Saturday, June 30, 2007

இலங்கையின் கிழக்கில் நான்கு முஸ்லிம் விவசாயிகள் படுகொலை-29/06/2007

இலங்கையின் கிழக்கில் நான்கு முஸ்லிம் விவசாயிகள் படுகொலை

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மற்றும் பொலன்நறுவை மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் நன்னீர் மீன் பிடிப்புக்காகச் சென்ற 4 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்களை விடுதலைப்புலிகளே கொலை செய்ததாக இலங்கை தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் கூறுகின்ற போதிலும், இந்தத் தாக்குதலில் தப்பி வந்தவர்களோ இராணுவத்தினரே அவர்களைக் கொலை செய்ததாகக் கூறியுள்ளனர்.

மாவிலாறு பகுதிக்கு மீன் பிடிக்கவும், தமது கால்நடைகளை மேய்க்கவும் சென்ற இந்த விவசாயிகளை விடுதலைப்புலிகளே கொலை செய்ததாக இலங்கை அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு ஊடக தகவல் மையம் தெரிவித்துள்ளது.

தொப்பிக்கல பகுதியில் இருந்து தப்பியோடும் புலிகளே இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் அந்த பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் பொலன்நறுவை மாவட்டம் பள்ளியகொட பகுதியைச் சேர்ந்த 4 முஸ்லிம்களாவர். நன்னீர் மீன் பிடிப்பில் ஈடுபடுவதற்காகச் 9 முஸ்லிம்கள் அந்தக் காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார்கள். ஆனால், அங்கு இடம்பெற்ற தாக்குதல் ஒன்றையடுத்து 4 பேர் தவிர ஏனையவர்கள் ஊர் திரும்பியிருந்தனர். பின்னர் இந்தத் தாக்குதலில் கொலை செய்யப்பட்ட 4 பேரது சடலங்கள் தற்போது திருகோணமலை மாவட்டம் கந்தளாய் மருத்துவ மனையின் ஒப்படைக்கப்பட்டு பின்னர் அவை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்தக்கொலைகளுக்கு புலிகள் மீது சந்தேகம் வெளியிட்டுள்ள இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, விசாரணைகள் தொடர்வதாகவும் கூறுகிறார். அதேவேளை விடுதலைப்புலிகள் அமைப்பின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் இந்தச் சம்பவத்தில் தமது அமைப்புக்கு எந்தத் தொடர்பும் கிடையாது என்று மறுத்துள்ளார்.

No comments: