Saturday, May 31, 2008

கிழக்கு இனக்கலவரத்திற்கு மகிந்தவே காரணம்: சோமவன்ச???

கிழக்கு இனக்கலவரத்திற்கு மகிந்தவே காரணம்: சோமவன்ச
[புதன்கிழமை, 28 மே 2008, 06:13 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
நிறைவேற்று அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ள அரச தலைவர் மகந்த ராஜபக்ச, கிழக்கில் இனக்கலவரத்திற்கு தூபமிட்டு மக்களை பலிக்கடாக்களாக்கியுள்ளார் என்று ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜே.வி.பி. கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஜே.வி.பி. குறித்து இன்று பலரும் பல்வேறு விதமாக செய்திகளை வெளியிடுகின்றனர். ஜே.வி.பி. சவால் நிறைந்த கட்சியாகி விட்டது என்று பலரும் கூறுகின்றனர். இது குறித்து நாம் அலட்ட விரும்பவில்லை.

எனினும் எமக்கு தற்போது எந்தவித சவாலும் இல்லை. ஜே.வி.பி. தலைவர் கொல்லப்பட்ட போது மட்டுமே எமது கட்சி சவாலுக்கு முகம் கொடுத்தது.

தற்போது கட்சியை மீண்டும் கட்டி எழுப்பினோம். கட்சியின் வளர்ச்சி அதிகரிக்கும் நிலை இன்று உள்ளது.

இந்நிலையில் ஜே.வி.பியின் தலைமைப்பதவி குறித்து பலரும் செய்திகளை வெளியிடுகின்றனர். கட்சியின் தலைமைப் பதவி குறித்து நானே அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள் இது குறித்து அலட்டித் திரிகின்றனர். அவர்களுக்கு ஏன் இந்த கவலை வந்துள்ளது என்று தெரியவில்லை.

ஜே.வி.பி. குறித்தோ அல்லது அதன் தலைவரான என்னைப் பற்றியோ விமர்சிக்கும் தகுதி கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு இல்லை. அதற்கான உரிமை அவர்களுக்கு இல்லை. அதேநேரம் தலைமைப்பதவியைத் துறக்கவும் தயாராக உள்ளேன்.

தலைமைப்பதவியில் தொடர்ந்தும் இருக்கும் எண்ணமும் எனக்கு இல்லை. தலைமைப் பதவி பறிபோனால் கட்சியைக் காட்டிக்கொடுக்க மாட்டேன். சாதாரண தொண்டனாக இருந்து கட்சியைக் காப்பாற்றுவேன்.

அதேபோல் எவருடைய அச்சுறுத்தல்களுக்கும் நான் அடிபணியப்போவதில்லை. அஞ்சப்போவதில்லை. நாட்டையும் மக்களையும் ஏமாற்றும் மகிந்த அரசு இன்று மக்கள் மீது அளவு கடந்த சுமைகளை சுமத்தியுள்ளது. எப்படி எல்லாம் சுமைகளை சுமத்த முடியுமோ அப்படி எல்லாம் சுமைகளைச் சுமத்துகின்றனர்.

அது மட்டுமின்றி கடத்தல் மற்றும் கப்பம் கறக்கும் செயற்பாடுகளிலும் இந்த அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. மக்களின் ஜனநாயக உரிமைகளை இந்த அரசாங்கம் மதிக்கவில்லை. நிறைவேற்று அதிகாரத்தை மகிந்த தவறாகப் பயன்படுத்துகிறார். அதன் ஒரு வெளிப்பாடாகவே நாடாளுமன்றம் இழுத்து மூடப்பட்டுள்ளது.

சேனாதிபதி போன்று செயற்படும் மகிந்த இன்று கிழக்கில் இனக்கலவரத்திற்கு தூபமிட்டுள்ளார். அங்கு ஒரு தேர்தலை நடத்தி தமிழ் - முஸ்லிம் மக்களிடையே இனக்கலவரத்தை தூண்டிய மகிந்த, அதிகாரத்தை தருவதாகக் கூறி மக்களை பலிக்கடவாக்கி வருகிறார்.

கிழக்கு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தற்போது மிஞ்சியிருப்பது நிம்மதியற்ற வாழ்க்கையே ஆகும். இத்தகைய அரசாங்கம் எமது நாட்டுக்கு தேவையில்லை. தேவையான நேரத்தில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறோம் என்றார் அவர்.

No comments: