Thursday, June 5, 2008

ஓர் இலட்சியப்பெண்ணின் காலடித்தடங்கள்…….

கணவர் ஒரு கண்,காது,மூக்கு அறுவைச்சிகிச்சை நிபுணர் மென்மையான புன்னகை. கண்ணை உறுத்தாத வர்ணத்தில் ஹிஜாப் உடை. ஆர்பாட்டமில்லாத அழகிய இலங்கை ஜமா அதே இஸ்லாமி பெண்கள் அணியைச் சந்திப்பதற்காக தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு,தன் துணைவருடன் இலங்கை வந்திருந்த Dr மாரியா மஹ்மூத் அவர்களை மெல்லியதாக பனிதூவும் இளங்காலைப்பொழுதொன்றில் மாவனல்லையில் சந்தித்தோம்.


சகோதரி மாரியா அவர்கள் PAS எனப்படும்Islamic party of Malaysia வின் மத்திய சபை உறுப்பினர். மலேசியப்பாராளுமன்ற அங்கத்தவர். IMWU எனப்படும் சர்வதேச முஸ்லிம் பெண்கள் ஒன்றியத்தின் பிரதி பொதுச்செயலாளர். தொழிலால் ஒரு மருத்துவர்,ஆறு பிள்ளைகளின் தாய் ,இவரது ஆங்கிலம் தெளிவும் தீர்க்கமும் மிக்க கருத்துக்கள். காண்போரை ஒரே வினாடிக்குள் ஈர்த்துக்கொள்ளும் ஆளுமை. இது தான் டொக்டர் மாரியா மஹ்மூத். ஒரு மனிதனை வடிவமைப்பதில் குழந்தைப்பருவத்தின் பங்களிப்பு மகத்தானது. எவ்வாறான ஒரு குழந்தைப்பருவம் உங்களுக்குக்கிடைத்தது என்பதை அறிய ஆவலாயிருக்கிறோம்.

நான் ஒரு பிடிவாதமான குழந்தை(சிரிக்கிறார்) எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே எனது பெற்றோர் பாஸ் கட்சியின் தீவிர அங்கத்தவர்கள்.
தந்தை ஓர் ஆசிரியர், எனது தாய் மிக கண்டிப்பானவர்.முழுமையான இஸ்லாமிய சூழலில் வளர்க்கப்படோம். எனது அன்னை அந்தக்காலத்திலேயே முழுவதும் மூடிய ஹிஜாப் அணிவார். அவர் என்னை ஹிஜாப் அணியுமாறு சொல்லும் போதெல்லாம் நாம் பிடிவாதமாய்மறுப்பேன்.நான் தொழுவது வழக்கம்.ஏனென்றால் என் தாய் கூறுவார்அல்லாஹ்விடம் எதையாவது கேட்க வேண்டுமென்றால் தொழுது கேட்டால் தான் கிடைக்குமென்று.எனக்கு அதிகமான விடயங்கள் தேவைப்பட்டதனாலேயே நான் தொழுகையைத் தொடர்ந்தேன்.

இஸ்லாத்தை நோக்கிய திருப்பம் எவ்வாறு நிகழ்ந்தது?

15,16 வயதாகும் போது ஒரு கோடைகால முகாமிற்கு(summer camp ) செல்லக்கூடிய வாய்ப்புக்கிடைத்தது.அதை ஏற்பாடு செய்த அமைப்பில் அன்வர் இப்ராஹீம் அவர்களும், இருந்தார்கள் என்று நினைக்கிறேன்.என் வாழ்வில் மகத்தான் திருப்புமுனை அது தான்(உணர்ச்சிவசப்படுகிறார்)யான இஸ்லாம் என்றால் என்ன?நான் யார்? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்தது அங்கு தான்.தொழுகையில் ஓதும் தூய வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்ததும் அப்போது தான். ஒவ்வொரு முறை நான் தொழும் போதும் நான் அழுகிறேன்.(சில மணித்துளிகள் உடைந்து அழுகிறார்……….) இஹ்தினஸ் ஸிராதல் முஸ்தகீம்(இறைவா நேரான பாதையைக்காட்டுவாயாக)என்ற வாசகத்தை என் நாக்கு உச்சரிக்கும் போதெல்லாம் அழுகையை என்னால் அடக்க முடிவதில்லை.
பெண்கள் பாடசாலையில் தான் படித்தேன் என்றாலும் அல்லாஹ்வின் மீது கொண்ட அச்சம் காரணமாக ஹிஜாப் அணிந்து சென்றேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
நாங்கள் இரண்டே பேர் தான் ஹிஜாப் …(திரும்பவும் விழியில் நீர் ததும்பத்தொடங்குகிறது)


மற்ற மாணவிகள் எங்களைக் கேலி செய்தார்கள்சிரித்தார்கள் நான் தைரியத்தை இழக்கவில்லை.அது மிகவும் கஷ்டமான காலம்,ஆனால் நான் சந்தோசமாயிருந்தேன். பின்னர் சாதாரணதர பரீட்சையில் மிகச்சிறந்த பெறுபேறுகளைப்பெற்றேன்.அல்ஹம்துலில்லாஹ்.
எகிப்தின் கெய்ரோ பல்கலைக்கழகத்திற்கு ம்ருத்துவம் பயிலச்செல்வதற்கான புலமைப்பரிசில் அப்போதே என்னை வந்தடைந்தது.

பல்கலைக்கழக வாழ்வு உங்களை செதுக்கியதா அல்லது சிதைத்ததா?

கெய்ரோ பழமையும் புதுமையும் கலந்த ஒரு நகரம்.பல்கலைக்கழகத்தில் பலநாடுகளைச்சேர்ந்தவர்கள் ருந்தார்கள்.இஸ்லாத்தை பின்பற்ற தடைகள் இருக்கவில்லை.அப்போது தான் என் கணவர் என்னை சந்தித்தார்.என்னைக் குறித்த அவரின் விருப்பத்தைத் தெரிவித்தார். எனக்கு அப்போது வெறும் 18 வயது தான்.அவருக்கு 19 வயது.அவர் மற்ற ஆண்களை விட கொஞ்சம் நல்லவராக எனக்குத் தெரிந்தார்.என் மனதில் காதல் என்ற ஒன்றே கிடையாது. நான் சரி ,ஆனால் எனது கல்வி முடியும் வரை உங்களை சந்திக்கவோ உங்களோடு பேசவோ முடியாதுஎன்று கூறினேன்.நாங்கள் வீடு சென்று பெற்றோருடன் பேசுவோம்என்று அவர் அபிப்பிராயப்பட்டார்.எனது தந்தை மிகவும் கண்டிப்பானவர் ஆனால் திறந்த மனதுடையவர். விடயம் கேள்விப்பட்டதும் எனது பெற்றோர் நாங்கள் உடனடியாகத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.இஸ்லாம் மிக இலகுவானது.அல்லாஹ்வின் திருப்தியே எல்லாவற்றினதும் பின்னணி என்பதை என் தந்தை எனக்குப் புரிய வைத்தார்.
பல்கலைக்கழக மூன்றாவது ஆண்டில் எனது மகள் பிறந்தாள்.அடுத்த ஆண்டு இன்னுமொரு மகன். வாழ்க்கை மிகவும் ஓய்வின்றிக் கழிந்தது.
பல்கலைக்கழகத்தில் கல்விக்குப் புறம்பாக எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட என்னால் முடியாமல் போனது, குழந்தைகளுக்கு கவனம் செலுத்த வேண்டி ஏற்பட்டதால் மருத்துவராக அல்லாது மருத்துவக்கல்லூரியொன்றில் 8 மணி முதல் 4 மணி வரை விரிவுரையாளராக பணியாற்றினேன்.

உங்கள் அரசியல் நுழைவு திட்டமிடப்பட்டதொன்றா அல்லது தற்செயலானதா?

PAS இரண்டு தளங்களில் செயற்படுகிறது.

1தஃவா
2
அரசியல்
பாஸின் முஸ்லிமா அமைப்பிற்கு(Muslimah wing) என்னாலான பங்களிப்பைச் செய்வதற்காகத்தான் கட்சிக்குள் நுழைந்தேன். தலைமைத்துவத்தில் நான் இருக்கவுமில்லை. அரசியல் பற்றி எதுவுமே அறிந்திருக்கவுமில்லை.அதைப் பற்றிய ஆர்வம் கூடக்கிடையாது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நான் நிறைய நிர்வாகப்பயிற்சிகளைப்பெற்றிருந்ததும் நிறுவனரீதியான திறன்களோடிருந்ததும்
முஸ்லிமா பெண்களின் திறன் விருத்தி பயிற்றுவிப்பாளராக இருந்ததும் பின்னாளில் அரசியலுக்கு கட்சி மேல்மட்டம் என்னை உந்துவதற்கு வாய்ப்பளித்திருக்கலாம்.
எது எப்படியாயினும் தலைமைத்துவம் ஒரு பணியைக் கட்டளையிட்டால் எம்மால் அதைச் செய்ய முடியாது என்று மறுக்க முடியாது.இப்படித் தான் என் அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது.

உங்கள் அரசியல் நகர்வை உங்களது துணைவர் எப்படி எடுத்துக்கொண்டார்?

எனது கடைசிக்குழந்தையும் பாடசாலை சென்ற பின்னரே அரசியலுக்குள் நான் காலடி வைத்தேன். தொழிலையும் ராஜிநாமா செய்து விட்டு முழு நேர இஸ்லாமியப்பணியில் என்னை இணைத்துக்கொண்டேன். எனது கணவரின் உற்ற தோழி நான் தான்.அவருக்கு என்னைத் தவிர வேறு நெருங்கிய நண்பர்கள் கிடையாது. அவர் முழுமையாக என்னில் தங்கியிருந்தார்.அவர் வீட்டை முற்றாக சார்ந்த ஓர் ஆளுமை.கணவரின் அனைத்து வேலைகளையும் நானே என் கைப்படக் கவனிப்பேன். அவரது குடும்ப வியாபாரத்திலும் நான் முழுமையாக கைகொடுத்து வந்தேன். நான் ஜமா ஆவில் இணைந்ததும் அவரின் ஆதரவு இருந்தது. எனினும் எல்லாவற்றிக்கும் நான் இல்லாத குறை அவரை மிகவும் பாதித்தது. சொகுசுகளை இழக்க வேண்டியும் சில விடயங்களிற்கு இயைந்து போக வேண்டிய நிர்பந்தமும் அவருக்கு ஏற்பட்டது. எனினும் கடந்த இரு வருடங்களாக மிகவும் புரிந்துணர்வுடன் நடந்து கொள்கிறார் ,அல்ஹம்துலில்லாஹ்.

இலங்கைக்கு வந்திருப்பது இது தான் முதல் முறையா?

ஆம்

இலங்கையைப்பற்றி உங்களுடைய உள்ளம் என்ன சொல்கிறது? இலங்கையின் காலநிலை மலேசியாவுடையது போலவே இருக்கிறது.மழை அதிகமாக பொழிகிறது.
பழங்களின் வகைகளைப்பார்க்கும் போது பிரமித்துப்போய் விடுகிறேன்.வாழைப்பழத்தில் மட்டுமே எத்தனை வகை?மாவனல்லை மிக அழகான இடம்,எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

இலங்கைப்பெண்களை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்?

உண்மையில் எனக்கு அதிகமான இலங்கைப்பெண்களை சந்திக்கக்கிடைக்கவில்லை.
இலங்கை ஜமா அதே இஸ்லாமி பெண்கள் அணியைச் சார்ந்த சகோதரிகளையே நான் அதிகம் சந்திக்க நேர்ந்தது, வித்தியாசமான பெண்களின் அறிமுகத்தைப்பெற்றுக்கொண்டேன்.
அவர்கள் அதிர்ந்து பேசாத மென்மையான இயல்பைக் கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் ஒரு பெரிய குழுவினராக இருக்கிறோம்,நீங்கள் ஒரு சிறிய குழுவினராக இருந்து கொண்டு செய்யும் பணிகளை பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ்.


வரலாறு நெடுகிலும் பெண்கள் மென்மையானவர்களாகவும் இளகிய சுபாவம் உடையவர்களுமாகவே நோக்கப்பட்டு வந்திருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
அரசியல் என்பது அதிகாரமும் உறுதியும் தேவைப்படுகின்ற ஒரு துறை.
இதை நீங்கள் எப்படி நோக்குகிறீர்கள்.

இந்தக்கருத்தை நான் ஏற்க மாட்டேன். பெண்கள் எப்போதும் மென்மையாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லவில்லை. இஸ்லாத்தைப் பிழையாக விளங்கியதால் வந்த விளைவு இது. வாழ்க்கையை நோக்கினால் ஒருபெண்ணுக்கு மென்மையாக நடந்து கொள்ள வேண்டிய கட்டங்கள் போலவே கடுமையாக் நடந்து கொள்ள வேண்டிய தருணங்களும் வருகின்றன. முக்கியமாக அந்திய ஆண்களுடன் மென்மையாக நடந்து கொள்வதை இஸ்லாம் விரும்பவில்லை.வயதானவர்களிடமும்,குழந்தைகளிடமும் மிக மென்மையாகப் பழக வேண்டும்.ஆனால் சில இடங்களில் நாம் உறுதியுடனும் ,உணர்ச்சிகளை வெளிக்காட்டாமலும் இருப்பது அவசியம். எனது மென்மையை நான் என் கணவருக்காக ஒதுக்கியுள்ளேன்.அவருடன் நான் இருக்கும் போது மிக மென்மையான பெண். ஆனால் நான் ஒரு சபையில் இருக்கும் போது நான் உறுதியாக இருந்து என் கருத்துக்களை தைரியமாக வெளியிடுவேன்.

எல்லாப் பெண்களும் பொருளாதார ரீதியான சுதந்திரம் பெற்றிருக்க வேண்டுமென்று நீங்கள் எண்ணுகிறீர்களா?

ஆம்,நிச்சயமாக.


இஸ்லாத்தில் பெண்ணின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு ஆணைச்சார்ந்தது என்பது உண்மை தான்.எனினும் இன்றைய உலகில் அவ்வாறு நடப்பதில்லை என்பதும் அதை விட உண்மை. எல்லாப்பெண்களும் வெளியில் போய் வேலை பார்க்க வேண்டும் என நான் கூறவில்லை.ஆனால் அவளுக்கான பொருளாதார வாழ்வாதாரம் வேண்டும்.தன்னுடைய சொந்தக்கால்களில் சுயமாக நிற்கக்கூடிய துணிவு அவசியம். உங்களுடைய கணவர் உங்களை விட்டு பிரிவது அல்லாஹ்வின் நாட்டமாயிருக்கலாம்;அல்லதுஅவரது மனம் மாறலாம்.எதிர்காலத்தைப்பற்றி ஒன்றும் எம்மால்கூறமுடியாது. இப்படியான இக்கட்டான கட்டங்களில் யாரிடமும் தங்கி நில்லாது குடும்பத்தை கொண்டு செல்லக்கூடிய பொருளாதார பலமும் மனோ வலிமையும் பெண்ணுக்குத்தேவை. வெளியில் செல்ல முடியாதவர்கள் வீட்டிலிருந்தே வியாபாரத்தில் ஈடுபடலாம். நாங்கள் அனைவரும் எங்கள் உரிமைகள் என்ன என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


உங்களிடம் உள்ளவை அனைத்தும் உங்களுக்கானவை,உங்கள் துணைவரிடம் உள்ளவை அனைத்தும் உங்களுக்கும் அவருக்கும் சொந்தமானவை.உரிமைகள் பொறுப்புக்களோடு சார்ந்தவை என்பதையும் நாம்மறக்கக்கூடாது. பொருளாதார சுதந்திரம் ஒரு பெண்ணுக்கு அத்தியாவசியம் என நான் நினைக்கிறேன்.காலம் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கின்ற ஒரு யுகத்தில் நாம் இருக்கிறோம். அதிகமான பெண்கள் மன அழுத்தம்(stress )பற்றி முறையிடுகிறார்கள்.


ஒரு அன்பான மனைவியாக,அணைக்கின்ற தாயாக,உடல் நலம் பேணும்
மருத்துவராக ,பாரளுமன்ற அங்கத்தவராக நீங்கள் பலபாத்திரங்களை ஏற்று திறம்பட நிர்வகிக்கும் ஒரு பெண்மணி.உங்கள் வாழ்க்கையில் மனஅழுத்தத்தை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்?

முதலில் உங்கள் மனதில் உள்ளதை மற்றவர்களுக்குத் தெரிவிக்க தயங்கக்கூடாது.
மனதுக்குள் குமையும் எண்ணங்களை உள்ளுக்குள் அடக்கி வைப்பதால் இரத்த அழுத்தம் எகிறுகிறது. மன அழுத்தம் அதிகரிக்கிறது.மனதுள் நினைப்பதை அப்படியே தெரிவித்து விடுங்கள். நான் என் வாழ்வில் முதலில்அதைத் தான் செய்கிறேன்.திட்டமிட்டு ஒழுங்குபடுத்தல் முன்னுரிமைப்படுத்தல் இவை இரண்டின் அடிப்படையிலும் என் பணிகளை மேற்கொள்கிறேன்,அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாமிய ஆட்சியை நோக்கிய பயணத்தில்( Mass media)தொடர்பூடகங்களின் பங்களிப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?

மிக முக்கியமானது.மீடியா ஒரு சக்தி.நாங்கள் இதனை கவனமாகவும்,மிகுந்த பொறுப்புணர்வுடனும் வினைத்திறனுடனும் கையாள வேண்டும்.பொது உரை அல்லது ஒரு நேர்காணலை வழங்கும் நாம் என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து நடக்க வேண்டும். மீடியாவின் நவீன போக்குகளுக்கு ஈடுகொடுக்க கூடிய வகையில் நாங்கள் எங்களைத் தயார்படுத்திக்கொள்ளவதும் எங்களுக்கான தனி மீடியாக்களை உருவாக்குவதும் நாம் செய்ய வேண்டிய பணிகளாகும்.

உங்களைப் போன்ற வெளிநாட்டு பெண் ஆளுமைகளை வரவேற்று சிலாகிக்கின்றஎமது அதே ஆண் சமூகம் தமது பெண்களின் ஆளுமையையும் வெளிப்பிரவேசத்தையும் வரவேற்க இன்னும் பூரணமாகத் தயாராகவில்லை.இதுபற்றி….

இது மிகவும் நிதர்சனமான கருத்து.பாரம்பரிய பழைமைவாத சிந்தனையிலிருந்து ஆண்களும் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.எமது சமூகத்தில் 50% ஆனவர்கள் பெண்கள்.அல்லாஹ்வின் முன்னிலையில் ஆண்களும் பெண்களும் சமமானவர்கள்.
ஆனால் ஆண்கள் தாம் சமூகப்பணிகளில் துடிப்போடு செயற்படுவதையும் அதற்கு ஒத்துழைப்பதே மனைவியரின் கடமை என்றும் எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.
ஆண்களைப்போலவே பெண்களிலும் தலைவர்கள் உண்டு.எனினும் ஆண்கள் எப்போதும் பெண்களை வழிநடாத்துபவர்களாக இருக்கவே ஆசைப்படுகிறார்கள்.பெண்களின் திறமையை ஏற்றுக்கொண்டாலும் அவர்களை இரண்டாந்தரமாகப்பார்க்கும் போக்கு காணப்படுகிறது.

இந்தப்போக்கு மாற்றமுற வேண்டுமாயின் எவ்வாறான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்?

ஆண்கள் அதிலும் குறிப்பாக அழைப்புப்பணியில் ஈடுபட்டுள்ளோர்,பெண்களை தங்களுக்கு சமனாக மதிக்க வேண்டும் பெண்களுடைய விடயங்களை ஓரக்கண்கொண்டு பார்க்காது நடுநிலையுடன் அணுக வேண்டும். சிலர் நாங்கள் பெண்களை பயிற்றுவிக்கிறோம் என்று இன்னும் கூறிக்கொண்டிருக்கிறார்கள், பயிற்றுவிக்கக்கூடிய திறமையுள்ள பெண்கள் இருப்பதையே மறந்து. இலங்கையிலுள்ள எந்த இஸ்லாமிய இயக்கத்திலும் அதிஉயர்மட்ட முடிவெடுக்கும் குழுவில் பெண்கள் இல்லை.இதனை நான் ஒரு பெரும் குறையாகக்காண்கிறேன்.இது நிறுவனத்தின் சமநிலையைப் பாதிப்பதாகும்.
ஆண்கள் தவறு செய்தால் பெண்களிடம் மன்னிப்புக்கேட்கத் தயங்கக்கூடாது..
இது ரசூலுல்லாஹ்வின் வழிமுறை.சில பெண்கள் ஆண்களை விட அழகான கருத்துடையவர்களாக,திறமையான நிர்வாகிகளாக இருக்கலாம்.இஸ்லாமிய இயக்கம் இதை விளங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் ஈகோ பார்ப்பது இஸ்லாமல்ல.

உங்களுடைய இயக்கத்திலும் இந்த நிலை காணப்படுகிறதா?

நான் ஒரு வட்ட மேஜையில் கலந்துரையாடலுக்காக உட்காரும் போது என்னை கருத்து வெளியிடக்கூடிய நபராகவே பார்க்கிறேன்.,ஒரு பெண்ணாகவல்ல.
எமது அமைப்பிலும் சில வருடங்களுக்கு முன்னர் இதே நிலை காணப்பட்டது.எமது ஆண்கள் எதிர்கட்சி தலைவியுடன் ஒரே மேசையில் உட்கார்ந்து பேசுவார்கள்,எமது பெண்கள் ஒரமாக வைக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது.அல்ஹம்துலில்லாஹ் இப்போது அந்நிலை மாறியிருக்கிறது.எமது அதியுயர் மட்ட சூறாவில் பெண்களும் அங்கத்துவம் வகிக்கிறார்கள்.


இறுதியாக எமது முஸ்லிம் பெண்களுக்கு என்ன கூறவிரும்புகிறீர்கள்?


உங்களது அறிவையும் திறன்களையும் வளர்த்துக்கொள்ளுங்கள்.பொறுப்புக்களை எடுக்கக்கூடிய தகுதியையும் ஆளுமையையும் உங்களில் ஏற்படுத்துங்கள்.உங்கள் குடும்பத்தைப் பற்றி எல்லை மீறிக்கவலைப்பட வேண்டாம்.நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் பயணிக்கும் போது அல்லாஹ் எமது குடும்பத்தைக்கவனித்துக்கொள்வான்.


சகோதரி மாரியா இஸ்லாமியப்பெண்கள் ஹிஜாபுடன் நடத்தும் நெறிப்போராட்டத்துக்கு சிறந்த ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்.நெஞ்சம் நிறைந்த நன்றிகளுடன் பிரிய மனமின்றி நமது நாளைய நகர்வை நோக்கிய சிந்தனைகளுடன்
விடைபெற்றோம்.
நேர் கண்டவர் சமீலா யூசுப் அலி

மீள் பதிப்பு அ.அஸ்மின்

No comments: