Thursday, July 19, 2007

ஈழக்கனவை சுக்குநூறாக்கிவிட்ட செய்தியை குடும்பிமலையின் உச்சியில் நின்று உலகுக்கு அறிவித்துள்ளோம்: மகிந்த ராஜபக்ச



ஈழக்கனவை சுக்குநூறாக்கிவிட்ட செய்தியை குடும்பிமலையின் உச்சியில் நின்று உலகுக்கு அறிவித்துள்ளோம்: மகிந்த ராஜபக்ச
[வியாழக்கிழமை, 19 யூலை 2007, 15:12 ஈழம்] [கொழும்பு நிருபர்]

குடும்பிமலையின் உச்சியில் நின்று பயங்கரவாதத்தின் ஈழக்கனவை சுக்குநூறாக்கி விட்ட செய்தியை எமது சிறிலங்கா இராணுவத்தினர் உலகுக்கு அறிவித்துள்ளனர் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற "கிழக்கின் உதயம்" நிகழ்வில் மகிந்த ராஜபக்ச பேசியதாவது:

இந்த மகத்துவமிக்க நாளில் உங்கள் மத்தியில் உரையாற்றக்கிடைத்த அரச தலைவராக இருப்பதையிட்டு அளவிலா பெருமிதமடைகிறேன். முழு நாட்டுக்கும் பெருமையைப் பெற்றுக்கொடுத்த சிறிலங்கா தேசத்தின் மதிப்புமிக்க இராணுவத்தினருக்கு எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்வதோடு நான் இந்த கௌரவத்தை பணிவுடன் ஏற்றுக்கொள்கின்றேன்.

எதிர்காலத்தில் சிறிலங்கா வரலாறு எழுதப்படும் சந்தர்ப்பத்தில் முப்படை தளபதிகளினால் அரசாங்கத்தின் பொறுப்புதாரரான என்னிடம் ஒப்படைக்கப்படுகின்ற இந்த செய்தியினால் குறிப்பிடப்படும் அத்தியாயம் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. பல தசாப்தங்களாக எமது தாய் நாட்டின் வளமிகுந்த கிழக்குப் பகுதியையும் அங்கு வாழ்ந்த சிங்கள - தமிழ் முஸ்லிம் மக்களின் சுதந்திரத்தை பறித்துக்கொண்டிருந்த கொடூர பயங்கரவாத்தை முற்றாக விரட்டிவிட்டோம் என்று கூறுவதைப் போன்ற ஆறுதலானதும் கௌரவமானதுமான செய்தியை நாம் கடந்த காலத்தில் காணவில்லை.

கொடிய பயங்கரவாதத்தின் பணயக்கைதிகளாக இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த மக்களின் விடுதலைக்காக சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட துணிச்சலான தைரியமான நடவடிக்கைகளின் பெறுமதி இந்த புனித பூமியில் என்றுமே பாதுகாக்கப்படும்.

எமது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அதனை பல நூற்றாண்டுகள் நினைவுகூறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடும் உலகெங்கிலும் உள்ள இராணுவத்தினருக்கு முன்மாதிரியாக இருந்து பொதுமக்களுக்கு ஆகக்குறைந்த சிரமத்தையும் இராணுவத்தினருக்கு குறைவான சேதத்தையும் ஏற்படுத்தி இந்த நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

இந்த வெற்றி பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்தை மிதித்து விட்டது எனக்கூறும் சில விமர்சனங்களைக் கண்டேன். பெரும்பான்மை இனம்; சிறுபான்மை இனம்; என்ற இந்த சொற்பிரயோகங்களைக்கூட நான் விரும்பவில்லை. நாம் அனைவரும் இலங்கையர்கள். கிழக்கின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தே குடும்பிமலையில் சிறிலங்காவின் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு வழி வகுத்தார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கு ஏற்படுத்திய தோல்வியை வெறுமனே இராணுவ வெற்றியாக மட்டுமே குறிப்பிடுவதற்கு நான் விரும்பவில்லை. அதற்கும் அப்பால் தேசிய அனைத்துலக பெறுபேறும் இந்த வெற்றியினுள் பொதிந்திருக்கிறது.

பயங்கரவாதத்திற்கு சட்டரீதியான அதிகாரப் பிரதேசம் ஒன்று இருக்கின்றது என்பதை ஒப்பந்தம் மூலம் ஏற்றுக்கொண்டது போன்ற அநியாயமான செயலை சிறிலங்காவில் இன்றி உலகில் வேறு எங்குமே நடக்கவில்லை.

இந்த பிரதேச அதிகார மாயையை அம்பலப்படுத்தியதன் மூலம் பயங்கரவாதத்தின் ஈழக்கனவு சுக்குநூறாகச் செல்லும் செய்தியையே குடும்பிமலை உச்சியில் இருந்து கொண்டு எமது வீரம்மிக்க இராணுவத்தினர் உலகுக்கு எடுத்துக் கூறினார்கள்.

அது மட்டுமா? நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் கிழக்குப் பகுதி முன்னேற்றமடையாத பிரதேசம் ஒன்றாகவே கருதப்பட்டது. வன்முறையில் சிக்குண்டதனால் வளமிக்க கிழக்கின் தைரியமிக்க மக்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஊனமுற்றார்கள். அரசியல் ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் அவர்கள் அங்கவீனமடைந்தனர். முக்காடு அணிந்த பிள்ளைகளினதும் நெற்றியில் பொட்டு வைத்த தமிழ் பிள்ளைகளினதும் ஏனைய சிங்களப் பிள்ளைகளினதும் கல்வி கற்கும் உரிமையை அவர்கள் பறித்துக்கொண்டனர்.

உங்கள் 12 வயது 14 வயது பிள்ளைகள் ஆயுதங்கள் ஏந்துவதை உங்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியுமா? உண்மையிலேயே முடியாது. என்றாலும் கிழக்கிலும் வடக்கிலும் இதுதான் யதார்த்தம். புத்தகங்களுக்கும் கலர் பென்சில் பெட்டிகளுக்கும் பதிலாக அவர்களுக்குக் கிடைத்தது விடுதலைப் புலிகளின் துப்பாக்கிகளும் குண்டுகளும் சயனைட் குப்பிகளும் ஆகும்.

இப்போது நாம் அனைவரும் ஒன்றிணைந்து அந்தப் பிள்ளைகளின் எதிர்கால உலகைக் கட்டியெழுப்புவோம்.

இதற்கு குறிப்பாக எமது அனைத்துலக நண்பர்கள் எமக்கு உதவுவார்கள் என நான் முழுமையாக நம்புகிறேன். அதேபோல் பொய்யான முழக்கங்களை ஏந்திக்கொண்டு கிழக்கின் இந்த உதயத்தைத் தடுக்க வேண்டாம் என்று அனைத்துலக சமூகத்திடமும் எமது சில அரசியல்வாதிகளிடமும் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

உலகம் முழுவதும் சுற்றித்திரிந்து தாய் நாட்டைக் காட்டிக்கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

எம்மிடம் குறைபாடுகள் இருந்தால் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அவற்றை விமர்சனம் செய்து கொள்வோம். மகிந்த ராஜபக்சவை விமர்சனம் செய்தால் பரவாயில்லை. ஆனால் இந்த உன்னதமான நாட்டைக் காட்டிக்கொடுக்க வேண்டாம்.

மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது எமது அடிப்படையான பொறுப்பாகும். நான் எனது காலம் முழுவதும் அதற்காக உறுதியாகச் செயலாற்றினேன் என்பது உங்களுக்கு இரகசியமான விடயமல்ல. எனினும் பயங்கரவாதிகளின் செயற்பாடுகளுக்கும் மனித உரிமைகளுக்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவாகவே புரிந்து கொள்ள வேண்டும். இதை குழப்பிக்கொள்ள வேண்டாம்.

அதேபோல் இராணுவத்தினரதைத் தூற்றுவதன் மூலமோ அல்லது அவர்கள் மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதன் மூலமோ இந்த வெற்றியை மூடிமறைக்கும் முயற்சியை நாம் காண்கிறோம். மகா சங்கத்தினருக்கு அவமானத்தை ஏற்படுத்துவதன் மூலம் தமது சுயரூபத்தை மறைப்பதற்கான முயற்சிகளையும் நாம் காண்கிறோம்.

குடும்பிமலை ஒரு காட்டுப் பிரதேசமா? சரணாலயமா? அங்கு எத்தனை வாவிகள் இருந்தன? அங்கு எத்தனை வீடுகள் இருந்தன? ஒரு ஏக்கரில் எத்தனை மரங்கள் இருந்தன? போன்ற கேள்விகள் வரைபடக் கலைஞர்களுக்கு மட்டுமே முக்கியமாகின்றது.

தயவு செய்து பொறாமையோடு இதைப் பார்க்க வேண்டாம். இது அரசாங்கத்தின் அல்லது எனது தனிப்பட்ட வெற்றியல்ல.

இது பாதுகாப்புச் செயலாளரினதோ முப்படைத் தளபதிகளினதோ தனிப்பட்ட வெற்றியும் அல்ல. சிலர் அவ்வாறு நினைத்தே பித்துப்பிடித்ததுபோல் உளறுகின்றார்கள்.

இது மக்களின் வெற்றியாகும். அந்நியராக இல்லாமல் வெற்றியின் ஒரு பங்காளராகும்படி எதிர்க்கட்சித் தலைவரையும் நான் கௌரவத்துடன் அழைக்கிறேன். என்னைத் தூற்றினாலும் எனது குடும்ப அங்கத்தவர்களைப் தூற்றினாலும் பரவாயில்லை. அதை நாம் பொறுத்துக்கொள்கின்றோம். ஆனாலும் எமது இராணுவத்தினரைத் தூற்றிப் பரிகசிக்க வேண்டாம். இராணுவத்தினரை குறைத்து மதிப்பிடவும் வேண்டாம். அவர்கள் தமது உடல், உயிர், இரத்தம் என்பவற்றை தியாகம் செய்தே தாய் நாட்டுக்கு இந்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்கள்.

நாம் அரசியலில் இருந்து விடைபெறும் நாளில் உனது பிள்ளைகளுக்கு எதைக் கொடுத்தாய் என்று மனச்சாட்சி எம்மிடம் கேட்கும். காலனித்துவ நாட்டையா? பிளவுபட்ட நாட்டையா?

இல்லை. நாம் எமது பிள்ளைகளுக்கு கௌரவத்துடன் வாழக்கூடிய நாட்டையே பரிசளிப்போம்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் பிள்ளைகள் ஒரு தாய் பெற்ற பிள்ளைகள் போல் மகிழ்ந்து வாழக்கூடிய ஒரு நாட்டை நாம் அவர்களுக்கு அன்பளிப்புச் செய்வோம்.

அனைத்துக் கட்சி மாநாட்டினூடாக இந்நாட்டிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்களை ஒருங்கிணைத்து வடக்குää கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வை வழங்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. இதனை மேலும் தாமதமடையச் செய்ய வேண்டாம். எல்லா அரசியல் கட்சிகளும் தமது ஆலோசனைகளை விரைவாக முன்வைக்கும்படி பகிரங்கமாகக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். ஒன்றுபட்டு இறுதித்தீர்வுக்கு வாருங்கள்.

தமிழ் பேசும் மக்களை கூடுதலாக அரசியல் அதிகாரத்தில் இணைத்துக் கொள்வதற்குத் தேவையான கட்டமைப்பை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். வடக்கு - கிழக்கு மக்களுக்கு நியாயமான பிரச்சினைகள் இருக்குமாயின் நாம் அதற்காக பொறுப்புணர்வுடன் செயற்படுவோம்.

தமிழராக அல்லது முஸ்லிமாக இருக்கின்ற காரணத்தினால் எவரும் துன்பத்திற்கு ஆளாகக்கூடாது.

அதேபோல் துப்பாக்கிகளின் மூலமோ குண்டுகளின் மூலமோ சயனைட் குப்பிகளின் மூலமோ தமிழ் மக்களின் விடுதலையை ஏற்படுத்திக் கொள்ள இயலாது என்ற யதார்த்தத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் பிள்ளைகளின் எதிர்காலத்தை அவர்கள் பாழ்படுத்துகின்றார்கள். நாட்டுப் பிள்ளைகள் அனைவரினதும் எதிர்காலத்தையும் தான். அவர்கள் தமது கலாசாரத்தையும் அழிக்கின்றார்கள். எவ்வளவுதான் பயங்கரமானாலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வன்முறைக் குரலுக்கு நான் அடிபணியவோ அல்லது பயப்படவோ போவதில்லை. அவர்களுடைய கொலை அச்சுறுத்தல்களுக்கும் நான் அசையப்போவதில்லை. நாட்டுக்கான எனது கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்ற நான் உளப்பூர்வமாக கட்டுப்பட்டுள்ளேன்.

கிழக்கு மாகாண மக்களுக்கு தமது அடிப்படை உரிமையான வாக்கைப் பயன்படுத்தும் உரிமை கிடைக்கப்பெற்றிருந்தா? 15 வருடங்களாக இந்த அப்பாவி மக்களின் குடிஉரிமை பறிக்கப்பட்டிருந்தது. பறிக்கப்பட்ட இந்த உரிமையை நாம் மீண்டும் பெற்றுக்கொடுப்போம். இந்த வருட இறுதியில் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் நடாத்தப்படும். இவ்வருட இறுதியில் தமது பிரதிநிதிகளை உள்ளுராட்சி மன்றங்களுக்கும் மாகாண சபைக்கும் தேர்ந்தெடுக்கும் உன்னத உரிமை கிழக்கு மாகாண மக்களுக்கு கிடைக்கும். கடந்த காலம் முழுவதும் தேர்தல் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் இதற்கும் கனவில் பயந்தது போல் சப்தமிடுகின்றனர்.

வாக்குரிமை மட்டுமல்லாமல் மின்சாரம் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து பாடசாலைகள் மருத்துவமனைகள் புதிய கைத்தொழில்கள் போன்ற அனைத்தும் கிழக்கு மாகாணத்தை வளமாக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

நிலத்தின் சுதந்திரத்தைப் போல பொருளாதார சுதந்திரமும் முக்கியமானதாகும். இதற்காக விவசாயக் கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி வேலைத் திட்டத்தை நாடு முழுவதும் முன்னெடுப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். இந்த துரித வேலைத் திட்டத்தின் மூலமாக இந்த நாடு இழந்த பொருளாதார வளத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு நான் எதிர்பார்க்கின்றேன்.

ஜனரஞ்சகமான அரசியல்வாதியாக வரலாற்றில் இணைந்துகொள்ள நாம் விரும்பவில்லை. இந்த நாட்டையும். நாட்டின் எல்லா உயிர்களையும் நாட்டின் எல்லா பசுமைகளையும் நேசித்த பாதுகாவலனாக வரலாற்றில் இடம்பெற்றால் அதுவே எனக்குப் போதுமானதாகும். தேர்தலுக்காக அல்லாமல் நாட்டுக்காக அரசியலில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவராக வரலாற்றில் நான் அறிமுகப்படுத்தப்பட்டால் அதுவே நான் பெறுகின்ற உயர்ந்த கௌரவமும் திருப்தியுமாகும்.

தாய் நாட்டை உண்மையாகவே நேசிக்கின்ற மக்களுடைய உறுதிப்பாட்டின் ஓர் அடையாளமாக குடும்பிமலை வெற்றியை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

இந்நாட்டின் உழைக்கும் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கும் மத்தியிலும் நிதானமாக இதற்கு வழங்கிய தைரியத்தை நான் உணர்வுமிக்க நேசத்துடன் மதிக்கின்றேன். வேலைநிறுத்தம் மற்றும் ஏனைய குழப்பங்கள் இன்றி இதை நாம் நிறைவேற்றினோம். இது உங்கள் பொறுமையின் வெற்றியாகும்.

இந்நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள் இந்த போராட்டத்தில் முன்னணியில் நின்று தமது பொறுப்பை நிறைவேற்றின. இதற்கு அரசாங்கத்தின் இதயபூர்வமான நன்றிகள் உரித்தாகட்டும்.

எந்தப் பிரச்சினைகள் இருந்தாலும் நம்நாட்டின் அப்பாவி மக்கள் பிளவுபடாத தேசத்தை கௌரவமான சமாதானத்தைதான் வேண்டினார்கள். பிரஜைகளே இது உங்கள் வெற்றியாகும்.

அதேபோல் அரசாங்கத்தின் பாதுகாப்புக்காக நிபந்தனைகளின்றி செயற்படுகின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் இச்சந்தர்ப்பத்தில் இந்த வெற்றியின் பங்காளிகள் ஆகின்றார்கள்.

தமிழ் பேசும் எனது அன்பார்ந்த நண்பர்களே

நியாயமான காரணங்களுக்காக இடம்பெறுகின்ற யுத்தத்தை விட உங்களுக்கு சமாதானம் பெறுமதிமிக்கதென்பதை நான் அறிவேன். அது எம்மனைவருக்கும் பெறுமதியானது. நிறைந்த உணவுப்பாத்திரத்தை விட சுதந்திரம் உங்களுக்குப் பெறுமதியானது என நான் உணர்கின்றேன். உங்களிடம் விட்டுச் செல்லப்பட்ட அந்தக் கண்ணீர் நிறைந்த வரலாற்றைப் பற்றி எனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதனாலேயே உங்களதும் உங்கள் பிள்ளைகளினதும் எதிர்காலப் பொறுப்பை நான் உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளேன்.

கிழக்கின் உதயம் கிழக்கிலங்கை மக்களின் அப்பாவி வாழ்க்கையை ஒளிமயப்படுத்தி அந்த ஒளியினூடாக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் வரலாற்று ரீதியான சகோதரத்துவமும் தளிர்விட்டு வளரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே இந்த வெற்றியை அண்மைக்கால சிறிலங்காவின் சரித்திரத்தை மாற்றியமைக்கின்ற ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்துங்கள்.

எல்லா இனங்களையும் மதங்களையும் சார்ந்த மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்வோம் என உறுதிபூணுமாறு உணர்வுபூர்வமாகவும் மிகப் பொறுப்புடனும் நான் வேண்டிக்கொள்கிறேன் என்றார் அவர்.

No comments: