Tuesday, June 21, 2011

இலங்கை அரசை கலங்க வைத்துள்ள சனல்- 4 வீடியோ

எங்கும் சனல்4 என்பதே பேச்சு இலங்கையின் மானம் காற்றிலே போச்சு. தெருவிலே கேட்ட பாடல் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் திரும்பவும் பிறந்து வந்துவிட்டாரோ என்ற கேள்வியுடன் தெருவை எட்டிப் பார்த்த போது ஒருவர் இந்தப் பாட்டை ராகம், தாளம் பிசகாமல் பாடிக் கொண்டு வந்தார்.



சற்று வயது முதிர்ந்த அவரின் நடையில் தெரிந்த மெல்லிய தள்ளாட்டம் அவருள் காய் பிரட்டிக் கள்ளு வேலை செய்வதாக ஒரு ஊகத்தை ஏற்படுத்தியது.அவர் கிட்ட வந்ததும் "ஐயா நானும் நீங்களும் கூட இலங்கையர் தானே. எங்கடை மானம் ஏன் போகப் போகுது?'' எனக் கேட்டேன். அவர் பாட்டை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தார்.நான் "இப்படிப் பாடினால் நல்லாய் இருக்கும்'' என்று விட்டு "எவரும் சனல் 4 என்பதே பேச்சு, அரச மானம் காற்றிலே போச்சு'' என்று பாடுங்கோ என்றேன்.

"அடியடா சங்கை! நீதான் பாட்டுக்காரன்'' என்று விட்டு நான் கூறியதையே பாடிக்கொண்டு போக ஆரம்பித்தார். அந்த முதியவர் முதலில் பாடிய வரிகளைக் குறைகூறிவிடவும் முடியாது. ஏனெனில் இலங்கையின் ஆட்சியாளர்களாலும், படையினராலும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாகவோ, மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவோ குற்றச்சாட்டுக்கள் எழும் போது அவை இலங்கையின் இறைமைக்கும் நற்பெயருக்கும் எதிராகத் தொடுக்கப்படும் கணைகள் என்றொரு மாயை அரச தரப்பினரால் ஏற்படுத்தப்பட்டுள்ளதுஆனால் குற்றமிழைத்ததாகக் கருதப்படுவது சில அதிகார வெறிபிடித்த தனி நபர்களேயொழிய இலங்கை நாடோ அல்லது இலங்கை மக்களோ அல்ல.

அதைச் சிங்கள மக்கள் புரிந்துகொள்ளும் நாள்கள் வெகுதொலைவில் இல்லை என்பதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிட்டன. ஏனெனில் கடந்த காலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்கு முறைகளும் உயிர்ப்பலிகளும் இப்போ மெல்ல மெல்ல சிங்கள மக்கள் மேலும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறன.எனினும் ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலரும் தங்களுக்கு எதிராக நீட்டப்படும் குற்றச்சாட்டுகளை முழுநாட்டின் மீதும் சுமத்தப்படுவதாக ஒரு மாயையை ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றனர். அப்பணியைப் பல அமைச்சர்களும் அரச சார்பு ஊடகங்களும் அட்சரம் பிசகாமலே தொடர்ந்து வருகின்றன.

எப்படியிருந்த போதிலும் சனல் 4 வெளியிட்ட இலங்கையின் கொலைக்களம் என்ற இந்த வீடியோ நாடா உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி ஏற்கனவே இலங்கை அரசு தொடர்பாகக் கண்டனங்களை வெளியிட்டு வந்த மனித உரிமை அமைப்புக்களை மேலும் கோபாவேசமடைய வைத்திருக்கிறது.
இந்தப் படக்காட்சி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் மாநாட்டில் காட்டப்பட்ட போது பல பிரதிநிதிகள் கண்ணீர் விட்டனர். சிலர் காட்சிகள் சிலவற்றைப் பார்க்க முடியாது கண்களை மூடிவிட்டனர்.

காட்சி முடிந்த பின்பும் பலர் திகைத்துப் போய் எதுவும் செய்ய முடியாது உறைந்து போயிருந்ததாகக் கூடக் கூறப்படுகிறது.இதுவரை இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்கள் வெறும் குற்றச்சாட்டுக்களாகவும் அரசின் நிராகரிப்புகளாகவுமே விளங்கி வந்தன. ஆனால் ஐ.நா நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையோ அப்பிரச்சினையை இன்னொரு கட்டத்துக்கு உயர்த்திவிட்டது.

எவ்வளவுதான் இலங்கை அரசு அதற்குத் தனது எதிர்ப்பைக் காட்டியபோதும் அதை நிராகரிப்பதாகச் சவால் விட்டபோதிலும் உலக அளவில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுக்கள், ஆலோசனைகள் இலங்கை அரசினால் கூடப் புறமொதுக்க முடியாத வகையில் வலிமையாக இருந்தன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் போன்ற பல நாடுகள் உடனடியாகச் சர்வதேசத் தரம் கொண்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்த ஆரம்பித்தன. இந்த விடயத்தில் இலங்கைக்கு ஆதரவு வழங்கும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் கூட இலங்கையை ஐ.நா நிபுணர் குழுவுக்கு எதிரான குரல்களை அடக்கி வாசிக்கும் படி எச்சரித்துள்ளன. இலங்கை அரசு அந்த அறிக் கையைத் தாம் நிராகரித்துவிட்டதாகக் கூறியபோதும் ஐ.நா செயலர் பான் கீ மூன் தாம் இந்த அறிக்கை தொடர்பாக இலங்கையின் பதிலை எதிர்பார்த்திருப்பதாகவும் அதன் பின்பே அடுத்த கட்ட நடவடிக்கை பற்றித் தீர்மானிக்கப்படும் என அறிவித்துள்ளமையும் இலங்கை அரசைத் திக்குமுக்காட வைத்துள்ளது. இப்படியான நிலையில்தான் இலங்கையின் கொலைக்களம் என்ற சனல்4 வெளியிட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

கடந்த 14 ஆம் நாளன்று அது பகிரங்கமாகவே ஒளிபரப்பப்பட்ட போது உலகம் முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாற்புறமும் சர்வதேச அளவிலான கண்டனங்கள் எழுந்தன.குறிப்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரிட்டன் பிரதமர் டேவிட் கம்ரூன் இவை தொடர்பாக உடனடி விசாரணை நடத்தப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அதேவேளையில் பிரிட்டன் வெளி விவகார அமைச்சர் அந்த விடயங்கள் தொடர்பாக நேர்மையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இலங்கை அரசோ நாம் இது தொடர்பாகப் பரிசீலனை செய்ததாகவும் அவை போலியானவை எனவும் கூறி நிராகரித்துவிட்டது. ஆனால் சனல் 4 நிகழ்ச்சித் தயாரிப்பாளரோ இதில் சேர்க்கப்பட்ட ஒவ்வொரு காட்சியையும் ஆறு நிபுணர்கள் மூலம் பரிசோதித்து அவை அத்தனையும் உண்மையானவை எனக் கண்டறிந்ததாகவும் அடித்துக் கூறியுள்ளார்.

இது இலங்கை அரசின் மறுப்புரைகளுக்கு ஆப்பு வைக்கும் வகையிலேயே வலிமையானதாகத் தெரிகிறது. அதேவேளையில் வெளிவிவகார அமைச்சு இதில் காணப்படுபவை உண்மையானால் அது தொடர்பாக இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை செய்யும் எனத் தெரிவித்துள்ளது.எப்படியிருந்த போதிலும் சனல் 4 இலங்கை அரசை ஒரு சர்வதேச நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது என்பது உண்மை. ஆனால் இலங்கை அரசு உள்ளூரில் நாட்டின் இறைமை, அந்நிய சக்திகளின் சதி போன்ற வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு சிங்கள மக் ளைத் தன் பால் வைத்திருக்கும் அதேவேளையில் ராஜதந்திர ரீதியில் சர்வதேச அழுத்தங்களைத் தவிர்க்கச் சகல முயற்சிகளையும் மேற்கொள்ளும்.தன் பின்னால் இலங்கை மக்கள் அனைவரும் நிற்கிறார்கள் என்பதைச் சர்வதேசத்துக்குக் காட்ட ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையையோ, சனல் 4 வீடியோவையோ தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் எதிர்க்கின்றனர் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

விமல் வீரவன்சவும், ஜாதிக ஹெல உறுமயவும் சில அமைச்சர்களும் அரசின் போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் சிங்கள மக்கள் மறுக்கிறார்கள் எனவும் அரசுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் எனவும் ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த என்ன விலையைக் கொடுக்கவும் தயாராயுள்ளனர்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமோ சனல் 4 நிறுவனம் மேல் வழக்குத் தொடரப்போவதாகக் கூறித் தன் விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஏனைய அரசுடன் இணைந்துள்ள முஸ்லிம் தலைவர்களும் இந்த விடயத்தில் அரசு சார்பாகச் செயற்படுவார்கள். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோ, பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரனோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனோ ஐ.நா நிபுணர் குழுவுக்கு எதிராகவோ, சனல்4 இற்கு எதிராகவோ ஆயிரம் தரம் அறிக்கை விடவும் தயார்.

இன்று இலங்கை மக்கள் அனைவரும் ஐ.நா நிபு ணர்குழு அறிக்கையையும் சனல் 4 வீடியோவையும் எதிர்க்கிறார்கள் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தத் தடையாக இருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே. எலும்புத் துண்டுகளை எறிந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விலைக்கு வாங்கிவிட முடியாது என்பதையும் அரசு தெளிவாகவே தெரிந்து வைத்திருக்கிறது.

எனவே அடுத்த கட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அடக்கி வைப்பது. அதன் ஆரம்பம் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் மீது இராணுவச் சீருடை அணிந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள். ஏற்கனவே சிவஞானம் ஸ்ரீதரன் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியும், சரவணபவனுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலும் இங்கு கவனிக்கத்தக்கவை. தேர்தல் பிரசாரங்களைத் தடுப்பது, சாதாரண நடமாட்டங்களுக்கு அச்சுறுத்தல் விடுவது, பொதுமக்களை மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளும் தொடரலாம்.

இப்போது அளவெட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேல் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தேர்தல் நோக்கத்துடன் மட்டுப்படுத்தப்படக் கூடியதல்ல. தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் தமிழ் மக்களின் குரலை அடக்கி, அரசின் ஏவலாளர்களின் குரலை தமிழ் மக்களின் குரலாகக் காட்டக்கூடிய ஒரு நிலைமையை ஏற்படுத்தும் ஒரு நீண்ட நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பிரதியாகும். எனவே இந்த விடயத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் மிகமிக விழிப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

Wednesday, December 1, 2010

Friday, October 17, 2008

யுத்தத்தை நிறுத்திற்குத் தயார் இல்லை என மகிந்த இந்தியாவுக்கு செய்தி!

யுத்தத்தை நிறுத்திற்குத் தயார் இல்லை என மகிந்த இந்தியாவுக்கு செய்தி!
வெள்ளி, 17 அக்டோபர் 2008, 13:07 மணி தமிழீழம் [கொழும்புச் செய்தியாளர் மயூரன்]
தமிழக முதல்வர் மு. கருணாநிதி மற்றும் விடுதலைப் புலிகள் சார்பு அரசியல்வாதிகள் கோரியிருக்கின்றமைபோல வன்னி இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவோ, யுத்தநிறுத்தத்தை நடைமுறைப்படுத்தவோ இலங்கை அரசு தயாரில்லை. இதனை சிறி லங்கா ஜனாதிபதி இந்தியாவுக்கு அறிவித்திருக்கின்றார் என சிறி லங்கா அரசின் உத்தியோகபூர்வ ஊடகமான இலங்கை வானொலி இன்று காலை அறிவித்தது.

தன்னையும், தனது பாதுகாப்புச் செயலாளரையும், முப்படைத் தளபதிகளையும் கொல்வதற்கு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் தற்கொலைத் தாக்குதல் நபர்களை அனுப்பியிருக்கையில், தனது அரசு யுத்தநிறுத்தம் ஒன்றைச் செய்ய எண்ணவில்லை என்று ஜனாதிபதி கூறினார்.

இரண்டு வாரங்களுக்குள் வன்னி இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி, யுத்த நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி விடுத்த நிபந்தனைக்கு பதிலளிக்கும் விதமாகத் தாம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஜனாதிபதி இப்படித் தெரிவித்துள்ளார்.

தற்கொலைத் தாக்குதல் நபர்கள் கொழும்புக்குள் ஊடுருவி இருக்கையில் அவர்களின் இலக்கு இலகுவாக நிறைவேறுவதற்கு உதவும் வகையில் சிறி லங்கா அரசு வன்னி இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவேண்டுமா என்று ஜனாதிபதி இந்திய அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். 

தமிழ்நாடு அரசியல் வாதிகளால் வன்னிப் படை நடவடிக்கையை நிறுத்தச் செய்யமுடியாது என்பதை அரசு உறுதிபடத் தெரிவிக்கின்றது. ஆகவே விடுதலைப்புலிகளின் சதித்திட்டத்திற்குப் பலியாக வேண்டாம் என சிறி லங்கா அரசு இந்திய அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறது. 

வன்னியில் இடம்பெயர்ந்தோருக்கான நிவாரணத்தை வழங்குவதற்கு இயலுமான எல்லா நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது என்பதையும் அரசு மேலும் தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு இலங்கை வானொலியின் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டது.

Wednesday, October 15, 2008

உபகண்டத்தையே அதிரவைக்கும் தமிழக தீர்மானம்:

உபகண்டத்தையே அதிரவைக்கும் தமிழக தீர்மானம்: அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கம் நன்றி
[வியாழக்கிழமை, 16 ஒக்ரோபர் 2008, 05:51 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிகள் உபகண்டத்தையே அதிரவைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன என்று அமெரிக்க இலங்கை தமிழ்ச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
அமெரிக்க இலங்கை தமிழ் சங்கத்தின் அறிக்கை:



எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழக மக்களே, அரசியற் தலைவர்களே, மாண்பிமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களே!

முதற்கண், தமிழீழத் தமிழர்களின் சார்பில், அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கத்தினராகிய நாங்கள், எம் இதயங்களின் ஆழத்திலிருந்து உங்களுக்கு எம் நன்றியையும், மரியாதையும் தெரிவித்துக்கொள்ள அனுமதியுங்கள்.

பாசத்திற்குரியவர்களே!

நீறுபூத்த நெருப்பென உள்ளேயே கனன்றுகொண்டிருந்த நீங்கள், குமுறும் எரிமலையாக வெடித்துவிட்டீர்கள். நீண்ட இடைவெளிக்குப் பின்னர், ஒன்றாகக் கூடி - ஒருமித்த குரலில் - பலம் வாய்ந்த அரசியல் வார்த்தைகளில் - தமிழீழத் தமிழர்கள் மீது உங்களுக்கு இருக்கும் அன்பையும், அவர்களது சுபீட்சமான அரசியல் எதிர்காலத்தின் மீது உங்களுக்கு இருக்கும் அக்கறையையும் வெளிப்படுத்திவிட்டீர்கள்.

முதல்வர் கலைஞர் ஐயா அவர்கள் கூட்டிய அனைத்துக்கட்சி மாநாட்டில் திரண்டு, வரலாற்றுத் தீர்மானங்களை நிறைவேற்றி, வெறும் சொற்களால் மாத்திரமன்றி, காத்திரமான செயற்பாட்டு முடிவுகளினாலும் உப-கண்டத்தையே அதிர வைக்கும் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டீர்கள்.

கட்சிகளின் வரம்புகளைத் துறந்து, அரசியலின் முரண்பாடுகளை மறந்து, மாநிலத்தின் சுவர்களைக் கடந்து, நாட்டின் எல்லைக்கும் அப்பால் "இனத்தின் உணர்வால் இறுகப் பிணைக்கப்பட்ட தமிழர்கள் நாம்" என்பதை இந்த உலகிற்கு முரசறைந்து சொல்லிவிட்டீர்கள். "தேர்தல் வெற்றியை நோக்கமாகக் கொண்ட வெறும் அரசியல் விளையாட்டு இது" என்று எள்ளி நகையாடியவர்களின் முகங்களில் அவமானத்தைப் பூசி விட்டீர்கள்.

மாண்புமிகு முதல்வர் கலைஞர் ஐயா அவர்கள், ஒட்டுமொத்த உலகத் தமிழினத்தின் தலைவனாக - தமிழினத்தின் நிபந்தனையற்ற காவலனாக - அவரது உண்மையான அவதாரத்தை எடுத்து விட்டார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க முதற்படியை எடுத்துள்ள நீங்கள், தமிழீழ மக்களின் தற்காலிகப் பிரச்சிக்கான தீர்வை நோக்கி அரசியல் நகர்வுகளை ஆரம்பித்துவிட்டீர்கள். தமிழர்களுக்கு எதிரான போரை நிறுதவும், அவர்களுக்கு உணவும், மருந்தும் போய்ச் சேரவும், வாழும் இடங்களில் அவர்கள் நிம்மதியாய்க் குடியமரவும் - உருப்படியான காரியங்களைச் செய்யுமாறும், சிறிலங்கா அரசுக்கான அனைத்து இராணுவம்- சார் உதவிகளை நிறுத்துமாறும் இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் போட்டிருக்கும் நீங்கள், ஈழத் தமிழ் மக்களுக்கு ஓர் இடைக்கால நிம்மதியைக் கொடுத்திருக்கின்றீர்கள்.

தமிழக மக்களின் குரலும், தமிழகத் தலைவர்களது செயலும், தமிழகத்தின் சக்தியும் -

- தமிழீழ மக்களுக்கு சுதந்திரத்தின் ஒளியைக் காட்டியிருக்கின்றது!

- "தமிழகம் எமக்காகப் பொங்கி எழாதா?.. தமிழகத் தலைவர்களும், கலைஞர் ஐயா அவர்களும் எமக்கு விடுதலையைப் பெற்றுத் தர மாட்டார்களா?.." என்று ஏங்கியிருந்த தமிழீழ மக்களுக்கு நம்பிக்கையையும், துணிவையும் தந்திருக்கின்றது.

- "தமிழர்களை நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஏனென்று கேட்க ஆளே இல்லை!" என்று இறுமாந்திருந்த சிங்களப் பேரினவாதத்திற்கு சினத்தையும் அச்சத்தையும் ஊட்டியிருக்கின்றது.

- எல்லாவற்றுக்கும் மேலாக, ஈழத் தமிழர்களின் அழிவை - தமது சொந்த நலன்களுக்காக - கைகட்டிப் பார்த்து நிற்கும் அனைத்துலக சமூகத்திற்கு அதிர்ச்சியளித்திருக்கின்றது.

வரலாற்று மாற்றங்கள் அரங்கேறுகின்றன. நம்புதற்கரிய திருப்பங்கள் நிகழ்கின்றன. ஈழத் தமிழர்களுக்காகத் தனது நாடாளுமன்ற இருக்கைகளையே பணயம் வைக்கின்றது தமிழகம். நிம்மதிப் பெருமூச்சுவிட்டு, மகிழ்ச்சிக் கடலில் மூழ்கித் தவிக்கின்றது தமிழீழம். பெருமிதத்தோடும், திமிரோடும் நிமிர்கின்றான் தமிழன்.

எமது அன்பான தமிழகத்து உறவுகளே!

தமிழீழ மக்களின் மீது உங்களுக்கு இருக்கும் எல்லையற்ற பாசத்தையும், அக்கறையையும், அவர்களுக்காக நீங்கள் சந்தித்த இடர்களையும் நாம் அறிவோம். ஆட்சியை இழக்கும் சூழல் வந்த போது, சொந்தக் குழந்தைகளுக்காகத் துன்பங்களைத் தாங்கும் ஒரு தந்தையாக அதைப் பொறுத்துக்கொண்ட கலைஞர் ஐயாவையும், சிறையில் வாடும் துயரம் நிகழ்ந்த போது, சொந்தச் சகோதரர்களுக்காக அதையும் ஏற்றுக்கொண்ட தலைவர்களையும், இன்னும் எத்தனையோ வழிகளில் எமது சுமைகளைச் சுமந்த அனைவரையும் நாம் என்றும் மறவோம். எங்கள் நெஞ்சங்களின் மிகச்சிறந்த இடமொன்றில், நன்றியுணர்வுடன் உங்களை நாம் அமர்த்தியிருக்கின்றோம்.

தமிழினத்தினது வரலாற்றின் மிகவும் உச்சமான ஒரு காலத்தில் நாம் எல்லோரும் இன்று இருக்கின்றோம். சரியான திசையில் தன்னை நகர்த்திச் செல்வதற்காக - காலத்திற்குக் காலம் - ஒப்பற்ற மனிதர்களை வரலாறு பிறப்பிக்கின்றது. அவர்களைத் தான் நாம் வரலாற்று மனிதர்கள் என்கின்றோம். அத்தகைய ஒரு மகோன்னதப் பிறப்பை கலைஞர் ஐயா அவர்களுக்குக் கொடுத்த சரித்திரம், இப்போது அவரை மிகச்சரியான இடத்தில் அமர்த்தியிருக்கின்றது.

தென்னாசியாவையே அசைக்கும் வல்லமையை அவருக்குக் கொடுத்திருக்கின்றது. அவரது அறிவு ஞானமும், அரசியற் செல்வாக்கும் தமிழர்களுக்கென்று ஒரு தனித் தேசத்தை உருவாக்கி, தமிழீழத்தில் துன்பத்தில் உழலும் எம் உறவுகளுக்கு நிரந்தர விடுதலையைப் பெற்றுத்தரும் சக்தி வாய்ந்தவை. தமிழீழ மக்களின் சுதந்தரத்திற்காக அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைத்து, அவருக்குப் பலம் சேர்த்து,

அவரை உற்சாகப்படுத்தி, தமிழினத்தைத் தாங்கும் தூண்களக நீங்கள் எல்லோரும் விளங்க வேண்டும் என்று நாம் தாழ்மையுடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

மேலும், தமிழினத்தின் நிரந்தரக் காவலனாக கலைஞர் ஐயா என்றும் இருக்கின்றார் என்பதை, தமிழினத்தின் பகைவர்களுக்கும், இந்த உலகிற்கு அவர் உணர்த்த வேண்டும் என்றும் வேண்டிக்கொள்ளுகின்றோம்.

அன்பானவர்களே!

இப்போது - தமிழீழ மக்களுக்கு ஓர் தற்காலிக நிம்மதியைக் கொடுக்க ஆணித்தரமான முயற்சிகளை எடுத்துள்ள நீங்கள், சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து அவர்கள் நிரந்தர விடுதலை பெறவும் ஆவன செய்ய வேண்டும். அவர்களுடைய வீடுகளை ஆக்கிரமித்துள்ள சிங்களப் படைகளை வெளியேற்றி, அந்த மக்கள் தமது சொந்த ஊர்களுக்குச் சென்று நிரந்தரமாகக் குடியேறி, சுதந்திரமக வாழ ஆவன செய்ய வேண்டும்.

"சிங்களவர்களோடு சேர்ந்து வாழ முடியாதெனின், தமிழர்கள் பிரிந்து போவதே சரி" என்பதே கலைஞர் ஐயா அவர்களது தனிப்பட்ட நிலைப்பாடும், தமிழகத் தலைவர்களாகிய உங்களில் பலரது வெளிப்படையான நிலைப்பாடுமாகும். உங்களது அந்த நிலைப்பாட்டுக்கு ஓர் அரசியல் அங்கீகாரத்தை நீங்கள் கொடுக்கவேண்டும் என்றும், தமிழீழத் தமிழர்களின் துன்பங்களுக்கு "தமிழீழத் தனியரசு" தான் சரியான ஒரே தீர்வு என்ற ஒரு தீர்மானத்தை தமிழக மக்களவையிலே நிறைவேற்ற வேண்டும் என்றும், தமிழீழ மக்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது இந்தியாவில் இருக்கும் தடையை நீக்கி, ஈழத் தமிழர்கள் தம்மைத் தாமே ஆள வழி பிறக்கச் செய்ய வேண்டுமென்றும் பணிவன்புடன் வேண்டிக்கொள்ளுகின்றோம்.

நீங்கள் எல்லோரும் இப்போது எடுத்துள்ள முயற்சிகள் ஒர் ஆரம்பம் தான் என்பதை நாம் அறிவோம்: தமிழீழ மக்களுக்கு நிரந்தரமான விடுதலையைப் பெற்றுத்தரும் வரை தமிழகம் ஓயாது என்பதையும் நான் அறிவோம்.

ஒரே இரவில் அதிசயங்களைப் படைக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள் நீங்கள்: நம்பிக்கையோடு காத்திருக்கின்றது ஈழத் தமிழினம்.

நன்றி கலந்த மரியாதையுடன்,
இலங்கை தமிழ் சங்கம் - ஐக்கிய அமெரிக்கா
மின்னஞ்சல் : president@sangam.org

என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WAR

இராணுவத்திற்கு ஆதரவு, அரசாங்கத்திற்கு எதிர்ப்பு - சஜித் பிரேமதாஸ
புதன், 15 அக்டோபர் 2008, 08:04 மணி தமிழீழம் [கொழும்பு நிருபர் மயூரன்]
நாட்டை கூறுபோடும் பயங்கரவாதிகளுக்கு எதிராக எமது பாதுகாப்புப் படையினர் பாரிய பதிலடி கொடுத்த வண்ணமுள்ளனர். நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்து யுத்த களத்தில் போரிடும் முப்படையினருக்கு எமது ஆசீர்வாதமும் ஒத்துழைப்பும் எப்போதுமே உண்டு. 

ஆனால் யுத்தத்துக்கு தூபம் போட்டு அதன் மூலம் பிழைப்பு நடத்த நினைக்கும் இந்த அரசாங்கத்தின் கபட நாடகத்துக்கு நாம் ஒரு போதும் இடங்கொடுக்க மாட்டோம், இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். 

ஹிரியால தேர்தல் தொகுதியில் செயற்படுத்தப்படவுள்ள "ஜன சுவய'' அபிவிருத்தித் திட்டம் குறித்து அப்பகுதி மக்களுக்கு தெளிவுறுத்தும் கூட்டம் ஒன்று இப்பாகமுவ நகரில் அண்மையில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரை நிகழ்த்துகையில்,இன்று சூரியன், சந்திரன், நட்சத்திரம் ஆகியவற்றை உவமைகளாக காட்டி அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளே சிறி லங்காவில் காணப்படுகின்றனர். 

அவர்களுக்கு தேவைப்படுவது மக்களை முட்டாள்களாக்கி அரச பதவிகளில் அமருவதாகும். ஆனால் நானோ உண்மையை பேசி நேரிய அரசியல் பாதை வழியாக செல்லவே விரும்புகின்றேன். மக்களுக்கு பசப்பு வார்த்தைகளையும் பொய்யான உறுதி மொழிகளையும் வழங்கி அவர்களை ஏமாற்றுகின்ற அரசியல் அதிகாரமே இப்போது எமது நாட்டில் மேலோங்கியுள்ளது. 

ஆனால் எமது மக்கள் தற்போது இவ்வாறான போலியான அரசியல்வாதிகளை இனங்கண்டுள்ளார்கள். மக்களை ஒவ்வொரு நாளும் ஏமாற்றுவதென்பது முடியாத காரியம். நாட்டின் பாதுகாப்பு குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கதைக்கின்றனர். எனினும் எமது இராணுவ வீரர்கள் தமது மனைவி, பிள்ளைகள், பெற்றோர்களிடமிருந்து விடைபெற்று யுத்த களத்தில் போர் புரிகின்றனர். எனது தந்தையின் ஆட்சிக் காலத்தில் நாட்டில் இரு யுத்தங்கள் இடம்பெற்றன. 

ஆயினும் அவர் மக்களுக்கான உதவி செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்களை கைவிட வில்லை. ஒருபுறம் யுத்தத்தை நடத்திக்கொண்டு மறுபுறம் மக்களுக்கு வீடு, வாசல், தொழில் வாய்ப்புக்கள், பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை ஆகியவற்றை தாராளமாக பெற்றுக் கொடுத்தார். 

நகரங்களின் தொழிற்றுறைகளை கிராமங்களுக்கும் உள்வாங்கினார். இரண்டு யுத்தங்கள் அன்று இடம்பெற்ற பொழுதும் அவர் மக்களை நட்டாற்றில் நிர்க்கதியாக்காமல் நாட்டையும் மக்களையும் காப்பாற்றினார். ஆனால் இன்றைய மகிந்தவின் ஆட்சியில் நடப்பதோ அவற்றுக்கு நேர் மாறானது என்பதை நான் கூறித்தான் நீங்கள் அறிய வேண்டுமென்பதில்லை. நாட்டின் யதார்த்த நிலையை எமது மக்கள் நன்கறிவார்கள் என்றார்.

எந்த நாட்டின் அளுத்தங்களுக்கும் உட்படாமல் யுத்தத்தை தொடரவேண்டும் - விமல்
புதன், 15 அக்டோபர் 2008, 08:07 மணி தமிழீழம் [கொழும்பு நிருபர் மயூரன்]

தமிழீழ விடுதலைப் புலிகளை தோல்வியிலிருந்து பாதுகாப்பதற்கு இந்தியா உட்பட மேற்குலக நாடுகள் சிறி லங்காப் பிரச்சினையில் தலையிட்டு வருகின்றன. ஆனால், இந்தியாவினதோ, வோஷிங்டனினதோ அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை யுத்தத்தை நிறுத்த அரசாங்கம் முயலக்கூடாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு யுத்தம் செய்யவே மக்கள் ஆணை வழங்கினார்கள். எனவே அதனை மீறும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்றும் அவர் கூறினார். பத்தரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணி அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவதுகடந்த காலங்களைப் போன்று இன்றும் தமிழீழ விடுதலைப் புலிகளை தோல்வியிலிருந்து பாதுகாப்பதற்காக இந்தியா உட்பட மேற்குலக நாடுகள் தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கருணாநிதி உட்பட விடுதலைப்புலிகள் சார்பான அரசியல் கட்சிகள் சிறி லங்காவின் யுத்தத்தை நிறுத்த வேண்டுமென போராட்டங்களை நடத்தி மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இந்தியாவிலுள்ள சிறி லங்காத் தூதுவரை பிரதமர் மன்மோகன்சிங்கின் ஆலோசகர் கே. ஏ.நாராயணன் அழைத்து யுத்தத்தை நிறுத்தி அரசியல் தீர்வை முன்வைக்குமாறும், தமிழ் சிவிலியன்களை பாதுகாக்குமாறும் தெரிவித்துள்ளார். 

இந்தியா அல்ல எந்த நாடு அழுத்தம் கொடுத்தாலும் யுத்தத்தை ஜனாதிபதியால் நிறுத்த முடியாது. பயங்கரவாதத்தை ஒழிக்கவே மக்கள் ஆணை வழங்கினர். இதனை மீறுவது மக்களின் சுயாதிபத்தியத்தை மீறும் செயலாகும். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி பயிற்சிகள், பணம் வழங்கி இந்தியாவே போஷித்தது. இறுதியில் பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப்புலிகள் கொலை செய்தனர். 

எனவே இந்தியா விடுதலைப்புலிகளை பாதுகாக்க முனைவதென்பது மீண்டும் வரலாற்றுத் தவறுகளையே புரிவதாக அமையும். முன்னோக்கிச் செல்லும் யுத்தத்தை பின்னோக்கி முன்னெடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளல் ஆகாது. இந்திய அரசாங்கம் இங்கு யுத்தத்தை நிறுத்துவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளை கைவிட வேண்டும். விடுதலைப் புலிப்பயங்கரவாதத்தை அழித்த பின்னரே அனைத்து தரப்பினரதும் கருத்துகளை செவிமடுத்து தீர்வுத் திட்டத்தை முன்வைக்க முடியும். அதை விடுத்து இப்போதே தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென்பதெல்லாம் சாத்தியப்படாத விடயங்களாகும். 

இந்தியாவை சந்தோஷப்படுத்துவதற்காக சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி அரசியல் தீர்வுத்திட்டம் என ஜனாதிபதி தெரிவித்திருக்கலாம். ஆனால், அதிகாரப் பரவலாக்கலை எல்லாம் முன்னெடுக்க இடமளிக்கமாட்டோம். யுத்தமும் அரசியல் தீர்வின் ஓர் அங்கமே ஆகும். எனவே வெற்றியுடன் அது நிறைவு பெற வேண்டும். 1987 இல் ஜே.ஆர்.ஜயவர்த்தன நிறைவேற்று அதிகாரம் மற்றும் நாடாளுமன்ற பெரும்பான்மையைக் கொண்டிருந்தார். 

ஆனால், மக்கள் ஆணையைப் பெற்றிருக்கவில்லை. எனவே அன்று இந்தியாவின் நிபந்தனைக்கு அடிபணிந்து யுத்தம் நிறுத்தப்பட்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஆனால், இன்று அந்த நிலைமையில்லை. பயங்கரவாதத்தை அழிக்கும் யுத்தத்தை முன்னெடுக்கவே மக்கள் ஜனாதிபதிக்கு ஆணை வழங்கினார்கள். எனவே அதனை மீற முடியாது. 

யுத்தம் நிறுத்தப்படுமானால் மக்கள் போராட்டம் வெடிக்கும். தொலைக்காட்சி நாடகத்தொடரைப் போன்று யுத்தக் காட்சிகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி மக்களை ஏமாற்ற அரசு முனைந்தால் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அச்சல ஜாகொட, ஜயந்த சமரசிங்க, மொஹமட் முஸம்மில் மற்றும் தேசிய அமைப்பாளர் சமல் தேசப்பிரிய ஆகியோர் கலந்து கொண்டனர்


நாட்டை சீரழிக்கும் யுத்தத்தை நிறுத்தி அரசியல்த்தீர்வை முன்வையுங்கள் - மங்கள சமரவீர

புதன், 15 அக்டோபர் 2008, 08:13 மணி தமிழீழம் [கொழும்பு நிருபர் மயூரன்]

தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் என்ற மூவினங்களுக்கும் பொதுவான இந்நாட்டை மேலும் மேலும் இரத்தக் களமாக மாற்றிக் கொண்டிருக்காது உடனடியாக யுத்தத்தை நிறுத்தி அரசியல் தீர்வினை முன்வைக்க வேண்டும் என்று சிறி லங்கா சுதந்திரக் கட்சிமக்கள் பிரிவின் ஏற்பாட்டாளரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் வலியுறுத்தியுள்ளார். 

ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச ஆதரவினைப் பெற்றுக் கொள்ளவே சர்வகட்சிக் குழு கூட்டப்படுகின்றது. உண்மையில் இதன் மூலம் நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகள் எட்டப்படப் போவதில்லை என்றும் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,கடந்த 11 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் சர்வகட்சிக் குழு கூடியது. 

இதில் ஜே.வி.பி. மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என பிரதான எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. ஜே.வி.பி.யின் நிலைப்பாடு என்னவெனில், 13 ஆவது திருத்தச் சட்டம் என்பதும் அதனை அமுல்படுத்துவதற்கான சர்வகட்சிக் குழுவின் யோசனைகள் என்பதும் கண்துடைப்பு நடவடிக்கைகள் என்பதே ஆகும். மேலும் சர்வ கட்சிக் குழு நடவடிக்கைகள் ஒரு மாயை என்றே அந்தக் கட்சி ஆரம்பத்திலிருந்து நிராகரித்தும் எதிர்ப்புத் தெரிவித்தும் வருகின்றது. 

இன்றைய நிலையில் சர்வகட்சிக் குழுவின் நடவடிக்கைகளில் ஐக்கிய தேசியக் கட்சியும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றது. இவ்வாறானதொரு நெருக்கடி மிக்க தருணத்தில் ஜனாதிபதி தலைமையில் கூடிய சர்வகட்சிக் குழு மாநாட்டில் தேசிய இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு சரியான பாதையாக அமையாது என்றும் அரசியல் தீர்வுகளிலேயே தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்திருந்தார். 

இராணுவத் தீர்வில் நம்பிக்கையில்லை எனக் கூறுகின்ற ஜனாதிபதி இதுவரையில் யுத்தப் போக்கை கைவிட்டதாகக் தெரியவில்லை. அரசியல் தீர்வு என்ற பெயரில் கூட்டப்படுகின்ற சர்வகட்சிக் குழுவின் நடவடிக்கைகளில் அர்த்தமில்லை என்பது தெளிவு. சிறி லங்காவில் இன்றைய யுத்த நிலைவரம் தொடர்பில் தமிழ்நாட்டில் எழுச்சிப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உத்வேகமடைந்திருக்கின்றன. 

இதனுடைய வெளிப்பாடு பிரதமர் மன்மோகன் சிங்கின் மத்திய அரசாங்கத்தை சிறி லங்காப் பிரச்சினையில் தலையிட வைப்பதற்கான அழுத்தத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அரசாங்கம் ஓர் உறுதியான நிலைப்பாட்டுக்கு வர வேண்டிய கட்டம் ஏற்பட்டிருக்கின்றது. அரசியல் தீர்வு என்றும் இராணுவத் தீர்வு என்றும் இரண்டும் கெட்ட நிலையில் சிந்திப்பதை தவிர்த்து மூவின மக்களும் இணைந்து வாழ்கின்ற நாட்டை மேலும் மேலும் இரத்தக் களமாக மாற்றாது தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வே முன்வைக்கப்பட வேண்டும். 

சர்வதேசத்தின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைந்த ஏற்றுக்கொள்ள முடியாத யோசனைகளை தவிர்த்துக் கொண்டு உடனடியாக யுத்தத்தையும் நிறுத்த வேண்டும் என்பதுடன் அரசியல் தீர்வினை முன்வைக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நடவடிக்கை எடுக்க வேண்டிய காலம் இன்னும் கடந்து விடவில்லை என்பதையும் சிறி லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு வலியுறுத்தி நிற்கிறது. 

ஏனெனில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கூட்டப்பட்டு வருகின்ற சர்வகட்சிக் குழுவில் ஆக்கபூர்வமான அல்லது ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்மானங்கள் எதுவுமே எட்டப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.