Sunday, November 11, 2007

படையினரின் இலக்கு பளையா? பூநகரியா?

படையினரின் இலக்கு பளையா? பூநகரியா?
[11 - November - 2007] [Font Size - A - A - A]
-விதுரன்-

வடக்கில் பாரிய வெற்றியொன்றைப் பெற்றுவிட அரசு துடிக்கிறது. வன்னியில் இது உடனடியாகச் சாத்தியப்படாதென்றநிலையில் யாழ். குடாநாட்டிலாவது இந்த வெற்றியை பெற்றுவிட முடியுமா என அரசு முனைந்து பார்க்கிறது. ஆனாலும், கள நிலை இதற்கு சாதகமற்றிருப்பதை ஒவ்வொரு தாக்குதலிலும் அரசும் படைத்தரப்பும் உணர்கின்றன.

வடக்கில் புலிகளின் பலமறியாது அரசு, அவசர வெற்றிகளுக்காக படைகளை நகர்த்துகிறது. வன்னியில் முன்னரங்க காவல் நிலைகளிலும் சரி யாழ். குடாநாட்டில் கிளாலி - முகமாலை - நாகர்கோவிலிலும் சரி ஒவ்வொரு பாரிய படைநகர்வும் படையினருக்கு பெருந்தோல்வியாகவே முடிவடைகிறது.

வன்னியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக, வவுனியா முதல் மன்னார் வரையான முன்னரங்க நிலைகளில் தினமும் கடும் மோதல்கள் நடைபெறுகிறது. புலிகளின் முன்னரங்க நிலைகளை ஊடறுத்துக் கொண்டு அவர்களின் பகுதிக்குள் நுழைந்துவிட படையினர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் புலிகளால் முறியடிக்கப்பட்டுவிட்டன.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருக்கும் மடுவை கைப்பற்றிவிட பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளையும் புலிகள் மிக இலகுவாக முறியடித்து விட்டனர். ஒவ்வொரு தடவையும் படையினரை ஒவ்வொரு விதமாகத் தாக்கி பலத்த இழப்புகளுடன் பின் வாங்கச் செய்தனர்.

மடுவைக் கைப்பற்றும் முயற்சி தோல்வியடையவே, மன்னாரிலிருந்து கரையோரமாகவும் கிளிநொச்சி ஊடாகவும் பூநகரிக்குச் சென்று மன்னாருக்கும் யாழ்.குடா நாட்டுக்குமிடையில் தரைவழிப் பாதையை திறக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், விடத்தல் தீவு நோக்கிய பாரிய படைநகர்வு முயற்சி புலிகளால் முறியடிக்கப்பட்டது. பல தடவைகள் இதற்காக பாரிய நகர்வுகளை மேற்கொண்டும் ஒவ்வொரு தடவையும் பலத்த இழப்புகளுடன் படையினர் பின்வாங்கினர்.

கிழக்கில் திருகோணமலை முதல் மட்டக்களப்பு வரையான பெரும் பிரதேசங்களில் பாரிய படை நகர்வுகள் மேற்கொள்ளப்பட்ட போது புலிகள் கள நிலைமைக்கேற்ப தந்திரமாகப் பின்வாங்கி படையினரை அகலக் கால் வைக்கச் செய்து அவர்களை எங்கும் பரந்துபடச் செய்தனர். இதனால், தேவையற்ற பெரும் பகுதிகள் உட்பட பெரும் பிரதேசங்களில் படையினர் பெருமளவில் நிலைகொள்ள தற்போது அவர்களுக்கு பெரும் ஆட்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கிழக்கைப் போன்றே வடக்கிலும் பெரு வெற்றிகளைப் பெற்றுவிடலாமென அரசு கருதுகிறது. கிழக்கில் களநிலை மரபுவழிச் சமருக்கு சாதகமில்லையென்பதையும் கிழக்கின் அனைத்துப் பகுதிகளையும் தங்கள் வசப்படுத்தும் நோக்கிலேயே அங்கு படையினர் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்துவதையும் உணர்ந்த புலிகள், தங்கள் ஆட்களுக்கும் ஆயுதங்களுக்கும் சேதங்களேற்படுவதை தவிர்த்தனர்.

ஆட்களையும் ஆயுதங்களையும் வன்னிக்கு பாதுகாப்பாக நகர்த்துவதற்காக அவர்கள் அங்கு தற்காப்புச் சமரில் ஈடுபட வேண்டியிருந்தது. ஆனால் அரசோ, கிழக்கை தக்கவைக்க புலிகள் கடுமையாகப் போரிடுவதாகக் கருதியது. இந்தக் காலப்பகுதியில் தற்காப்புச் சமரைத் தொடர்ந்தவாறு கனரக ஆயுதங்கள் அனைத்தையும் மிகவும் பாதுகாப்பாக அவர்கள் வன்னிக்கு நகர்த்தியதுடன், அதிக சேதமின்றி ஆட்களையும் அங்கு நகர்த்தியிருந்தனர்.

இதனை உணராத அரசு கிழக்கைப் போல் வடக்கையும் விரைவில் கைப்பற்றிவிடுவோமென தொடர்ந்தும் சூளுரைத்தவாறு அங்கு பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதும் பலத்த சேதங்களைச் சந்திக்கின்றதே தவிர, படை நகர்ந்ததாகத் தெரியவில்லை.

கிழக்கில் பாரிய படை நடவடிக்கைகள் இடம்பெற்ற போது வடக்கிலும் தங்கள் பலத்தை நிரூபித்துக் காட்டுவோமென அரசு கூறிவந்தது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் 12 ஆம் திகதி முகமாலை மற்றும் பளையை முழுமையாகக் கைப்பற்றிவிடும் நோக்கில் மிகப்பெரும் படையெடுப்பை மேற்கொண்டது. ஆனால், இந்தப் படை நடவடிக்கை ஆரம்பமான செய்தி வெளியுலகிற்கு தெரிய முன்னரே அந்தப் படை நடவடிக்கை பெரும் தோல்வியைச் சந்தித்தது.

முகமாலையில் தங்கள் முன்னரங்க காவல் நிலைகளை தகர்த்துக் கொண்டு முன்னேறிய படையினருக்கு புலிகள் கடும் எதிர்ப்பைக் காட்டவில்லை. ஆனாலும், படையினர் சந்தேகப்படாதளவிற்கு கடும் மோதலில் ஈடுபடுவது போல் பாசாங்கு செய்த புலிகள், குறிப்பிட்ட சில கிலோமீற்றர் தூரம் வரை பின்வாங்கவே டாங்கிகள் சகிதம் படையினர் பெருமெடுப்பில் முன்னேறினர்.

இதன் மூலம் பெரும் பொறியொன்றுக்குள் பெருமளவு படையினரைச் சிக்கவைத்த புலிகள் அதன் பின் நடத்திய அகோர தாக்குதலில் படையினர் அதிர்ந்து போயினர். சில நிமிட நேரத்தில் பெருமளவு படையினர் கொல்லப்பட்டனர். மிக அதிகமானோர் படுகாயமடைந்தனர். டாங்கிகள் மற்றும் கனரக வாகனங்களை கைவிட்டு விட்டு பின்வாங்கத் தொடங்கினர்.

தாங்கள் பெரும் பொறியொன்றுக்குள் சிக்குண்டதை சில மணிநேரத்தில் உணர்ந்து கொண்டனர். ஆனால், அதற்கிடையில் 175 இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட, 400 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைய, இரண்டிற்கும் மேற்பட்ட யுத்த டாங்கிகளும் கனரக வாகனங்களும் புலிகள் வசம் செல்ல, படையினர் பழைய நிலைகளுக்கு திரும்பிவிட்டனர்.

முகமாலையில் விடுதலைப்புலிகள், பாரிய தாக்குதல் முறியடிப்புத் திட்டத்துடன் எவ்வேளையிலும் மிகவும் தயாராயிருப்பதை பலத்த அடியின் பின்னர் படைத்தரப்பு உணர்ந்து கொண்டது. பாரிய போர்முனைகளில் முன்னணியில் செயற்பட மிக விஷேட பயிற்சிகளைப் பெற்ற கமாண்டோ படையணியின் பெரும் பகுதி இந்தச் சமரில் அழிக்கப்பட்டது. சில மணிநேரத்தில் மிகப் பேரிழப்பென்பதுடன், அரைவாசிக்கும் மேற்பட்ட பட்டாலியன் மீண்டும் களமுனைக்குத் திரும்ப முடியாதளவுக்கு படுகாயமடைந்தது.

இந்தப் பெருந்தோல்வி முகமாலை பகுதியில் மற்றொரு பாரிய படை நகர்விற்கு படையினரை இட்டுச் செல்லவில்லை. எனினும், இந்தப் பெருந்தோல்வியைச் சந்தித்த ஒரு வருடத்தின் பின் கடந்தவாரம் படையினர் இந்தப் பிரதேசத்தில் மீண்டுமொரு முறை பெருந் தாக்குதலொன்றை நடத்தினர். முகமாலையை முழுமையாகக் கைப்பற்றுவதே இந்தப் பாரிய படைநகர்வின் நோக்கமாகும்.

இதன்மூலம் புலிகளுக்கு பெரும் உயிர்ச்சேதத்தையும் பொருட் சேதத்தையும் ஏற்படுத்துவதுடன், முன்னரங்க நிலைகளில் பெரும் மாற்றம் ஏற்படும்போது புலிகளால் அந்தப் பிரதேசத்தில் உடனடியாக பெருந்தாக்குதலை ஆரம்பிக்க முடியாதவாறு செய்வதும் அவர்களது எண்ணமாயிருந்தது.

குடாநாட்டின் மீது புலிகள் எவ்வேளையிலும் பாரிய தாக்குதலைத் தொடுக்கவிருந்ததால் அதனை முறியடிக்கும் நோக்கில் முன்கூட்டிய தாக்குதலை மேற்கொண்டு புலிகளின் பாரிய தாக்குதல் திட்டத்தை முறியடித்து விட்டதாக படைத்தரப்பு கூறியது. கடந்தவருடம் முகமாலையில் ஏற்பட்ட பெருந்தோல்வியை கருத்தில் கொண்டு இந்தத் தடவை படைத்தரப்பு தாக்குதல் திட்டமொன்றைத் தீட்டி அதற்கேற்ப மிகவும் எச்சரிக்கையாக நகர்ந்தது.

தங்கள் பிரதேசத்திற்குள் நுழைந்த படையினரை குறிப்பிட்டளவு தூரம் முன்னேற அனுமதித்தே புலிகள், அதன் பின் பதில் தாக்குதலை ஆரம்பித்தனர். புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பல அழிக்கப்பட்டதால் அவர்களது கனரக ஆயுதங்களின் தாக்குதல் கடுமையாக இருக்காதென எண்ணிய படைத்தரப்புக்கு புலிகளின் கடும் தாக்குதல் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஷெல்களும் மோட்டார்க்குண்டுகளும் மழைபோல் பொழியவே படையினர் தடுமாறிவிட்டனர்.

கண்ணிவெடிகள், மிதிவெடிகளை மிக நுட்பமாக புதைத்திருந்த புலிகள், முதலில் அவற்றை வெடிக்கச் செய்யவில்லை. முன்னேறி வந்த படையினரை நீண்ட தூரம் நகரவிட்டு அதன் பின் அவர்கள் மீது ஒரே நேரத்தில் பலத்த ஷெல் தாக்குதலையும் மோட்டார் தாக்குதலையும் மழைபோல் நடத்தவே படையினர் பின்வாங்கி ஓடத்தொடங்கினர்.

படையினர் பின்வாங்கிச் செல்லத் தொடங்கியபோது ஷெல் மற்றும் மோட்டார் தாக்குதலை தீவிரப்படுத்திய புலிகள், கண்ணிவெடிகள் மற்றும் மிதிவெடிகளை வெடிக்கச் செய்யவே, அதில் பெருமளவு படையினர் சிக்கி படுகாயமடைந்தனர். பின்வாங்கிய படையினர், படுகாயமடைந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக பின்னர் புலிகளுடன் கடும் சமர் புரிய வேண்டியிருந்தது.

அதிகாலை 5 மணியளவில் கிளாலி மற்றும் முகமாலை பகுதியிலிருந்து முன்னேறிய படையினர் புலிகளின் கடும் எதிர்ப்பால் பலத்த இழப்புகளுடன் காலை 8 மணியளவில் பழைய நிலைகளுக்குத் திரும்பிவிட்டனர். கடந்த வருடம் ஏற்பட்ட பேரிழப்புகளின் அனுபவத்தால் இம்முறை இழப்புகளை சற்று குறைத்துள்ளனர். 11 படையினர் கொல்லப்பட்டும் 103 பேர் படுகாயமடைந்ததாகவும் படைத்தரப்பு கூறுகிறது.

ஆனால், 68 படையினர் கொல்லப்பட்டும் 200 பேர் காயமடைந்ததுடன், 60 படையினர் காணாமல் போயுள்ளதாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பாராளுமன்றில் முன்னாள் அமைச்சர் ஷ்ரீபதி சூரியாராச்சி தெரிவித்துள்ளார். புலிகளின் பலம் தெரியாது மேற்கொள்ளப்பட்ட தவறான படைநகர்வென ஐக்கிய தேசியக்கட்சியும் பலத்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

கடந்த 2 ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டமை எதேச்சையான ஒன்று. ஆனாலும், அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீதான தாக்குதலால் ஏற்பட்ட பேரிழப்பை மறைத்து படையினரதும் தென்பகுதி மக்களதும் மனோபலத்தை அதிகரிக்க அரசு மிகப்பெரும் பிரசாரத்திலீடுபட வேண்டிய கட்டாய சூழ்நிலையேற்பட்டது.

அதேநேரம், அநுராதபுரம் தாக்குதலுக்கு பதிலாக வடக்கில் எங்கேயாவது பாரிய படைநகர்வொன்றை மேற்கொண்டு பெருவெற்றிபெற்று படையினரின் ஆற்றலை நிரூபிக்க முயன்ற அரசு, மீண்டும் முகமாலையில் பெருந்தோல்வியைத் தழுவியதன் மூலம் புலிகளின் ஆற்றலை நிரூபிக்க இடமளித்துவிட்டது. இதில் படையினருக்கு ஏற்பட்ட பலத்த இழப்பானது வடக்கே உடனடியாக பாரிய படைநகர்வுகளை மேற்கொள்ள முடியாத நிலைக்கு படையினரைத் தள்ளியுள்ளது.

ஒட்டகச்சிவிங்கியின் கழுத்துப்போன்ற இந்தச் சிறிய நிலப்பரப்பினூடாக புலிகளை முகமாலையிலிருந்து பின்நகர்த்துவதென்பது சாத்தியப்படாததொன்றென படையினர் உணரத்தொடங்கியுள்ளனர். முகமாலையில் இந்தப் பாரிய படைநகர்வு மேற்கொள்ளப்பட்ட போது, அது வெற்றிகரமாகத் தொடர்ந்தால் யாழ். கடலேரியூடாக நகர்ந்து பூநகரிக்குள் தரையிறங்கவும் படையினர் திட்டமிட்டிருந்தனர்.

ஒருபுறம் முகமாலையூடாக பளைக்கு முன்னேறும் அதேநேரம், மறுபுறத்தே அதற்குச் சமாந்திரமாக கடல்வழியால் பூநகரிக்குள் பெருமெடுப்பில் தரையிறங்குவதும் படையினரின் திட்டமாயிருந்தது. புலிகளின் ஆட்லறிகளும் மோட்டார்களும், முகமாலையிலிருந்து முன்னேறும் படையினரையே குறிவைத்திருக்குமென்பதால், அவ்வேளையில் பூநகரி நோக்கி மிக உக்கிரமாக ஆட்லறி ஷெல்களையும் பல்குழல் ரொக்கட்டுகளையும் மோட்டார் குண்டுகளையும் பொழிந்தவாறு தென்மராட்சி கரையோரத்திலிருந்து சிறிய படகுகள் மூலம் பூநகரிக்குள் தரையிறங்கிவிட படையினர் திட்டமிட்டிருந்தனர்.

புலிகள் வசம் குறிப்பிட்டளவு ஆட்லறிகளும் அதற்குரிய ஷெல்களுமே இருப்பதாகக் கருதி படைத்தரப்பு இவ்வாறு பலமுனைத் தாக்குதல் திட்டத்தை வகுத்திருந்தது. ஒருவேளை, முகமாலை மற்றும் கிளாலியிலிருந்து புறப்பட்ட படையணிகள் புலிகளின் பகுதிக்குள் வெற்றிகரமாக முன்னேறியிருந்தால் பூநகரிக்குள் தரையிறங்க படையினர் நிச்சயம் முயன்றிருப்பர். எனினும், முகமாலை முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டதால் பூநகரி நோக்கிய படைநகர்வு குறித்து படையினர் சிந்திக்கவில்லை.

No comments: