Saturday, August 11, 2007

Media War






விடுதலைப் புலிகளின் பீரங்கிப்பலம் போரின் சமநிலையை மாற்றலாம்: "த நேசன்" வார ஏடு
[ஞாயிற்றுக்கிழமை, 12 ஓகஸ்ட் 2007, 10:12 ஈழம்] [பி.கெளரி]

தமிழீழ விடுதலைப் புலிகளின் பீரங்கிப் பலமும் சவாலான கனரக ஆயுதங்களும் நான்காம் ஈழப் போரின் சமநிலையை மாற்றலாம் என்று கொழும்பு ஆங்கில வார ஏடா "த நேசன்" தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் "த நேசன்" ஏட்டில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்:

இராணுவ நடவடிக்கையின் எதிர்ச்சமருக்கான தயாரிப்புக்களில் மிக நவீன கனரக மற்றும் நவீன ரக ஆயுதங்களை கொள்வனவு செய்யும் முயற்சியில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளனர்.

மூன்றாவது ஈழப்போரில் விடுதலைப் புலிகள் மிகவும் திறம்பட ஆட்டிலறிப் பீரங்கிகளை பயன்படுத்தியிருந்தனர். அவர்களின் பீரங்கிகளையும் தாக்குதல்களின் நுணுக்கமான உத்திகளையும் "ஓயாத அலைகள்" நடவடிக்கைகளின் மூலம் ஊகித்துக் கொள்ளலாம்.

யாழ். குடாநாட்டின் தென்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளிடம் இழக்கப்பட்ட ஆனையிறவுத் தளத்தை மீண்டும் கைப்பற்றும் பொருட்டு 2001 ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட "தீச்சுவாலை" படை நடவடிக்கையை அவர்கள் முற்றாக முறியடித்திருந்தனர்.

அந்த நேரத்தில் விடுதலைப் புலிகள்

152 மி.மீ நீண்டதூர பீரங்கி - 01,

130 மி.மீ பீரங்கி - 01,

122 மி.மீ களமுனை பீரங்கிகள் - 02

ஆகியவற்றையே கொண்டிருந்தனர்.

152 மி.மீ பீரங்கி ஆனையிறவுப் படைத்தளத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது.

இரு 122 மி.மீ பீரங்கிகளும் முல்லைத்தீவு முகாம் தாக்குதலில் கைப்பற்றப்பட்டது.

இந்த பீரங்கிப் பலத்துடன், மோட்டார் ஏவுகருவிகளையும் அதிகளவில் அவர்கள் கொண்டிருந்தனர்.

120 மி.மீ, 81 மி.மீ, 60 மி.மீ போன்ற கனரக மற்றும் நடுத்தர வகையைச் சேர்ந்த 50 மோட்டார்கள் அவர்களிடம் இருந்தன.

ஆனால் தற்போதைய நான்காவது ஈழப்போரில் அவர்கள்

122 மி.மீ களமுனை பீரங்கிகள் 22 ஐயும்,

இரு 152 மி.மீ நீண்டதூர பீரங்கிகளையும்,

80 கனரக 120 மி.மீ மோட்டர்களையும்,

டசின் கணக்கிற்கு மேற்பட்ட 81 மி.மீ மற்றும் 60 மி.மீ மோட்டார்களையும்
கொண்டுள்ளனர்.

மேலும் அவர்களிடம்

ஏறத்தாழ ஆறு 130 மி.மீ பீரங்கிகளும் உள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இந்த பீரங்கிகள் அனைத்தும் சீனத் தயாரிப்பாகும்.

எனினும் இதில் உள்ள ஆச்சரியமான விடயங்கள் என்னவெனில் சிறிலங்கா இராணுவம் பயன்படுத்தும் 120 மி.மீ எறிகணைகளின் பிரத்தியோக தொடரிலக்கமுடைய எறிகணைகளை ஏவக்கூடிய மோட்டார் ஏவுகருவிகளை விடுதலைப் புலிகள் கொள்வனவு செய்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் எவ்வாறு சிறிலங்கா இராணுவத்தினர் பயன்படுத்தும் வகையை ஒத்த மோட்டார்களை கொள்வனவு செய்தனர் என்பது தொடர்பான உயர்மட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசின் ஆயுத முகவர் விடுதலைப் புலிகளின் 120 மி.மீ மோட்டார் கொள்வனவுக்கும் உதவியுள்ளாரா என்பது தொடர்பான விசாரணைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதில் இராணுவத்தின் பங்களிப்புக்கள் இருக்கலாம் அதாவது அவர்களின் கையிருப்பில் இருந்து கைமாறியிருக்கலாம் என்பதற்கான சாத்தியங்கள் இல்லை. ஏனெனில் இந்த சந்தேகங்களை ஆயுதங்களின் கையிருப்பு விபரம் விரைவாக தெளிவுபடுத்திவிடும்.

விடுதலைப் புலிகளின் இந்த பீரங்கிப் பலம் நான்காம் ஈழப்போரில் தெளிவாக வெளிப்படும்.

2001 ஆம் ஆண்டு யாழ். குடாவை காப்பாற்றியதற்கு இராணுவம் பல்குழல் உந்துகணை செலுத்திகளுக்கு நன்றியை தெரிவித்தாலும், விடுதலைப் புலிகளிடமும் சிறிய ரக பல்குழல் உந்துகணை செலுத்திகள் உள்ளன.

விடுதலைப் புலிகளிடம் பெருகியுள்ள பீரங்கிகள், மோட்டார்கள், எறிகணைகள் என்பன அவர்கள் நீண்ட காலத்திற்கு போர் புரிய போதுமானது.

போர்நிறுத்த காலத்தில் இந்த கனரக ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டு, கப்பல்கள் மூலம் எடுத்து வரப்பட்டு, தரைகளில் இறக்கப்பட்டதுடன் காட்டுப்பகுகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. பீரங்கி மற்றும் மோட்டார் எறிகணைகளுடன் விடுதலைப் புலிகளின் கப்பல்கள் கண்டறியப்பட்ட போது அவை அரசின் கைகளில் வீழ்வதை தடுக்கும் பொருட்டு அவர்களே தமது கப்பல்களை தகர்த்தும் உள்ளனர்.

முக்கியமாக அனைத்துலகத்தில் தமது பெயரை இழக்க நேரிடலாம் என்பதும் அதற்கான காரணம்.

இராணுவத்தின் கிழக்கு மீதான நடவடிக்கையின் போது விடுலைப் புலிகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பீரங்கிகளை பயன்படுத்தியிருந்தனர். அதற்கு தமது வளங்களை இழந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக இருக்கலாம். இராணுவத்தினரால் கிழக்கு கைப்பற்றப்பட்ட போதும் பெரும் சமர் ஒன்றிற்காக இந்த தரமான நவீன ஆயுதங்கள் எண்ணெய்கள் இடப்பட்டு பெருமளவில் வேறு இடத்தில் அவர்கள் சேமித்து வைத்துள்ளனர்.

கனரக ஆயுதங்களின் தரமான பிரயோகம் இந்த போரின் இரண்டாவது நிலையில் நடைபெற்றும் உள்ளது. விடுதலைப் புலிகள் பீரங்கிகளை கொள்வனவு செய்த போதும் டாங்கிகளை கொள்வனவு செய்யவில்லை. எனினும் அதற்கான சிறந்த தெரிவாக டாங்கி எதிர்ப்பு படைப்பிரிவை உருவாக்கியுள்ளனர்.

போர்நிறுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் டாங்கி எதிர்ப்பு படைப்பிரிவு கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்திருந்தது. அந்த படையணியின் பயிற்சி முடிந்து வெளியேறும் நிகழ்வுகளில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் பங்குபற்றியிருந்தார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முகமாலையில் இரு மணிநேரம் நடைபெற்ற சமரின் போது சிறிலங்கா இராணுவம், செக்கோஸ்லாவாக்கிய நாட்டுத் தயாரிப்பான இரு ரி-55 களமுனை டாங்கிகளையும், 4 அல்லது 5 உக்கிரேய்ன் நாட்டுத் தயாரிப்பான பிஎம்பி ரக தாக்குதல் கவச வாகனங்களையும் இழந்திருந்தது.

விடுதலைப் புலிகள் தமது இலகுரக வானூர்திகளையும் இரண்டுக்கும் மேற்பட்ட முறை கொழும்பிலும், வடக்கிலும் தாக்குதலுக்கு பயன்படுத்தியிருந்தனர். அது போரிற்கு மற்றுமொரு பரிமாணத்தை சேர்த்திருந்தது.

அவர்களிடம் எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகள் உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அது தரைத் தாக்குதலின் அவர்களுக்கு உதவலாம்.

கிழக்கிற்கு விடுதலைப் புலிகள் தரையில் இருந்து வானுக்கு ஏவும் மூன்று ஏவுகணைகளை எடுத்து வந்ததாக இராணுவத்தினருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

அதில் ஒன்றை உலங்குவானூர்தி ஒன்றை சுட்டுவீழ்த்த அவர்கள் பயன்படுத்தி இருந்தனர். மற்றதை வன்னிக்கு கொண்டு சென்று விட்டனர். ஏவுகணைகளை கொண்டு செல்லும் விடுதலைப் புலிகளை தாக்குவதற்கு இராணுவம் பெரும் எடுப்பிலான தேடுதலை நடத்தியிருந்தது எனினும் அவர்களால் விடுதலைப் புலிகளை இடைமறிக்க முடியவில்லை.

ரஸ்யத் தயாரிப்பான இந்த ஏவுகணைகள் மூலம் 20,000 அடி உயரத்தில் பறக்கும் வானூர்திகளை சுட்டுவீழ்த்த முடியும் என இராணுவத்தினர் நம்புகின்றனர். தோளில் வைத்து இயக்கப்படும் இந்த ஏவுகணைகள் ஒவ்வொன்றும் 2.8 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியானவை.

முன்னர் பல வானூர்திகளையும் உலங்கு வானூர்திகளையும் வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தியிருந்தனர். கொக்கிளாய் நீரேரியில் எம்ஐ-24 தாக்குதல் உலங்குவானூர்தி, மற்றும் பலாலியில் 1995 ஆம் ஆண்டு இரு அவ்ரோ வானூர்திகள் ஆகியவற்றை விடுதலைப் புலிகள் வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தியிருந்தனர்.

அவ்ரோ, புக்காரா, மற்றும் பல எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகளை அவர்கள் வெற்றிகரமாக தாக்கியழித்த போதும் 2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா வான்படைத்தளத்தில் கிபீர், மிக், கே-8 போன்ற வான்கலங்களையும் அழித்திருந்தனர். எனினும் தற்போதைய ஈழப் போரில் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது சிறிலங்கா வான் படையினர் பெருமளவான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

அதிக உயரத்தில் பறந்து தாக்குதல்களில் ஈடுபடும் மிக்-27 மற்றும் கிபீர் ரக வானூர்திகளை சாம்-14 ஏவுகணைகளின் மூலம் வீழ்த்த முடியாது. எனவே சாம்-18 ரக வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்ய விடுதலைப் புலிகள் முயன்று வருகின்றனர். எனினும் தமது இலகுரக வானூர்திகளின் மூலமும் சிறிலங்கா வான்படையின் வானூர்திகளை தாக்க முயன்றுள்ளனர். அந்த தாக்குதலில் இருந்து கிபீர் வானூர்திகள் மயிரிழையில் தப்பியுள்ளன.

விடுதலைப் புலிகளின் தற்போதைய கனரக ஆயுதங்கள் மிகவும் சவாலானவை. ஆழ ஊடுருவும் சிறப்பு படையணிகள் அந்த ஆயுதங்களின் இருப்பிடங்களை கண்டறிவதிலும் மற்றும் ஆளில்லாத உளவுவானூர்திகளின் இலத்திரனியல் உளவுத் தகவல்களிலுமே வான் படையினரின் தாக்குதல் தங்கியுள்ளது.

புலிகளின் பீரங்கி நிலைகளை கண்டறியும் சாதனம்

மேலும் விடுதலைப் புலிகளின் மோட்டார் மற்றும் பீரங்கி நிலைகளை கண்டறியும் சாதனத்தையும் இராணுவத்தினர் கொள்வனவு செய்துள்ளனர்.

ஏஎன்-ரிபிகியூ-36 சூடுநிலை அறியும் ராடார் சாதனம் (AN/TPQ- 36 Firefinder weapon locating radar) எனப்படும் இந்த சாதனம் மிகவும் அதிக பெறுமதியானது.

மிகவும் அதிக பெறுமதி மிக்க தன்னியங்கித் தொழில் நுட்பமுள்ள இந்த சாதனம் கிடையாக 90 பகையில் ஒரு செக்கனுக்கு பல முறை இலத்திரனியல் தேடுதல்களை மேற்கொள்ளக் கூடியது. அதன் போது எதிர்த்தரப்பு பீரங்கி நிலைகளை தன்னிச்சையாகவே கண்டறியக் கூடியது.

பின்னர் அதன் அமைவிடம் தொடர்பான தரவுகளை கணணிக்கு வழங்கும். அதனை ஆய்வு செய்த கணிணிகள் பீரங்கி நிலைகளின் அமைவிடப் புள்ளிகள், உயரம் தொடர்பான தகவல்களை தாக்குதலாளிக்கு வழங்கும்.

இந்த தன்னியக்க தொழிற்பாடானது மிகவும் வேகமானது. அதவது எதிரி தமது நிலைகளை மற்றுவதற்கு முன்னர் பீரங்கி நிலைகளின் அமைவிடப் புள்ளிகள், உயரம் தொடர்பான தகவல்களை தாக்குதலாளிக்கு அது வழங்கிவிடும்.

இந்த சாதனமானது 90 பாகைகளை விட 360 பாகையிலும் கெரில்லா எதிர்ப்பு நடைவடிக்கைகளில் பயன்படுத்தலாம்.

இதில் உள்ள ராடாரானது எதிரியின் பீரங்கி நிலையின் அமைவிடத்தை துல்லியமாக கணிப்பிட உதவும் செயற்பாட்டை கொண்டது. எதிர்ப்புச் சூடுகளை வழங்கும் மையம் ராடார்களால் வழங்கப்படும் தரவுகளை ஆராய்ந்து தமது தாக்குதல்களையும் நெறிப்படுத்த இது உதவும்.

பீரங்கிகளை கண்டறியும் தூரவீச்சை பொறுத்தவரை ஏஎன்-ரிபிகியூ-36 சூடுநிலை அறியும் ராடார் (AN/TPQ-36) சாதனங்களை விட ஏஎன்-ரிபிகியூ-37 சூடுநிலை அறியும் ராடார் (AN/TPQ-37) சாதனம் சிறப்பானது.

அதன் அதிகுறைந்த தூரவீச்சு 3 கி.மீ, அதிகூடிய தூரவீச்சு 30 கி.மீ ஆகும். உந்துகணைகள் எனில் அவை 50 கி.மீ அதிகூடிய தூரவீச்சை கொண்டவை.

இந்த இரு சாதனங்களுக்கும் வேறுபட்ட கணணி மென்பொருட்களை (computer software) பயன்படுத்தினாலும் அவற்றின் இயங்கு முறைகள் ஒரே மாதிரியானவை. எனினும் இது இராணுவத்தினரின் தேவைகளில் தங்கியுள்ளது. AN/TPQ-37 போன்ற நவீன சாதனங்களை கொள்வனவு செய்வது உகந்தது. இவை மிகவும் குறுகிய தூர, அதிக தூர மற்றும் குறைந்த பாகை, உயர்பாகை ஆகியவற்றில் உள்ள இலக்குகளை கண்டறியக்கூடியது. அதவது AN/TPQ-36 விட சிறந்தது.

AN/TPQ-36 பீரங்கி நிலைகளை கட்டறியும் சாதனம் தொடர்பான சில தகவல்கள்.

இதனை இயக்குவதற்கு 8 இராணுவத்தினர் தேவை.

அதன் முதன்மையான செயற்பாடு எதிரிகளின் மோட்டார், பீரங்கி, உந்துகணை செலுத்திகளின் சூடு நிலைகளை அறிதல்.

அதன் ராடார்கள் நேரடியற்ற உயர் பாகைச் சூடுகளை கண்டறியக்கூடியவை அதே போலவே மிகவும் குறைந்த பாகைகளை உடைய நேரடியற்ற சூடுகளையும் கண்டறியக் கூடியவை.

அதன் இரண்டாம் நிலை செயற்பாடானது படையினரின் சூடுகளை கண்காணித்தலாகும்.

இதன் மூலம் விடுதலைப் புலிகளின் பீரங்கிகள் கண்டறியப்பட்டதும் அதன் மீதான தாக்குதல்கள் நடத்தி அவர்களின் தாக்குதலை முறியடிக்கலாம். எனினும் வடக்கிலும், கிழக்கிலும் நடைபெற்ற பல சமர்களில் விடுதலைப் புலிகள் பீரங்கிகளை மிகவும் திறம்பட பயன்படுத்தியிருந்தனர்.

எனவே விடுதலைப் புலிகளின் பீரங்கிப் பலம் இந்த போரின் சமநிலையை மாற்றி அமைக்கும் தன்மையை கொண்டவை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, August 10, 2007

தமிழர் போராட்டம் நீதியான ஐனநாயக விடுதலை அம்சங்களைக் கொண்டது- இதில் முரண்கருத்து இல்லை என்பது போல : புலிகள் மட்டும் தனித்து முன்னெடுக்க முடியாது;

தமிழர் போராட்டம் நீதியான ஐனநாயக விடுதலை அம்சங்களைக் கொண்டது- இதில் எத்தகைய முரண்கருத்து இல்லை என்பது போல : புலிகள் மட்டும் தனித்து முன்னெடுக்க முடியாத என்பதும் சொல்லப்பட வேண்டும்..........

தமிழர் போராட்டம் நீதியான ஐனநாயக விடுதலை அம்சங்களைக் கொண்டது: பேராசிரியர் சுமணசிறி லியனகே
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2007, 07:16 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]

இலங்கைத் தீவில் தமிழர்கள் நடத்துகின்ற போராட்டமானது நீதியான, ஜனநாயக விடுதலை அம்சங்களைக் கொண்டது என்று சிறிலங்காவின் பேராதனைப் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் சுமணசிறி லியனகே கூறியுள்ளார்.

சுவிசின் பேர்ண் பல்கலைக்கழக அரசியல் விவகார நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "மறக்கப்பட்ட முரண்பாடு- சிறிலங்கா யுத்தத்தை நோக்கி" என்ற தலைப்பில் உரையாற்ற அண்மையில் சுவிஸ் சென்றிருந்த பேராசிரியரான சுமணசிறி லியனகே, சுவிசிலிருந்து வெளியாகும் மாதமிருமுறை இதழான "நிலவரம்" (ஓகஸ்ட் 10) ஏட்டுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் முதல் பகுதி:

கேள்வி: ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினை விவகாரம் முன்னெப்போதையும் விட அனைத்துலக மயப்பட்டு நிற்கின்றது. இந்நிலையிலும் கூட சிறிலங்கா அரசானது, நாட்டில் இனப்பிரச்சினை என எதுவுமே இல்லை அது வெறுமனே பயங்கரவாதப் பிரச்சினை எனக் கூறி வருகின்றது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்: உண்மையில் தமிழர் பிரச்சினை என்பது சிறிலங்கா அரசால், குறிப்பாக கூறுவதானால், காலனித்துவத்திற்கு பிந்திய சிறிலங்கா அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று. சமூகத்திலிலுள்ள பல்லினத் தன்மையைப் புரிந்து கொண்டு நடக்காமல் விட்டதனால் ஏற்பட்ட விளைவே இது எனலாம். ஏனெனில் இலங்கை என்பது சிங்களவர், தமிழர்கள், முஸ்லிம்கள், மலேயர்கள் என பல இனங்கள் வாழுகின்ற நாடு.

இத்தகைய பல்லினங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டிலே மற்றொரு இனத்தை ஓரங்கட்டும் பெரும்பான்மையின ஆட்சி வெற்றியைத் தராது. மேற்கு இந்திய நாடுகளில் பிறந்து இங்கிலாந்திலே விரிவுரையாளராகப் பணியாற்றிய பிரபல பொருளியலாளரான ஆர்தர் லூயிஸ் பின்வருமாறு கூறினார் "பெரும்பான்மை ஐனநாயகம் என்பது நடைமுறைச் சாத்தியமற்றது. அது மட்டுமன்றி அநீதியான ஒன்றுமாகும்." இந்த அடிப்படையில் பார்த்தால் காலனித்துவத்திற்குப் பிந்திய சிறிலங்கா அரசு நடைமுறைச் சாத்தியமற்றது என்பதை நீண்ட காலமாகத் தொடரும் யுத்தம் நிருபிக்கின்றது. அதுமட்டுமல்ல அது அநீதியானதும் கூட. ஏனெனில் அங்கு சகவாழ்வு என்பதற்கான அடிப்படை கூட இல்லை.

எனவே தமிழர் போராட்டம் என்பது நியாயமான காரணங்களுக்காக நடைபெறுகின்ற ஒன்று. தேசிய அபிலாசைகளின் அடிப்படையில் நடைபெறும் அப்போராட்டத்துக்கு நியாயமான தேவை இருக்கின்றது. ஆனால் அது நடைபெறுகின்ற வழிமுறை சரியா என்பது கேள்விக்குரியது. ஆனால், அடிப்படையில் தமிழர் போராட்டம் நீதியான ஐனநாயக விடுதலை அம்சங்களைக் கொண்டுள்ளது.

கேள்வி: உங்கள் கருத்தின்படி சிங்கள அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தமிழ் மக்களுக்கு நியாயமான காரணங்களுண்டு. அண்மைய உலகப் போக்குகளை கருத்தில் எடுக்கும்போது, உலகெங்குமுள்ள விடுதலைப் போராட்டங்கள் ஜோர்ஜ் புஷ்ஷின் ~பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற கருத்தின் கீழ் நசுக்கப்பட்டு வருவதனைக் காண்கின்றோம். சிறிலங்கா அரசு கூட இதனையே முன்னிலைப்படுத்துகின்றது. இந்த நிலைப்பாடு சரியா?

பதில்: ஜோர்ஜ் புஷ்ஷின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற கருதுகோள் பைத்தியக்காரத்தனமானது என்பதில் நான் மிகவும் தெளிவாக இருக்கின்றேன். சில தீவிரவாத அமைப்புக்களைப் பயங்கரவாத அமைப்புக்கள் எனக்கூறும் அவர் அமெரிக்கக் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட அல்லது அமெரிக்க நலன்களைப் பேணுகின்ற அதுபோன்ற அமைப்புக்களைப் வளர்த்து வருகின்றார். அமெரிக்க நலன்கள் எனும்போது அது அமெரிக்க ஏகபோகத்தை குறிக்கின்றது. உதாரணமாகக் கூறுவதானால் சதாம் உசைன் மீது எனக்கு அனுதாபம் கிடையாது. ஆனால, ஈராக் தலையீடு என்பது ஈராக் மக்களுக்கு ஐனநாயகச் சூழலை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட அல்ல. மாறாக மொபைல் உட்பட ஏனைய பல்தேசிய எண்ணெய்க் கொம்பனிகளை திருப்திப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.

எனவே பல்வேறு சமூக இனங்களையும் பற்றி பேசும்போது ஜோர்ஜ் புஷ்ஷின் கருத்தின் அடிப்படையில் அவற்றைப் பார்ப்பது தவறு. ஏனெனில் புஷ்ஷின் வரையறை என்பது விஞ்ஞான அடிப்படையிலேயோ விழுமியங்களின் அடிப்படையிலேயோ மேற்கொள்ளப்பட்ட ஒன்றல்ல. அது அடிப்படையில், அமெரிக்காவின் சாதாரண மக்களின் நலனையன்றி அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகர்களின் நலன் சார்ந்தது என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். எங்கெல்லாம் ஒடுக்குமுறை இருக்கின்றதோ எங்கெல்லாம் அடக்குமுறை நிலவுகின்றதோ எங்கெல்லாம் ஓரங்கட்டல் நடக்கின்றதோ எங்கெல்லாம் பாரபட்சம் காட்டப்படுகின்றதோ அங்கெல்லாம் மக்கள் முன்வந்து அதனை எதிர்க்கவே செய்வர். தமது கோரிக்கைகளை அழுத்தம் திருத்தமாக முன்வைக்கவே செய்வர். இது இயற்கையானது.

ஆகவே புஷ்ஷின் கொள்கையின் அடிப்படையில் கதைப்பதை விட்டுவிட்டு பேராசிரியர் எட்வேர்ட் டாசனின் கருத்தை அடிப்படையாகக்கொண்டு பேச விரும்புகின்றேன். அமெரிக்க - மேரிலான்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இவர் முரண்பாட்டுத் தீர்வு விவகாரத்தில் பிரசித்தி பெற்றவர்.

சிறிலங்காவில் நிலவுவது போன்ற முரண்பாடுகள், நீடித்த சமூக முரண்பாடுகள இவை நான்கு விடயங்களின் அடிப்படையில் உருவாகின்றன.

அவற்றுள் முதலாவது, காலனித்துவக் கொள்கைகள். சிறிலங்காவின் நிலைமையைப் பின்நோக்கிப் பார்ப்போமானால் காலனித்துவக் கொள்கைகள் சிறிலங்காவின் நீடித்த சமூக முரண்பாட்டிற்கு ஓரளவு பங்களித்திருப்பதைக் காண முடியும்.

இரண்டாவதாக, நாட்டின் சமூகக் கட்டுமானத்தைக் குறிப்பிடமுடியும். இதை அடிப்படையாகக் கொண்டே சிறிலங்காவில் பல தேசிய இனங்கள் வாழுவதாக முன்னர் நான் கூறினேன். பல தேசிய இனங்கள் இருக்கும்போது, பல்வேறு கலாச்சாரங்கள் இருக்கும்போது, பல்வேறு மதங்கள் இருக்கும்போது முரண்பாடுகள் வருவது இயற்கையே.

சிறிலங்கா சுதந்திரம் பெற்ற பின்னர் உண்மையிலேயே என்ன நடைபெற்றது என்றால், சிறிலங்கா அரசானது காலனித்துவ ஆட்சியாளர்கள் எத்தகைய கொள்கைகளைக் கடைப்படித்தார்களோ அதனையே கடைப்படித்து வந்தது. எனவே, அது ஒரு பெரும்பான்மை ஜனநாயகம். கடந்த காலத்தை எடுத்து நோக்கினால் எப்பொழுதெல்லாம் பெரும்பான்மை ஜனநாயகம் செயற்படுகின்றதோ அப்போதெல்லாம் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டு வந்தள்ளனர்.

உதாரணமாக, 1940 இன் இறுதிப்பகுதியில் குடியுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டு கண்டித் தமிழர்களான இந்திய வம்சாவழித் தமிழர்கள் பெரும்பான்மையானோரின் குடியுரிமைமை பறிக்கப்பட்டது. தேசியக் கொடி பற்றித் தீர்மானிக்கப்பட்ட போது அது சிறிலங்காவின் பல்லினத்தன்மையைப் பிரதிபலிப்பதாக அன்றி, சிங்கள தேசத்தின் மேலாதிக்கத்தை மாத்திரம் பிரதிபலிப்பதாகவே அமைந்திருந்தது.

1956 இல் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்க்கட்சிகளின் எதிர்ப்புக்கும் மத்தியிலும் தனிச்சிங்களச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. இவை சுதந்திரத்திற்குப் பின்னான காலப் பகுதியில் அரச கொள்கைகள் எத்திசையில் பயணித்ததன என்பதனைக் காட்டுகின்றன. இதுவே யதார்த்தமாக இருக்கையில் ஏனையோரின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படாது விடும்போது, பாரபட்சமாக நடத்தப்படும் போது, ஓரங்கட்டப்படும் போது அவர்கள் எதிர்ப்பை வெளிக்காட்டுவது இயல்பானதே. எனவே தமிழர் அரசியலில் 50, 60 மற்றும் 70 களில் அகிம்சை ரீதியில் நடைபெற்ற விடயங்கள் இயல்பானதே.

இத்தகைய எதிர்ப்புக்களை அடக்கிவிடவே அரசு முயற்சித்தது. எதிர்ப்புக்கள் உருவாகும் போதெல்லாம் அரசுகள் ஒடுக்குமுறைகளையும், அடக்குமுறைகளையும், பாரபட்சத்தையும், ஓரங்கட்டுதலையும் முன்னரை விடத் தீவிரமாக மேற்கொள்ளுகின்றன. ஆனால் சில நாடுகள் வித்தியாசமான கொள்கைகளை கடைப்பிடிக்கின்றன.

உதாரணமாக இந்தியாவைக் குறிப்படலாம்.

இதனைத் தெளிவாகக் குறிப்பிடுவதானால் இந்தியா சுதந்திரம் பெற்றபோது இந்தி ஆட்சிமொழியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டதும் அதற்குக் கடும் எதிர்ப்புக்கள் உருவாகின.

குறிப்பாக, தெற்கே தமிழ்நாட்டில் சுயாட்சிக் கோரிக்கை கூட முன்வைக்கப்பட்டது. ஆனால் 50 களில் ஐவகர்லால் நேரு இந்தி ஆட்சிமொழி என்ற சட்டத்தை நீக்கி மும்மொழித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதற்கமைய ஒவ்வொரு இந்தியனும் தனது மாநில மொழியை முதன் மொழியாக கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது தமிழ்நாட்டவர் தமிழையும் ஆந்திர மாநிலத்தவர் தெலுங்கையும் கன்னட மாநிலத்தவர் கன்னடத்தையும் கேரள மாநிலத்தவர் மலையாளத்தையும் கற்றுக் கொள்ளுமாறு கேட்கப்பட்டனர்.

இரண்டாவது மொழி அனைத்துலக மொழியான ஆங்கிலமாக இருந்தது. மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்றுக் கொள்ளுமாறு அவர் கூறவில்லை. மாறாக தத்தம் மாநிலத்தில் இல்லாத வேறு ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளுமாறு கோரினார். இதன்மூலம் இந்தியாவில் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது.

ஆகவே 50களில் இந்தியைக் கற்றுக்கொள்ளுவதை எதிர்த்து வந்த மக்களில் பலர் இந்தியை தாமாகவே கற்றுக்கொள்ள முன்வந்தனர். ஏனெனில் அதனால் பல நன்மைகள் விளைந்தன.

50 களில் யாழ்ப்பாணப் பாடசாலைகளில் கூட சிங்களத்தைக் கற்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏனெனில் சிங்களம் தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு தபாலதிபராகப் பணியாற்ற அரச திணைக்களங்களில் எழுதுவினைஞராகப் பணியாற்ற என பல்வேறு விடயங்களுக்கு அவசியமாக இருந்தது.

இந்தியா ஒரு மொழிக்கொள்கையிலிருந்து மும்மொழிக் கொள்கைக்கு மாறிய போது சிறிலங்கா அதற்கு முற்றிலும் எதிர்மாறான கொள்கையைக் கடைப்பிடித்தது. சிறிலங்கா அரசும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் எவ்வாறு சிறிலங்காவின் பல்லினத் தன்மைகளைப் புறந்தள்ளி தமது முடிவுகளை எடுத்தார்கள் என்பதனை இது புலப்படுத்துகின்றது.

இதுவே, நீடித்த சமூக முரண்பாட்டிற்கு வழிவகுக்கும் காரணிகளில் ஒன்றாக சமூகக் கட்டுமானத்தை டாசன் மிகச் சரியாகவே குறிப்பிட்டுள்ளார்.

எனவேதான் தமிழ் மக்களின் போராட்டம் என்பது அவர்களின் துயரங்களுக்கு வழிதேடும் வகையிலான நீதியிலான ஒரு போராட்டம் என நான் கூறுகிறேன். எனவே தமிழ் மக்களின் போராட்டம் பயங்கரவாதம் என்ற கருத்து இங்கு பொருத்தமற்றது.

இன்றைய உலகச் சூழலில் நாம் ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ, துருவமயப்பட்டுள்ள உலகில் அமெரிக்காவின் கொள்கையே பல நாடுகளின் கொள்கையினைத் தீர்மானிப்பதாக உள்ளது. பிரித்தானியா அமெரிக்காவைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது. முழுமையாக இல்லாது விட்டாலும், ஐரோப்பிய ஒன்றியமும் ஏனைய பல நாடுகளும் இம்முடிவினையே பின்பற்றுகின்றன. இந்தக் கொள்கை சரியென்பதற்காக அல்ல, மாறாக பலமுள்ளவனின் கொள்கை என்பதற்காகவே அது பின்பற்றப்படுகின்றது.

இந்தக் கொள்கையைக் கடுமையாக எதிர்த்துவரும் சிமோன் செர்க்னொவ்ஸ்கி இது ஒரு முட்டாள்த்தனமான கொள்கை என வாதிடுகிறார்.

எனவே அமெரிக்கா கூறுவதை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுக்காமல், ஆய்வு அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும்.

இப்போது நீங்கள், "நீதியான காரணம் இருக்குமாக இருந்தால் எந்தவொரு நடவடிக்கையையும் நியாயப்படுத்திவிட முடியுமா?" என்றொரு கேள்வியைக் கேட்கலாம். இங்கு ஒரு வித்தியாசம் இருக்கிறது.

இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் சுபாஸ் சந்திரபோஸ் போன்றோர் வேறுவிதமான அணுகுமுறைகளைக் கைக்கொண்டனர். இரண்டு காரணங்களுக்காக காந்தி இதனை எதிர்த்தார். முதலாவதாக விளைவுகள் நல்லவை என்பதற்காக அதனை அடைகின்ற வழிமுறைகள் எத்தகையதாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது. சிலவேளை இது குறுகிய காலத்தில் மிகச் சிறந்ததாகத் தென்படமுடியும்.

இது மாத்திரமல்ல, இலக்கை அடையும் வழிமுறையைத் தெரிவுசெய்ய வேண்டும் என்றார். இதுவே காந்தி அறிமுகம் செய்த அகிம்சை - இதனையே அமெரிக்க சிவில் இயக்கம் உட்பட பல அமைப்புக்கள் ஏற்றுக்கொண்டன.

ஏனெனில், நீங்கள் இலக்கை எட்டாத போதிலும் நீங்கள் எங்கு இருந்தீர்களோ அங்கேயே இருக்க முடியும். உங்களுக்கு ஆதரவு கிட்டுமே ஒழிய, பாதிப்பு எதுவும் வந்துவிடாது. இது ஒரு விடயம்.

இரண்டாவது விடயம் உங்கள் வழிமுறை நியாயப்பூர்வமானதாக இருத்தல் ஆகும். நான் இதனையே பின்பற்றுகிறேன். ஒரு வேலைத்திட்டத்தை வரையறை செய்துகொண்டு அதற்குள்ளாக ஒரு சமரசப் பேச்சுக்களினூடே இலக்கை அடைதலே அதுவாகும். இது நிச்சயமான வழி.

சிறிலங்கா விவகாரத்தை எடுத்துக்கொண்டால் இதுவரை 65,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மொத்தத் தொகையில் அரைவாசிக்கும் குறைவானோரே இரண்டு தரப்பையும் சேர்ந்த ஆயுதப்படைகளில் உயிரிழந்தோர் ஆவார். சகல யுத்தங்களையும் போல முதலாம் உலக யுத்தமாயினும், 2 ஆம் உலக யுத்தமாயினும், ஏனைய யுத்தங்களாயினும் - குடிமக்களே யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர்.

துல்லியமாக இல்லாவிட்டாலும் எனக்குத் தெரிந்தளவில், யுத்தத்தில் இறப்போரில் 60 வீதமானோர் குடிமக்களே. அதில் பெரும்பான்மையானோர் சிறுவர்களும் பெண்களும் ஆவார். எனவே, இவ்வாறு நாம் தொடர்ந்து செல்ல முடியுமா? அரசாங்கத்தின் மீது நாம் குறை கூறுவதானாலும் கூட நாம் இவ்வாறு தொடர்ந்து செல்லப் போகின்றோமா எனச் சிந்திக்க வேண்டும்.

இது நான் முன்வைக்க விரும்பும் கேள்வி - இதே கேள்வியையே காந்தியும் முன்வைத்தார். அதனை (வன்முறையை) நீங்கள் ஆரம்பித்து வைத்தால், அதற்கு முடிவே இருக்காது காந்தி கூறினார்.

இந்த அடிப்படையில் நான் ஒரு தமிழ்த் தேசியவாதி எனக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு நான் கூறும்போது நளின் டீ சில்வா போன்றோர் என்னை விமர்சிக்கிறார்கள். நீ ஒரு சிங்களவனாய் இருந்து கொண்டு தமிழ்த் தேசியவாதியாய் இருக்கிறாய் என்கிறார்கள். நீங்கள் கூறுவதைப் போன்று தமிழர்களில் கூட சிலர் சிங்களத் தேசியவாதிகளாய் இருக்கிறார்கள்தானே?

தேசியவாதம் என்பது படுமோசமான ஒரு விடயம் எனப் பலர் கூறுகிறார்கள். தேசியவாதம் தொடர்பாக பிரபலமான புலமையாளரான பெனடிக்ற் அண்டர்சன் கூறுவதுபோல தேசியவாதம் என்பது ஒரு இயல்பான விடயம். நான் கூட ஒரு முறை "மார்க்சிசம், லெனினிசம், என்பவற்றைவிட தேசியவாதம் மிகவும் துல்லியமான ஒரு தத்துவம்" என எழுதியிருந்தேன். ஏனெனில், தேசியவாதம் என்பது மார்க்சிசம், லெனினிசத்தை விட அதிக பரப்பெல்லையைக் கொண்டது. இது வேறு விடயம்.

நான் கூற விரும்புவது என்னவெனில், தேசியவாதி என்பவரை எவ்வாறு வரையறுப்பது? "நீங்கள் உங்கள் நாட்டுக்கு அவமானமாக விளங்குவீர்களானால் நீங்கள் ஒரு தேசியவாதி"

என பெனடிக்ற் அன்டர்சன் கூறுகிறார். நான் என்னைச் சிறிலங்காத் தேசியவாதி எனக் கூறிக்கொள்கிறேன். ஏனெனில் நான் சிறிலங்காவின் கடந்த கால வரலாற்றையிட்டு வெட்கப்படுகின்றேன். இந்த அடிப்படையில் நான் ஒரு தேசியவாதி.

உண்மையில் பெனடிக்ற் அன்டர்சன் ஒரு சந்தர்ப்பத்திலே தான் பிறந்த நாடான பிரித்தானியாவின் அவமானமாக மாறியதாகக் கூறினார். 1956 காலப் பகுதியில் தனது மாணவர்கள் சிலர் சிறிலங்கா மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டபோது தாக்கிய விவகாரத்தின் போதே இவ்வாறு கூறினார்.

ஜேர்மன் பேராசிரியரான கான்ட், தனது கட்டுரையில் பின்வருமாறு கூறினார். "மற்றைய தரப்பினரை நீங்கள் மோசமாக நடத்தவில்லையானால் நீங்கள் ஒரு சரியான குடிமகன் அல்ல."

தேசியவாதம் வேறு, தேசியவாதி வேறு. இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டும் - வன்முறையையும் தேசியவாதத்தையும் நீங்கள் இணைக்கமுடியாது. ஏனெனில், பல இடங்களில் அது வெற்றிபெறவில்லை. உதாரணமாக சல்வடோர், நிக்கரகுவா போன்ற நாடுகளைக் கூற முடியும்.

இது இன்றைய உலகச் சூழ்நிலையிலும் ஓரளவு தங்கியுள்ளது. இன்றைய நிலையில் ஐக்கிய நாடுகள் சபை தேசங்களின் கூட்டமைப்பாக இல்லாமல் அரசாங்கங்களின் கூட்டமைப்பாகவே உள்ளது. ஏனெனில், உலகில் சுமார் 6,000 தேசிய இனங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சிலர் 12,000 தேசிய இனங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

ஐ.நா. சபையில் எத்தனை நாடுகள் இருக்கின்றன. 200 நாடுகள் என வைத்துக்கொண்டால் சராசரியாக 30 தேசிய இனங்கள் ஒரு நாட்டில் இருப்பதாகக் கொள்ள வேண்டும். இதனால் யப்பானிலோ, ஐஸ்லாந்திலோ 30 தேசிய இனங்கள் இருப்பதாகக் கொள்ள முடியாது. ஆனால் இந்தியா, இந்தோனேசியா, நைஜீரியா, பிரேசில் போன்ற நாடுகளில் 30 க்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் உள்ளன.

எனவே, இன்றைய சூழலில் ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் நாடுகள் தேசிய இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிவிட முடியாது. எனவே நாம் தேசியம் என்ற அடிப்படையில் சிந்திக்க வேண்டும்.

மறுபுறம், தேசிய விடுதலைப் போராட்டமொன்று ஆரம்பமாகும்போது அந்த தேசிய இனமானது மரபு ரீதியாக, சிந்திக்க ஆரம்பிக்கின்றது எனப் புரிந்து கொள்ளலாம். ஒரு வகையில் பார்த்தால் அவர்கள் முரண்படுகிறார்கள். நாட்டின் தேசியம் என்ற கருதுகோளுக்கு எதிராகப் போராடும் அவர்கள் அதேவேளையில் அந்த நாட்டிற்குள்ளேயே போராட்டத்தை நடாத்துகிறார்கள்.

இதுவே இங்குள்ள பிரதான முரண்பாடு.

எனவே, என்னைப் பொறுத்தவரை பெரும்பாலான விடுதலைப் போராட்டங்கள் வித்தியாசமாகச் சிந்திக்க வேண்டும். அவர்கள் தேசியத்துக்காக என்றில்லாமல் வேறுவிதமான அமைப்பொன்றை அமைக்கப் போராடுவதாக நினைக்க வேண்டும்.

இதுவே ஈழத்தமிழர் விவகாரத்திலும், சிறிலங்கா முஸ்லிம்கள் விடயத்திலும், ஈராக்கில் குர்திஷ் மக்களின் போராட்டத்திலும் பிரச்சினையாக உள்ள விடயம் என நான் நினைக்கிறேன்.

காஷ்மீர், நாகலாந்து ஆகிய இடங்களிலும் இதுவே பிரச்சினை. அவர்கள் அனைவரும் தத்தம் தேசியத்தின் அடிப்படையிலேயே சிந்திக்கின்றனர். அது இயல்பானது. ஏனெனில் இது முழுமையாக தத்துவ அடிப்படையிலானது. மார்க்சிச சிந்தாந்தத்தின் வீழ்ச்சியின் பின்னரே இந்த நிலை உருவானது. இது ஒரு சுதந்திரமான அல்லது சிலவேளைகளில் சுதந்திரமற்ற பூர்ஷ்வா சித்தாந்தம். ஒரு முதலாளித்துவச் சித்தாந்தம். தேசியம் என்பதும் இந்த முதலாளித்துவச் சித்தாந்தத்தின் ஒரு பகுதியே.

தத்துவ அடிப்படையிலான பிரச்சினைக்கு விவாதித்து முடிவு காணாவிடில் தீர்வை எட்டமுடியாது. நீடித்த சமூக முரண்பாட்டுக்கு சரியான தொடக்கப் புள்ளியும் இல்லை சரியான முடிவும் இருக்காது. அது முடிவில்லாமல் நீடித்தவண்ணமே இருக்கும். கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்து எதிர்காலத்தையும் எதிர்வு கூறுவதாக இருந்தால், சிறிலங்கா முரண்பாடு முடிவுக்கு வராதெனவே நினைக்கிறேன். எதிர்வரும் 20 வருடங்களுக்கு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என நான் நினைக்கவில்லை.

சிறிலங்கா அரசால் இந்த யுத்தத்தைச் சமாளிக்க முடியுமெனவே கருதுகிறேன். மேலும் மேலும் அது வளங்களைத் தேடிக் கொள்கின்றது. கடந்த 1999 - 2000 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சிறிலங்கா அரசு 55 பில்லியன் ரூபாய்களை யுத்தச் செலவீனமாகக் கொண்டிருந்தது. அமெரிக்க ராண்ட் நிறுவனத்தின் கணிப்பின்படி இக்காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் 39 பில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளனர். இந்த இரண்டு செலவினங்களுமே கிட்டத்தட்டச் சமமானவை. ஏனெனில் விடுதலைப் புலிகள் சம்பளம் வழங்க வேண்டியதில்லை.

அவர்களது பணியில் அநேகம் தொண்டு அடிப்படையிலானவை. இதிலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிகின்றது. இரண்டு தரப்பினருமே ஆகக் குறைந்தது 100 பில்லியன் ரூபாவை வருடாந்தம் செலவிடக்கூடிய வல்லமையோடிருக்கின்றார்கள். இது மிகப் பெரிய தொகை மிகப் பெரிய வளம். எனவே இரண்டு தரப்புக்குமே, யுத்தத்தைத் தொடரக்கூடிய வல்லமை இருக்கிறது. சிலவேளை 2001 போல் ஒரு சலிப்பு நிலை தோன்றலாம் - எனினும் 2, 3 வருடங்களில் மீண்டும் யுத்தம் ஆரம்பித்துவிடும்.

எனவேதான், இந்த முரண்பாடு தொடர்ந்து நீடிக்கும் எனக்கூறுகிறேன். சமூகம் மேலும் வன்முறை மிக்கதாக மாறும் நிலையே உள்ளது. எனவே நாம் வித்தியாசமாகச் சிந்திக்க வேண்டும். முழுவதையுமே தலை கீழாக மாற்றியமைக்க வேண்டும்.

கனடாவைப் பொறுத்தவரை இத்தகைய மாற்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தியா கூட மேலும் ஜனநாயகத்தை நோக்கியும் அதிகாரப் பகிர்வை நோக்கியும் சென்று கொண்டிருக்கின்றது. உலகத்தை ஒட்டு மொத்தமாக நோக்கினால் சுமார் 60 வீதமான மக்கள் அதிகாரத்தை பகிர்ந்துகொண்டு அதிகாரம் மத்தியில் குவிக்கப்பட்டிராத நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, இன்னும் 50 வருடங்களில் இதுவே உலகின் நியதியாக இருக்கும்.

தமிழர் பிரச்சினையின் துயரங்கள் வித்தியாசமான நிலைப்பாட்டுடன் கூறப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன். அவ்வாறு இருந்தால் மாத்திரமே இவ் விவகாரம் மிகவும் நியாயப்படுத்தப்படக்கூடியதாக, அதிக மனோபலம் உடையதாக மாறும். தமிழ் மக்களுக்காகப் போராடுவதாகப் பொதுவில் கூறமுடியும். ஆனால், அப்படிக் கூறும்போது பல கேள்விகள் எழும் வாய்ப்புள்ளது. இவ்விடயத்தில் சரியான தீர்வைக் காணாது விட்டால், அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப் பெறுவது கடினமாகி விடும். நீங்கள் நியாயமான ஏற்றுக்கொள்ளக்கூடிய கொள்கைகளின் அடிப்படையில் செயற்பட்டால் மாத்திரமே சிறிலங்கா அரசு அநீதியின் அடிப்படையில் செயற்படுகிறதெனக் கூறமுடியும். இதுவே அனைத்துலக சமூகத்தின் ஆதரவை விடுதலைப் புலிகளுக்கும் பெற்றுத் தரும்.

ஒரு பலமான அரசுடன் போரிடும் போது ஜனநாயக மனித உரிமைக் கொள்கைகளை எவ்வாறு பேணமுடியும் என என்னிடம் வினவப்பட்டது. இது சரியெனத் தோன்றுகிறது. ஆனால் கோத்தபாய ராஜபக்சவும் இதையேதான் கேட்கிறார். எனவே, இந்த வாக்கியத்துக்கு எம்மை எவ்வாறு தகவமைத்துக் கொள்வது? அமெரிக்காவின் மேலாதிக்கத்துக்குக் கட்டுப்பட்டுள்ள அனைத்துலக சக்திகள் நிச்சயம், அரசாங்கம் என்ற கோதாவில் சிறிலங்கா அரசுக்கு உதவுவர். இது ஒரு நியாய அடிப்படையிலான கேள்வி. எனவே, தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் சரியான நியாயாத்தின் அடிப்படையைக் கொண்டிராவிடில் அனைத்துலகத்தின் ஆதரவைப் பெறுவதென்பது கடினம்.

எனவே, நிலைமையில் மாற்றம் தேவை. அதற்காக ஒரே நாளில் 180 பாகை திரும்பிவிட முடியாது. எனவே, படிப்படியாக மாற்றத்தைக் காட்டவேண்டும். ஏனெனில், விடுதலைப் புலிகளின் சில நடவடிக்கைகள் போராட்டத்துக்கு அவசியமில்லாதவை. அவற்றுக்குச் சில காரணங்கள் இருந்தாலும் கூட அவை தவிர்க்கப்படக்கூடியவை என்பதே எனது கருத்து என்றார் அவர்.

Monday, August 6, 2007

ஹிரோஷிமா

ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியதன் நினைவு நாள் இன்று உலகமெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.

"லிட்டில் பாய்' எனும் 60 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து வந்த பி29 ரக "எனோலா கெய்' என்ற அமெரிக்க விமானம், 1945 ஆக., 6ல் காலை 8.15க்கு ஹிரோஷிமா நகரின் மையப் பகுதியை நோக்கி உலகின் முதல் அணுகுண்டை வீசியது. இது, நான்கு சதுர மைல் அளவுக்கு அழிவை ஏற்படுத்தியது. அடுத்த சில மணி நேரங்களுக்கு ஹிரோஷிமாவில் நடந்தது என்ன என்பதே ஜப்பானுக்கு தெரியவில்லை. பேரழிவு நிகழ்ந்திருப்பதை மட்டும் அறிந்து கொள்ள முடிந்தது. தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில் ஏறத்தாழ மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் அந்த பகுதியில் வசித்தனர். இவர்களும் உயிரிழக்க நேரிடும் என தெரிந்த போதும், ஜப்பானை பணிய வைக்க வேண்டும் என்ற எண்ணமே அமெரிக்காவுக்கு மேலோங்கி இருந்தது. குண்டு வீசப்பட்டு 16 மணி நேரம் கழித்து அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமேன், ஜப்பான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தியதாக அறிவித்தார். இதன் பிறகே, ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டது ஜப்பான் உட்பட உலக நாடுகளுக்கு தெரிய வந்தது. 1945 ஆக., 9ல் நாகசாகி மீதும் அணு ஆயுத தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. அமெரிக்காவின் இந்த தாக்குதலால், இரு நகரங்களும் முற்றிலுமாக நிலைகுலைந்தன. ஏறத்தாழ ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். கதிர்வீச்சு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 30 ஆயிரத்தை எட்டியது. இதனையடுத்து, ஆக., 10ம் தேதி சரணடைவதாக ஒப்புக்கொண்டது ஜப்பான். யுத்தத்தில் அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டது இதுவே முதன்முறையாகவும், கடைசி முறையாகவும் இருந்தது. அமெரிக்காவின் தாக்குதலின் பின்னணியில் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அணு ஆயுதத்தால் எவ்வளவு அழிவு ஏற்படும் என்பதை அதை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கே புதிராக இருந்ததால், அதை பரிசோதிக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படுகிறது. வலுவான நிலையிலிருந்த ஜப்பான் பின்வாங்கிய பிறகும், அமெரிக்கா தாக்குதல் நடத்தியது கேள்விகளை எழுப்பியது. மேலும், பல ஜப்பான் நகரங்களில் அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டமிட்டது பின்னர் தெரிய வந்தது. "போரினால் ஏற்கனவே ஜப்பான் அழிந்திருந்தது. அந்த நாடே முடங்கிப் போயிருந்தது. அதை அழிக்க அணுகுண்டே தேவைப்படவில்லை' என இந்த சம்பவத்தை பற்றி குறிப்பிடுகிறார் மறைந்த பிரிட்டன் பிரதமர் சர்ச்சில். உலக நாடுகளின் அனுதாபத்தை ஜப்பானுக்கு தேடித் தந்த நிகழ்ச்சி இது. அணு ஆயுதத்தின் பயங்கரத்தை உலகம் உணர்ந்து கொள்ளும் விதமாக அமைந்தது ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் நிகழ்ந்த பேரழிவு சம்பவம்.

Sunday, August 5, 2007

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் 1990 ஆம் ஆண்டு பள்ளிவாசல்களில் வைத்து புலிப்பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களை நினைவு கூரும் முகமாக நேற்று கிழக்கு மாகாணம் பூராகவும் கடைகள், வர்த்தக நிலையங்கள் என்பன பூட்டப்பட்டு தேசிய ஷûஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.காத்தான்குடி பள்ளிவாசல்களில் வைத்து 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி 103 முஸ்லிம்கள் புலியின் ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களை நினைவுகூரும் முகமாக வருடா வருடம் தேசிய ஷஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை அனுஷ்டிக்கும் முகமாக நேற்று அம்பாறை மாவட்டத்தின் சகல முஸ்லிம் பிரதேசங்கள் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி போன்ற பிரதேசங்களில் கடைகள், வர்த்தக நிøலயங்கள் மற்றும் பாடசாலைகள் என்பன பூட்டப்பட்டு இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பிரதான வைபவம் காத்தான்குடி பிரதேசத்தில் நடைபெற்றதால் இப்பிரதேசங்களில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் அரச காரியாலயங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. வீதிகள் எங்கும் வெள்ளை நிறக் கொடிகளும் கட்டப்பட்டிருந்தன.

உள்ளூர் வாகனப்போக்குவரத்தும் இடம்பெறவில்லை. இதனால் முஸ்லிம் பிரதேசங்களின் இயல்பு நிலை முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

Friday, August 3, 2007

இது எப்படி இருக்கு..................

இலங்கையில் மீண்டும் அனைத்துலகத்தின் திருவிளையாடல் தொடக்கம்
[வெள்ளிக்கிழமை, 3 ஓகஸ்ட் 2007, 14:54 ஈழம்] [சி.கனகரத்தினம்]

தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய போர் நகர்வுகள் மேற்கொள்வதைத் தடுத்து மீளவும் அமைதிப் பேச்சு என்னும் சதிவலைக்குள் தமிழர் தரப்பை சிக்க வைக்க தனது திருவிளையாடல்களை அனைத்துலக சமூகம் மற்றும் ஒருமுறை இலங்கைத் தீவில் தொடங்கியிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய செயற்பாடுகளில் தம்மை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டிருந்த இரு இளம் மாணவர்கள் தொடர்ச்சியாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களைப் படுகொலை செய்யும் நிகழ்வுகள் மீளவும் அரங்கேறியிருக்கும் இதே கால கட்டத்தில்

தென்னிலங்கை அரசியல் களத்திலும் கள நிலைமைகள் மாற்றமும் ஆட்டமும் காணத் தொடங்கியிருக்கிறது.

மகிந்தவின் அரசாங்கத்திலிருந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெளியேறிவிட்டது. முஸ்லிம் காங்கிரசும் வெளியேறும் நிலையில் ஆட்சி கவிழவோ அரசாங்கத்தை ரணில் கைப்பற்றவோ சாத்தியங்களும் யூகங்களும் தொடங்கியிருக்கின்றன.

இது வெறும் தென்னிலங்கை அரசியல் சக்திகளினதோ அல்லது மலையகத் தமிழ் அரசியல் சக்திகளினதோ சுய முடிவானதாக நாம் கருதிவிட முடியாது. கடந்த காலங்களை ஒப்பிடுகையில் அனைத்துலகத்தின் திருவிளையாடல்கள் மீண்டும் இலங்கைத் தீவினில் அரங்கேற்றப்பட்டிருப்பதகாவும் அதற்கான ரணில் எனும் நாரதர் தலைமையிலே ஒரு அரசியல் கலகம் உருவாக்கப்பட்டிருப்பதாகவுமே கருத முடியும். நாரதர் கலகம் நன்மையில்தான் முடியும் என்று "திருவிளையாடல்" வசனம் ஒருபக்கம் கிடக்க- இந்த நாரதர்களின் கலகமானது தமிழர்களுக்கு எச்சரிக்கை மணிதான் அடிக்க முடியும் என்பதற்கு சாட்சிகளாக அந்த "அமைதி"க்கால நாடகங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அதனை இந்த கட்டுரையின் இறுதியில் காண்போம்.

சிறிலங்கா அரச தலைவராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற காலத்துக்குப் பின்னர் ரணில் விக்கிரமசிங்க ஓய்ந்து கிடந்துவிடவில்லை. ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா, சீனா, நோர்வே உள்ளிட்ட பல நாடுகளுக்கும் தொடர்ச்சியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

சிறிலங்காவின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மகிந்தவை விட ரணிலையே நோர்வே உத்தியோகப்பூர்வமாக அழைத்துப் பேசியது.

நோர்வே பயணத்தை நிறைவு செய்த பின்னர் இந்தியாவுக்குச் சென்று நோர்வேக்கும் இந்தியாவுக்கும் இடையே தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவியவர் ரணில்.

இப்படியாக அனைத்துலகத்தின் தெரிவாக ரணில் ஏன் இருக்கிறார்?

மகிந்த ராஜபக்ச போர் நடவடிக்கையை மேற்கொள்ளும் மனோநிலை கொண்டவர். போர் நகர்வுகள் உச்சத்தை அடையும் நிலையில் புலிகளின் பதில் நடவடிக்கையும் தொடங்கும். முப்படைத் தாக்குதல்களுடன் புலிகள் களத்தில் இறங்கும்போது சிறிலங்காவினால் எதிர்கொள்ள இயலாமல் போய் புலிகளின் கை ஓங்கும் என அச்சப்படுகிறது அனைத்துலகம்.

கிழக்கிலிருந்து புலிகள் பின்நகர்ந்த நிலையில் வடக்கு கள முனைகளில் உள்ள புலிகளின் போர் அணிகள் எப்போது வேண்டுமானாலும் முன்னரங்கை விட்டு பாயலாம் என்று அனைத்துலக ஊடகங்களும் சிறிலங்கா ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில் புலிகள் இராணுவ ரீதியாக வெற்றி பெற்று விடுவதைத் தடுக்கும் வகையில் அனைத்துலகத்தின் திருவிளையாடல்கள் இப்போது இலங்கைத் தீவில் தொடங்கப்பட்டிருக்கலாம்.

சிறிலங்காவில் ரணில்- சந்திரிகா என்ற முன்னைய பாத்திரங்களைப் போல்

பிரதமராக ரணில்- அரச தலைவராக மகிந்த ராஜபக்ச என்ற அரசியல் அரங்கை உருவாக்க அனைத்துலகம் விரும்பக்கூடும்.

மக்களுக்காக- மக்களின் நலனுக்காக என்று சொல்லப்பட்டு எழுதப்பட்ட "மங்களவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்" குறிப்பிடப்படும் பிரதான அம்சமாக அதாவது "மக்கள் நலன் (?)" அம்சமாக "யார் பிரதமர்? யார் உப பிரதமர்" என்று தீர்மானித்துக் கொண்டார்கள் என்ற சரத்திலிருந்தும் அனைத்துலகத்தின் திருவிளையாடல் போக்கினை நாம் உள்வாங்கிக் கொள்ள முடியும்.

இதற்கும் அப்பால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் முடிவானது சுயமானதாக இருப்பதற்கில்லை. இந்திய வெளிவிவகாரத்துறையின் வழிகாட்டுதலுடன் இயங்கி வரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இப்போதும் மகிந்தவை விட்டு வெளியேறுவதற்கான சமிக்ஞையை இந்தியாவிடமிருந்தே பெற்றிருக்கும் என்பதனை மறுப்பதற்கில்லை. ஏனெனில் இலங்கைத் தீவின் போர் வெடித்து புலிகள் கை ஓங்கிவிட்டால் என்ன செய்வது என்ற "காய்ச்சல்" இந்தியாவுக்கு இருக்கலாம்.

அரசியல் கள எதிர்கூறல்கள் ஒருபுறமிக்க- "அமைதி"க்கால நாடகங்களைப் பார்ப்போம்.

2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையுடன் அனைத்துலக ஆதரவுடன் அனைத்துலகத்தின் மீது நம்பிக்கை தமிழர் தரப்பானது, அனைத்துலகத்தின் தெரிவாக இப்போதும் உள்ள ரணிலுடன் "யுத்த நிறுத்த ஒப்பந்தம்" செய்து கொண்டது.

தசாப்த காலங்களாக அவதிப்படும் தமிழ் மக்களுக்குத் தீர்வைப் பெற அனைத்துலகத்தின் மீது நம்பிக்கை வைத்து யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் தமிழர் தரப்பு கைச்சாத்திட்டது.

ஆனால் நடந்தது என்ன?

அந்த ஒப்பந்தத்தின் சரத்துகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என்பதுடன் அனைத்துலகமும் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்குள்ளே மறைத்து வைத்த சதிகள்தான் எத்தனை எத்தனை...

மீள ஒரு முறை அந்தச் சதிகளை நாம் பார்ப்போம். இதுவும் கூட அதே தென்னிலங்கைச் சக்திகள் அளித்த ஒப்புதல் வாக்குமூலங்களே.

"ரணிலின் உருவாக்கமே கருணா குழு- ஐ.தே.க.எம்.பி. நவீன் பெருமிதம்- பிரபா போருக்குத் தயாரானால் எதிர்க்க அமெ.-இந்தியப் படைகள் ஏற்பாடாம்"

-நுவரெலியா தேர்தல் பொதுக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நவீன் திசநாயக்க (காமினி திசநாயக்கவின் மகன்) கூறியதை 2005 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் நாள் "உதயன்" நாளேடு முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாகவே வெளியிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து

“Karuna is a product of the peace process for which the UNP had made the bulk of the contributions.”

"கருணா என்பது அமைதி முயற்சிகளின் உருவாக்கம். அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பாரிய பங்களிப்பைச் செய்திருக்கிறது"

- 2005ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாள் கொழும்பிலிருந்து வெளியாகும் "டெய்லி மிரர்" நாளேட்டின் ஊடகவியலாளர் சம்பிக்க லியனராச்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக அப்போது பதவி வகித்தவரும் தற்போதைய மகிந்த அரசாங்கத்தில் அமைச்சராக உள்ளவருமான "மிலிந்த மொறகொட"தான் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்தார்.

அதேபோல் கருணாவை நாரதர் ரணில் உருவாக்கியது தொடர்பாக "லங்கதீப" வெளியிட்ட செய்தியை "புதினம்" கடந்த பெப்ரவரி 2006 ஆம் நாள் வெளியிட்டது.

"ரணிலின் பயங்கரமான குள்ளநரித்தனத்தினாலேயே பிரபாகரன் கருணாவை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று மாவீரர் நாள் உரையின் போது அன்ரன் பாலசிங்கம் தெரிவித்திருந்தார். பிரபாகரனுக்கும் கருணாவிற்கும் இடையில் பிரச்சினைகள் இருப்பதனை சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த 2003 ஆம் ஆண்டிலேயே ரணில் அரசாங்கம் அறிந்திருந்தது. அந்தப் பிரச்சினை உச்சக்கட்டத்தையடைந்து பேச்சுவார்த்தை மேசைக்கு வரும் வரையே ரணில் அரசாங்கம் பார்த்துக் கொண்டிருந்தது. விடுதலைப் புலிகள் தயாரித்த இடைக்கால நிர்வாக சபை யோசனை பேச்சுவார்த்தைக்கு எடுக்கப்படும் நேரத்திலேயே இந்தப் பிரச்சனை பேச்சுவார்த்தை மேசைக்கு வரவிருந்தது. வடக்கிற்கும் கிழக்கிற்கும் ஒரு இடைக்கால அதிகாரம் சபை என்பது முடியாது. கிழக்கிற்கென எனக்கு தனியாகவொரு அதிகார சபை தேவை. இதற்கு எனது தலைவர் விரும்பாவிடில் நான் தலைவரிடமிருந்து விலகி கிழக்கிற்குத் தலைமை தாங்குவேன். பேச்சுவார்த்தை மேசையில் இப்படிக் கூறுவதற்காக கருணா காத்திருந்தார். அப்படி நிகழ்ந்திருந்தால் முழு உலகத்தின் முன்பாக பேச்சுவார்த்தை மேசையில் விடுதலைப் புலிகள் இரண்டாக பிளவுப்பட்டிருப்பார்கள்."

-என்று "லங்காதீப" எழுதியது உண்மையில்லாமல் இல்லை.

ஏனெனில்

"ரணிலுக்கு 8 இலட்சம் தமிழ் மக்கள் மட்டும் வாக்களித்திருந்தால் அனைத்துலகத்தின் முன்பாகவே அவர்களின் ஈழக் கனவைத் தகர்த்திருப்போம்" என்று ஜூலை 31, 2007 ஆம் நாள் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல பகிரங்க ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.

ஆக அமைதிப் பேச்சுக்கள் என்பது அல்லல்படும் தமிழர்களுக்குத் தீர்வைத் தருவதற்கு அல்ல. அரசியல் சதிகளை அரங்கேற்றும் விளையாட்டுக் களம் போலும்!

தமிழ் மக்களுக்கு தலைமைத்துவமாக உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு அமைதிப் பேச்சுகள் எனும் முட்டுக்கட்டையும் போட்டு அதே தமிழர் தரப்பை எந்தந்த வகையில் பலவீனப்படுத்தலாம் என்பதற்காகவும் ரணில் எனும் துருப்புச் சீட்டை தற்போதும் அனைத்துலகம் கையில் எடுத்துள்ளது.

மனித உரிமைகளுக்காகவும் நீதி நியாயங்களுக்காகவும் கண்ணீர் விட்டு கசிந்துருகும் இந்த அனைத்துலக சமூகமானது, பாதிக்கப்படுகிற மக்கள் விரும்புகிற ஒரு தீர்வை விழுங்கிச் செரிமானிப்பதில்தான் என்ன தயக்கமோ
http://www.eelampage.com/?cn=32865

Wednesday, August 1, 2007

ஹனீபிடம் மன்னிப்பு கேட்க முடியாது அவுஸ்திரேலிய பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்ப

ஹனீபிடம் மன்னிப்பு கேட்க முடியாது அவுஸ்திரேலிய பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு
[01 - August - 2007] [Font Size - A - A - A]
இந்திய டாக்டர் ஹனீபிடம் மன்னிப்புக் கேட்க முடியாது என்று பிடிவாதமாகக் கூறியுள்ளார் அவுஸ்திரேலியப் பிரதமர் ஜோன் ஹொவார்ட்.

பயங்கரவாதச் சதியில் தொடர்பிருப்பதாக ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டி நீதிமன்றம் பிணை வழங்கிய பின்னரும் தொடர்ந்து சிறை வைக்க குறுக்கு வழியாக விசாவை இரத்துச் செய்து அவுஸ்திரேலிய அரசால் 4 வாரங்களாக அலைக்கழிக்கப்பட்ட இந்திய டாக்டர் ஹனீபிடம் மன்னிப்புக் கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார் ஜோன் ஹொவார்ட்.

பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை அவுஸ்திரேலிய அரசு விலக்கிக் கொண்டதைத் தொடர்ந்து டாக்டர் ஹனீப் ஞாயிற்றுக்கிழமை தாயகம் திரும்பினார். சுமார் ஒரு மாத கால போராட்டத்துக்குப் பின்னர் தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ள ஹனீப் அவுஸ்திரேலிய மத்திய காவல் துறையாலும் அந்நாட்டு அதிகாரிகளாலும் தான் பாதிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிய அரசுக்கு ஹனீபிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய கடமை உள்ளது என்று வலியுறுத்தியுள்ளார் அவரது வழக்கறிஞர் பீற்றர் ரூசோ.

ஆனால், அப்பாவியான ஹனீப் அவுஸ்திரேலிய அரசின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற கருத்தையே மறுத்துள்ளார் ஹொவார்ட்.

பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினைகளைக் கையாளும்போது தவறு ஏற்படுவது தவிர்க்க இயலாதது. எனவே, டாக்டர் ஹனீபிடம் அவுஸ்திரேலிய அரசு மன்னிப்புக் கேட்காது. மன்னிப்புக் கோருவதை விட இதுபோன்ற பிரச்சினைகளை எச்சரிக்கையாகக் கையாள்வது சிறந்தது.

அவுஸ்திரேலிய அரசின் நடவடிக்கைகளால் டாக்டர் ஹனீப் பாதிக்கப்படவில்லை. புதிதாகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கையாள்வதில் ஏற்பட்டுள்ள முதல் கோணல் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு சர்வதேச அளவில் உள்ள நன்மதிப்பும் பாதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார் ஹொவார்ட்.

டாக்டர் ஹனீப் மீது தொடரப்பட்ட பயங்கரவாதச் சதி உடந்தை வழக்கில் அவுஸ்திரேலிய நீதிமன்றம் பிணை வழங்கியவுடன் அவரது விசா இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அனைத்துத் தரப்பினராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட இந்த நடவடிக்கையை மனமுவந்து ஆதரிப்பதாக ஜோன் ஹொவார்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

நடத்தை அடிப்படையில் ஹனீபின் விசாவை இரத்துச் செய்யும் முடிவை எடுத்ததற்குக் காரணமான கூடுதல் தகவல்களை பொதுமக்களுக்கு வெளியிட உள்ளதாக அவுஸ்திரேலிய குடியமர்வுத் துறை அமைச்சர் கெவின் அண்ட்ரூஸ் திங்கட்கிழமை கூறியுள்ளார். டாக்டர் ஹனீப் விவகாரத்தைக் கையாண்ட முறைக்காக மற்ற அனைவரையும்விட மிகக் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருப்பவர் அண்ட்ரூஸ்.

விசா இரத்துச் செய்யப்பட்டது தொடர்பாக ஹனீப் தரப்புத் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே அரசே ஆய்வு நடத்தி பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை விலக்கிக் கொண்டதைத் தொடர்ந்து ஹனீபுக்கு எதிரான வழக்கு பிசுபிசுத்துப் போய்விட்டது. அப்படிப்பட்ட நிலையிலும் ஹனீபுக்கு மீண்டும் விசா வழங்க மறுத்துவிட்டார் அண்ட்ரூஸ்.

நடத்தை அடிப்படையிலேயே ஹனீபின் விசா இரத்துச் செய்யப்பட்டுள்ளது. நியாயமான சந்தேகம் எழும் சூழ்நிலையில் சட்டம் வழங்கும் வழிமுறையின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தவர்களுடன் தொடர்புகள் வைத்திருப்பதாக ஹனீப் மீது சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக இதுவரை வெளியிடப்படாத தகவல்கள் தெரியவரும்போது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சூழ்நிலைகளை மக்களே புரிந்து கொள்வர்.

இந்த விவகாரம் தொடர்பாக எனக்குள்ள சந்தேகங்களை போக்கும்படியாக (தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில்) ஹனீப் எதுவும் கூறிவிடவில்லை என்று கூறியுள்ளார் அண்ட்ரூஸ்.

இதனிடையே ஹனீப் விவகாரத்தில் அளித்து வந்த ஆதரவை எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தற்போது விலக்கிக் கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து அண்ட்ரூஸுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

ஹனீபுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பிருப்பதாக அமைச்சர் (அண்ட்ரூஸ்) இன்னும் சந்தேகிக்கும் சூழ்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை இந்தியா செல்ல அனுமதித்தது ஏன் என்ற கேள்வி எழுப்பியுள்ள தொழிலாளர் கட்சி இது தொடர்பாக நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளும் இலங்கைப் பணிப் பெண்களும

மத்திய கிழக்கு நாடுகளும் இலங்கைப் பணிப் பெண்களும்
சட்டத்தரணி மரினா மன்சூர்

இன்று நம் நாட்டில் எங்கும் பரவலாகப் பேசப்படும் விடயம் சவூதி அரேபிய நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிசானா நபீலைப் பற்றியதே. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மூதூர் எனப்படும் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதே நிரம்பிய ரிசானா எனப்படும் இவ்விளம் பெண், இன்று சவூதி அரேபிய மண்ணிலே 4 மாதக் குழந்தையின் மரணத்திற்கு காரணமானவர் என்ற குற்றச்சாட்டில் அந்நாட்டு நீதிமன்றத்தினால் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு சிறைக் கைதியாகி உள்ளார்.

இப்பெண்ணின் பரிதாபக் கதை இலங்கையை மட்டுமன்றி, சர்வதேச நாடுகளையும் உலுக்கி விட்டிருக்கிறது. இப்பெண்ணை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட அதேவேளை, சர்வதேச அமைப்புகள் பலவும் குரல் கொடுக்க முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக, ஆசிய மனித உரிமைகள் குழுவின் பங்களிப்பு மகத்தானது.

மத்திய கிழக்கு அரபு நாடுகளின் குற்றவியல் சட்டமானது, பிரெஞ்சு சட்டத்தினையும் ஷரிஆ சட்டத்தினையும் அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் கொலை, ஆயுதமேந்திய கொள்ளை, போதைப்பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட குற்றங்கள் போன்வற்றிற்கு அக்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலோ அல்லது குற்றம் சுமத்தப்பட்டவரே குற்றத்தை ஒப்புக்கொண்டாலோ தீர்ப்பானது மரணதண்டனையே. இச்சட்டத்தின் கீழான தீர்ப்பிற்குட்படுவது இலங்கையர்களுக்கு புதிதல்ல. ஏற்கனவே, இலங்கையிலிருந்து தொழில் நிமித்தம் சவூதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளுக்குச் சென்றவர்கள் மேற்குறிப்பிட்ட தண்டனைக்கு உள்ளானது யாவரும் அறிந்ததே.

இந்நிலையில், ரிசானா நபீலுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனைத் தீர்ப்பு இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதென்றால் அதற்குத் காரணங்கள் பல. அவற்றை விரிவாக ஆராய முன் நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி, வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தேடிச் செல்லும் எத்தனை ரிசானாக்கள் வெவ்வேறு விதமான துன்பங்களையும் தண்டனைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதுவே.

ஒவ்வொரு வருடமும் சுமார் இரண்டு இலட்சம் இலங்கையர் மத்திய கிழக்கிற்கு வேலை வாய்ப்புத் தேடிச் செல்கின்றனர். இவர்களில் 60 வீதமானோர் வீட்டுப் பணிப் பெண்கள். இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்பவர்கள் அனைவரும் துன்பம் அனுபவிக்கின்றனர் என்பதல்ல. சிலர் தமது இரண்டு வருட சேவைக்காலத்தின் போது எவ்வித சிரமங்களுக்கோ, துன்புறுத்தலுக்கோ உள்ளாகாது சேவைக்கால சம்பளத்தினையும் மாதா மாதம் பெற்றுக் கொண்டு நலமே நாடு வந்து சேருகின்றனர். இன்னும் சிலர் இரண்டு வருட சேவைக்காலத்திற்குச் சென்றாலும் கூட, தாங்கள் பணிபுரியும் வீட்டுச் சொந்தக்காரர்களின் நம்பிக்கையையும் அபிமானத்தையும் பெற்று பல வருடகாலம் ஒரே வீட்டில் சேவை புரிந்து மிகச் சிறந்த நிலையில் உள்ளனர்.

ஒரு சிலரின் நிலை இவ்வாறிருக்க, மற்றைய சிலரின் நிலையோ மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ளது. மாதக் கணக்காக மாத்திரமன்றி, வருடக் காணக்காக சம்பளம் பெறாதவர்களின் தொகை அதிகம். வீட்டு வேலைகளில் ஏற்படும் சிறு தவறுகளுக்காக வேதனை தரும் தண்டனைகளை வீட்டுச் சொந்தக்காரர்களினால் அனுபவிக்கும் பணிப் பெண்களின் கதை சோகம். இவற்றை எல்லாம் விட பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் பெண்களின் நிலையோ சொல்லில் அடங்காதவை.

இவ்வாறான நிலைமைக்கு யார் காரணம்? வறுமையா, அல்லது அவ்வறுமையை விரட்ட வேண்டி திருமணம் முடியாத பெண்களைக்கூட எவ்வித தயக்கமும் இன்றி வேலை தேடி வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் அப்பெண்ணின் குடும்பத்தினரா? அல்லது தங்களின் உழைப்பிற்காக சுயநலமாக செயற்படும் சில வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களா? அதுவும் இல்லை என்றால், தனது நாட்டுக்கு அதிகளவு வருமானத்தை ஈட்டித்தரும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையின் மூல காரணமான இப்பணியாட்களின் நலனைப் பாதுகாக்க போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத அரசாங்கமா? மேற்கூறப்பட்ட காரணங்கள் அனைத்துமே ஒன்றாக பொறுப்பேற்க வேண்டுமே தவிர, ஒரு தனி நபரையோ, நிறுவனத்தையோ அல்லது அரசாங்கத்தையோ தனிப்பட்ட முறையில் குற்றம் சொல்வது முறையல்ல.

மேற்குறிப்பிட்ட காரணங்களில் அடங்குபவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் கடமையை உணர்ந்து அதற்கேற்ப செயற்படுவார்களாயின், மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிபுரியச் செல்லும் நம் நாட்டுப் பெண்கள் அந்நாடுகளில் முகம் கொடுக்க நேரிடும் பிரச்சினைகள் கணிசமான அளவில் குறைவடையும்.

உதாரணமாக, ஒரு பெண்ணை வெளிநாட்டிற்கு தொழில் புரிய அனுப்பும் போது அப்பெண்ணின் குடும்பத்தினராலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராலும் கருத்திற்கொள்ள வேண்டிய முக்கிய விடயங்களில் ஒன்று, அப்பெண்ணின் வயதும் பக்குவத்தன்மையுமாகும். அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் வயது இருபத்து இரண்டாக இருந்தாலும் நடைமுறையில் அது பின்பற்றப்படுவதில்லை. அறிமுகமே இல்லாத ஒரு தேசத்தில், முன் பின் அறிந்திராத மக்கள் மத்தியில், இதுவரை கேட்டிராத மொழி, பழக்க வழக்கங்களுக்கு நடுவே ஒரு பெண் தொழில்புரியப் போகின்றாள் என்றால் அதற்கு எந்தளவு மனப் பக்குவம் வேண்டும் என்று ஊகிக்க முடியும். இருபத்து இரண்டு வயதில் கூட மனதளவில் பக்குவப்படாத பெண்கள் பலபேர் நம் நாட்டில் இருக்கின்றபோது மிகவும் வயது குறைந்த பெண்களை அவர்களின் வயதைக் கூட்டி பொய்ச் சான்றிதழ் கொடுத்து வெளிநாட்டு வேலைக்கு அனுப்பிவைப்பது மிகப் பெரும் தவறாகும். இவ்வாறான மனப்பக்குவத்தைக் கருத்திற்கொண்டுதான் இந்தியா போன்ற நாடுகள் தொழிலுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் தம் பெண்களின் குறைந்த வயது முப்பத்தைந்து என நிர்ணயித்துள்ளன.

அடுத்ததாக கருத்திற்கொள்ள வேண்டிய விடயம், தொழில் புரியச் செல்லும் நாட்டு மக்களது வாழ்க்கைத் தரம். அபிவிருத்தி அடைந்துவரும் நாடான இலங்கையில் நகரங்களை விட கிராமங்களே அதிகம். இக்கிராமங்களில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களில் இருந்து வெளிநாட்டிற்கு வேலை தேடிச் செல்லும் பெண்களில் பலர் கொழும்பிற்கே ஓரிரு தடவைகள் தான் வந்திருப்பர். அது கூட வெளிநாடு செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதற்காகவே இருக்கும். இப்படிப்பட்ட ஒரு பெண் மத்திய கிழக்கு நாடுகளின் பல மாடிகளைக் கொண்ட மிக விசாலமான ஆடம்பர இல்லங்களுக்கு பணிபுரியச் சென்றதும் உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் பல பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றாள்.

ஓரிரு வாரங்களிலேயே வேலை செய்ய முடியாமல் சோர்ந்து போகின்றனர். இதன் விளைவு அவ்வீட்டுச் சொந்தக்காரர்களின் கோபத்துக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகுதல். இந்நிலைமையைத் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் ஒன்று, அந்நாடுகளைப் பற்றியும் அந்நாட்டு மக்களது வாழ்க்கை முறைகளைப் பற்றியும் அங்கு பணிபுரியச் செல்வோருக்கு தெளிவான விளக்கத்தை அளித்தல்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிபுரியப்போகும் பெண்களுக்கான பயிற்சிநெறி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் அளிக்கப்படுகின்றது. இரண்டு வாரங்களுக்கு வழங்கப்படும் இப்பயிற்சிநெறியின் போது சமையல் முறை, நவீன மின் இயக்கக் கருவிகளின் மூலம் மேற்கொள்ளப்படும் வீட்டுப் பணிகள், அன்றாட வாழ்க்கையில் பிரயோகிக்கும் அரபு வார்த்தைகள் போன்றன பிரதானமாக பயிற்றுவிக்கப்படுகின்றன. இப்பயிற்சி நெறியானது மேலும் மேம்படுத்தப்பட வேண்டும். இரண்டு வருட ஒப்பந்தத்தில் பணிபுரியச் செல்லும் இப்பெண்களுக்கு இரண்டு வாரப் பயிற்சி போதுமானதல்ல. பயிற்சிக்காலத்தைக் கூட்டுவதோடு முக்கியமான சில விடயங்கள் இப்பயிற்சி நெறியில் சேர்த்துககொள்ளப்படல் வேண்டும். அவைகளில் ஒன்று, மேற்கூறப்படட் முறையிலான அந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறை பற்றிய விளக்கவுரையாகும். இவ்விளக்கமானது திரைக் காட்சிகளின் மூலமான விளக்கமாக இருத்தல் அவசியம். அடுத்ததாக பயிற்சி அளிக்கப்பட வேண்டிய மிக முக்கிய விடயம், தற்பாதுகாப்பினைப் பற்றியதாகும். தொழில்புரிவதற்காகச் செல்லும் நாட்டில் தனது உடலுக்கோ, உயிருக்கோ அல்லது தன் உடைமைகளுக்கோ ஏற்படக்கூடிய தீங்குகள், அவை ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள், அவ்வாறான சந்தர்ப்பங்களில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் பற்றிய விரிவான விளக்கமும் அறிவுறுத்தல்களும் பயிற்றுவிக்கப்படல் மிக அவசியமாகும்.

அந்நிய நாட்டில் தனக்கு ஒரு அநீதி இழைக்கப்படும் போது, தான் நாட வேண்டிய ஒரே இடம் அந்நாட்டில் இருக்கும் தனது நாட்டுத் தூதுவராலயம் என்பதனை வெளிநாடு செல்லும் ஒவ்வொருவரும் மனதில் வைத்திருத்தல் வேண்டும்.

அநேகமான மத்திய கிழக்கு நாடுகளில் அங்கு வேலைக்குச் செல்பவர்களின் கடவுச்சீட்டானது அவர்களது தொழில் தருநர்களினால் எடுத்துவைத்துக் கொள்ளப்படுவது வழக்கம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அக்கடவுச்சீட்டின் பிரதி ஒன்றை தன்வசம் வைத்திருப்பது வேலைக்குச் செல்பவர்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும். கடவுச்சீட்டின் பிரதி மாத்திரமன்றி, தனது தொழில் சம்பந்தமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களால் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களின் பிரதிகளையும் தன்வசம் பாதுகாப்பாக வைத்திருப்பதோடு மாத்திரமல்லாது, தனக்கு ஏதும் தீங்கு அல்லது அநீதி இழைக்கப்பட்டு அதன் காரணமாக அந்நாட்டிலுள்ள தனது தூதுவராலயத்திற்குப் பாதுகாப்பு தேடிச் செல்கையில், மேற்குறிப்பிட்ட பிரதிகளை தன்வசம் எடுத்துச் செல்லல், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கு இன்றியமையாத ஆவணங்களாக அமையும்.

தொழில் நிமித்தம் தன் நாடு விட்டு பிறநாடு செல்லும் தொழிலாளியின் நலன்களை அந்நாட்டிலே பாதுகாக்கவென பல சர்வதேச சட்டங்கள் உள்ளன. சர்வதேச தொழிலாளர் ஒன்றியம் (ஐஃ?), சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International)போன்றவை இவற்றிற்காகவே செயற்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பாதுகாப்பு உயர்சபையின் செயலாளர் நாயகத்தினால் 1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினெட்டாம் திகதி வரையப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட ஆவணமானது வெளிநாடுகளுக்கு தொழில்புரியச் செல்பவர்களின் நலனை மாத்திரமல்லாது, அவர்களது குடும்ப அங்கத்தவர் நலனையும் சகல விதத்திலும் பாதுகாப்பதாக அமைந்திருக்கின்றது.

வெளிநாடுகளில் தொழில்புரியும் தன் நாட்டுப் பிரஜைகளுக்கு ஏதேனும் தீங்கு அல்லது அநீதி வேலைபுரியும் நாட்டிலே இழைக்கப்பட்டால் அதற்கெதிராக தன் பிரஜை சார்பில் சட்டரீதியாக பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் வாதாடுவதற்கும் தன் பிரஜையின் உரிமைகள் அல்லது சலுகைகள் மறுக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அது தொடர்பாக அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும் தன் பிரஜைக்கு நீதியான பாரபட்சமற்ற தீர்ப்பு அக்குறிப்பிட்ட நாட்டிலே கிடைக்காது என்று கருதுகின்ற பட்சத்தில், குறிப்பிட்ட வழக்கினை சர்வதேச நீதிமன்றத்தில் கேட்டுரைக்கும்படியான சகல விதமான உரிமைகளையும் அனைத்து நாடுகளுக்கும் வழங்கி இருக்கும், வியன்னா சாசனம் எனப்படும் ஆவணம் 1963 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பைத் தேடிச் செல்வோருக்கு பாதுகாப்பு அளிக்க பல சட்டங்களும் விதிமுறைகளும் அமுல்படுத்தப்பட்டிருக்கையில், அவற்றைப் பற்றிய அறிவினைப் பெற்று தனிநபர்கள் உட்பட அனைத்துத்துறைகளிலும் உள்ள அதிகாரிகளும் தம் கடமைகளை செவ்வனே செய்வார்களாயின், எதிர்காலத்தில் ரிசானாக்கள் போன்ற அப்பாவிப் பெண்களின் பரிதாப நிலை தொடராமல் தடுக்கலாம்.