Tuesday, May 27, 2008

பால்ராஜ

இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்: தேசியத் தலைவர் புகழாரம்
[வியாழக்கிழமை, 22 மே 2008, 07:36 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ் என்று தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழீழ தேசியத் தலைவர் விடுத்துள்ள அறிக்கை:

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
மே 21, 2008.

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே,

விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. எத்தனையோ வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. மகத்தான இராணுவ வெற்றிகளைக் குவித்திருக்கிறது. இந்த இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று, எமது சண்டையணிகளையும் மரபுப் படையணிகளையும் வழிப்படுத்தி, நெறிப்படுத்திச் சமராடிய எமது வீரத்தளபதி இன்று எம்முடன் இல்லை. இவரது இழப்பால் எமது தேசம் ஆற்றமுடியாத துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் இன்று மூழ்கிக்கிடக்கிறது.

பொதுவாகவே, விடுதலை இலட்சியத்தில் பிடிப்பு ஏற்பட்டு விட்டால், எமக்கு துன்ப துயரங்கள் தெரிவதில்லை. வேதனைகள் புரிவதில்லை. உடல் உபாதைகள் அழுத்துவதில்லை. இயற்கைகூடக் குறுக்கே நிற்பதில்லை. எனது அன்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜூக்கும் அப்படித்தான். ஓயாது குமுறும் சமர்க்களங்களையெல்லாம் அவன் ஓய்வில்லாது, உறக்கமில்லாது எதிர்கொண்டான். அங்கு இரவு, பகல் பாராது செயற்பட்டான். கொட்டும் மழையும் கோடையின் கொழுத்தும் வெய்யிலும் அவனைக் கட்டிப்போட்டது கிடையாது. கொடிய சண்டைக் களங்களில் எல்லாம் எத்தனையோ துன்பங்களைச் சுமந்தவாறு, எத்தனையோ நெருக்கடிகளைச் சமாளித்தவாறு, எத்தனையோ ஆபத்துக்களை எதிர்கொண்டவாறு அபாரமான மனவுறுதியோடு போராடினான்.

தலைசிறந்த போர்த்தளபதி என்ற வகையில் நான் அவனை ஆழமாக நேசித்தேன். அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தேன். அவன் அறிமுகமாகிய நாளிலிருந்து அவனுள் அபூர்வ போர்ப் பண்புகளும் போர்க் குணங்களும் இயற்கையாகவே நிறைந்து கிடப்பதைக் கண்டுகொண்டேன். ஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க இலட்சியப் போராளியாக அவனை வளர்த்தெடுத்தேன். அபாரமான துணிவும், அசுர வேகமும், சிறந்த தாக்குதல் உத்திகளும், நேர்த்தியாகப் படை நகர்த்தும் ஆற்றலும், கூட்டுக்குலையாத குறிதவறாத செயற்பாடுகளுமாக அவன் வெளிப்படுத்திய போர்ப்பண்புகள், எமது எதிரிக்கு அச்சத்தைக் கொடுத்தன. அதேநேரம், எமது போராளிகளின் மனோதிடத்தையும் இலட்சிய உறுதியையும் மேலும் உரமாக்கின. எமது மக்களுக்கு பெரும் வெற்றிகளைத் தேடித்தந்தன.

பிரிகேடியர் பால்ராஜ் எம்மைவிட்டு எங்கும் போய்விடவில்லை. எமது தேசத்தின் சுதந்திர மூச்சாக, எம்மையெல்லாம் உள்ளிருந்து இயக்குகின்ற இலட்சிய நெருப்பாக அவன் என்றும் எம்முள் எரிந்துகொண்டிருப்பான்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
………………
(வே.பிரபாகரன்)
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.



நிகழ்கால வீரத்தின் குறியீடு பிரிகேடியர் பால்ராஜ்: யோகி
[புதன்கிழமை, 21 மே 2008, 07:13 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நிகழ்கால வீரத்தின் குறியீடாக விளங்குகின்றார் பிரிகேடியர் பால்ராஜ் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார்.

யோ.செ.யோகி வழங்கிய நினைவுப் பகிர்வில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

விடுதலைப் போராட்டத்தில் காலத்துக்கு காலம் வீரத்தின் குறியீடாக ஒவ்வொருவர் விளங்குவர். எத்தனை வீரர் இருந்தாலும் குறியீடாக ஒரு சிலரே விளங்குவர்.

இன்றைய காலத்தில் தமிழீழ வீரத்தின் குறியீடாக பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் விளங்குகின்றார். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை எண்ணுவதனை களத்தில் செய்து முடிப்பவராக பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் விளங்கினார்.

வன்னி-முல்லைத்தீவு-மணலாறு களங்களில் மேஜர் பசீலன் அவர்களுடன் இணைந்து எதிரிக்கு எதிராக களமாடிய பால்ராஜின் திறன்களை இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் மணலாறு காட்டுக்குச் சென்ற தமிழீழத் தேசியத் தலைவர் அடையாளம் காண்கின்றார்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் அடையாளம் காணப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் உயர்நிலைத் தளபதிகள் எல்லோரும் வியந்து ஏற்கும் திறன் கொண்டவராக செயற்பட்டார்.

தமிழீழத்தேசியத்தலைவர் அவர்கள் எண்ணுவதனை களத்தில் செயற்படுத்துபவராக பிரிகேடியர் பால்ராஜ் விளங்குகின்றார்.

தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நிகழ்கால வீரத்தின் குறியீடாக அவர் விளங்குகின்றார் என்றார் அவர்.


அதியுச்ச உழைப்பு முழுவதையும் விடுதலைப் போராட்டத்துக்கு அளித்த பெருவீரன் பிரிகேடியர் பால்ராஜ்: கேணல் தீபன்
[வியாழக்கிழமை, 22 மே 2008, 07:58 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது 25 ஆண்டுகால வரலாற்றில் தன் அதியுச்ச உழைப்பு முழுதையும் விடுதலைப் போராடத்துக்கு வழங்கிய பெருவீரன் பிரிகேடியர் பால்ராஜ் என்று வட போர்முனை கட்டளைத் தளபதி கேணல் தீபன் புகழாரம் சூட்டினார்.

கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்க நிகழ்வில் கேணல் தீபன் ஆற்றிய வீரவணக்க உரை:

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது 25 ஆண்டுகால வரலாற்றில் தன் அதியுச்ச உழைப்பு முழுதையும் இந்த விடுதலைப் போராடத்துக்கு வழங்கிய பெருவீரன் பிரிகேடியர் பால்ராஜ்.

பிரிகேடியர் பால்ராஜ் களத்தில் நிற்கின்றார் என்றால் சிங்களப் படையினர் ஒவ்வொருவனுக்கும் குருதி உறையும். எதிரிகளுக்கு நடுங்கும். எதிரியை கலங்கவைத்து எதிரியை சிதறடித்து இந்த விடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனைகளுக்கு காரணமாக இருந்த முதன்மைத் தளபதியாக தளபதி பால்ராஜ் விளங்குகின்றார்.





தளபதி பால்ராஜ் என்றால் ஒவ்வொரு சிங்களப்படைக்கும் தெரியும். அந்தளவுக்கு எதிரிக்கு சிம்ம சொர்ப்பனமாக தளபதி பால்ராஜ் விளங்கினார்.

ஒவ்வொரு போராளிகளையும் உணர்வூட்டி அவர்களை எந்த எதிரிக்கும் எதிராக கிறங்காது பதற்றம் இல்லாமல் நின்று சண்டையிட வைப்பார். அந்தளவுக்கு போராளிகளுக்கு உறுதியையும் உற்சாகத்தையும் கொடுத்து தானும் களத்தில் உறுதியாகவும் உற்சாகமாகவும் நின்று வெற்றிகளுக்காக உழைப்பார்.

சண்டைக்களங்களில் அவரின் உறுதி- வீரம்- துணிச்சல்- ஆளுமை எல்லாவற்றையும் பார்க்கலாம்.

சாள்ஸ் அன்ரனி படையணியை உருவாக்கும் பொறுப்பு தேசியத் தலைவரால் அவருக்கு வழங்கப்பட்ட போது அதனை உருவாக்க முழுதாக உழைத்தார்.

இன்று எதிரிக்கு சிம்ம சொர்ப்பனமாக சாள்ஸ் அன்ரனி படையணி இருக்கின்றது எனில் அதற்கு தளபதி பால்ராஜ்தான் பின்னணியில் இருக்கின்றார்.





ஆனையிறவு வெற்றிகொள்ளப்பட குடாரப்பில் தரையிறங்கி எதிரியின் வியூகத்துக்குள் 34 நாட்கள் உறுதியாக நின்று வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.

34 நாட்களும் அவர் எதிரியின் உச்சபலத்துக்குள் உறுதியாக நின்று எதிரி நியமித்த 5 தளபதிகளையும் தோற்கடித்தார்.

பால்ராஜின் வரலாறு அழிக்கப்பட முடியாதது. ஆழமாக முத்திரையை அவர் பதித்துள்ளார்.

வீரம் என்றால் தளபதி பால்ராஜ் வீரத்துக்கு மறுபெயர்- துணிவுக்கு மறுபெயர் தன்னம்பிக்கைக்கு மறுபெயர்.

அவரின் வரலாறு அவரது வீரம் நம் எல்லோரிடமும் இருக்கவேண்டும்.

"நாம் எப்போதும் வீழ்ந்திடலாம். நம் போராட்டத்தின் வீச்சு- வேகம் ஒவ்வொருவரின் இழப்புக்களிற்குள்ளாகவும் வரவேண்டும்" என்பார் பால்ராஜ்.





போராட்டம் என்றால் இழப்புக்கள் ஏற்படும். இழப்புக்கள் இல்லாமல் போராட்டத்தை வெல்ல முடியாது. தளபதிகள் பலர் தம்மை அர்ப்பணித்திருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரதும் இழப்புக்களும் எமது போராட்டத்தை வீச்சாக்கித்தான் இருக்கின்றது.

அவர்கள் தமது வீரத்தையும் வரலாற்றையும் தந்துவிட்டுச் சென்றுள்ளனர்.

அதனை நாம் உள்ளத்தில் நிறுத்த வேண்டும்.

பிரிகேடியர் பால்ராஜின் கனவு அவரது எதிர்பார்ப்பு எதற்காக அவர் தன்னை ஈய்ந்தாரோ அதனை நாம் உறுதியாக நிறைவேற்றுவோம்.

அவரது வீரத்தையும் வரலாற்றையும் உழைப்பையும் நம் உள்ளத்தில் எடுத்துக்கொண்டு அவரது எண்ணங்களை கனவுகளை நாம் நிறைவேற்ற உழைப்போம். அதற்கு எல்லோரும் தயாராவோம் என்றார் கேணல் தீபன்.

கிளிநொச்சியில் பிரிகேடியர் பால்ராஜின் வீரவணக்க நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழீழ மாவீரர் பணிமனைப் பணிமுதல்வர் பொன். தியாகம் ஏற்றினார்.

வித்துடலுக்கான ஈகச்சுடர்களை பிரிகேடியர் பால்ராஜின் உடன்பிறப்புக்களான சந்திரசேகரம், ஞானசேகரம் ஆகியோர் ஏற்றி மலர்மாலைகளைச் சூட்டினர்.

வட போர்முனை கட்டளைத்தளபதி கேணல் தீபன், போர்ப்பயிற்சி ஆசிரியர் தினேஸ், தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளர் கரிகாலன், நீதி- நிர்வாகப் பிரிவுப் பொறுப்பாளர் பரா, அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன், தளபதி வசந்தன், தளபதி குமணன், தளபதி வீமன், சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணித் துணைத் தளபதி அமுதாப், தளபதி முகுந்தன், மருத்துவப் பிரிவைச் சேர்ந்த தேவா உள்ளிட்டோர் மலர்மாலைகளைச் சூட்டினர்.

மாங்குளம்

பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு மல்லாவியிலும் மாங்குளத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு உணர்வுபூர்வமாக வீரவணக்கம் செலுத்தினர்.

பிரிகேடியர் பால்ராஜின் வீரவணக்கக் கூட்டம் மல்லாவி மாவீரர் மண்டபத்தில் மல்லாவிக் கோட்டப் பொறுப்பாளர் செம்மணன் தலைமையில் நடைபெற்றது.

பொதுச்சுடரினை வட போர்முனைத் தளபதிகளில் ஒருவரான ஜெரி ஏற்ற, ஈகைச்சுடரேற்றி மலர்மாலையை உடன்பிறப்பு சந்திரன் சூட்டினார்.

அவரைத் தொடர்ந்து மலர்மாலையை உடன்பிறப்பு ஞானம், மருமகன் சதீஸ், தளபதி கேணல் றமேஸ் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ. தங்கன், தளபதி குமரனின் துணைவியார், சாள்ஸ் அன்ரனி துணைத்தளபதி அமுதாப், திருகோணமலை மாவட்ட சிறப்புத் தளபதி வசந்தன், மல்லாவி மத்திய கல்லூரி அதிபர் யேசுதானந்தன், யோகபுரம் மகாவித்தியாலய முதல்வர் யோகானந்தர், பாலிநகர் பாடசாலை முதல்வர் கிருஸ்ணபிள்ளை, மல்லாவி வட்ட தேசியப் பணிக்குழுச் செயலாளர் சுந்தரலிங்கம், கனகராயன்குள கோட்டப் பொறுப்பாளர் ஞானவேல், ஆலங்குள மாவீரர் துயிலும் இல்லப் பொறுப்பாளர் இளம்பிறை ஆகியோர் சூட்டினர்.

வீரவணக்க உரையை தளபதி றமேஸ் ஆற்றினார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் மலர்வணக்கம் செலுத்தினர்.

வித்துடல் மாங்குளத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.


சமர்க்களங்களின் சரித்திர நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்
[புதன்கிழமை, 21 மே 2008, 05:56 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.

தமிழீழத்தின் இதயபூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.

வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார்.

இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் தொடர்ந்து லெப்.கேணல் நவத்துடனும் செயற்பட்டார்.



இந்தியப்படை வெளியேற்றத்தின் பின்னர் வன்னிக்கான தளபதியாகி வன்னியில் தடைக்கற்களாக இருந்த சிங்களப் படைத்தளங்களை துடைத்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

1990 ஆம் ஆண்டில் கொக்காவில் - மாங்குளம் கிளிநொச்சி ஆகிய வன்னியின் நடுப்பகுதியில் இருந்த சிங்களப் படைத்தளங்களை இவர் நடத்திய தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் தகர்த்தழிக்கப்பட்டன.

முல்லைத்தீவை விரிவாக்கும் சிறிலங்காப் படையினரின் "கடற்காற்று" எதிர் நடவடிக்கையையும் தலைமையேற்று வழிநடத்தினார்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட முதல் சிறப்புப் படையணியான சார்ள்ஸ் அன்ரனியின் முதலாவது சிறப்புத் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.



வவுனியாவிலிருந்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட "வன்னிவிக்கிரம" நடவடிக்கையை முறியடித்து எதிரியின் உலங்குவானூர்தியைச் சுட்டுவீழ்த்தி எதிரிக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தாக்குதல்களை வழிநடத்தினார்.

1991 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் மீதான "ஆகாய- கடல்வெளி"ச் சமரில் வன்னிப்பகுதி ஊடாக நகர்ந்து சுற்றுலா விடுதி படைமுகாம் தகர்ப்பு நடவடிக்கை இவர் தலைமையில் நடத்தப்பட்டது.

மணலாறில் சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட "மின்னல்" நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதலையும் வழி நடத்தியிருந்தார்.

இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.



யாழ்ப்பாணத்துக்கான ஒரே பாதையான கிளாலிப் பாதையை சிங்களப் படைகள் மூடிவிடும் நோக்கத்தில் மேற்கொண்ட "யாழ்தேவி" நடவடிக்கையை முறியடித்து எதிரிகளின் டாங்கிகளை முதல் தடவையாக அழித்த நடவடிக்கையில் காலில் காயமடைந்தார்.

1995 ஆம் ஆண்டில் சிறிலங்காப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட "முன்னேறிப்பாய்தல்" முறியடிப்புத் தாக்குதலான புலிப்பாய்ச்சலில் அணிகளை களத்தில் வழிநடத்தி எதிரிக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்த அந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டதில் பங்காற்றினார்.

யாழ்ப்பாணத்தினை சிறிலங்காப் படைகள் வல்வளைத்த "சூரியக்கதிர்" நடவடிக்கை எதிர்தாக்குதலில் பங்காற்றிய இவர், 1996 ஆம் ஆண்டில் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும்பலம் சேர்த்து எதிரிக்குப் பேரழிவை ஏற்படுத்திய முல்லைத்தீவு படைத்தளம் அழிக்கப்பட்ட ஓயாத அலைகள் - 01 நடவடிக்கையின் ஒருங்கிணைப்புத் தளபதியாக செயற்பட்டார்.


வாகரையில் ஆழிப்பேரலை மீள்கட்டமைப்புப் பணியில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் பிரிகேடியர் பால்ராஜ்

வன்னியை சிறிலங்காப் படையினர் வல்வளைத்த "ஜெயசிக்குறு" நடவடிக்கை எதிர் நடவடிக்கையில் தொடக்க காலத்தில் செயற்பட்ட இவர், பின்னர் கிளிநொச்சியில் இருந்த சிங்களப் படையினர் விரட்டியடிக்கப்பட்ட "ஓயாத அலைகள் - 02" நடவடிக்கையின் வெற்றிக்கு உறுதுணையாக ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினார்.

தொடர்ந்து "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையில் சிங்களத்தின் மிகப்பெரும் தளமான ஆனையிறவை வெற்றி கொள்வதற்காக எதிரியின் கோட்டையான குடாரப்பில் பெரும் அணிக்கு தலைமையேற்று கடல்வழியாகச் சென்று தரையிறங்கி, இத்தாவிலில் ஊடறுத்து 34 நாட்கள் எதிரியின் முற்றுகைக்குள் நின்று எதிரிகளுக்குப் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி ஆனையிறவு வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.

அப்போது சிங்களப் படை மாறி மாறி 4 தளபதிகளை தனது சிறப்புப்படைக் கொமாண்டோக்களுக்கு நியமித்து பெரும் தாக்குதல்களை நடத்திய போதும், ஆனையிறவு வெல்லப்பட்டு பளையைக் கைப்பற்றி விடுதலைப் புலிகள் வந்து கைகுலுக்கும் வரை இத்தாவிலில் எதிரியை திணறடித்தவர் இவர்.

2001 ஆம் ஆண்டில் முகமாலையில் இருந்து எதிரி மேற்கொண்ட "தீச்சுவாலை: என்ற பெரும் தாக்குதலையும் முறியடித்ததில் முதன்மைப் பங்கை வகித்திருந்தார்.

போர் நிறுத்த காலத்தில் மட்டக்களப்பின் வாகரைப் பகுதியில் நின்று செயற்பட்ட இவர், அங்கு ஆழிப்பேரலையில் அகப்பட்டு தப்பினார்.

பின்னர் வன்னிக்குத் திரும்பிய இவர், போராளிகளுக்கு பயிற்சி கொடுத்து வளர்த்தல் மற்றும் போரியல் உத்திகளை கற்றுக்கொடுத்தல் ஆகிய முதன்மைச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

அமைதிக்காலத்தில் நோய்க்காக சிகிச்சை பெற சிங்கப்பூர் சென்றிருந்தார். போராளிகளினதும் மக்களினதும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரிகேடியர் பால்ராஜின் இழப்பில் உலகத்தமிழினம் துயருற்று இருக்கின்றது.


No comments: