Monday, July 21, 2008

சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் அறிவிப்பு


சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் அறிவிப்பு

ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 4 ஆம் நாள் வரையான காலப்பகுதியில் சிறிலங்காவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக போர் நிறுத்தத்தினை அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகம் விடுத்துள்ள அறிக்கை:

பரந்துபட்ட தென்னாசியப் பிராந்தியத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தி, நீதி, சமத்துவம், சமாதானம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு புதிய, ஒத்திசைவான உலக ஒழுங்கை வனைந்துவிடும் உயரிய நோக்கோடு, சார்க் மாநாடு பதினைந்தாவது தடவையாகக் கூடுவதையிட்டு தமிழீழ மக்கள் சார்பில் எமது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை முன்வைக்கச் சிங்கள அதிகாரபீடம் மறுத்து வருகின்றது. தமிழருக்கு நீதி வழங்கச் சிங்களத் தேசம் தயாராக இல்லை.

சிங்களத் தேசத்தின் அரசியல் இன்று போராகப் பேய்வடிவம் எடுத்து நிற்கின்றது. இனவாதச் சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கை கொண்டு நிற்பதால், போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் பெற்றுவருகின்றது.

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, அடிமை கொள்ளவேண்டும் என்பதில் சிங்களத் தேசம் வெறிகொண்டு நிற்கின்றது. சிங்களத் தேசம் ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை இராணுவம் ஒரு தற்காப்புப் போரையே இன்று நடாத்தி வருகின்றது.

சிங்கள அரசு போர் என்ற போர்வையில் தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்து வருகின்றது. ஒட்டுமொத்தத்

தமிழினமும் படிப்படியாக ஒடுக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவரும் கோரமான உண்மை இருட்டடிப்புச் செய்யப்படுகின்றது.

செய்தித்தடை என்ற பெயரில் தமிழரின் நீதியான போராட்டம் மீது ஒரு இரும்புத்திரை போடப்பட்டிருக்கின்றது. தமிழரின் சுதந்திர இயக்கத்தையும் அது நெறித்துள்ள விடுதலைப் பாதையையும் களங்கப்படுத்தும் வகையில் போலியான, பொய்யான பரப்புரை கட்டவிழ்த்து விட்டப்பட்டிருக்கின்றது. இதனால் தமிழரின் விடுதலைப் போராட்டம் பற்றி உலகில் தவறான மதிப்பீடுகளும் தப்பான அபிப்பிராயங்களும் நிலவிவருகின்றன. இது எமக்கு ஆழந்த கவலையைத் தருகின்றது.

உலக நாடுகளுடனும் எமது பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக்கொள்ளவே நாம் என்றும் விரும்புகின்றோம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி, ஒரு நட்புறவுப் பாலத்தைக் கட்டியெழுப்புவதிலும் இதயசுத்தியோடு இருக்கின்றோம்.

தமிழீழ தேசத்தினதும் தமிழீழ மக்களினதும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துவிட விரும்புகின்றோம். இந்த நல்லெண்ண நடவடிக்கையாக, சார்க் மாநாடு நடைபெறுவதையிட்டு ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 4 வரையான காலப்பகுதியை இராணுவ நடவடிக்கைகள் அற்ற அமைதி நாட்களாகக் காத்து, ஒருதலைப்பட்சமாகப் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து, மாநாடு வெற்றிபெற ஒத்துழைப்போம் என்பதை எமது விடுதலை இயக்கம் மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றது.

இதேநேரம், சிங்கள ஆக்கிரமிப்புப்படைகள் எமது தேசத்தினதும் எமது மக்களினதும் நல்லெண்ண நடவடிக்கையை மதிக்காது, அத்துமீறி அடாவடியான வலிந்த தாக்குதல்களில் ஈடுபட்டால், எமது மக்களைப் பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கையில் மாத்திரம் ஈடுபட எமது விடுதலை இயக்கம் நிர்ப்பந்திக்கப்படும்.

மாநாடு வெற்றியாக அமைய வாழ்த்துவதோடு, எமது பிராந்தியத்தைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், சிறிலங்கா, நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆகிய நாடுகளுக்கு எமது நல்லாதரவையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வேயின் அனுசரணையை மட்டுமே ஏற்றுக்கொள்வோம்: விடுதலைப் புலிகள்

[செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2008, 05:34 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்]

இலங்கையில் அமைதி முயற்சிகளை ஆரம்பிக்கும் பொருட்டு தென்னாபிரிக்க மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளதாக சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கிலல ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சுக்களை ஆரம்பிக்கும் பொருட்டு தென்னாபிரிக்க மற்றும் ஜஸ்லாந்து ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர்.

நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் பேச்சுக்களை மட்டுமே விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொள்வார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

நோர்வேயின் அமைதி முயற்சிகளுக்கான அனுசரணையாளர்களான அமைச்சர் எரிக் சொல்கெய்ம் மற்றும் அமைதி முயற்சிகளுக்கான அனுசரணையாளர் ஹன்சன் பெளயர் ஆகியோருடன் வன்னியில் சந்திப்புக்களை மேற்கொள்ள நாம் ஆர்வமாக உள்ளோம், அது விரைவில் நடைபெறும். நோர்வே தவிர்ந்த எந்த நாட்டின் அனுசரணையையும் நாம் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

2002 ஆம் ஆண்டு இலங்கையில் நோர்வே அமைதி முயற்சிகளை ஆரம்பித்திருந்தது.

இதனிடையே, இலங்கையில் அமைதிப் பேச்சுக்களுக்கு ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் முகமாக தென்னாபிரிக்கா கடந்த வாரம் ஒரு தகவலை வெளியிட்டிருந்தது.

அதாவது, இந்தியாவின் பின்னணியுடன் சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு தென்னாபிரிக்கா அனுசரணை வழங்க முன்வந்திருந்தது.

இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் அனுகூலமான சமிக்ஞைகளை தெரிவிக்க வேண்டும் என சிறிலங்காவின் அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனை சந்தித்த போது தென்னாபிரிக்காவின் அனைத்துலக அமைதிக்கான செயற்பாட்டாளரும், பிரதி அமைச்சருமான இராதகிருஷ்ண படையாச்சி தெரிவித்திருந்தார்.

மேலும், விடுதலைப் புலிகளுடன் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்கும் சாத்தியங்கள் தொடர்பாக ஜஸ்லாந்து குடியரசின் அரச தலைவர் ஒலாபு ரங்னர் கிறிம்சன் ஆராய்ந்ததுடன், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் பேச்சுக்களில் அனுசரணைகளை வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் வடபகுதியில் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களையும் கிறிம்சன் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://puthinam.com

No comments: