏற்று நாம் ஜனநாயக வழிக்கு திரும்பியிருப்பவர்கள். ஆனால் புலித்தலைமையும் ஜனநாயக வழிக்கு வந்திருப்பதுபோல் கபட நாடகம் ஆடிக்கொண்டிருந்தது.

1987 இல் அன்று இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ஏற்குமாறு புலித்தலைமையிடம் இந்திய இலங்கை அரசுகள் வேண்டுகோள் விடுத்தபோது புலிகள் இயக்கத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 651 பேர் மட்டும்தான். ஆனால், இன்று 19,887 பேர் தமது இயக்கத்தில் கொல்லப்பட்டிருப்பதாக புலித்தலைமை அறிவித்துள்ளது.

புலித்தலைமை அன்று இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை ஏற்றிருந்தால், அதற்கு பின்னர் பலிகொடுக்கப்பட்டுள்ள எமது 19,000 இளைஞர் யுவதிகளை இழந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்க முடியுமா?..இந்தியாவில் மத்திய மாநில அரசுகளுக்கு உரித்தான விடையங்களை உள்ளடக்கி, மத்திய அரசின் பட்டியல், மாநில அரசின் பட்டியல் மற்றும் பொதுவான பட்டியல் என வௌ;வேறாக வரையறுத்திருப்பதுபோல் ஈழத்தமிழ் பேசும் மக்களுக்கும் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க கூடிய மாகாண சபைக்கான ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. ஆனாலும், அந்த ஒப்பந்தத்தை ஏற்று நடைமுறைப்படுத்துவதற்கு புலித்தலைமை திட்டமிட்ட முறையில் காலத்தை இழுத்தடித்து, தட்டிக் கழித்தது.

தீர்வைக் கொடுத்தால் இடைக்கால நிர்வாகம் கேட்பது, இடைக்கால நிர்வாகத்தை கொடுத்தால் தீர்வு கேட்பது என்ற இரட்டை வேட சுயலாப அரசியல்தான் புலித்தலைமையின் வரலாறு. ஆகவேதான், மாகாணசபைத் தீர்வு வழங்கப்பட்டபோது புலித்தலைமை இடைக்கால நிர்வாகம் கேட்டது.

இன்று, தமிழ்பேசும் மக்களின் சார்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் பரந்துபட்ட ஒரு ஜனநாயக கட்டமைப்பை உள்ளடக்கியதும், சிவில் சமூகத்தின் ஆலோசனை சபையுடன் கூடியதுமான இடைக்கால நிர்வாக சபைக்கான கோரிகை;கையை முன்வைத்துள்ளோம். ஆனால், புலிகள் அன்று இடைக்கால நிர்வாகத்தை கோரியமைக்கான காரணம் வேறு. ஈ.பி.டி.பி இன்று இடைக்கால நிர்வாகத்தைப் கோரியிருப்பதற்கான காரணம் வேறு.

எங்கிருந்து தொடங்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என்ற நடை முறை யதார்த்தத்திலிருந்து எமது மக்களின் அரசியல் அபிலாசைகளின் இறுதி இலக்கு நோக்கி நகர்வதற்கே வடக்கு கிழக்கு மகாண சபைக்கான இடைக்கால நிர்வாகத்தை ஈ.பி.டி.பி யினராகிய நாம் இன்று கோரியிருக்கின்றோம். இந்த நடைமுறைச்சாத்தியமான கோரிக்கை என்பது எமது அயலுலக நட்பு நாடாகிய இந்தியாவாலும், சர்வதேச சமூகத்தினாலும், தென்னிலங்கையின் அனைத்து அரசியல் சக்திகளினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான ஒர் அரசியல் முன்னெடுப்புத் திட்டமாகவே கருதப்படுகின்றது.

ஆனால் புலித்தலைமையோ அதற்கு மாறாக, அன்று இடைக்கால நிர்வாகத்தை ஏற்கப்போவதாக கபட நோக்கத்தில் கோரிக்கை விடுத்திருந்தது. புலிகளால் கேட்க்பட்ட இடைக்கால நிர்வாகத்திற்கும் நீண்டகாலமாக ஈ.பி.டி.பி யினால் முன்iவைக்கப்பட்டிருக்கும் இடைக்கால நிர்வாக கோரிக்கைக்கும் இடையிலான அடிப்படை அரசியல் பண்பை புரிந்து கொள்ள வேண்டும் புலிகள் முன்வைத்த இடைக்கால நிர்வாக சபை கோரிக்கையானது புலிகளின் ஏக போக அதிகாரத்திற்கும், மக்களின் ஜனநாயக மறுப்புக்குமான ஒரு கோரிக்கையாகும்

ஆனால் ஈ.பி.டி.பி தொடர்சியாக வலியுறுத்தி வருகின்ற இந்த இடைக்கால சபை கோரிக்கையானது இலங்கையின் அரசியல் அமைப்பிற்குட்பட்டதும் ஜனநாயக விழுமியங்களின் அடிப்படைகளை ஆதாரமாகக் கொண்டதுமாகும் மக்களின் நலனை முதன்னைப்படுத்தி அவர்களின் நாளந்த பிரச்சினைகளை தீர்து இறுதி அரசியல் தீர்வுக்கான அடிப்படை அத்திவாரமாகும் எமது இடைக்கால தீர்வு கோரிக்கையாகும்.

இன்றைய பற்றியெரியும் சூலலின் வெம்மைக்குள் நின்று கொண்டு நமது நாட்டையும், நமது மக்களையும் அளிவிலிருந்து காப்பதற்கான மக்களுக்கு நம்பிக்கை தரும் எமது இந்த இடைக்கால நிர்வாக சபை கோரிக்கையை நடைமுறைப்படுத்த உடனடியாக ஆதரவு தருமாறு இந்த சபையில் அங்கம் வகிக்கும் அரசியல்தலைவர்களை கேட்டக்கொள்கின்றேன்

இந்த இருவேறு நோக்கங்களையும் ஒன்றுபடுத்தி இடைக்கால நிர்வாகத்திற்கான கோரிக்கை என்பது புலித்தலைமையினால்தான் முதன் முதலில் முன்வைக்கப்பட்டதாக புலிசார் ஊடகங்கள் ஒத்தூத முற்பட்டுள்ளன.

இடைக்கால நிர்வாகத்தின் பிரதம நிர்வாகியாக புலித்தலைவர் பிரபாகரனே இருக்கலாம் என்று அன்றைய ஜே. ஆர் அரசு விருப்பம் கொண்டிருந்தது. ஜே. ஆரின் இந்த விருப்பத்தை இந்திய தூதுவராக இருந்த கே. என். டிக்சித் அவர்கள் புலித்தலைவர் பிரபாகரனிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால் பிரபாகரன் அதற்கு சம்மதிக்க மறுத்துவிட்டார். முதலில் தீர்விற்கு மறுத்த பிரபாகரன் அதன் பின் முதலமைச்சர் பதவியையும் தான் ஏற்பதற்கு மறுத்திருந்தார்.

ஐ. ஆர் அரசும், இந்திய அரசும் இடைக்கால நிர்வாகத்திற்கு புலித்தலைமையின் விருப்பப்படி யாரையும் நியமிக்கலாம் என்னும் இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தன.அப்போது புலித்தலைமையின் மூன்று பேர் அடங்கிய பெயர்ப் பட்டியல் ஒன்றை இடைக்கால நிர்வாக சபைக்கான பிரதான நிர்வாகியின் நியமனத்திற்காக அறிவித்திருந்தது.அந்த பெயர் பட்டியலின்படி யாழ் மாநகரசபையின் ஆணையாளராக இருந்த சீ.வி.கே சிவஞானத்தை இடைக்கால முதல்வராக நியமிப்பதற்கு இலங்கை இந்திய அரசுகள் சம்மதித்திருந்தன. இது புலித்தலைமைக்கு பலத்த ஏமாற்றம். தாம் கேட்டிருந்த இடைக்கால நிர்வாகத்தை இலங்கை அரசு கொடுக்க மறுக்கும் என எதிர்பாரத்த புலித்தலைமைக்கு அரசு சம்மதித்தது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

தாம் கொடுத்த பட்டியலில் உள்ளவர்கள் எவரையும் இலங்கை அரசு நியமிக்கமாட்டாதென புலித்தலைமை எதிர்பார்த்திருந்ததாயினும் புலித்தலைமைக்கு அதிலும் ஏமாற்றம். சீ. வி, கே. சிவஞானத்தை நியமிப்பதற்கு அரசு உடன்பட்டுவிட்டது.

இதனால், எவ்வகைப்பட்டேனும் இந்த சமாதானம் என்று தாம் கருதும் பொறிக்கிடங்கில் இருந்து வெளியேற இன்னொரு கோரிக்கையையும் முன்வைத்தது புலித்தலைமை. சமாதானம் புலித்தலைமைக்கு பொறிக்கிடங்காகும். அரசியல் தீர்வு என்றால் புலித்தலைமைக்கு அருவருப்பு, யுத்தம் நடத்த வேண்டும், தினம் தினம் மனித உயிர்கள் சாகடிக்கப்பட வேண்டும். அந்த யுத்தத்தில் பரவும் பிணவாடையில் மட்டும்தான் புலித்தலைமையின் உயிர் மூச்சே தங்கியிருக்கின்றது. யுத்தம் இல்லையாயின் ஐனநாயகமும், பல் கட்சி தேர்தல் முறையும் வந்து தங்களது தனிக்காட்டு அராஜகத்தை விழுங்கிவிடும் என்ற அச்சம் புலித்தலைமைக்கு இருந்ததால் தான்; அரசு நியமித்திருந்த சீ. வி. கே. சிவஞானத்தின் பெயரை நிராகரித்துவிட்டு மட்டக்களப்பு அரசாங்க அதிபராக இருந்த என் பத்மநாதனை இடைக்கால நிர்வாக முதல்வராக நியமிக்குமாறு புலித்தலைமை கோரியது.

இச்சமயம் அரசாங்கம் சட்டப்பிரச்சினையை கிளப்பியது. அரசாங்க அதிபராக இருந்து கொண்டு அரசுக்கு விசுவாசமாக சத்தியப்பிரமாணம் எடுத்துவிட்டு அந்த சத்தியப்பிரமாணத்திற்கு துரோகமிழைத்திருந்த என். பத்மநாதன் மீதான நம்பிக்கையீனத்தை அரசு வெளிப்படுத்தியிருந்தது. பத்மநாதன் அரச படையினரால் கைது செய்யப்பட்டிருந்தவர்.

புண்ணுக்கு வலியா?... மருந்துக்கு வலியா?... பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என புலித்தலைமை கருதியிருந்தால் சிவஞானத்தின் நியமனத்தையே புலித்தலைமை ஏற்றிருக்கலாம், அல்லது இன்னொரு யெர்ப்பட்டியலை புலித்தலைமை வழங்கி நடக்கப்போகும் அழிவை தடுத்திருக்கலாம். ஆனால் புலித்தலைமை அவ்வாறு பொறுப்புடன் நடந்துகொள்ள விப்பம் கொண்டிருக்கவில்லை.

புலித்தலைமை கோரியதுபோல் பத்மநாதனை அரசு நியமிக்க சம்மதித்திருந்தால் சிவஞானத்தை நியமிக்குமாறு புலித்தலைமை குத்துக்கரணம் அடித்திருக்கும் என அப்போது அமைதி முயற்சியில் ஈடுபட்டிருந்த டிக்சித் அவர்கள்கூட தெரிவித்திருந்தார்.

இதுதான் புலித்தலைமை முன்வைத்திருந்த இடைக்கால நிர்வாக சபை கோரிக்கையின் உள்நோக்கம். புலித்தலைமை விரும்பியது போல் இந்திய அமைதிகாக்கும் படையினருடனான யுத்தம் தொடங்கியது.

651 புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை என்பது ஒவ்வொரு கார்த்திகை 27 இலும் எண்ணப்பட்டு இன்று 19,887 புலி உறுப்பினர்களின் கணக்கெடுப்பை அறிவிக்கும் கார்த்திகை 27 வந்திருக்கின்றது. 19887+1

இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு இன்று இருபது வருடங்கள். இந்த இருபது கார்த்திகை 27 களும் புலிகளுக்கு கொடுத்திருக்கும் மிச்சம் என்பது 19237 சமாதிகள் மட்டும்தான். இதில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் கொல்லப்பட்டிருந்த பொதுமக்களினதும், ஏனைய அமைப்புகளின் உறுப்பினர்களினதும் எண்ணிக்கைகள் அடங்கியிருக்கவில்லை.

87 இலங்கை இந்திய ஒப்பந்த முயற்சியிலிருந்து இன்று வரை புலித்தலைமை தன் உடம்பெங்கும் எண்ணையைப் பூசியவரறு விலகி விலகி ஓடிக்கொண்டிருக்கின்றது. அமைதிக்காகவோ, அரசியல் தீர்விற்காகவோ தம்மை யாரும் பிடித்திழுக்காமல் இருப்பதற்காகவே தமது உடம்பில் எண்ணையைப் பூசியுள்ளது புலித்தலைமை.

புலித்தலைமை முன்வைத்திருந்த இடைக்கால நிர்வாக சபைக்கான கோரிக்கையின் உள்நோக்கம் எது என்பதை பிரேமதாசா அரசுடனான தேன்னிலவின் போது அவர்களால் ஓதப்பட்ட மந்திர தந்திரங்களும், தேன்னிலவை முறித்துக்கொண்டு மீண்டும் யுத்தத்தை அரம்பித்திருந்த போக்குகளும் மறுபடியும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தப்பட்டிருந்தன.

பொதுஜன ஐக்கிய முன்னணி காலத்தில் சந்திரிகா அரசோடு பேசினார்கள். இடைக்காலமும் இன்றி, அரசியல் தீர்வும் இன்றி பூநகரி சோதனைச்சாவடியை நீக்கச் சொல்லி தங்களது சுயலாபத்திற்காக நிபந்தனை விதித்து யுத்தத்தை புலித்தலைமை தொடங்கியது. இன்று தமிழ்பேசும் மக்களின் வீட்டுக் கதவுகள், வாசற்;படிகள் தோறும் சோதனைச்சாவடிகள் முளைத்துவிட்டன.

சந்திரிகா அரசிடம் ஈ.பி.டி.பி இடைக்கால நிர்வாகத்திற்கான கோரிக்கையினை முன்வைத்திருந்தது. அது சாத்தியமாகிவிடும் என்று தெரிந்து கொண்டதும் தங்களது எடுபிடிகளான தமிழர் விடுதலை கூட்டணியை தூண்டிவிட்டு அவர்களுக்கு ஊடாக இடைக்கால நிர்வாகம் வேண்டாம், அரசியல் தீர்வுதான் வேண்டும் என்று பின்னணில் இருந்து அந்த முயற்சியை புலித்தலைமை குழப்பியடித்தது.

அதன்போது இடைக்கால நிர்வாக முயற்சியை கைவிட்டு அரசியல் தீர்வை முன்வைத்தது சந்திரிகா அரசு. அந்த அரசியல் தீர்விற்கு எதிராகவும் தனது எடுபிடிகளான கூட்டணியை தூண்டி விட்டு அதற்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் இறக்கி விட்டது புலித்தலைமை.

இது போலவே ரணில் விக்கிரமசிங்க அரசோடு ஆறு சுற்று பேச்சு நடத்திக்கொண்டு மறு புறத்தில் யுத்தத்திற்கான தயாரிப்பில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு மாற்று ஜனநாயக அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை நூற்றுக்கணக்கில் கொன்றொழித்தும் வந்தனர்.

இறுதியாக ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களது இன்றைய அரசோடு பேசுவதற்கு நோர்வோ போனர்கள், nஐனீவா போனார்கள். இதன்போதெல்லாம் அரசியல் தீர்வும் கேட்காமல், இடைக்கால நிர்வாகமும் கேட்காமல் அர்த்தமற்ற நிபந்தனைகளை மட்டுமே புலித்தலைமை திட்டமிட்டு விதித்திருந்தது.

தீர்வுக்கு விருப்பமின்றி திட்டமிட்டு தீர்வு முயற்சிகள் அனைத்தையும் புலித்தலைமை உடைத்து சிதைத்து எமது மக்களை இன்று அழிவு யுத்தத்திற்குள் தள்ளி விட்டுள்ளது.கிழக்கின் மாவிலாறு அணைக்கட்டை மூடிய புலித்தலைமை பாரிய யுத்தத்திற்கான கதவுகளை மட்டும்தான் திறந்து விட்டிருந்தது. இதனால் கிழக்கு மண்ணை முழுமையாக கைவிட்டு ஓடிப்போகவேண்டிய நிலைக்கே புலிகள் தள்ளப்பட்டனர்.

மொத்தத்தில் புலித்தலைமையின் விருப்பம் அழிவு யுத்தம் மட்டும்தான். அதற்காக பலி கொடுக்கப்பட்ட அப்பாவி மக்களான அடுத்தவர்களது பிள்ளைகளே இந்த 19,887 உயிர்களும் என்பதை இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.புலித்தலைமையின் யுத்த வெறியை ஏன் என்று தட்டிக்கேட்டவே சுதந்திரமற்றவர்களாக அந்த அழிவு யுத்தத்திற்கு பலியாகிப்போனவர்கள்தான் புலி உறுப்பினர்கள்.

அடுத்தவர்களது பிள்ளைகளை வாழவிடாது அவர்களுக்கு சாமாதி கட்டி வரும் புலித்தலைமை தங்களது பிள்ளைகளுக்கு மட்டும் வாழ வேண்டும் என்ற ஆசையை காட்டி வருகின்றது. அரசியல் தீர்வும் இன்றி, இடைக்கால நிர்வாகமும் இன்றி இருண்ட யுகத்தின் வெறுமைக்குள் இந்த வருடமும் கார்த்திகை 27 கழிந்திருக்கின்றது.

பழியெடுப்பும் நடக்கட்டும், பலி கொடுப்பும் நடக்கட்டும், என்பதே புலித்தலைமையின் விருப்பம்.அடுத்த கார்த்திகை 27 இல் இன்னும் சில ஆயிரம் புலி உறுப்பினர்களையும், அப்பாவி மக்களையும் யுத்த வெறிக்கு பலிகொடுத்த கணக்கெடுப்போடு தனது பங்கர் மாளிகைக்குள் இருந்து கொண்டு புலித்தலைவர் தனது வருடாந்த உரையை நிகழ்த்துவார்.

மனித உயிர்களை எண்ணிக்கொண்டிருக்கும் மயான காண்டத்தில் இருந்து மாற்றத்தை தரவல்ல எந்த திசை நோக்கியும் நகர முடியாது.19887 புலி உறுப்பினர்களினதும், சக இயக்கப் போராளிகளினதும், அறுபதினாயிரத்தையும் கடந்து விட்ட அப்பாவி மக்களினதும் உயிரிழப்புகளுக்கான பிரதான பொறுப்பை புலித்தலைமையே ஏற்க வேண்டும்.

புலித்தலைவர் பிரபாகரன் தனது வருடாந்த உரையின்போது பல உண்மைகளையும் பேசியிருக்கின்றார்.

இந்தியாவோ, அன்றி சர்வதேச சமூகமோ தங்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியிருப்பதாகவும், ஒரு காலத்தில் விடுதலைக்காக போராடிய நாடுகள் கூட தங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் பரிதாபகரமாக பேசியிருக்கின்றார்.யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு மீதும், சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நோர்வே மீதும் தங்களது கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் ஏற்கவில்லை என்று குற்றம் சுமத்தி தனது வருடாந்த உரையில் அழுது வடித்திருக்கின்றார் பிரபாகரன்.

அப்படியானால் புலித்தலைமை யாருக்கு நண்பர்கள் என்ற கேள்வி எழுகின்றது. தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் nஐயகாந்தன் அவர்கள் புலிகளால் கொன்றொழிக்கப்பட்ட எமது தோழர் பத்மநாபா அவர்களின் அஞ்சலிக்கூட்டத்தில் ஆற்றிய உரைதான் எனக்கு ஞாபகம் வருகின்றது.

புலிகள் சிங்கள மக்களுக்கும் நண்பர்கள் இல்லை. முஸ்லிம் மக்களுக்கும் நண்பர்கள் இல்லை, இந்தியாவிற்கும் நண்பர்கள் இல்லை, உலக நாடுகளுக்கும் நண்பர்கள் இல்லை, தமிழர்களுக்கும் நண்பர்கள் இல்லை, ஏன் தமக்கு தாமே நண்பர்கள் இல்லை என ஜெயகாந்தன் அவர்கள் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

தமிழக எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறிய இந்த உண்மையை, நாம் ஏற்றுக்கொண்ட இந்த உண்மையை புலித்தலைவர் பிரபாகரன் தனது வருடாந்த உரையின் போது தானாகவே தன்னையறியாமலேயே ஒப்புக்கொண்டிருக்கின்றார்.

உனது கால்களில் குத்திய முட்கள் ஒவ்வொன்றும் அடுத்தவன் தூவி விட்டவைகள் அல்ல. உனக்கு நீயே தூவிவிட்டவைகள்தான். என்றான் ஒரு கவிஞன். இது போலவே, புலித்தலைமை தமக்கு தாமே தோண்டிய பொறிக்கிடங்குதான் புலித்தலைமையை இந்தியாவிடம் இருந்தும், சர்வதேச சமூகத்திடமிருந்தும் இன்று தனிமைப்படுத்தியிருக்கின்றது.

வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பதுபோல புலித்தலைமை தாம் விதைத்த வினையை தாமே அறுவடை செய்து கொண்டிருக்கின்றது.இந்திய அமைதிப்படையோடு வலிந்து கட்டி யுத்தம் தொடராமல், அந்நாட்டு பிரதமராக இருந்த ரஐPவ் காந்தியை புலித்தலைமை கொன்றிருக்கா விட்டால் புலித்தலைவர் பிரபாகரன், உலக உறவுகள் அற்றுப்போன ஒருவராக பங்கர் மாளிகைக்குள் முடங்கிக்கிடக்க வேண்டிய பரிதாபம் நிகழ்ந்திருக்காது. புலித்தலைவர் பிரபாகரனுக்கு செங்கம்பள வரவேற்பே கிடைத்திருக்கும்.

ஆனாலும் மக்கள் விரோத நிலைப்பாட்டில் இருந்து அந்த சந்தர்ப்பங்களை தமது அராஐக வன்முறை மூலம் உடைத்து சிதைத்திருக்கும் புலித்தலைமை இன்று இந்தியாவின் ஆதரவு இல்லை என்றும், சர்வதேச சமூகத்தின் ஆதரவு இல்லை என்றும் அழுது வடிக்கின்றது. கிழக்கு திமோரின் விடுதலைக்கு சர்வதேச சமூகம் அதரவு வழங்கியிருக்கின்றது என்று தனது வருடாந்த உரையின் போது ஆதங்கப்பட்டிருக்கும் புலித்தலைவர் பிரபாரகரன் தனது கற்பனையில் தவழும் தமிழீழம் என்ற தனி இராச்சிய சர்வாதிகாரத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லை என்று புலம்பியிருக்கின்றார்.

கிழக்கு திமோரில் சொந்த இனத்தையே கொன்றொழிக்கும் அராஜகங்கள் நடந்திருக்கவில்லை. மக்களுக்காக போராடுவதாகக் கூறிக்கொண்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை அவர்களே மறுத்திருக்கவில்லை. ஒரு பிஞ்சுக்குழந்தையின் கண் முன்னால் தந்தையை கொன்று விட்டு அம்மாவிடம் போய் சொல் அப்;பாவை கொன்று விட்டோம் என்று கூறியனுப்பும் கொடுமைகள் நிகழ்ந்திருக்கவில்லை. ஆகவேதான் கிழக்கு திமோரின் விடுதலைக்கு சர்வதேச சமூகம் ஆதரவு வழங்கியிருந்தது.

இந்த உண்மைகளை விளங்கிக்கொள்ள முடியாத புலித்தலைமை எமது நாகரீக உலகத்தில் ஒரு காட்டு மிராண்டிகளின் தேசத்தை உருவாக்குவதற்கு சர்வதேச சமூகம் அதரவளிக்கவில்லை என்று அழுது வடிக்கின்றது.

கௌரவ சபாநாயகர் அவர்களே!....

நாகரீக உலகில் எங்கும் இல்லாதவாறு புலித்தலைமை மனித குலத்திற்கு விரோதமான செயற்பாட்டை முடுக்கி விட்டிருக்கின்றது. இது போன்ற மனித குலத்திற்கு எதிரான வன்முறை செயற்பட்டை தமிழ் பேசும் மக்கள் எதிர்க்கின்றார்கள்.ஆகவே தமிழ் பேசும் மக்களுக்கான நிம்மதியான வாழ்வையும், அரசியலுரிமைச் சுதந்திரத்தை அடையக்கூடிய நடைமுறைச்சாத்தியமான பாதையினையும் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஏற்றுக்கொண்டு விரைவாக செலாற்ற வேண்டும் என தமிழ்பேசும் மக்களின் சார்பாக நான் மனிதாபிமான அடிப்படையில் வேண்டு கோள் விடுக்கின்றேன்.

வணக்கம் அமைச்சர் திரு டக்ளஸ் தேவானந்தா அவர்களே

ஈழத்திருநாடு என்னும் இலங்கைத் தீவில் வாழ்கின்ற அனைத்து இனமக்களினதும் துரோகிகளான புலிப்பயங்கரவாதிகளை அழித்தொழிப்பதன்மூலமே நமது நாடும் மக்களும் எதிர்காலத்தில் இன, மத, மொழி வேறுபாடுகளை மறந்து சகோதரர்களாகவும், சமத்துவமான உரிமையுள்ளவர்களாகவும் வாழ்வதற்கான வழிவகைகளை உறுதிசெய்யமுடியும். இந்நிலையில் எமது பிரதேசமான கிழக்கு மாகாணம் வடமாகாணத்துடன் அரசியல் மற்றும் நிர்வாகரீதியாக மீண்டும் இணைவதனை நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். அதற்காக எனது அறிவு, ஆற்றல், பலம், செயற்பாடு அத்தனையையும் அயராது பிரயோகிப்பேன். நாம் வடமாகாண மக்களுக்கு எதிரானவர்களல்ல நாம் தமிழர்கள் என்னும் ஒரேகுடையின்கீழ் ஏனைய இனத்தவர்களைப்போன்று ஒற்றுமையுடன் வாழவேண்டுமென்பதே எனது அசைக்கமுடியாத நம்பிக்கை.
ஆனால் கடந்தகாலங்களில் வடமாகாண அரசியல்வாதிகள் எம்மீது குதிரைச்சவாரி செய்தமைபோன்ற நிலைமையினை மீண்டும் உருவாக ஒருபோதும் நாம் அனுமதிக்கமாட்டோம். இலங்கையில் உள்ள ஏனைய 7 மாகாணங்களின் நிர்வாகக்கட்டமைப்பு எவ்வாறு செயற்படுகின்றதோ அதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிர்வாகமும் தனித்தனியாகவே இயங்கவேண்டும் என்பதில் நான் உறுதியான நிலைப்பாட்டினைக் கொண்டவன் என்பதனையும் இங்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன். நன்றியுடன் --குமாரதுரை

No comments: