Friday, October 17, 2008

யுத்தத்தை நிறுத்திற்குத் தயார் இல்லை என மகிந்த இந்தியாவுக்கு செய்தி!

யுத்தத்தை நிறுத்திற்குத் தயார் இல்லை என மகிந்த இந்தியாவுக்கு செய்தி!
வெள்ளி, 17 அக்டோபர் 2008, 13:07 மணி தமிழீழம் [கொழும்புச் செய்தியாளர் மயூரன்]
தமிழக முதல்வர் மு. கருணாநிதி மற்றும் விடுதலைப் புலிகள் சார்பு அரசியல்வாதிகள் கோரியிருக்கின்றமைபோல வன்னி இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவோ, யுத்தநிறுத்தத்தை நடைமுறைப்படுத்தவோ இலங்கை அரசு தயாரில்லை. இதனை சிறி லங்கா ஜனாதிபதி இந்தியாவுக்கு அறிவித்திருக்கின்றார் என சிறி லங்கா அரசின் உத்தியோகபூர்வ ஊடகமான இலங்கை வானொலி இன்று காலை அறிவித்தது.

தன்னையும், தனது பாதுகாப்புச் செயலாளரையும், முப்படைத் தளபதிகளையும் கொல்வதற்கு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் தற்கொலைத் தாக்குதல் நபர்களை அனுப்பியிருக்கையில், தனது அரசு யுத்தநிறுத்தம் ஒன்றைச் செய்ய எண்ணவில்லை என்று ஜனாதிபதி கூறினார்.

இரண்டு வாரங்களுக்குள் வன்னி இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி, யுத்த நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி விடுத்த நிபந்தனைக்கு பதிலளிக்கும் விதமாகத் தாம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஜனாதிபதி இப்படித் தெரிவித்துள்ளார்.

தற்கொலைத் தாக்குதல் நபர்கள் கொழும்புக்குள் ஊடுருவி இருக்கையில் அவர்களின் இலக்கு இலகுவாக நிறைவேறுவதற்கு உதவும் வகையில் சிறி லங்கா அரசு வன்னி இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவேண்டுமா என்று ஜனாதிபதி இந்திய அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். 

தமிழ்நாடு அரசியல் வாதிகளால் வன்னிப் படை நடவடிக்கையை நிறுத்தச் செய்யமுடியாது என்பதை அரசு உறுதிபடத் தெரிவிக்கின்றது. ஆகவே விடுதலைப்புலிகளின் சதித்திட்டத்திற்குப் பலியாக வேண்டாம் என சிறி லங்கா அரசு இந்திய அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறது. 

வன்னியில் இடம்பெயர்ந்தோருக்கான நிவாரணத்தை வழங்குவதற்கு இயலுமான எல்லா நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது என்பதையும் அரசு மேலும் தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு இலங்கை வானொலியின் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டது.

Wednesday, October 15, 2008

உபகண்டத்தையே அதிரவைக்கும் தமிழக தீர்மானம்:

உபகண்டத்தையே அதிரவைக்கும் தமிழக தீர்மானம்: அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கம் நன்றி
[வியாழக்கிழமை, 16 ஒக்ரோபர் 2008, 05:51 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிகள் உபகண்டத்தையே அதிரவைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன என்று அமெரிக்க இலங்கை தமிழ்ச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
அமெரிக்க இலங்கை தமிழ் சங்கத்தின் அறிக்கை:



எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழக மக்களே, அரசியற் தலைவர்களே, மாண்பிமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களே!

முதற்கண், தமிழீழத் தமிழர்களின் சார்பில், அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கத்தினராகிய நாங்கள், எம் இதயங்களின் ஆழத்திலிருந்து உங்களுக்கு எம் நன்றியையும், மரியாதையும் தெரிவித்துக்கொள்ள அனுமதியுங்கள்.

பாசத்திற்குரியவர்களே!

நீறுபூத்த நெருப்பென உள்ளேயே கனன்றுகொண்டிருந்த நீங்கள், குமுறும் எரிமலையாக வெடித்துவிட்டீர்கள். நீண்ட இடைவெளிக்குப் பின்னர், ஒன்றாகக் கூடி - ஒருமித்த குரலில் - பலம் வாய்ந்த அரசியல் வார்த்தைகளில் - தமிழீழத் தமிழர்கள் மீது உங்களுக்கு இருக்கும் அன்பையும், அவர்களது சுபீட்சமான அரசியல் எதிர்காலத்தின் மீது உங்களுக்கு இருக்கும் அக்கறையையும் வெளிப்படுத்திவிட்டீர்கள்.

முதல்வர் கலைஞர் ஐயா அவர்கள் கூட்டிய அனைத்துக்கட்சி மாநாட்டில் திரண்டு, வரலாற்றுத் தீர்மானங்களை நிறைவேற்றி, வெறும் சொற்களால் மாத்திரமன்றி, காத்திரமான செயற்பாட்டு முடிவுகளினாலும் உப-கண்டத்தையே அதிர வைக்கும் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டீர்கள்.

கட்சிகளின் வரம்புகளைத் துறந்து, அரசியலின் முரண்பாடுகளை மறந்து, மாநிலத்தின் சுவர்களைக் கடந்து, நாட்டின் எல்லைக்கும் அப்பால் "இனத்தின் உணர்வால் இறுகப் பிணைக்கப்பட்ட தமிழர்கள் நாம்" என்பதை இந்த உலகிற்கு முரசறைந்து சொல்லிவிட்டீர்கள். "தேர்தல் வெற்றியை நோக்கமாகக் கொண்ட வெறும் அரசியல் விளையாட்டு இது" என்று எள்ளி நகையாடியவர்களின் முகங்களில் அவமானத்தைப் பூசி விட்டீர்கள்.

மாண்புமிகு முதல்வர் கலைஞர் ஐயா அவர்கள், ஒட்டுமொத்த உலகத் தமிழினத்தின் தலைவனாக - தமிழினத்தின் நிபந்தனையற்ற காவலனாக - அவரது உண்மையான அவதாரத்தை எடுத்து விட்டார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க முதற்படியை எடுத்துள்ள நீங்கள், தமிழீழ மக்களின் தற்காலிகப் பிரச்சிக்கான தீர்வை நோக்கி அரசியல் நகர்வுகளை ஆரம்பித்துவிட்டீர்கள். தமிழர்களுக்கு எதிரான போரை நிறுதவும், அவர்களுக்கு உணவும், மருந்தும் போய்ச் சேரவும், வாழும் இடங்களில் அவர்கள் நிம்மதியாய்க் குடியமரவும் - உருப்படியான காரியங்களைச் செய்யுமாறும், சிறிலங்கா அரசுக்கான அனைத்து இராணுவம்- சார் உதவிகளை நிறுத்துமாறும் இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் போட்டிருக்கும் நீங்கள், ஈழத் தமிழ் மக்களுக்கு ஓர் இடைக்கால நிம்மதியைக் கொடுத்திருக்கின்றீர்கள்.

தமிழக மக்களின் குரலும், தமிழகத் தலைவர்களது செயலும், தமிழகத்தின் சக்தியும் -

- தமிழீழ மக்களுக்கு சுதந்திரத்தின் ஒளியைக் காட்டியிருக்கின்றது!

- "தமிழகம் எமக்காகப் பொங்கி எழாதா?.. தமிழகத் தலைவர்களும், கலைஞர் ஐயா அவர்களும் எமக்கு விடுதலையைப் பெற்றுத் தர மாட்டார்களா?.." என்று ஏங்கியிருந்த தமிழீழ மக்களுக்கு நம்பிக்கையையும், துணிவையும் தந்திருக்கின்றது.

- "தமிழர்களை நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஏனென்று கேட்க ஆளே இல்லை!" என்று இறுமாந்திருந்த சிங்களப் பேரினவாதத்திற்கு சினத்தையும் அச்சத்தையும் ஊட்டியிருக்கின்றது.

- எல்லாவற்றுக்கும் மேலாக, ஈழத் தமிழர்களின் அழிவை - தமது சொந்த நலன்களுக்காக - கைகட்டிப் பார்த்து நிற்கும் அனைத்துலக சமூகத்திற்கு அதிர்ச்சியளித்திருக்கின்றது.

வரலாற்று மாற்றங்கள் அரங்கேறுகின்றன. நம்புதற்கரிய திருப்பங்கள் நிகழ்கின்றன. ஈழத் தமிழர்களுக்காகத் தனது நாடாளுமன்ற இருக்கைகளையே பணயம் வைக்கின்றது தமிழகம். நிம்மதிப் பெருமூச்சுவிட்டு, மகிழ்ச்சிக் கடலில் மூழ்கித் தவிக்கின்றது தமிழீழம். பெருமிதத்தோடும், திமிரோடும் நிமிர்கின்றான் தமிழன்.

எமது அன்பான தமிழகத்து உறவுகளே!

தமிழீழ மக்களின் மீது உங்களுக்கு இருக்கும் எல்லையற்ற பாசத்தையும், அக்கறையையும், அவர்களுக்காக நீங்கள் சந்தித்த இடர்களையும் நாம் அறிவோம். ஆட்சியை இழக்கும் சூழல் வந்த போது, சொந்தக் குழந்தைகளுக்காகத் துன்பங்களைத் தாங்கும் ஒரு தந்தையாக அதைப் பொறுத்துக்கொண்ட கலைஞர் ஐயாவையும், சிறையில் வாடும் துயரம் நிகழ்ந்த போது, சொந்தச் சகோதரர்களுக்காக அதையும் ஏற்றுக்கொண்ட தலைவர்களையும், இன்னும் எத்தனையோ வழிகளில் எமது சுமைகளைச் சுமந்த அனைவரையும் நாம் என்றும் மறவோம். எங்கள் நெஞ்சங்களின் மிகச்சிறந்த இடமொன்றில், நன்றியுணர்வுடன் உங்களை நாம் அமர்த்தியிருக்கின்றோம்.

தமிழினத்தினது வரலாற்றின் மிகவும் உச்சமான ஒரு காலத்தில் நாம் எல்லோரும் இன்று இருக்கின்றோம். சரியான திசையில் தன்னை நகர்த்திச் செல்வதற்காக - காலத்திற்குக் காலம் - ஒப்பற்ற மனிதர்களை வரலாறு பிறப்பிக்கின்றது. அவர்களைத் தான் நாம் வரலாற்று மனிதர்கள் என்கின்றோம். அத்தகைய ஒரு மகோன்னதப் பிறப்பை கலைஞர் ஐயா அவர்களுக்குக் கொடுத்த சரித்திரம், இப்போது அவரை மிகச்சரியான இடத்தில் அமர்த்தியிருக்கின்றது.

தென்னாசியாவையே அசைக்கும் வல்லமையை அவருக்குக் கொடுத்திருக்கின்றது. அவரது அறிவு ஞானமும், அரசியற் செல்வாக்கும் தமிழர்களுக்கென்று ஒரு தனித் தேசத்தை உருவாக்கி, தமிழீழத்தில் துன்பத்தில் உழலும் எம் உறவுகளுக்கு நிரந்தர விடுதலையைப் பெற்றுத்தரும் சக்தி வாய்ந்தவை. தமிழீழ மக்களின் சுதந்தரத்திற்காக அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைத்து, அவருக்குப் பலம் சேர்த்து,

அவரை உற்சாகப்படுத்தி, தமிழினத்தைத் தாங்கும் தூண்களக நீங்கள் எல்லோரும் விளங்க வேண்டும் என்று நாம் தாழ்மையுடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

மேலும், தமிழினத்தின் நிரந்தரக் காவலனாக கலைஞர் ஐயா என்றும் இருக்கின்றார் என்பதை, தமிழினத்தின் பகைவர்களுக்கும், இந்த உலகிற்கு அவர் உணர்த்த வேண்டும் என்றும் வேண்டிக்கொள்ளுகின்றோம்.

அன்பானவர்களே!

இப்போது - தமிழீழ மக்களுக்கு ஓர் தற்காலிக நிம்மதியைக் கொடுக்க ஆணித்தரமான முயற்சிகளை எடுத்துள்ள நீங்கள், சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து அவர்கள் நிரந்தர விடுதலை பெறவும் ஆவன செய்ய வேண்டும். அவர்களுடைய வீடுகளை ஆக்கிரமித்துள்ள சிங்களப் படைகளை வெளியேற்றி, அந்த மக்கள் தமது சொந்த ஊர்களுக்குச் சென்று நிரந்தரமாகக் குடியேறி, சுதந்திரமக வாழ ஆவன செய்ய வேண்டும்.

"சிங்களவர்களோடு சேர்ந்து வாழ முடியாதெனின், தமிழர்கள் பிரிந்து போவதே சரி" என்பதே கலைஞர் ஐயா அவர்களது தனிப்பட்ட நிலைப்பாடும், தமிழகத் தலைவர்களாகிய உங்களில் பலரது வெளிப்படையான நிலைப்பாடுமாகும். உங்களது அந்த நிலைப்பாட்டுக்கு ஓர் அரசியல் அங்கீகாரத்தை நீங்கள் கொடுக்கவேண்டும் என்றும், தமிழீழத் தமிழர்களின் துன்பங்களுக்கு "தமிழீழத் தனியரசு" தான் சரியான ஒரே தீர்வு என்ற ஒரு தீர்மானத்தை தமிழக மக்களவையிலே நிறைவேற்ற வேண்டும் என்றும், தமிழீழ மக்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது இந்தியாவில் இருக்கும் தடையை நீக்கி, ஈழத் தமிழர்கள் தம்மைத் தாமே ஆள வழி பிறக்கச் செய்ய வேண்டுமென்றும் பணிவன்புடன் வேண்டிக்கொள்ளுகின்றோம்.

நீங்கள் எல்லோரும் இப்போது எடுத்துள்ள முயற்சிகள் ஒர் ஆரம்பம் தான் என்பதை நாம் அறிவோம்: தமிழீழ மக்களுக்கு நிரந்தரமான விடுதலையைப் பெற்றுத்தரும் வரை தமிழகம் ஓயாது என்பதையும் நான் அறிவோம்.

ஒரே இரவில் அதிசயங்களைப் படைக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள் நீங்கள்: நம்பிக்கையோடு காத்திருக்கின்றது ஈழத் தமிழினம்.

நன்றி கலந்த மரியாதையுடன்,
இலங்கை தமிழ் சங்கம் - ஐக்கிய அமெரிக்கா
மின்னஞ்சல் : president@sangam.org

என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WAR

இராணுவத்திற்கு ஆதரவு, அரசாங்கத்திற்கு எதிர்ப்பு - சஜித் பிரேமதாஸ
புதன், 15 அக்டோபர் 2008, 08:04 மணி தமிழீழம் [கொழும்பு நிருபர் மயூரன்]
நாட்டை கூறுபோடும் பயங்கரவாதிகளுக்கு எதிராக எமது பாதுகாப்புப் படையினர் பாரிய பதிலடி கொடுத்த வண்ணமுள்ளனர். நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்து யுத்த களத்தில் போரிடும் முப்படையினருக்கு எமது ஆசீர்வாதமும் ஒத்துழைப்பும் எப்போதுமே உண்டு. 

ஆனால் யுத்தத்துக்கு தூபம் போட்டு அதன் மூலம் பிழைப்பு நடத்த நினைக்கும் இந்த அரசாங்கத்தின் கபட நாடகத்துக்கு நாம் ஒரு போதும் இடங்கொடுக்க மாட்டோம், இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். 

ஹிரியால தேர்தல் தொகுதியில் செயற்படுத்தப்படவுள்ள "ஜன சுவய'' அபிவிருத்தித் திட்டம் குறித்து அப்பகுதி மக்களுக்கு தெளிவுறுத்தும் கூட்டம் ஒன்று இப்பாகமுவ நகரில் அண்மையில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரை நிகழ்த்துகையில்,இன்று சூரியன், சந்திரன், நட்சத்திரம் ஆகியவற்றை உவமைகளாக காட்டி அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளே சிறி லங்காவில் காணப்படுகின்றனர். 

அவர்களுக்கு தேவைப்படுவது மக்களை முட்டாள்களாக்கி அரச பதவிகளில் அமருவதாகும். ஆனால் நானோ உண்மையை பேசி நேரிய அரசியல் பாதை வழியாக செல்லவே விரும்புகின்றேன். மக்களுக்கு பசப்பு வார்த்தைகளையும் பொய்யான உறுதி மொழிகளையும் வழங்கி அவர்களை ஏமாற்றுகின்ற அரசியல் அதிகாரமே இப்போது எமது நாட்டில் மேலோங்கியுள்ளது. 

ஆனால் எமது மக்கள் தற்போது இவ்வாறான போலியான அரசியல்வாதிகளை இனங்கண்டுள்ளார்கள். மக்களை ஒவ்வொரு நாளும் ஏமாற்றுவதென்பது முடியாத காரியம். நாட்டின் பாதுகாப்பு குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கதைக்கின்றனர். எனினும் எமது இராணுவ வீரர்கள் தமது மனைவி, பிள்ளைகள், பெற்றோர்களிடமிருந்து விடைபெற்று யுத்த களத்தில் போர் புரிகின்றனர். எனது தந்தையின் ஆட்சிக் காலத்தில் நாட்டில் இரு யுத்தங்கள் இடம்பெற்றன. 

ஆயினும் அவர் மக்களுக்கான உதவி செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்களை கைவிட வில்லை. ஒருபுறம் யுத்தத்தை நடத்திக்கொண்டு மறுபுறம் மக்களுக்கு வீடு, வாசல், தொழில் வாய்ப்புக்கள், பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை ஆகியவற்றை தாராளமாக பெற்றுக் கொடுத்தார். 

நகரங்களின் தொழிற்றுறைகளை கிராமங்களுக்கும் உள்வாங்கினார். இரண்டு யுத்தங்கள் அன்று இடம்பெற்ற பொழுதும் அவர் மக்களை நட்டாற்றில் நிர்க்கதியாக்காமல் நாட்டையும் மக்களையும் காப்பாற்றினார். ஆனால் இன்றைய மகிந்தவின் ஆட்சியில் நடப்பதோ அவற்றுக்கு நேர் மாறானது என்பதை நான் கூறித்தான் நீங்கள் அறிய வேண்டுமென்பதில்லை. நாட்டின் யதார்த்த நிலையை எமது மக்கள் நன்கறிவார்கள் என்றார்.

எந்த நாட்டின் அளுத்தங்களுக்கும் உட்படாமல் யுத்தத்தை தொடரவேண்டும் - விமல்
புதன், 15 அக்டோபர் 2008, 08:07 மணி தமிழீழம் [கொழும்பு நிருபர் மயூரன்]

தமிழீழ விடுதலைப் புலிகளை தோல்வியிலிருந்து பாதுகாப்பதற்கு இந்தியா உட்பட மேற்குலக நாடுகள் சிறி லங்காப் பிரச்சினையில் தலையிட்டு வருகின்றன. ஆனால், இந்தியாவினதோ, வோஷிங்டனினதோ அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை யுத்தத்தை நிறுத்த அரசாங்கம் முயலக்கூடாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு யுத்தம் செய்யவே மக்கள் ஆணை வழங்கினார்கள். எனவே அதனை மீறும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்றும் அவர் கூறினார். பத்தரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணி அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவதுகடந்த காலங்களைப் போன்று இன்றும் தமிழீழ விடுதலைப் புலிகளை தோல்வியிலிருந்து பாதுகாப்பதற்காக இந்தியா உட்பட மேற்குலக நாடுகள் தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கருணாநிதி உட்பட விடுதலைப்புலிகள் சார்பான அரசியல் கட்சிகள் சிறி லங்காவின் யுத்தத்தை நிறுத்த வேண்டுமென போராட்டங்களை நடத்தி மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இந்தியாவிலுள்ள சிறி லங்காத் தூதுவரை பிரதமர் மன்மோகன்சிங்கின் ஆலோசகர் கே. ஏ.நாராயணன் அழைத்து யுத்தத்தை நிறுத்தி அரசியல் தீர்வை முன்வைக்குமாறும், தமிழ் சிவிலியன்களை பாதுகாக்குமாறும் தெரிவித்துள்ளார். 

இந்தியா அல்ல எந்த நாடு அழுத்தம் கொடுத்தாலும் யுத்தத்தை ஜனாதிபதியால் நிறுத்த முடியாது. பயங்கரவாதத்தை ஒழிக்கவே மக்கள் ஆணை வழங்கினர். இதனை மீறுவது மக்களின் சுயாதிபத்தியத்தை மீறும் செயலாகும். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி பயிற்சிகள், பணம் வழங்கி இந்தியாவே போஷித்தது. இறுதியில் பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப்புலிகள் கொலை செய்தனர். 

எனவே இந்தியா விடுதலைப்புலிகளை பாதுகாக்க முனைவதென்பது மீண்டும் வரலாற்றுத் தவறுகளையே புரிவதாக அமையும். முன்னோக்கிச் செல்லும் யுத்தத்தை பின்னோக்கி முன்னெடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளல் ஆகாது. இந்திய அரசாங்கம் இங்கு யுத்தத்தை நிறுத்துவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளை கைவிட வேண்டும். விடுதலைப் புலிப்பயங்கரவாதத்தை அழித்த பின்னரே அனைத்து தரப்பினரதும் கருத்துகளை செவிமடுத்து தீர்வுத் திட்டத்தை முன்வைக்க முடியும். அதை விடுத்து இப்போதே தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென்பதெல்லாம் சாத்தியப்படாத விடயங்களாகும். 

இந்தியாவை சந்தோஷப்படுத்துவதற்காக சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி அரசியல் தீர்வுத்திட்டம் என ஜனாதிபதி தெரிவித்திருக்கலாம். ஆனால், அதிகாரப் பரவலாக்கலை எல்லாம் முன்னெடுக்க இடமளிக்கமாட்டோம். யுத்தமும் அரசியல் தீர்வின் ஓர் அங்கமே ஆகும். எனவே வெற்றியுடன் அது நிறைவு பெற வேண்டும். 1987 இல் ஜே.ஆர்.ஜயவர்த்தன நிறைவேற்று அதிகாரம் மற்றும் நாடாளுமன்ற பெரும்பான்மையைக் கொண்டிருந்தார். 

ஆனால், மக்கள் ஆணையைப் பெற்றிருக்கவில்லை. எனவே அன்று இந்தியாவின் நிபந்தனைக்கு அடிபணிந்து யுத்தம் நிறுத்தப்பட்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஆனால், இன்று அந்த நிலைமையில்லை. பயங்கரவாதத்தை அழிக்கும் யுத்தத்தை முன்னெடுக்கவே மக்கள் ஜனாதிபதிக்கு ஆணை வழங்கினார்கள். எனவே அதனை மீற முடியாது. 

யுத்தம் நிறுத்தப்படுமானால் மக்கள் போராட்டம் வெடிக்கும். தொலைக்காட்சி நாடகத்தொடரைப் போன்று யுத்தக் காட்சிகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி மக்களை ஏமாற்ற அரசு முனைந்தால் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அச்சல ஜாகொட, ஜயந்த சமரசிங்க, மொஹமட் முஸம்மில் மற்றும் தேசிய அமைப்பாளர் சமல் தேசப்பிரிய ஆகியோர் கலந்து கொண்டனர்


நாட்டை சீரழிக்கும் யுத்தத்தை நிறுத்தி அரசியல்த்தீர்வை முன்வையுங்கள் - மங்கள சமரவீர

புதன், 15 அக்டோபர் 2008, 08:13 மணி தமிழீழம் [கொழும்பு நிருபர் மயூரன்]

தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் என்ற மூவினங்களுக்கும் பொதுவான இந்நாட்டை மேலும் மேலும் இரத்தக் களமாக மாற்றிக் கொண்டிருக்காது உடனடியாக யுத்தத்தை நிறுத்தி அரசியல் தீர்வினை முன்வைக்க வேண்டும் என்று சிறி லங்கா சுதந்திரக் கட்சிமக்கள் பிரிவின் ஏற்பாட்டாளரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் வலியுறுத்தியுள்ளார். 

ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச ஆதரவினைப் பெற்றுக் கொள்ளவே சர்வகட்சிக் குழு கூட்டப்படுகின்றது. உண்மையில் இதன் மூலம் நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகள் எட்டப்படப் போவதில்லை என்றும் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,கடந்த 11 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் சர்வகட்சிக் குழு கூடியது. 

இதில் ஜே.வி.பி. மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என பிரதான எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. ஜே.வி.பி.யின் நிலைப்பாடு என்னவெனில், 13 ஆவது திருத்தச் சட்டம் என்பதும் அதனை அமுல்படுத்துவதற்கான சர்வகட்சிக் குழுவின் யோசனைகள் என்பதும் கண்துடைப்பு நடவடிக்கைகள் என்பதே ஆகும். மேலும் சர்வ கட்சிக் குழு நடவடிக்கைகள் ஒரு மாயை என்றே அந்தக் கட்சி ஆரம்பத்திலிருந்து நிராகரித்தும் எதிர்ப்புத் தெரிவித்தும் வருகின்றது. 

இன்றைய நிலையில் சர்வகட்சிக் குழுவின் நடவடிக்கைகளில் ஐக்கிய தேசியக் கட்சியும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றது. இவ்வாறானதொரு நெருக்கடி மிக்க தருணத்தில் ஜனாதிபதி தலைமையில் கூடிய சர்வகட்சிக் குழு மாநாட்டில் தேசிய இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு சரியான பாதையாக அமையாது என்றும் அரசியல் தீர்வுகளிலேயே தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்திருந்தார். 

இராணுவத் தீர்வில் நம்பிக்கையில்லை எனக் கூறுகின்ற ஜனாதிபதி இதுவரையில் யுத்தப் போக்கை கைவிட்டதாகக் தெரியவில்லை. அரசியல் தீர்வு என்ற பெயரில் கூட்டப்படுகின்ற சர்வகட்சிக் குழுவின் நடவடிக்கைகளில் அர்த்தமில்லை என்பது தெளிவு. சிறி லங்காவில் இன்றைய யுத்த நிலைவரம் தொடர்பில் தமிழ்நாட்டில் எழுச்சிப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உத்வேகமடைந்திருக்கின்றன. 

இதனுடைய வெளிப்பாடு பிரதமர் மன்மோகன் சிங்கின் மத்திய அரசாங்கத்தை சிறி லங்காப் பிரச்சினையில் தலையிட வைப்பதற்கான அழுத்தத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அரசாங்கம் ஓர் உறுதியான நிலைப்பாட்டுக்கு வர வேண்டிய கட்டம் ஏற்பட்டிருக்கின்றது. அரசியல் தீர்வு என்றும் இராணுவத் தீர்வு என்றும் இரண்டும் கெட்ட நிலையில் சிந்திப்பதை தவிர்த்து மூவின மக்களும் இணைந்து வாழ்கின்ற நாட்டை மேலும் மேலும் இரத்தக் களமாக மாற்றாது தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வே முன்வைக்கப்பட வேண்டும். 

சர்வதேசத்தின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைந்த ஏற்றுக்கொள்ள முடியாத யோசனைகளை தவிர்த்துக் கொண்டு உடனடியாக யுத்தத்தையும் நிறுத்த வேண்டும் என்பதுடன் அரசியல் தீர்வினை முன்வைக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நடவடிக்கை எடுக்க வேண்டிய காலம் இன்னும் கடந்து விடவில்லை என்பதையும் சிறி லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு வலியுறுத்தி நிற்கிறது. 

ஏனெனில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கூட்டப்பட்டு வருகின்ற சர்வகட்சிக் குழுவில் ஆக்கபூர்வமான அல்லது ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்மானங்கள் எதுவுமே எட்டப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, October 12, 2008

செயல்வன்மை மிக்க அரசியல் ஆதரவினை தமிழகம் வழங்குமா? - இதயச் சந்திரன்

சனி, 11 அக்டோபர் 2008, 19:31 மணி தமிழீழம் []

"இந்திய மத்திய அரசு, இலங்கைத் தூதரக அதிகாரி மூலம் விடுத்திருக்கும் எச்சரிக்கை மீறப்பட்டால், இந்த அரசு தேவைதானா என்ற கேள்விக்கு விடை காண வேண்டி வரும் என தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் குறிப்பிட்டதாக செய்திகள் வெளிவருகின்றன.இவ்வேண்டுகோளினை மத்திய அரசு செவிமடுக்காவிட்டால் இதே கேள்வியை கலைஞர் ஆட்சியை நோக்கி, தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் சூழலும் ஏற்படலாமென்பது உண்மை.அதேவேளை தமிழ்நாட்டுத் தலைவர்கள் காட்டிவரும் இத்தார்மீக ஆதரவு, செயல்வன்மைமிக்க அரசியல் ஆதரவாக முழுமை பெற வேண்டுமென்பதே ஈழத் தமிழர்களின் அவாவாகும்' என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைச் செயலகம் விடுத்த அறிக்கையினையும் கூர்ந்து நோக்க வேண்டியுள்ளது.

 

"செயல்வன்மைமிக்க அரசியல் ஆதரவு எதுவாக இருக்கும் அல்லது இருக்க வேண்டுமென்பதை ஊகித்தறியும் போராட்டம் குறித்த புரிந்துணர்வு, தமிழக இன உணர்வாளர்களிடம் உண்டு.ஆனாலும் எதிரணியினரின் ஒன்று கூடல் கண்டு பதற்றமடைபவர்களும் தேர்தல் நெருங்கும் வேளையில் ஈழத் தமிழர் பிரச்சினையை உயர்த்திப் பிடிக்கும் சந்தர்ப்பவாதிகளும் "செயல்வன்மைமிக்க' அரசியல் ஆதரவிற்கு எவ்வகையான செயல் வடிவம் கொடுக்கப் போகிறார்களென்பதே எம்முன்னால் விரிந்து நிற்கும் கேள்வியாகும்.உண்மையிலேயே இந்திய கம்யூனிஸ் கட்சியினரின் உண்ணாவிரதப் போராட்ட முன்னெடுப்பே கலைஞரை அசைய வைத்துள்ளது.

 

 அதேபோன்று விஜயகாந்த் கட்சியினர் முழு வீச்சுடன் கலந்து கொண்ட நிகழ்வு, ஜெயலலிதாவை அறிக்கை விட வைத்துள்ளது.செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக, சேகரித்த நிவாரணப் பொருட்களை யாழ். குடாநாட்டுக்கு அனுப்புமாறு நெடுமாறன் ஐயா மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கலைஞர் அளித்த வாக்குறுதி போன்று இதுவும் அமையலாமென்கிற பெருத்த சந்தேகம் தமிழ் மக்களுக்கு உண்டு.ஏனெனில் சிறிய கோட்டிற்குப் பக்கத்தில் பெரிய கோடொன்றை வரைவதில் கலைஞர் சாணக்கியரென்பது தமிழக அரசியலை நெடுங்காலமாக அவதானிப்பிற்குள்ளாக்கி வரும் மக்களுக்கு புரியும்.

 

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை தமிழின அழிப்பிற்கெதிரான காத்திரமான அரசியல் பங்களிப்பு, தமிழக மக்களிடமிருந்து வர வேண்டுமென்கிற எதிர்பார்ப்பு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.தமிழக அரசியல் தலைவர்களின் ஒன்றிணைந்த செயல்பாடுகள், இதுவரை ஏன் முன்னெடுக்கப்படவில்லையென்ற ஏக்கமும் ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு.டில்லி நோக்கிய தந்திப் போராட்டம், எத்தகைய மாற்றங்களை இந்திய நடுவண் அரசிற்கு அரசியலில் ஏற்படுத்துமென்பதற்கு அப்பால் ஆட்சியில் பங்குகொள்ளும் தமிழக அரசியல் சக்திகளின் நேரடித் தலையீடே செயல்வன்மை மிக்க மாறுதல்களை மத்தியில் உருவாக்கும் வாய்ப்பினை அதிகரிக்கும்.குடாநாட்டிற்கு உணவு அனுப்பும் விவகாரத்தில் கற்றுக் கொண்ட பாடத்தினை, நினைவில் இருத்தி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னின்று நடத்தினால் மத்திய அரசப் பங்காளர்களை இயங்கு நிலையில் வைத்திருக்கலாம்.

 

குறிப்பாக தமிழக மக்களின் உணர்வுகளை பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் புரிந்து கொள்வதாகவும் தழுதழுத்த குரலில் கவலையோடு அவர் செவிமடுத்ததாகவும் அவர் நெஞ்சில் தமிழக மக்களின் பாரத்தை இறக்கி வைத்துள்ளதாகக் கூறப்படும் ஆறுதல் வார்த்தைகள் யாவும் செயலுருப் பெறக் கூடிய அடுத்த கட்ட படி நிலைக்கு மாறுதலயடையுமா என்பது சந்தேகமே.ஆகவே பேரினவாதத்தின் தமிழின அழிப்பிலிருந்து தமிழ் மக்களைப் காப்பாற்ற, அவர்களின் அரசியல் அபிலாஷையான, தன்னாட்சியும் இணைந்த சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டை அங்கீகரிப்பதே ஒரே மார்க்கமென்பதை தமிழக தலைவர்கள் அனைவரும் இந்திய நடுவண் அரசினை வலியுறுத்த வேண்டும்.அக் கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் வகையில் யதார்த்தபூர்வமான களநிலை அரசியல் காரணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.அரசின் ஒரு தலைப்பட்ச போர் நிறுத்த முறிப்பு போர் நிறுத்த கண்காணிப்பாளர்களின் வெளியேற்றம், தீவிரமடையும் இராணுவத்தின் படை நகர்வு 20 தடவைகளுக்கு மேல் உள்ளக இடப்பெயர்விற்குள்ளாகியுள்ள 3 இலட்சம் தமிழர்கள், இறுதியாக சர்வதேச தொண்டு நிறுவனங்களின் வெளியேற்றம் போன்ற விடயங்களே தமிழர்களிற்கான சுய நிர்ணய உரிமையை அவசியத்தை உணர வைக்கிறது.

 

அதேவேளை டில்லி அரசியலை ஆட்டிப் படைக்கும் முரண்நிலைச் சக்திகள் குறித்தும் ஆராயப்பட வேண்டும்.அதாவது பிரதமர், தமிழகச் சிந்தனைகளை ஏற்க விரும்பினாலும் "சவுத் புளொக்' கிலுள்ள இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்களும் பாதுகாப்புத் துறை விற்பனர்களும் இதற்கு முட்டுக்கட்டை போடுவதாக ம.தி.மு.க. செயலாளர் வைகேõ அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார்.இதில் ஓரளவிற்கு உண்மைத்தன்மை பொதிந்திருந்தாலும் மக்கள் பிரதிநிதிகள் மேற்கொள்ளும் தீர்மானங்களுக்கு ஆய்வறிக்கைகளைச் சமர்பித்து அறிவுரை கூறும் முக்கிய பங்கு இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு உண்டென்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது.ஆனாலும் ஓரிரு வாக்கு வித்தியாசத்தில் நாடாளுமன்ற ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துள்ள ஒரு கூட்டாட்சி அமைப்பானது, வெறுமனே கொள்கைவகுப்பாளர்களின் அறிவுரைக்கேற்ப அரசியலை நடத்த முடியாது.

 

பெரும்பான்மை பெற்ற தனிக்கட்சி ஆட்சியொன்றினால் மட்டுமே இத்தகைய வெளியுறவு, பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தின் அறிவுரைகளை தங்குதடையின்றி முழுமையாக உள்வாங்கி அதை நிறைவேற்றும் வல்லமை கொண்டிருக்கும்.அடிக்கடி தமிழ்நாட்டிற்கு விஜயம் செய்து முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தும் சிவசங்கர் மேனன், எம்.கே. நாராயணன் போன்றோரின் நகர்வுகள் தனிப்பலமில்லாத கட்சியின் ஆட்சியில் கொள்கை வகுப்பாளர்களின் தனிச் செல்வாக்கு, எந்த மட்டத்திற்கு கீழிறங்குகியுள்ளதென்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

 

ஆகவே மற்றவர்களின் ஆசனப் பலத்தில் தங்கியுள்ள ஆட்சியொன்றில் சில விடயங்களைச் சாதிக்கக் கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகிறது.இதனைச் சாதகமாக மாற்றியமைத்து தமிழின அழிப்பைத் தடுக்கும் வல்லமை தமிழ்நாட்டு தலைவர்களுக்கும் அம்மக்களுக்கும் உண்டென்பதை மானுடவாதிகள் உணர்த்துதல் வேண்டும்.இந்திய அரசின் பூரண ஆதரவு தமக்கு உண்டெனப் பெருமிதம் கொள்ளும் பௌத்த சிங்கள பேரினவாதத்தின் இன அழிப்பு மனோபாவத்தை உடைத்தெறியும் அரசியல் நகர்வுகளை, தமிழ்நாட்டு மக்கள் விரைவாக முன்னெடுக்க வேண்டும்.

 

ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசின் கொள்கையே எனது கொள்கையெனக் கூறிய கலைஞரின் போக்கில் தற்போது மாறுதல் ஏற்பட்டுள்ளது.அம்மாறுதலானது வருகிற பொதுத் தேர்தலின் அடிப்படையில் நிகழ்ந்த காய்நகர்த்தல்களா அல்லது ஈழத் தமிழர் பால் அவர் கொண்ட இன உணர்வின் அடிப்படையில் ஏற்பட்ட உண்மையான மாற்றமாவென்பதை கலைஞரின் அடுத்த கட்ட செயல்வன்மை மிக்கஅரசியல் நகர்வுகளே சாட்சிப்படுத்தும்.

 

ஆகவே தமிழின விடுதலைப் போராட்டப் பாதையில் போடப்பட்டுள்ள தற்காலிகத் தடையரண்களை, உடைத்தெறியும் "தடை நீக்கி' களாகத் தமிழகத் தலைவர்கள் செயற்படுவார்களென்கிற நம்பிக்கை ஈழத் தமிழர்களுக்கு உண்டு.ஆனாலும் தமிழக மக்களின் தன்னியல்பான பேரெழுச்சியே, அத்தலைவர்களையும் முன் தள்ளிச் செல்லும் என்பதே மக்கள் போராட்டங்கள் சொல்லும் செய்தியாகும்.  

 

[நன்றி -வீரகேசரி]


http://www.pathivu.com/news/54/34//d,view.aspx