Tuesday, January 1, 2008

மகேஸ்வரன் படுகொலையும்- முரண்பட்ட தகவல்களும் சொல்லும் செய்தி என்ன??


புதினம் (புலிகளின் உத்தியோகப்பற்றற்ற செய்தித்தளம்)
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயப் பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் 12 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுவருட நாளினை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் தனது குடும்பத்தினருடன் மெய்ப்பாதுகாவலர்கள் சகிதம் கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொண்டார்.



பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய உள்வீதியை மகேஸ்வரன் சுற்றி வந்துகொண்டிருந்த போது முற்பகல் 9.55 மணியளவில் அங்கு நின்ற துப்பாக்கிதாரி ஒருவர் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தினார்.

இதில் மகேஸ்வரனும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 2 பேரும், 7 பொதுமக்களும் காயமடைந்தனர். மகேஸ்வரனின் குடும்பத்தினருக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

மகேஸ்வரனையும் அவரது மெய்ப்பாதுகாவலர்களையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காயமடைந்த பொதுமக்களை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் அங்கு அவர்கள் அனுமதிக்கப்படாததால் அவர்களையும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மருத்துவமனைக்கு மகேஸ்வரன் கொண்டு செல்லப்படும் போது மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருந்தார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சில நிமிடங்களில் சுமார் முற்பகல் 10.15 மணியளவில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மகேஸ்வரன் உயிரிழந்ததை கொழும்பு மருத்துவமனைப் பேச்சாளர் சொய்சா உறுதிப்படுத்தினார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

மகேஸ்வரன் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் மிகவும் ஆபத்தான நிலையிலேயே இங்கு கொண்டு வரப்பட்டார். அவரின் நெஞ்சுப்பகுதியில் பல குண்டுகள் துளைத்திருந்தன. அவரது தலைப்பகுதியையும் குண்டுகள் துளைத்திருந்தன. அவருக்கு உடனடியாக சத்திர சிகிச்சை செய்யப்பட்டது. எனினும் அது பலனளிக்காது அவர் உயிரிழந்தார் என்றார்.

மகேஸ்வரன் உயிரிழந்த சிறிது நேரத்தில் காயமடைந்த அவரது மெய்ப்பாதுகாவலரான காவல்துறையைச் சேர்ந்தவரும் உயிரிழந்ததாக மருத்துவமனை பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த பொதுமக்களில் இருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை ஐக்கிய தேசியக் கட்சி கடுமையாகக் கண்டித்திருக்கின்றது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறுகையில்,

மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் குறைத்துக் கொண்டது அரசாங்கம். அதன் தொடர்ச்சியாகவே மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்.

நாடாளுமன்றத்திலும் வெளியிடங்களிலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்ததன் விளைவாகவே அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக நாங்கள் கருதுகின்றோம். கொலைச் சம்பவத்திற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். அரசாங்கம்தான் அவரைப் படுகொலை செய்யும் உத்தரவை வழங்கியுள்ளது என்றார்.



சம்பவம் இடம்பெற்ற போது அங்கு வழிபாட்டில் நின்ற பொதுமக்கள் அல்லோலகல்லோலப்பட்டு சிதறி ஓடினர். மகேஸ்வரன் மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்திய நபரை நோக்கி அவரது மெய்ப்பாதுகாவலர்களும் துப்பாக்கிச் சூட்டினை நடத்தினர் என்று கூறப்படுகின்றது. தற்போது பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை "சக்தி" தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "மின்னல்" நிகழ்ச்சயில் கலந்துகொண்ட மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் படுகொலைகளுக்கு அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக்குழுவான ஈ.பி.டி.பியே காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாகவே அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிற்கான பிரசாரத்தின் போதும் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னர் பிரபல வரத்தகரான இவர், யாழ்ப்பாணம் காரைநகரைச் சொந்த இடமாகக் கொண்டவர். இவருக்கு வயது 42.

இலங்கையில் பெயர் குறிப்பிடத்தக்க வர்த்தகர்களுள் மகேஸ்வரனும் அடங்குவார். அவருக்குச் சொந்தமான நான்கு கப்பல்கள் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுட்டு வருகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசு இருந்தபோது யாழ். மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டி இந்து கலாச்சார அமைச்சர் பதவியையும் மகேஸ்வரன் வகித்திருந்தார்.

இவரது நெருங்கிய சகாவான பேபியன் எனப்படும் முத்துக்குமார் சிவபாலன் கடந்த வருடம் டிசம்வர் மாதம் 21 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சுமார் ஒரு வாரத்திற்குப் பின்னர் மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் நவம்பரில் கொழும்பில் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பூசா தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த மகேஸ்வரன், பாதிக்கப்பட்ட மக்களை திரட்டிக் கொண்டு பூசா தடுப்பு முகாமுக்கு சென்றதுடன் அரச தலைவரின் அலுவலகத்தை நோக்கி பேரணியாகவும் சென்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மகேஸ்வரனை நோக்கி துப்பாக்கிச் சூட்டினை நடத்திய நபரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருபக்பதாக தகவல்கள் தெரிவிக்கன்றன. எனினும் இதனை மருத்துவமனை நிர்வாகத்தினர் உறுதிப்படுத்த மறுக்கின்றனர்.

மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இச்சம்பவத்தின் சூத்திரதாரி படுகாயமடைந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

விழிப்பு (அரச மற்றும் கருணா அணிசார் செய்தித்தளம்)

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் இந்து கலாசார அமைச்சரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தியாகராஜா மகேஸ்வரன் இன்று காலை கொழும்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். புது வருடப் பிறப்பை முன்னிட்டு இன்று காலை 9.15 மணியளவில் கொழும்பு-13, கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த போதே அவர் மீது இனம் தெரியாத நபர்களினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கி;ச் சூட்டுச் சம்பவத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகாயமடைந்ததோடு, அவரது மெய்ப்பாதுகாவலர்களி;ல் ஒருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.மேலும் சம்பவத்தின் போது கோயிலில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பொது மக்கள் ஆறு பேரும் படுகாயமடைந்துள்ளனர்.

துப்பாக்;கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த மகேஸ்வரன் மிகவும் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட போதும், மருத்துவர்களின் தீவிர போராட்டம் பலனின்றிப்போய் முற்பகல் 10.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
தியாகராஜா மகேஸ்வரன் கடந்த 2001ம் ஆண்டு பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முதலாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.அப்போதைய தேர்தலில் அதிகாரத்துக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இந்துக் கலாசார அமைச்சராகவும் பதவி வகித்தார். அவர் இந்துக் கலாசார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் அன்றைய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் சென்றிருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவருக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவிய நெருங்கிய நட்பின் காரணமாக பல சந்தர்ப்பங்களில் அவர் நாடாளுமன்றத்தின் உள்ளேயே தான் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டிருந்தார். தனது கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்கவையே பல தடவைகள் பகிரங்கமாக விமர்சித்திருந்தார்.

2004ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது புலிகள் அமைப்பினர் எதிர்ப்புக் காட்டியதன் காரணமாக யாழ். மாவட்டத்தை விட்டு கொழும்பில் போட்டியிட முன்வந்தார். எனினும் ஏற்கெனவே கொழும்பு தமிழர்களின் வாக்குப் பலத்தை தன் வசம் வைத்திருந்த மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் மகேஸ்வரனுக்கும் இடையில் பகிரங்க மோதல் வலுப்பெற்றது. அதன் காரணமாக தேர்தல் காலத்தில் மனோ கணேசன் எம்.பி.யின் கோட்;டை என்று வர்ணிக்கப்படும் கொட்டாஞ்சேனையின் ஜிந்துப்பிட்டிப் பகுதியில் வைத்து மகேஸ்வரன் மீது கொலை முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. அச்சம்பவத்தில் கழுத்துப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்து, ஒருவாறு தப்பிப் பிழைத்தார். மேலக மக்கள் முன்னணியே தம்மைக் கொலை செய்ய முயற்சித்தாக மகேஸ்வரன் குற்றம் சாட்டியிருந்த போதும், அக்கட்சியின் தலைவர் மனோ கணேசன் அதனை மறுத்திருந்ததுடன், மகேஸ்வரனைக் கண்டபடி தாக்கி அறிக்கையும் விட்டிருந்தார். அது முதலே அவர்கள் இருவரும் அரசியலில் எதிர்த்துருவங்களாகவே விளங்கியிருந்தனர். இம்முறை அவர் படுகொலை செய்யப்படக் காரணமாக அமைந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்ற கோவிலும் கொட்டாஞ்சேனைப் பகுதியிலேயே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கட்சி தாவி அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டதன் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பி;னர் மகேஸ்வரனும் அரசாங்கத் தரப்புக்குத் தாவப் போவதாக பல சந்தர்ப்பங்களில் பலமான ஊகங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.கடந்த வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போதும் கூட அவர் அரசாங்கத் தரப்புக்கு மாறப் போவதாக பலமான கதை அடிபட்டது. அதே போல இந்த ஜனவரியில் அரசாங்கத் தரப்புக்கு கட்சி மாறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் மகேஸ்வரனும் உள்ளடங்கியி;ருப்பதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்திருந்தது. ஜனாதிபதிக்கும் மகேஸ்வரனுக்கும் இடையில் நிலவும் நெருங்கிய நட்பின் அடிப்படையிலேயே அவர் கட்சி தாவ தீர்மானித்திருந்ததாகவும் தெரிவி;க்கப்பட்டது. இவ்வாறான சம்பவங்களின் பின்புலத்திலேயே அவர் இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் காரணமாக மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஈபிடிபி செய்தித்தளம்

இன்று மலர்ந்திருக்கும் புத்தாண்டு, நாட்டில் சமாதானத்தையும் அமைதியையும் கொண்டுவர வேண்டும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அதற்காக இன மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மக்களும் வழிபாடுகள் செய்துகொண்டிருக்கையில் நண்பர் தி.மகேஸ்வரன் அவர்கள் சுட்டுக் கொலை செய்யப் பட்டிருப்பது அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அவரது சில கருத்துக்கள் ஏற்புடையதற்றதாக இருந்திருக்கலாம், ஆனால் அவர் விரும்பிய கருத்தைக் கூறுகின்ற உரிமை அவருக்கு உண்டு. அத்தகைய உரிமையை மதிக்கின்றோம். கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்வதை நாம் ஆயுதப் போராட்ட காலத்திலிருந்து ஒரு கொள்கையாகவே பின்பற்றி வருகின்றோம். இதையே நீண்ட காலமாக வலியுறுத்தியும் வருகின்றோம்.

துரதிர்ஷ்டவசமாக கருத்துக்களை கருவி கொண்டு அழிக்கின்ற சூழல் தொடர்ந்து கொண்டே வருகின்றது. அதற்கு இன்று நண்பர் மகேஸ்வரனும் பலியாகியிருக்கின்றார். அரசை விமர்சிப்பவர்களையும், தமது இழுப்புக்களுக்கு இழுபட மறுப்பவர்களையும் புலிகள் கொலை செய்துவிட்டு பழியை எதிர் தரப்புகளின் மீது விழச் செய்யும் செயலில் ஈடுபட்டுள்ளனர். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் விழுத்தும் தந்திரமாகவே புலிகள் தொடர்ந்தும் இவ்வாறு கொலைகளைச் செய்து வருகின்றனர்.

ஏனெனின் ஏற்கனவே மகேஸ்வரன் அவர்களை தேர்தலில் போட்டியிட வேண்டாமென்று புலிகள் தடுத்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றியபோதும், கொழும்பில் தேர்தலில் போட்டியிட்டார். அவ்வேளையில் புலிகள் அவரை சுட்டனர். அச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் மகேஸ்வரன் உயிர் தப்பினார்.

ஈ.பி.டி.பி யாகிய நாம் அனைத்துக் கொலைகளையும் கண்டிக்கின்றோம். அனைத்துக் கொலைகளும் நிறுத்தப்பட வேண்டும். மக்கள் அச்சுறுத்தலற்று இயல்புச் சூழலில் வாழவேண்டும். கொலைகளுக்கூடாக கருத்துக்களை அழிக்கவோ தமிழ் மக்களுக்கு தீர்வையோ பெற்றுக் கொடுக்க முடியாது. கடந்த கால வரலாறும் இதையே உணர்த்தியுள்ளது.
அமரர் மகேஸ்வரனின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தாருடன் நாமும் எமது ஆழ்ந்த துயரங்களைப் பகிர்ந்து கொள்கின்றோம்.


ஊடகச் செயலாளர்
ஈழ மக்கள் ஐனநாயக கட்சி ஈ.பி.டி.பி
01.01.2008

-------------------------------------------------------------------------------------------------------

தமிழர் உரிமைப்போராட்டம்- தனது பிரிவினை இலக்கிலிருந்தும் தனது தவறான பாதையிலிருந்தும் விடுபட்டு ஒரு தெளிவானதும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான ஒரு பாதையை நோக்கி மீளாதவரை இத்தகைய படுகொலைக்கலாசாரம் முடிவுக்கு வரப்போவதில்லை.

Thursday, December 27, 2007

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்து அமைச்சர் மேர்வின் சில்வா அட்டகாசம்



ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்து அமைச்சர் மேர்வின் சில்வா அட்டகாசம்
[வியாழக்கிழமை, 27 டிசெம்பர் 2007, 04:23 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்கா அரசாங்கத்தின் தொலைக்காட்சி ஊடக நிறுவனமான ரூபவாஹினி கூட்டுத்தாபன செய்திப்பிரிவு அலுவலகத்திற்குள் இன்று வியாழக்கிழமை காலை அத்துமீறிப் பிரவேசித்த அமைச்சர் மேர்வின் சில்வாவும் அவரது குழுவினரும் அங்கிருந்த செய்திப் பணிப்பாளரை கடுமையாகத் தாக்கியதையடுத்து அங்கே பெரும் களேபரம் வெடித்தது.

மாத்தறையில் நேற்று நடைபெற்ற அமைச்சர் மேர்வின் சில்வா பங்கேற்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புச் செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பியவாறு ரூபவாஹினி கூட்டுத்தாபன நிறுவனத்திற்குள் அத்துமீறிப் பிரவேசித்த மேர்வின் சில்வாவும், அவரது குழுவினரும் அங்கிருந்த செய்திப் பணிப்பாளரான ரி.எம்.ஜி.சந்திரசேனவை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

அது மட்டுமன்றி மேர்வின் சில்வாவின் குழுவினர் செய்திப் பணிப்பாளரான ரி.எம்.ஜி.சந்திரசேனவை ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவரின் கட்டுப்பாட்டு அறையை நோக்கி இழுத்துச் சென்றனர். எனினும் சுதாகரித்துக்கொண்டு அங்கிருந்து வெளியே வந்த ரி.எம்.ஜி சந்திரசேனவை மீண்டும் கடுமையாகத் தாக்கி ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவரின் கட்டுப்பாட்டு அறையை நோக்கி இழுத்துச் சென்றனர்.

இதனைக் கண்ட ரூபவாஹினி கூட்டுத்தாபன பணியாளர்கள் கொதித்தெழுந்து மேர்வின் சில்வாவின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அது மட்டுமின்றி ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவரின் கட்டுப்பாட்டு அறைக்குள்ளேயே மேர்வின் சில்வாவையும் அவரது குழுவினரையும் வைத்து முடக்கினர். அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாதபடி நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவரின் கட்டுப்பாட்டு அறையை சூழ்ந்து கொண்டனர்.

இதனையடுத்து மேர்வின் சில்வாவின் குழுவினருக்கும் ரூபவாஹினி கூட்டுத்தாபன பணியாளர்களுக்கும் இடையே கடும் முறுகல் ஏற்பட்டது. வன்முறை வெடிக்கும் சூழ்நிலை அங்கு உருவாகியது.

இதனால் பதற்றமடைந்த மேர்வின் சில்வா, தனது ஆதரவாளர்களுக்கு தொலைபேசியில் அவசரத் தகவலை அனுப்பினார். அங்கு அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். ஆனால் ரூபவாஹினி கூட்டுத்தாபன பணியாளர்களின் எதிர்ப்பைக்கண்டு வந்த வேகத்திலேயே அவர்கள் திரும்பிவிட, காவல்துறையினர் அவசர அவசரமாக அங்கு கொண்டுவந்து குவிக்கப்பட்டு மேர்வின் சில்வாவின் பாதுகாப்பை பலப்படுத்தினர்.

மேர்வின் சில்வாவுடன் சேர்த்து குடு குழுவைச் சேர்ந்த பலரும் அங்கு முடக்கப்பட்டிருந்தனர். அவர்களில் சிலர் ரூபவாஹினி கூட்டுத்தாபன பணியாளர்களின் தாக்குதலுக்கு இலக்காகியும் இருந்தனர்.

மேர்வின் சில்வாவின் பகிரங்க மன்னிப்பு கேட்காத பட்சத்தில் அவரை விடுவிக்கப் போவதில்லை என்று பணியாளர்கள் உறுதியாக நின்றதால் அங்கே பதற்றமும் இழுபறியும் அதிகரித்தது.

சுமார் மூன்று மணி நேரமாக அங்கு பெரும் களேபர நிலை இருந்ததால் அங்கு சிறப்பு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மேர்வினை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல முயற்சித்த போதும் பணியாளர்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

அங்கே அரசாங்கத்தின் தகவல்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேயவர்த்தனவும் வந்திருந்தார். அவர் மேர்வின் சில்வாவின் நடவடிக்கையைக் கண்டித்ததோடு அவரை காவல்துறையிடம் ஒப்படைக்குமாறு பணியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

எனினும் பணியாளர்கள் அதற்கு சம்மதிக்காது போகவே அங்கே ஊடகவியலாளர் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. அதில் மேர்வின் சில்வாவின் நடவடிக்கைக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

எனினும் மேர்வின் சில்வாவை விடுவிக்க பணியாளர்கள் முன்வராததாலும் அவரைத் தாக்குவதற்கு தயாரான நிலையில் கொதித்தெழுந்து நின்றதாலும் அங்கே பெரும் வன்முறை வெடிக்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் மேர்வின் சில்வா பகிரங்க மன்னிப்பு கேட்டதாக அங்கிருந்த அதிகாரிகள் சிலர் கூறினர். ஆனால் இதனை ஏற்காத பணியாளர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மேர்வின் சில்வாவை பலவந்தமாக பணியாளர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் காவல்துறையினர் அவரது வாகனத்தில் ஏற்றிச் செல்ல முயற்சித்தனர்.

அப்போது மேர்வின் சில்வா மீதும் அவரது குழுவினர் மீதும் அங்கிருந்த பணியாளர்கள் கடுமையான தாக்குதலை நடத்தினர். இதில் மேர்வின் சில்வா தலையில் காயமடைந்தார். அவர் மீது சிவப்பு நிறத் திரவத்தாலும் பணியாளர்கள் வீசினர். அவரது ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் நடந்தது. காவல்துறையினர் அங்கிருந்த மேர்வின் சில்வாவை அழைத்துச் சென்ற பிறகே ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் ஏற்பட்ட களேபரம் முடிவுக்கு வந்தது.

இச்சம்பவத்தில் காயமடைந்த மேர்வின் சில்வா கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் ஊடக நிறுவனங்களும் மேர்வினின் இந்நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்திருப்பதுடன் அவருக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றன.

அரசாங்கம் மேர்வின் சில்வாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.

மேர்வின் சில்வா இதற்கு முதல் மேலும் பல ஊடக நிறுவனங்களை அச்சுறுத்தியிருப்பதாக சுதந்திர தேசிய ஊடக பணிப்பாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

Wednesday, December 26, 2007

பிரபாகரனுக்கு பின்னால் ்புலிகள் அமைப்பு என்ன ஆகும்? (உளவியல் போர்)

கடந்த பல வருடங்களாக இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்கள், ராணுவ வீரர்கள், தமிழ் விடுதலை அமைப்பைச் சேர்ந்தவர்களை புலிகள் கொன்று குவித்து வந்தனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் புலிகளின் கை தான் ஓங்கி வந்தது. படு பயங்கர சர்வாதிகார அமைப்பாக மாறியுள்ள புலிகள் அமைப்பை எதிர்த்து குரல் கொடுக்க யாருமே இல்லை. புலிகளை ஒடுக்க போராடி வந்த இலங்கை ராணுவமும் பலத்த பின்னடைவை சந்தித்து வந்தது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறி வருகிறது. புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த வீரர்கள், முக்கிய பொறுப்பில் உள்ள பலர், இலங்கை ராணுவத்தினரால் தொடர்ச்சியாக கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். வேட்டையாடி வந்த புலிகள் இப்போது பதுங்கு குழியில் பதுங்க ஆரம்பித்து விட்டனர். பாலசிங்கம், தமிழ் செல்வன் ஆகியோர் மறைந்து விட்டனர். முக்கிய தளபதிகள் பலர் காணாமல் போய் விட்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரபாகரன் உயிருக்கு இலங்கை ராணுவம் குறி வைத்து விட்டது. பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டால் புலிகளின் அடுத்த தலைவர் யார்? புலிகளின் எதிர்காலம் என்ன?

இலங்கை மட்டுமின்றி இந்தியா குறிப்பாக தமிழக அரசியலிலும் விளைவுகளை ஏற்படுத்தி வரும் புலிகள் அமைப்பை ஒடுக்க இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன் உட்பட பல நாடுகளில் இருந்து வாங்கி குவித்துள்ள அதிநவீன உளவுக்கருவிகள், வேவு விமானங்கள், ரேடார்கள், துல்லியமாக குண்டு வீசும் விமானங்கள்மூலம் புலிகளின் பதுங்கு குழிகளை இலங்கை ராணுவத்தினர் தாக்கி வருகின்றனர். இப்படிப்பட்ட தாக்குதல் ஒன்றின் மூலம்தான் தமிழ் செல்வனை இலங்கை விமானப்படை தாக்கி அழித்தது.

பிரபாகரன் தங்கியிருக்கும் இடங்கள் கண்காணிக்கப்பட்டு, அவரை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த நவ., 2ம் திகதி இலங்கையின் கிளிநொச்சியில் உள்ள திருவையாற்றில் ராணுவம் நடத்திய தாக்குதலில் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வன் கொல்லப்பட்டார். இது புலிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. புலிகளின் கோட்டையாக கருதப்பட்ட வன்னிப் பகுதியில் புலிகளின் ஆதிக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில், கடந்த நவ., 28ம் திகதி இலங்கையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜெயந்தி நகர் என்ற இடத்தில் வான்படை தாக்குதலில் புலிகள் தலைவர் பிரபாகரன் காயமடைந்ததாக செய்திகள் வெளியாயின. இதற்கு இரண்டு நாட்கள் முன்னர் தான், ஜெயந்தி நகரில் உள்ள புலிகள் பதுங்கு குழிகள் மீது ராணுவத்தினர் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து புலிகள் இணையதளம் "தமிழ்நெட்' கூறுகையில், ""இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை'' என்று தெரிவித்துள்ளது.

கொழும்பில் வெளிவரும் ஆங்கில வார இதழ் "நேஷனல்' கடந்த டிச., 16ம் திகதி வெளியிட்டுள்ள செய்தியில், "கடந்த நவ., 28ம் திகதி ஜெயந்தி நகரில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் புலிகளின் பதுங்கு குழிகள் நோக்கி குண்டுகள் வீசப்பட்டன. இதில் புலிகள் தலைவன் பிரபாகரனின் தோள் பட்டை மற்றும் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்' என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை பிரதமர் ராஜபக்ஸ தெரிவிக்கையில், "புலிகளின் மறைவிடத்தில் இரண்டு முறை தாக்குதல் நடத்தப்பட்டது உண்மை தான். ஆனால், அதில் பிரபாகரன் காயமடைந்தார் என்ற செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை' என்றார்.

கடந்த 19ம் திகதி ராணுவ அமைச்சகம் இந்த தாக்குதலை உறுதி செய்துள்ளது. கடந்த நவ., 28ம் திகதி ஜெயந்தி நகரில் நடந்த தாக்குதலில் பிரபாகரன் காயமடைந்துள்ளார். இவர் நவ., 26ம் திகதியே வான்படை தாக்குதலில் காயமடைந்துள்ளார். எனினும், இதை உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை. தற்போது தான் இது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

வழக்கம் போல் புலிகள் அமைப்பு இந்த செய்தியையும் மறுத்துள்ளது. புலிகள் செய்தி தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் கூறுகையில், ""பிரபாகரன் காயமடைந்துள்ளார் என்று இலங்கை அரசு வேண்டுமென்றே பொய்யான செய்தியை வெளியிட்டது. புலிகள் அமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த செய்தி வெளியாகியுள்ளது. தலைவரின் பாதுகாவலர்கள் 116 பேர் இறந்து விட்டதாகவும், பிரபாகரன் சிகிச்சைக்காக வெளிநாடு கொண்டு செல்லப்பட்டதாகவும், பல வதந்திகளை பரப்பி வருகிறது. எல்லாமே தவறானவை'' என்று கூறியுள்ளார். பிரபாகரன் பற்றி வெளியாகும் தகவல்கள் நம்ப முடியாததாக இருந்தாலும் ஒன்று மட்டும் நிச்சயம். இலங்கை ராணுவத்தின் குறிப்பாக விமானப்படையின் கை ஓங்கி வருவது கண்கூடாக தெரிகிறது. புலிகள் பின்வாங்கி ஓடுவதும் உறுதியாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் முக்கியமான கேள்வி எழுந்துள்ளது. புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டால் அடுத்து அந்த இயக்கத்தின் தலைவராக யார் வருவார் என்பதுதான் அது?

இலங்கைப் பிரதமர் ராஜபக்ஸவின் சகோதரரும், ராணுவ அமைச்சருமான கோதபாயா ராஜபக்ஸ கூறுகையில், "நாங்கள் புலிகள் தலைவர் பிரபாகரனை குறிவைத்து விட்டோம். விரைவில் வீழ்ச்சி உறுதி'.

கட்டுக்கோப்பான இயக்கமாக இருந்த புலிகள் அமைப்பில் இப்போது அதிருப்தி தலை தூக்க துவங்கியுள்ளது. புலிகள் மீது அதிருப்தி அடைந்துள்ள உள்ளூர் மக்கள், புலிகளின் நடமாட்டம் குறித்து உளவுப்படையினருக்கு தகவல்களை கொடுத்து வருகின்றனர். வலுக்கட்டாயமாக புலிகள் அமைப்பில் இளைஞர்களை அதிக அளவு சேர்த்து வருவதால் புலிகள் அமைப்பு மீது அதிருப்தி அதிகரித்து வருகிறது.

தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டது, பிரபாகரன் காயமடைந்தது ஆகியவைகளை வைத்து பார்க்கும் போது, புலிகள் அமைப்புக்கு அடுத்த கட்டத் தலைவரை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை உருவாகி வருவது தெளிவாகிறது.

பிரபாகரனுக்கு அடுத்தபடியாக உள்ள புலிகளின் மூத்த தலைவர் "பேபி' சுப்ரமணியன். இவர் தற்போது, புலிகளின் கல்வித் துறை தலைவராக செயல்பட்டு வருகிறார். இவரது உண்மையான பெயர் இளங்குமரன். இவரைப் பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் புலிகளின் ஆரம்ப கட்ட தலைவர்களில் ஒருவர். காங்கேசன் துறை பகுதியைச் சேர்ந்தவர். இவர் தான் பிரபாகரனின் மிகவும் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். உறுதியாக நம்பும் ஒரே தலைவர். இவர் மூத்த தலைவராக இருந்தபோதிலும், போர்க்களத்தில் இறங்கி போரிட்டவர் அல்ல. இவர் கடந்த 1991ம் ஆண்டு வரை இந்தியாவில் தான் இருந்தார். இவர் புலிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல அரசியல் தலைவர்களை இழுத்தார். புலிகளுக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர்., செயல்பட மிகவும் முக்கிய பங்காற்றினார். மூத்த தலைவர்கள் அடிப்படையில் இவர் தான் புலிகளின் அடுத்த தலைவராக பொறுப்பேற்க வாய்ப்பு உண்டு.

மிதவாத தலைவரான பேபி சுப்ரமணியத்தால் சர்வாதிகார அமைப்பான புலிகள் இயக்கத்தை கட்டி காப்பாற்ற முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படியே அவர் தலைமை பொறுப்பை ஏற்றாலும் விரைவில் மற்ற தலைவர்களால் அவர் பொம்மை தலைவராக மாறி விடுவார். மிகவும் ஆக்ரோஷமான புலிகள் அமைப்பை மிதவாத தலைவரால் கட்டி காப்பாற்ற முடியாது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அடுத்தபடியாக புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மன் முன்னிலையில் உள்ளார். மிகவும் கடுமையானவர். இவரைத்தொடர்ந்து உள்ள சூசை, பானு, சொர்ணம், ஜெயம், தீபன், பால்ராஜ், மற்றும் நடேசன் ஆகியோர் கடந்த 1983ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின்னர் தான் புலிகள் அமைப்பில் சேர்ந்தனர். பொட்டு அம்மன் புலிகளின் உளவுப் பிரிவில் இருப்பதால், புலிகள் அமைப்பில் செல்வாக்கானவர். பிரபாகரனுக்கு அடுத்த படியாக அதிக அதிகாரம் இவரிடம் தான் குவிந்து உள்ளது. புலிகளிடம் இவரின் ஆதரவாளர்களே அதிகம். அதனால் தலைமை பொறுப்புக்கு வர இவருக்கே அதிக வாய்ப்பு உள்ளது. இப்போதே இவர் துணைத்தலைவர் போல் தான் செயல்பட்டு வருகிறார்.

இவருக்கு போட்டியாக களத்தில் இருந்தவர் அம்பாறை, மட்டக்களப்பு முன்னாள் தலைவர் வினாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா. கருணாவை ஏற்கனவே துரோகி பட்டம் கொடுத்து ஓரம் கட்டி விட்டார் பொட்டு அம்மன்.

இந்தியா போன்ற தெற்கு ஆசிய நாடுகளில் இப்போதெல்லாம் அரசியல்வாதிகளின் வாரிசுகள் தான் பதவிக்கு வருகின்றனர். இலங்கையும் இதில் விதிவிலக்கல்ல. புலிகள் அமைப்பிலும் வாரிசுகள் பொறுப்புக்கு வரவும் வாய்ப்பு உள்ளது.

புலிகள் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனிக்கு புலிகள் மத்தியில் மதிப்பு உள்ளது. சமீபகாலமாக இவர் புலிகள் இயக்க நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார். அவரது புகைப்படங்களை புலிகள் அமைப்பே வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் கூட முதியவர்களுக்கான இல்லத்தை துவக்கி வைத்தார். இவருக்கு வெளிநாடுகளில் உள்ள புலிகள் அமைப்பு இடையேயும் நல்ல வரவேற்பு உள்ளது. அதனால், அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் பிரபாகரனின் தீவிர ஆதரவாளர்கள் இவரது பெயரையும் குறிப்பிட வாய்ப்பு உள்ளது.

பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோனி. இவரும் அடுத்த தலைமை பொறுப்புக்கு வர வாய்ப்பு உள்ளது. புலிகள் போர் நடவடிக்கையில் இவர் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வருகிறார். விமான ஓட்டிக்கான முறையான பைலட் லைசென்ஸ் பெற்றுள்ளார். புலிகளின் வான்படை தாக்குதலில் மிக முக்கிய பொறுப்பு வகிக்கிறார். தலைமை பொறுப்புக்கு பிரபாகரன் குடும்பத்தில் இருந்து போட்டி வரும் சூழ்நிலையில் பொட்டு அம்மன் போட்டியில் இருந்து விலகிக் கொள்வார். ஆனால், பின்னணியில் பொட்டு அம்மனுக்கு பெரும் பங்கு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பிரபாகரன் குடும்பத்தினர் மற்றும் புலிகளின் முக்கிய புள்ளிகள் அடங்கிய கூட்டு தலைமை பொறுப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதை தவிர வேறு இரண்டு வாய்ப்புகளும் உள்ளது. இளங்குமரன் தலைமையில் தலைமைக்குழு செயல்படும் என்றும் அல்லது பொட்டு அம்மனும், இளங்குமரனும் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளது.

பிரபாகரனைப்போலவே பொட்டு அம்மனும் ராஜிவ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி. பிரபாகரனுக்குப் பின்னால் பொட்டு அம்மன் பொறுப்புக்கு வந்தாலும் புலிகள் அமைப்பு குறித்த கருத்துக்களில் இந்திய அரசில் எந்த மாற்றமும் இருக்காது.

பிரபாகரனுக்குப் பின்னால் யார் தலைமைப் பொறுப்புக்கு வந்தாலும் புலிகள் அமைப்பு பழையபடியே கொடூரமான, சர்வாதிகார அமைப்பாக செயல்பட முடியுமா என்பது கேள்விக்குறிதான். பிரபாகரன் இல்லாவிடில் புலிகள் அமைப்பு உடனடியாக முடங்கி விடாது. ஆனால் அதன் வீழ்ச்சி ஆரம்பமாகிவிடும் என்பது உண்மை. அதற்கு காரணமும் பிரபாகரனாகத்தான் இருப்பார். அந்த அளவுக்கு தன்னைச் சுற்றி மட்டுமே இயக்கத்தை கட்டி வளர்த்துள்ளார். தனி நபர் துதி பாடும் வகையில் உருவாகியுள்ள இந்த அமைப்பு தனி நபர் தலைவருக்குப் பின் நீடிப்பது சந்தேகம் தான். உலக அரசியல் வரலாறு இதைத்தான் எடுத்துக் காட்டுகிறது.

ஈழத்தமிழர்களின் ஒரே ஒப்பற்ற தலைவர் தான் மட்டுமே என்ற மாயையை பிரபாகரன் ஏற்படுத்தி வைத்துள்ளார். மாற்று ஏற்பாடு எதையும் செய்யாததால் அவருக்கு பின்னால் புலிகள் அமைப்பில் பிரச்சினை ஏற்படுவது உறுதி.

பிரபாகரன் இல்லையென்று ஆகிவிட்டால், தமிழர்கள் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்று அர்த்தம் இல்லை. புலிகள் அமைப்பு வேண்டுமானால் சிதையலாம். இலங்கை அரசு சுலபத்தில் தமிழர் பிரச்சினையில் இருந்து விடுபட்டு விடமுடியாது. நீதி, சமத்துவம் அடிப்படையில் மட்டுமே இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். ஒன்று பட்ட இலங்கை அமைப்பிற்குள் தமிழர்களின் உண்மையான பிரச்னைக்கும், அபிலாஷைகளுக்கும் தீர்வு காணப்படும் வரை இலங்கையில் தமிழர் பிரச்னை நீடிப்பது மட்டும் உறுதி.

Sunday, December 23, 2007

தீவிர வன்முறையை நோக்கி நகர்ந்து கொண்டுள்ள அரசியல்

-கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன்-
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை அரசியலில் காணப்பட்டிருந்த பிரதானமான பிரச்சினைகளில் ஒன்று அதன் "நிச்சயமற்ற தன்மை" ஆகும். நாட்டின் பொதுவான போக்கு கீழ்நோக்கிச் சென்று கொண்டுள்ளது என்பது தெளிவானதாக இருந்தபோதும் குறிப்பாக இன மோதல் மட்டத்தில் அதிலும் குறிப்பாக யுத்தகள நிலைமைகள் தெளிவற்றதாகவே காணப்பட்டிருந்தன. துரதிஷ்டவசமாக இவ்விடயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுபோல் தோன்றுகின்றது. கடந்த சில வாரங்களில் பல அபிவிருத்திகள் மிக விரைவாகவே நடந்தேறத் தொடங்கிவிட்டன. இவை காணப்பட்டிருந்த தெளிவின்மையை இல்லாமற் செய்துவிட்டுள்ளது.

அவ்வகையில் மூன்று பிரதானமான அபிவிருத்திகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
1. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டமை
2. புலிகளின் தலைவரின் மாவீரர் தின உரை
3. தொடரும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள். இக்கட்டுரை தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் பற்றி ஆய்வு செய்கின்றது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் கடுமையான போக்கு ஒன்றைக் கையாண்டிருந்த அதேசமயம் பயங்கரவாதத்தை முழுமையாக அழித்துவிடப் போகின்றோம் என்று கூறிவந்த போதிலும் இச் "சிந்தனை" முழுமையானதாகவும் அதேசமயம் தெளிவானதாகவும் இருந்தது எனக் கூறமுடியாது. ஏனெனில் அவ்வப்போது அதேசமயம் தொடர்ச்சியான வகையில் "நாம் பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகவே இருக்கின்றோம்" என்று கூறப்பட்டது. அதேசமயம் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான சர்வகட்சி செயன்முறையையும் இடை இடையே கையிலெடுத்து வந்துள்ளது. இப்போக்கிற்கு சர்வதேச சமூகத்தைக் கையாள்வதற்கான தந்திரோபாய ரீதியான காரணம் ஒன்று இருந்தபோதும் தேவை ஏற்படுகின்ற போது பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு இவ்வரசாங்கம் தயங்கப்போவதில்லை என்ற ஒரு அபிப்பிராயத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

உண்மையில் ஆளும்கட்சி மட்டத்தில் இவ்வகையான மெல்லியதான ஒரு விருப்பம் காணப்பட்டிருந்திருக்கலாம். உதாரணமாக ஜே.வி.பி. போன்ற கட்சிகளின் அழுத்தத்திற்கு மத்தியிலும் அரசாங்கம் இன்றும் புலிகளை சட்ட ரீதியாகத் தடை செய்ய முன்வந்திருக்கவில்லை. காரணம் அவர்கள் கருதுவது போன்று தற்செயலாக பயங்கரவாதத்தை முழுமையாக அழிக்கும் தந்திரோபாயம் வெற்றியளிக்காவிடின் கடைசியில் தஞ்சம் புகுவதற்கான ஒரே ஒரு புகலிடமாக சமாதானப் பேச்சுவார்த்தை என்பது அமைந்துவிடக்கூடும். எனினும் கடந்த கால அனுபவம் கற்றுத்தந்த பாடம் என்னவெனில் தடை செய்யப்பட்ட நிலையில் புலிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவது இல்லை என்பதாகும். எனவே ஒரு தற்பாதுகாப்பு காரணியாக அரசாங்கம் தடை என்கின்ற ஆயுதத்தை இன்றும் கையிலெடுக்கவில்லை. இருப்பினும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற கடும்போக்கு வாக்கு வேட்டைக்கு போதுமானதல்ல என்ற நிலை ஏற்படுகின்றபோது இந்நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படமாட்டாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்பது வேறு விடயம்.

எவ்வாறாயினும் இக்கட்டான ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தையை ஒரு தற்பாதுகாப்புக் காரணியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற ஒரு அபிப்பிராயம் மெல்லிய ஒரு மட்டத்திலாயினும் இருந்திருக்குமாயின்இ தமிழ்ச்செல்வனின் கொலையுடன் அது இல்லாமற் செய்யப்பட்டது என்றே கூற வேண்டும். அவ்வகையில் பேச்சுவார்த்தை என்பதற்கான சாத்தியம் அண்மைய எதிர்காலத்தில் முழுமையாக இல்லாமற் செய்யப்பட்டுள்ளது என்று கருதப்பட வேண்டும். இதற்குப் பல காரணங்கள் காணப்படுகின்றன. தமிழ்ச்செல்வன் இராணுவ மற்றும் அரசியல் ரீதியான பின்னணியில் இருந்து தோற்றம் பெற்றிருந்த போதும் அண்மைய கடந்த காலத்தில் அவரது அரசியற் செயற்பாடுகளே பிரதானமானவையாக அமைந்திருந்தன. அவர் கடைசிக் காலத்திலும் கூட இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார் என்று கூறப்பட்டிருந்தபோதும்இ புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் என்பதே முக்கியமானதாய் அமைந்திருந்தது.

இதன் காரணமாகவே அவரது பாதுகாப்பு பலவீனமாக இருந்துள்ளது. இது இரண்டு முக்கியமான விடயங்களைச் சுட்டிக்காட்டுகின்றது. ஒன்று அவரது பாதுகாப்பு பற்றி (தவறான) உயர் நம்பிக்கை காணப்பட்டிருக்க வேண்டும். இரண்டாவது தெற்கின் இராணுவஃ அரசியல் சிந்தனைப் போக்குப் பற்றிய சரியான புரிந்துணர்வு காணப்படாதிருந்திருக்கலாம். அதாவது அரசியல் மட்டத் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என்று கருதப்பட்டிருக்கலாம்.

அதேசமயம் அரசாங்கமும் கூட தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் அதிஷ்டவசமாக இடம்பெற்றது ஒன்று அல்ல திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என்று தெளிவாகக் கூறியுள்ளது. எனவே இத்தாக்குதலின் பாரதூரமான தன்மையினையோ அல்லது நோக்கத்தையோ மூடிமறைக்க அரசாங்கம் முயலவில்லை. எவ்வாறாயினும் புலிகளின் இரண்டாவது உயர்மட்டத் தலைவர் என்று கருதப்பட்ட தமிழ்ச்செல்வன் மீது தாக்குதல் நடத்துவதற்கான இரண்டு முக்கியமான தேவைகள் காணப்பட்டிருந்திருக்கலாம். ஒன்று அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான புலிகளின் தாக்குதலைத் தொடர்ந்து இராணுவ ரீதியாக மட்டுமன்றி அரசியல் ரீதியாகவும் கூட அரசாங்கத்திற்குப் பாரிய ஒரு பின்னடைவு ஏற்பட்டிருந்தது. இப்பின்னடைவை சமன் செய்து கொள்வதற்கு அல்லது அதில் இருந்து பொது அபிப்பிராயத்தைத் திசை திருப்புவதற்கு தமிழ்ச்செல்வன் போன்றதொரு பாரிய இலக்கு அரசாங்கத்திற்குத் தேவைப்பட்டிருந்தது. எனவேதான் தமிழ்ச்செல்வனின் கொலை ஒரு "பொது உறவு சதிப்புரட்சி" என்று ஆங்கில செய்திகளில் வர்ணிக்கப்பட்டிருந்தது.

உண்மையில் இத்தாக்குதலுக்கு பெரிதும் கவனிக்கப்படாத அரசியல் ரீதியான காரணி ஒன்றும்கூட இருந்திருக்கலாம். புலிகளுக்கு எதிரான செயற்திட்டத்தில் அவர்களை பயங்கரவாதிகள் என்ற கட்டமைப்பினுள் சர்வதேச ரீதியாக தனிமைப்படுத்துவது முக்கியமானதொரு நோக்கமாக இருந்தது என்பது வெளிப்படையானது. இந்நோக்கத்திற்குத் தமிழ்ச்செல்வன் பாரிய ஒரு தடையாக இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. அவருக்கு வெளி உலகுடன் அதிலும் குறிப்பாக மேற்குலக இராஜதந்திரிகளுடன் இருந்த தொடர்புகள் குறைத்து மதிப்பிடக்கூடியவை அல்ல. அத்துடன் புலிகளின் அரசியல் துறைக்கு சர்வதேச ரீதியான ஒரு முக்கியத்துவத்தை அவரது இருப்பு ஏற்படுத்தியிருந்தது. இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியது யாதெனில் இரு தரப்புகளுக்கும் இடையிலான வன்முறையும் நெருக்குதல்களும் தீவிரமடைந்ததன் பின்னரும் அண்மையில் மேற்குலக இராஜதந்திரிகள் அவரைச் சந்தித்தமை ஆகும். அதேசமயம் பயங்கரவாதிகள் எனக் கருதப்படும் குழுக்களுடன் எத்தகைய தொடர்பையும் வைத்திருக்க விரும்பாத நிலையிலும் கூட பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அவரை அழைப்பது தொடர்பிலான ஒரு வாதப்பிரதிவாதமும் கூட காணப்பட்டிருந்தது. இவை காணப்படுகின்ற பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கூட புலிகளின் அரசியல் ரீதியான முக்கியத்துவத்தின் சான்றுகளாகவே அமைந்திருந்தன. எனவே புலிகளை பயங்கரவாதிகள் எனத் தனிமைப்படுத்துவதில் அவரது இருப்பு ஒரு பிரச்சினையாகவே காணப்பட்டிருந்தது. அவ்வகையில் இப்பிரச்சினையை நீக்கியதன் மூலம் புலிகளை சர்வதேச ரீதியாகத் தனிமைப்படுத்துவதில் அரசாங்கம் ஒருபடி முன்னேறியுள்ளது என்று கூற வேண்டும்.

எனினும் அரசியல் போக்கு தொடர்பில் முக்கியமானது தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்டதன் விளைவுகளே ஆகும். ஒன்று தற்போது புலிகளின் அரசியற்துறை பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்களது அரசியல் ரீதியான சிந்தனை செயற்பாடுகள் முன்னைய அளவிற்கு கூர்மையாக இருக்குமா என்பது சந்தேகத்திற்கிடமானதே. புதிய அரசியற் துறைப் பொறுப்பாளர் நடேசன் அடிப்படையில் இராணுவ ரீதியான (பொலிஸ்) பின்னணியில் இருந்து தோற்றம் பெற்றவர் என்பதனால் இராணுவ ரீதியான சிந்தனைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் எதிர்காலத்தில் முக்கியத்துவமளிக்கப்படலாம். புலிகள் ஒரு அரசியல் ரீதியான இயக்கமாக மாற வேண்டியது அவசியம் என்ற கோரிக்கை சர்வதேச ரீதியாகவும் தென்னிலங்கையிலும் பலமாக இருக்கின்ற நிலையில் இது ஒரு பின்னடைவாகவே கருதப்பட வேண்டும்.

அதேசமயம் அன்ரன் பாலசிங்கம் இல்லாதிருக்கின்ற நிலையில் தமிழ்ச்செல்வனின் மறைவு எதிர்காலத்தில் ஒரு பேச்சுவார்த்தை ஏற்படுமாக இருப்பின் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கவேண்டியிருக்கும். அப்படியான ஒரு நிலை ஏற்படுகின்ற பட்சத்தில் தென்னிலங்கை பேச்சுவார்த்தை மேசையில்கூட இராணுவ ரீதியான தலைவர்களுக்கும் கடும்போக்காளர்களுக்கும் முகம் கெடுக்க வேண்டி ஏற்படலாம். இது பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வது என்ற எதிர்பார்ப்பிற்கு உற்சாகமளிக்கக் கூடியது அல்ல. எனவே தமிழ்ச்செல்வனின் இழப்பு குறுகிய காலத்திற்குரியது அல்ல. மாறாக நீண்ட காலத்திலானது.

அதேசமயம் முக்கியமான பரிமாணம் உளவியல் ரீதியானது. தமிழ்ச்செல்வன் மறைவு தென்னிலங்கையில் பாரிய ஒரு உற்சாகத்தையும் மனத்திடத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இராணுவ மட்டத்தில் முக்கியமானதொரு இலக்கு அழிக்கப்பட்டமையினால் இம்மனநிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்ந்து யுத்தம் செய்வதற்கான மனோநிலையை தென்னிலங்கையில் ஏற்படுத்தியிருந்தது. அதேசமயம் சமூக மட்டத்திலும் கூட ஒரு ஆரவாரம் ஏற்பட்டிருந்தது. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து கொழும்பு பங்குச் சந்தையில் உயர்வு ஏற்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. இது தவறான புரிந்துணர்வினால் ஏற்பட்டிருக்கலாம். இது புலிகளைப் பலவீனப்படுத்தியிருப்பதாக தென்னிலங்கையில் கருதப்பட்டது. ஆனால் பலவீனப்படுத்தப்பட்டது அரசியல் பரிமாணம் மட்டுமே என்பதுடன் கொலையைத் தொடர்ந்து தீவிர யுத்தத்திற்கான சாத்தியம் அதிகரித்துள்ளது என்பதும் புரிந்துகொள்ளப்பட்டிருக்கவில்லை.

அதேசமயம் சுட்டிக்காட்டப்பட வேண்டிய இன்னுமொரு பரிமாணம் யாதெனில் தென்னிலங்கையின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் பொதுவாக வடக்கிலும் குறிப்பாக புலிகள் அமைப்பினுள்ளும் தொடர்ந்து யுத்தம் செய்வதற்கான உளவியலை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்ச்செல்வன் கொலைக்கான பதிலடி என்ன என்று பொதுவாகக் கேட்கப்பட்ட நிலையில் புலிகளின் தாக்குதல்கள் தீவிரமடைவதற்கான சாத்தியங்களே அதிகம் காணப்படுகின்றன. ஆகக் குறைந்தது இந்த அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாயினும் அது கடினமாகியுள்ளது. அதேசமயம் தென்னிலங்கை அரசியல்வாதிகள் மீதான தாக்குதல்களையும் அது நியாயப்படுத்திவிடக் கூடும். எனவே துரதிஷ்டவசமாகஇ நாம் மேலதிக வன்முறையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம் என்பது தெளிவானது.

இந்திய பிரதமரின் வருகையுடன் இனநெருக்கடிக்கான தீர்வுப்பொதியை தொடர்புபடுத்துவது எதற்காக?

[23 - December - 2007] [Font Size - A - A - A]
*டக்ளஸிடம் ஸ்ரீகாந்தா கேள்வி

இனப்பிரச்சினைக்குத் தீர்வாக இலங்கை அரசால் முன்வைக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் தீர்வுப் பொதியானது, ஏன் இந்தியப் பிரதமரின் அடுத்த வருட இலங்கை விஜயத்துடன் தொடர்புபட்டிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.என். ஷ்ரீகாந்தா கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்ரீகாந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில்;

"எதிர்வரும் மாசிமாதம் 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வருவதற்கு முன்னர் மாகாண மட்ட அதிகாரப் பரவலாக்கலை அடிப்படையாகக் கொண்ட தீர்வுத் திட்டம் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டு விடும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருக்கின்றார்.

இலங்கையின் அரசியல் சாசனத்தின் பதின்மூன்றாவது திருத்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு உள்ள அதிகாரங்களை அதிகளவில் விரிபடுத்தும் விதத்தில் இந்தத் தீர்வுத் திட்டம் அமையும் என்ற செய்தியையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் வட,கிழக்கு மாகாணங்களுக்கான ஓர் இடைக்கால நிர்வாகத்திற்கு தலைமை தாங்கும் தனது ஆவலையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் முதலில் ஒரு விடயத்தை புரிந்து கொள்வதற்கு இனி மேலாவது முயற்சிக்க வேண்டும்.

இலங்கைத் தீவின் அதிகார மையம் என்பது முற்று முழுதாக இலங்கை அரசாங்கத்தின் கையில், கொழும்பில் வைத்திருக்கப்பட வழி வகுத்திருக்கும் இன்றைய ஒற்றையாட்சி அரசியல் சாசனத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் எந்தவொரு அதிகாரப் பரவலாக்கலும் அர்த்தபுஷ்டி கொண்டதாகவும் முழுமையானதாகவும் ஒரு போதும் அமையவே முடியாது என்பது தான் அந்த விடயம்.

ஆணைப் பெண் ஆக்கவும் பெண்ணை ஆண் ஆக்கவும் தவிர, சகலதையும் சாதிக்கும் அதிகாரம் கொண்டது என வர்ணிக்கப்படும் நிறைவேற்று அதிகாரம் படைத்த ஜனாதிபதி ஆட்சி முறையின் கீழ் அதிகாரப் பரவலாக்கல் என்பது, தலைக்கு மேலே கூரிய கொடுவாள் ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும் நிச்சயமற்ற நிலையின் மத்தியிலேயே நீடிக்கவும் வேண்டியிருக்கும்!

கொடூர யுத்தற்கு அடி கோலி கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு நீதியானதும் நிரந்தரமானதுமான அரசியல் தீர்வே இன்றைய அவசரத் தேவை.

கட்டம் கட்டமாக, `தங்கு மடங்கள்' கொண்ட, ஓர் அரசியல் யாத்திரையை `அரசியல் தீர்வு' விடயத்தில் அறிவு படைத்த மனிதர் எவரும் சிந்திக்க முடியாது.

அரசியல் தீர்வுக்கான முதற்படியாக, `ஒற்றையாட்சி' மீது சிங்கள அரசியல் அதிகார சக்திகள் அனைத்தும் கொண்டிருக்கும், `பிடிவாதம் நிறைந்த - அதீத அபிமானத்தை', அவை கைவிட வேண்டும்.

இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்களின் `வரலாற்று ரீதியான வாழ்விடம்' வட கிழக்கு மாகாணங்கள் என்பதை ஏற்றுக் கொண்டு, இலங்கையின் அரசியல் சாசனத்தின் `ஒற்றையாட்சி' தன்மையையும், பௌத்த மதத்திற்கு முதலிடமும் முன்னுரிமையும் வழங்கும் மதச்சார்புத் தன்மையையும் நீக்கி, `நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி' முறையை அகற்றி, பூரணமானதோர், சுயாட்சியை தமிழ் பேசும் மக்களின் தாயகத்திற்கு உறுதிப்படுத்தும் ஓர் தீர்வுத் திட்டத்தையே தமிழ் பேசும் மக்கள் ஏற்றுக் கொள்ள முடியும்.

இத்தகைய தீர்வே போருக்கு முடிவு கட்டி நிரந்தர அமைதிக்கு வழி வகுக்கும்.

இந்த யதார்த்த பூர்வமான நிலைமையினை அமைச்சர் டக்ளஸும் அவரைப் போன்றவர்களும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இதைவிடுத்து என்றைக்கோ தோல்வி கண்டு விட்ட மாகாண சபைகள் திட்டத்திற்கு வெள்ளையடித்து, அலங்கரித்து, அழகு பார்ப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் எவரும் ஓரடி கூட முன்னேற முடியாது.

மேலும் `இடைக்கால நிர்வாகம்' என்ற பெயரில் வட- கிழக்கில் ஓர் `பொம்மை' ஆட்சிக்கு தலைமை தாங்குவதன் மூலம் இப்பொழுது யாழ்ப்பாணக் குடாநாட்டில் அரங்கேற்றிக் கொண்டிரக்கும் படுகொலைக் கலாச்சாரத்திற்கு சட்டபூர்வ அந்தஸ்த்தை பெற்றுக் கொள்ள முடியுமேயன்றி வேறு எதையும் சாதிக்க முடியாது.

இறுதியாக ஒரு சந்தேகம்! அமைச்சர் டக்ளஸ் `இதோ வருகிறது' என அறிவிப்பு வெளியிட்டிருக்கம் `தீர்வுப் பொதி' இந்தியப் பிரதமரின் உத்தேச இலங்கை விஜயத்துடன் இணைத்துப் பிரஸ்தாபிக்கப்படுகின்றதே...! என்ன காரணம்?" என்றும் கேள்வி யெழுப்பியுள்ளார்.

பட்ஜெட்டை ஜே.வி.பி.எதிர்த்திருந்தால் விமல் வீரவன்ஸ 8 உறுப்பினர்களுடன் அரசு பக்கம் சென்றிருப்பார்'

[23 - December - 2007] [Font Size - A - A - A]
அரசின் வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் அரசாங்கத்தை ஜே.வி.பி. எதிர்த்தால் 8 உறுப்பினர்களுடன் அரச பக்கம் தாவி விட அக்கட்சியின் விமல்வீரவன்ஸ தீர்மானித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக `இருதின' சிங்கள வார இதழில் தெரிவிக்கப்பட்ள்ளதாவது;

`வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பிற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக பாராளுமன்றக் கட்டிடத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான பசில் ராஜபக்‌ஷவிற்கும் விமல்வீரவன்ஸவிற்கும் இடையே இரகசியப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வரவு-செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பது என்று ஜே.வி.பி.முன்னர் எடுத்திருந்த தீர்மானம் இறுதி நேரத்தில் மாறியுள்ளது.

பாராளுமன்ற கட்டிடத்தில் இருக்கும் மகிந்த ராஜபக்‌ஷவின் செயலகத்துக்குள் இச்சந்திப்பு நடைபெற்றது. அடுத்த ஒரு மணித்தியாலயத்தில் நிச்சயமாக அரசாங்கத்திலிருந்து சுமார் 16 பேர் எதிர்க்கட்சிக்குச் செல்ல தீர்மானித்திருந்தனர்.

அதனால், அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டுமாயின் ஜே.வி.பி. குறைந்த பட்சம் வாக்களிப்பிலிருந்து விலகியிருக்க வேண்டுமென்று விமல் வீரவன்ஸவிடம் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்தார். அந்த தீர்மானத்திற்கு கட்சியினரை இணங்கச் செய்யுமாறும் விமல் வீரவன்ஸவை பசில் கேட்டுள்ளார். இதற்கமைய எவ்வித கோரிக்கையோ நிபந்தனையோ இன்றி ஆதரவுத் தீர்மானத்தை மேற்கொள்வோம் என்று பசில் ராஜபக்‌ஷவிடம் வீரவன்ஸ கூறியுள்ளார்.

அதேநேரத்தில், வாக்களிப்பிலிருந்து விலகியிருந்து அரசாங்கத்தை பாதுகாக்க கட்சியை சேர்ந்தவர்கள் விரும்பாவிடில் தான் ஏழு அல்லது எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அரச பக்கம் வருவேன் என்று பசில் ராஜபக்ஷவிற்கு விமல் வீரவன்ஸ உறுதியளித்தார்.

மேலும், பசில் ராஜபக்‌ஷவின் வேண்டுகோளை ஏற்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமானைச் சந்தித்த விமல் வீரவன்ஸ, தமது கட்சி வரவு- செலவுத் திட்ட வாக்களிப்பிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதால் எதிர்க்கட்சிக்குச் சென்று அமைச்சுப் பதவிகளை இழக்க வேண்டாமென்று தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்‌ஷவின் மற்றுமொரு வேண்டுகோளுக்கமைய அமைச்சர் டளஸ் அழகப்பெருமவுடன் ஆளும் கட்சியினர் இருந்த இடத்திற்கு அருகே சென்ற விமல் வீரவன்ஸ, ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்குச் செல்வர்கள் எனச் சந்தேகிக்கும் உறுப்பினர்களுக்கு அருகே சென்று தமது கட்சியின் தீர்மானம் குறித்து அவர்களுக்குக் கேட்கக்கூடியவாறு சத்தமாகக் கூறி அவர்களின் கட்சித் தாவலையும் தடுத்துள்ளார்.

Tamilchelvan