Saturday, June 30, 2007

இலங்கையின் கிழக்கில் நான்கு முஸ்லிம் விவசாயிகள் படுகொலை-29/06/2007

இலங்கையின் கிழக்கில் நான்கு முஸ்லிம் விவசாயிகள் படுகொலை

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மற்றும் பொலன்நறுவை மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் நன்னீர் மீன் பிடிப்புக்காகச் சென்ற 4 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்களை விடுதலைப்புலிகளே கொலை செய்ததாக இலங்கை தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் கூறுகின்ற போதிலும், இந்தத் தாக்குதலில் தப்பி வந்தவர்களோ இராணுவத்தினரே அவர்களைக் கொலை செய்ததாகக் கூறியுள்ளனர்.

மாவிலாறு பகுதிக்கு மீன் பிடிக்கவும், தமது கால்நடைகளை மேய்க்கவும் சென்ற இந்த விவசாயிகளை விடுதலைப்புலிகளே கொலை செய்ததாக இலங்கை அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு ஊடக தகவல் மையம் தெரிவித்துள்ளது.

தொப்பிக்கல பகுதியில் இருந்து தப்பியோடும் புலிகளே இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் அந்த பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் பொலன்நறுவை மாவட்டம் பள்ளியகொட பகுதியைச் சேர்ந்த 4 முஸ்லிம்களாவர். நன்னீர் மீன் பிடிப்பில் ஈடுபடுவதற்காகச் 9 முஸ்லிம்கள் அந்தக் காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார்கள். ஆனால், அங்கு இடம்பெற்ற தாக்குதல் ஒன்றையடுத்து 4 பேர் தவிர ஏனையவர்கள் ஊர் திரும்பியிருந்தனர். பின்னர் இந்தத் தாக்குதலில் கொலை செய்யப்பட்ட 4 பேரது சடலங்கள் தற்போது திருகோணமலை மாவட்டம் கந்தளாய் மருத்துவ மனையின் ஒப்படைக்கப்பட்டு பின்னர் அவை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்தக்கொலைகளுக்கு புலிகள் மீது சந்தேகம் வெளியிட்டுள்ள இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, விசாரணைகள் தொடர்வதாகவும் கூறுகிறார். அதேவேளை விடுதலைப்புலிகள் அமைப்பின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் இந்தச் சம்பவத்தில் தமது அமைப்புக்கு எந்தத் தொடர்பும் கிடையாது என்று மறுத்துள்ளார்.

Friday, June 29, 2007

புலிகளின் யுத்த பலத்தை பலவீனப்படுத்தாமல் எந்த வகையிலும் அரசியல் தீர்வுக்காண பேச்சுவார்த்தையை நடத்த முடியாத

Rajapaksa_22.jpgபுலிகளை அழிப்பதற்காக இராணுவத்தினரும் பொலிஸாரும் மிகவும் புத்தி சாதுரியமாக செயல்படுகின்றனர். அதனால் தான் கிழக்கில் பாரிய வெற்றிபெறமுடிந்தது. புலிகளின் யுத்த பலத்தை பலவீனப்படுத்தாமல் எந்த வகையிலும் அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பௌத்த தேரர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அந்த வைபவத்தில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் தெரிவிக்கையில் இந்திய அமைதிப் படைக்கு முடியாததை இலங்கை படையினர் செய்துள்ளனர். தொப்பிகலை பகுதியை தவிர கிழக்கு மாகாணத்தில் முழுப்பகுதிகளையும் படையினர் தம்வசம்படுத்தி அப்பகுதியில் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். புலிகளுடனான படையினரின் வெற்றியை குறைத்து மதிப்பிடமுடியாது. சிலர் இந்த வெற்றியுடன் அரசியலை கலந்து அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்த கூடும் அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்

படையினரால் பெறப்பட்ட வெற்றியை அரசியலுடன் தொடர்பு படுத்த வேண்டாம். பயங்கரவாதத்தை இந்த சந்ததியினருடன் தோற்கடிக்க வேண்டும் அதøன அடுத்த பரம்பரைக்கும் விட்டுச்செல்லமுடியாது. விட்டுச்செல்லமாட்டேன். கடந்த 25 வருட கால ஆட்சியில் செய்ய முடியாததை இந்த அரசாங்கம் செய்துள்ளது. நாம் பெற்ற வெற்றிக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் தேசத்துரோகிகள். அந்த துரோகத்தனமான செயற்பாடுகளுக்கு இடமளிக்க போவதில்லை.

சர்வதேச சமூகம் மற்றும் அண்டைய நாடுகளுடன் தொடர்ந்து தொடர்புகளை வைத்துள்ளோம் இந்தியாவுடனான தொடர்பு வலுப்பெற்றுள்ளது. அவர்களிடமிருந்து பெரும் உதவிகளை பெற்றுள்ளோம். அதேபோல அமெரிக்காவும் எமக்கு உதவிகளை செய்து வருகின்றது. எதிர்காலத்தில் அமெரிக்காவிடமிருந்து பல உதவிகளை எதிர்பார்க்கலாம் என்பது அமெரிக்காவுடன் நாம் செய்து கொண்ட ஒப்பந்தத்திலிருந்து புலனாகின்றது.

Monday, June 25, 2007

விடுதலைப்புலிகளின் தலைவருக்கு த.வி.கூட்டணியின் தலைவர் திரு.வீ. ஆனந்தசங்கரி அவர்கள்












விடுதலைப்புலிகளின் தலைவருக்கு த.வி.கூட்டணியின் தலைவர் திரு.வீ. ஆனந்தசங்கரி அவர்கள்
எழுதியுள்ள கடிதம்


திரு. வே.பிரபாகரன்
தலைவர் தமிழீழ விடுதலைப்புலிகள்
கிளிநொச்சி

22-06-2007

தீர்வுக்கு ஒரே வழி

அன்புடன் தம்பி!

Prabha-Ananthasangareeகடந்த மூன்று நான்கு ஆண்டு காலமாக எனது கடிதங்களுக்கு நீர் பதில் அனுப்பாதமை துரதிஸ்டமே. இக்கடிதத்திற்கும் உமது பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் கசப்பானாலும் இக்கடிதத்தை கவனம் செலுத்திப் படிப்பீர் என எதிர்பார்க்கின்றேன். நான் இந்த நாட்டு மக்கள்மீதும் குறிப்பாக தமிழ் பேசும் மக்களமீதும்; மிக அக்கறை கொண்டுள்ளேன் என்பதை புரிந்து கொள்ளவும். நிலமை கட்டுக்கு மீறி செல்வதால் மேற்கொண்டு தாமதிக்காமல் மிகவும் துன்பப்படும் நாட்டு மக்களுக்கு அமைதியையும் சமாதானத்தையும் கொண்டுவர வேண்டிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இங்கே குறிப்பிடும் சில விடயங்கள் என்னால் முன்பு எழுதப்பட்ட கடிதங்களில் குறிப்பிடப்படாதவையாகும். இன்றைய பரிதாபமான நிலையில் எமது மக்கள் வாழ்வதற்கு முழுப்பொறுப்பையும் நீரே ஏற்கவேண்டிய காலம் வந்துவிட்டது. உமக்கு விரும்பத்தகாததாயிருந்தாலும் கடந்த காலத்தை மறந்து இலங்கையின் அனைத்து மக்களினதும் சுபிட்சமான வாழ்விற்கு பொறுப்புடனும் அவதானத்துடனும் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன். ஏனையோர் சிலர் விடுதலைப்புலிகளை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக முன்னிலைப்படுத்துவது போல் நான் செய்ய மாட்டேன் ஏனெனில் உமது கொடூரமான செயல்கள் காரணமாக தமிழ் மக்களால் அவ்வாறு நீங்கள் கணிக்கப்படவில்லை. உலகிலேயே மிக கொடூரமானவர் என்ற பெயரை நீங்கள் சம்பாதித்துள்ளீர்கள். நாட்டு மக்களுக்கு தினமும் பயத்தையும் பீதியையும் ஏற்படுத்துவதன் மூலம் உங்களுடைய மதிப்பை மிக வேகமாக இழந்துவருகின்றீர்கள்

என்பதை அறியமாட்டீர்;கள். உங்களுடைய பயங்கர ஆட்சியால் என்னைப்போன்ற ஒரு சிலர் தவிர சகல தமிழர்களின் குரலையும் அமைதிப்படுத்திவிட்டீர்கள். எனது காலத்திலேயே எமது இனப்பிரச்சினைக்கு தீர்வை காண உதவத் தவறுவீர்களேயானால் என்றும் தீர்வை காணமுடியாது. தயவு செய்து பிரிவினைக் கோரிக்கையை கைவிட்டு ஐக்கிய இலங்கைக்குள் சமஸ்டி அடிப்படையிலான தீர்வை ஏற்பீர்களேயானால் அதற்கு பெரும் வரவேற்பு கிடைப்பது மட்டுமல்ல ஆச்சரியப்படக் கூடிய விதத்தில் எதிர்பாராதவர்களின் ஆதரவு கூட கிடைக்கும்.

கடந்த காலத்தில் நிகழ்ந்த சில கசப்பான சம்பவங்களை உமது ஞாபகத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன். உம்மை அவமானப்படுத்தவோ அல்லது சங்கடப்படுத்தவோ அல்ல தமிழர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக கருதும் சிலரது கண்களை திறக்க உதவுவதற்கே. பெரும்பகுதியான சிங்கள மக்களின் நிலைப்பாட்டுக்கு இது மாறானதாகும். நியாயமான முறையில் செயற்படும் பெரும்பகுதியான சிங்கள மக்கள் தமிழ் மக்களுடன் சமமாக வாழ்வதையே விரும்புகின்றார்கள்.

நாளுக்கு நாள் மக்கள் மாறிக்கொண்டு வருகின்றார்கள் - சிலர் அபூர்வமான சிந்தனைகளையும் - புதிய புதிய கண்டுபிடிப்புக்களையும் வெளியிடுகின்றார்கள். சரித்திரம் திரிக்கப்படுகின்றது. சிலர் தமிழர்கள் போத்துக்கீசரால் யாழ்ப்பாணத்தில் புகையிலை நடுகைக்காக கொண்டுவரப்பட்டதாக கண்டுபிடித்துள்ளார்கள், மேலும் சிலர் இந்நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமானதெனவும் அவர்களே இந்தநாட்டில் வாழ முடியும் என்றும் கூறுகின்றார்கள். இக்கூற்றுக்கு மிகக் கீழ் இறங்கி ஒரு விவாதத்தை நடத்த நான் விரும்பவில்லை. 600இலட்சம் தமிழ் மக்கள் வாழும் தமிழ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்தை 20மைல் நீளம் கொண்ட பாக்குத் தொடுவாயே பிரிக்கின்றது என்பதை ஒருவர் அறிந்திருந்தால் போதும். யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் நாட்டுக்கும் தமிழ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் இடைப்பட்ட கடலை பலர் நீந்திக் கடந்துள்ளனர். இரவு போசனத்தை முடித்துக்கொண்டு இந்தியா சென்று ஒரு எம்.ஜி.ஆர் படத்தை பார்த்துவிட்டு அதிகாலை நாடு திரும்பிவிடும் சகோதரர்களைப்பற்றி எனது பள்ளித்தோழர்கள் கூறியிருக்கின்றார்கள். மேலும், 5 ஈஸ்வரன் கோயில்கள், தெவிநுவரவில் உள்ள விஸ்ணு தேவாலயம், கதிர்காமத்து முருகன் போன்றவை சரித்திர காலத்திற்கு முந்திய மிகப்பழமை வாய்ந்த கோவில்களாகும். ஒரு இனத்தையோ ஒரு குழுவையோ சேர்ந்தவனைப் போல அல்லாமல் எப்பொழுதும் நான் எமது பிரச்சினைகளை தேசப்பற்று கொண்ட ஒரு இலங்கையனாகவே நோக்குகின்றேன். இதுவே தேசாபிமானமாகும்., அமைதியும் பொறுமையுமே எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மிகவும் தேவைப்படுகின்ற இவ்வேளையில் நியாயமாக செயற்படும் சிங்களவர்களை கூட தூண்டிவிட்டோ அவமானத்தை ஏற்படுத்தியோ பிரச்சினையை மேலும் சிக்கலடையச் செய்ய நான் விரும்பவில்லை.

தனிச்சிங்களச் சட்டத்தை மைல்கல்லாக வைத்துப்பார்ப்பின் எமது இனப்பிரச்சினை 50வயதை தாண்டிவிட்டது. அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் உயர் வகுப்புகள் உள்ள பாடசாலைகள் அத்தனையிலும் சிங்கள பட்டதாரிகள் சிங்களம் போதிப்பதற்காக நியமிக்கப்பட்டமையினால் இத்தகைய ஒரு சட்டத்திற்கு அவசியம் ஏற்படவில்லை. அப்போது ஒன்றில் நீர் பிறந்திருக்கவில்லை அல்லது நீர் பால்குடியாக இருந்திருப்பீர். அக்காலத்தில் சிங்கள தமிழ் முஸ்லிம் மற்றும் சிறு குழுக்கள் சமாதானமாகவும் அமைதியாகவும் ஒருவரை ஒருவர் மிகவும் மதித்தும் நேசித்தும் வாழ்ந்தனர். தென்னிலங்கையில் உள்ள ஒரு கோவில் சம்பந்தமாக ஏற்பட்ட ஒரு சிறு சம்பவம் தவிர – அதுகூட பல ஆண்டுகளுக்கு முன்- அமைதியான எமது நாட்டில் வகுப்புக் கலவரம் என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை. அந்தச் சம்பவத்தில் யார் யார் சம்பந்தப்பட்டார்கள் என்பதை கூட நான் கூறவிரும்பவில்லை.

சகல இன மக்களும் அமைதியாக வாழ்ந்த நாட்டுக்கு அழிவைக் கொண்டு வந்ததே தனிச்சிங்களச் சட்டம் தான். அதைக்கூட உரிய நடவடிக்கை எடுக்கும் முயற்சியை சில இனவாதிகள் திட்டமிட்டுக் குழப்பியதாலேயே இந்நிலை ஏற்பட்டது. இல்லையேல் இந்நிலை ஏற்பட்டிருக்காது. அத்தகைய ஒருசிலர் உலகின் எப்பகுதியிலும் இருக்கத்தான் செய்வார்கள். நீர் குழப்பாது இருந்திருப்பின் மிகப்பிரபல்யமான அஹிம்சைவாதி தந்தை செல்வநாயகம் கியு சி அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி சமாதானமான முறையில் தீர்வு ஒன்றை கண்டிருக்கும். ஆனால், அதுவரை யாழ்ப்பாணச் சரித்திரத்தில் இடம்பெறாத ஒரு தீவிர நடவடிக்கையை நீர் எடுத்தமையாலேயே நிலமை மோசமடைந்தது. யாழ்ப்பாணத்தின் முன்னைநாள் மேயராகவும், எம்பியாகவும் இருந்த திரு. அல்பிரட் துரையப்பாவை சுட்டுக்கொன்று துப்பாக்கி கலாச்சாரத்தை நீர் அறிமுகம் செய்ததாலேயே நிலமை வன்முறைக்கு திரும்பியது. மிகப்பிரபல்யமான தலைவர்களாகிய அமரர் ஜி.ஜி. பொன்னம்பலம் கியு சி, அமரர் எஸ்.ஜே.வி செலவநாயகம் கியு சி, ஆகியோரின் தலைமையில் இயங்கிய இரு கட்சிகளின் வேட்பாளர்களையும் யாழ்ப்பாணத் தொகுதியில் தோற்கடித்தமையே அவர் செய்த குற்றமாகும். அரசியலில் மிகவும் பிரபல்யம் அடைந்திருந்த அமரர் அல்பிரட் துரையப்பா பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோவிலில் தரிசனம் செய்து கொண்டிருந்தவேளை நீர் அவரை சுட்டுக்கொன்றீர். அவரை ஏன் கொன்றீர் என்று உமக்கே தெரியுமோ எனக்குத் தெரியாது. ஆனால், விஸ்ணுவை தரிசனம் செய்து கொண்டிருந்தவேளையில் அவரை கொலை செய்ததையும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களின் சொத்துக்களை பறித்துக்கொண்டு சிறுவர்களின் காதணிகளைக் கூட எடுத்துச் செல்ல விடாது விரட்டியடித்தமையும் தான,; கடவுள் தண்டனையாக, இத்தனை பெருந்தொகை மக்கள் உயிரிழக்கவும், சொத்துக்களை இழக்கவும் காரணம் என தமிழ் மக்கள் நம்புகின்றார்கள். சகல இனங்களையும், மதங்களையும் சேர்ந்த ஆண் பெண் என்ற பேதமின்றி வயது வித்தியாசமின்றி 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் உயிரிழ்ப்பிற்கு நீரே பொறுப்பேற்க வேண்டும். போர்முனையில் மட்டுமல்ல கிளைமோர் தாக்குதல், கைக்குண்டு தாக்குதல், நிலக்கண்ணிவெடி மற்றும் புகையிரதம், பேருந்துகளில் இடம்பெற்ற படுகொலைகளுக்கும் நீரே பொறுப்பேற்க வேண்டும். கெபிடிகொலாவவிலும், அறந்தலாவயிலும் செய்யப்பட்ட படுகொலைகள், 700க்கு மேற்பட்ட கடற்படையினரை கொண்டு சென்ற கப்பலை மூழ்கடிக்க முயற்சித்தமை, லீவில் சென்ற கடற்படையினர் 100க்கு மேற்பட்டோரை தாக்கி கொன்றமை, பள்ளிவாசல் படுகொலைகள் என்பவற்றை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அறந்தலாவையில் உம்மால் படுகொலைசெய்யப்பட்ட 31பௌத்த குருமார்கள் உங்களுக்கு என்ன தீங்கு செய்தார்கள்? இத்தகைய ஏதாவதொரு சம்பவத்தில் ஓர் சிங்களப் பிரஜை என்றாவது ஈடுபட்டதை உங்களால் கூறமுடியுமா? மேலும் இனவாதம் பேசுகின்ற பௌத்த சிங்களவகுப்பு வாதிகள் தன்னும் சில பொறுப்பற்ற முறையில் பேசி வந்தாலும், ஒரு தமிழ் உயிரை பறித்ததை உம்மால் கூற முடியுமா? குமுதினி படகில் ஏற்பட்ட படுகொலை, வேலணை சுருவில் மண்கும்பான் சம்பவங்கள், செம்மணி புதைகுழிகள் இராணுவத்தினரின் செயல் என நான் அறியாதவன் அல்ல. இத்தகைய எக்கொலையிலும் சிங்கள பொதுமக்கள் எவரும் சம்பந்தப்படவில்லை என்பதையே கூறவிரும்புகின்றேன். ஆனால் பொதுமக்களுடைய கொலைகளைப் பொறுத்த வரையில் உங்களுடைய கை இரத்தம் தோய்ந்தது. பல்வேறு தமிழ் குழுக்களைச் சேர்ந்த பலரின் கொலைகளுக்கு நீரே பொறுப்பேற்க வேண்டும். இத்தகைய கொடூரமான குற்றங்களுக்கு பலியானவர்களின் சாபம் எவரையும் சும்மாவிடாது. ஆகவே தான், நடந்தவற்றை கெட்ட கனவாக மறந்து ஒரு புதிய மனிதனாக மாறுவீரேயானால் சமாதானத்திற்காக ஏங்கும் இலங்கையினரதும், சர்வதேச சமூகத்தினதும் பாராட்டை பெறுவீர்.

உமது கொடூர செயல்களில் ஒன்று இந்திய முன்னாள் பிரதமரை கொலை செய்தமை. அதோடு இந்திய மக்களின் ஆதரவை இழந்தீர்கள். இன்று உம்மை இந்தியாவில் ஆதரிப்பவர்கள் வெறும் வேடதாரிகள். உமது அடுத்த சிந்தனையற்ற செயல் உம்மைப்போலும், உமது தொண்டர்கள் போலும் சரியோ பிழையோ ஒரு இலட்சியத்திற்காகப் போராட வந்த பல் வேறு தமிழ் குழுக்களின் உறுப்பினர்களை அழித்தமை, நீர் ஒரு சுயநலக்காரனாகவும் பேராசை பிடித்தவனாகவும் இருந்து இவர்களை வேட்டையாடி, பொதுமக்களிடம் உமக்கு ஆதரவு இருந்திருந்தால், அதையும் இழந்து உம்மையும் அழித்துக்கொண்டீர். உமது அண்மைக்கால நடவடிக்கைகள் நிலமையை மேலும் மோசமடையச் செய்துள்ளன. தயவு செய்து எந்த ஒரு அரசும் விமானத்தாகுதலுக்கு உமக்கு உதவியோ ஆதரவோ தரப்போவதில்லை என்பதை நம்புங்கள். என்னைப்பொறுத்தவரையில் உமது வான் தாக்குதலை ஒரு வான் வேடிக்கையாகவே கருதுகின்றேன். உமக்கு எந்த ஆதரவும் தராத சர்வதேச சமூகத்தின் வெறுப்பை சம்பாதிப்பதோடு உமது கழுத்துக்கு நீரே சுருக்குப் போட்டுக்கொள்கின்றீர்.

இப்பொழுது உமது எல்லா செயற்பாடுகளையும் நிறுத்திவிட்டு கடந்தகாலத்தில் சாதித்தவற்றை திரும்பிப் பார்க்கவும். பல்வேறு வகையில் நீரும் உமது ஆட்களும் உமது மக்களுக்கும் பொதுவாக நாட்டுக்கும் ஏற்படுத்திய அழிவுகளின் பெறுமதி;யை கணக்கிட்டுப்பாரும். நான் ஒரு சில விடயங்களை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொண்டு ஏனையவற்றை உமது சிந்தனைக்கே விட்டுவிடுகின்றேன். நான் கூறும் பின்வரும் விடயங்களும், விமர்சனங்களும் உங்களது கண்களை மட்டுமன்றி -ஆளுங்கட்சியோ எதிர்க்கட்சியோ -ஒரு நியாயமான தீர்வை முன்வைக்காமல் இழுத்தடிப்பவர்களுடைய கண்களும் திறக்க வேண்டும் என்பதற்காகவே. சாதாரண பொதுமக்களை பொறுத்தவரை எவ்விலை கொடுத்தேனும் சமாதானத்தை பெறுவதிலேயே அக்கறையாக இருக்கின்றனர். ஆழமாக செல்லாமல் சில விடயங்களை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். இந் நீண்ட கடிதத்தை எழுதுவதற்கு ஒரு விசேட காரணமும் உண்டு. கால் நூற்றாண்டு காலமாக தமிழ் இஸ்லாமிய மக்களை படுமோசமான முறையிலும் கீழ்த்தரமான முறையிலும் நீங்களும் உங்கள் சகாக்களும் நடத்தியதை அறிந்த சிங்கள மக்கள், தமிழ் மக்கள் நிரந்தரத் தீர்வை எதிர்பார்க்கிறார்களே அன்றி அரைவேக்காட்டு தீர்வு திட்டத்தை ஏற்பார்கள் என எதிர்பார்க்கமாட்டார்கள். ஆகவே, தமிழ் மக்களுக்கு ஏற்புடையதான ஐக்கிய இலங்கைக்குள் ஒரு சமஸ்டி ஆட்சி முறையை பெற்றுக்கொடுக்கவே சிங்கள மக்கள் போராடுவார்கள். 50 ஆண்டு காலம் ஒற்றையாட்சியின் கீழ் தீர்வுகாண முடியவில்லை என்பதையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.


1.கல்வி

1970 ஆம் ஆண்டு தரப்படுத்தல் என்ற துயரமான முடிவு எடுக்கப்பட்ட போது நானும் பாராளுமன்றத்தில் இருந்தேன். தரப்படுத்தல் தகுதி பெற்ற பல தமிழ் மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளுக்கு இடம் கிடைப்பதற்கு தடையாக இருந்தது. இனரீதியாக விகிதாசாரம் பேணப்படவில்லை என்பதே குற்றச்சாட்டாக இருந்தது. இது ஒரு நியாயமற்ற செயலாக கருதப்பட்டமையினால் மாணவர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி அதே இன்றைய சகல அனர்த்தங்களுக்கும் காலாக அமைந்தது. இருப்பினும் 77ம் ஆண்டு ஆட்சிபுரிந்த அரசு எல்லோருக்கும் திருப்தி தரக்கூடிய ஒரு திட்டத்தை வகுத்திருந்தது. இது 1970 ஆம் ஆண்டுக்கும் 72ம் ஆண்டுக்கும் இடையில் நடந்த சம்பவம். இன்று என்ன நடக்கின்றது? உமது சகாக்களால் ஒழுங்காக பிள்ளைகள் பாடசாலை செல்ல அனுமதிக்கப்படுகின்றார்களா? கடந்த வருடம் முதல் தவணையின் போது 27 நாட்கள் பிள்ளைகள் பாடசாலை செல்லவில்லை. அவர்கள் ஆர்ப்பாட்டங்களுக்கும், ஹர்த்தால் நடத்துவதற்கும், அவமதிக்கும் வார்த்தைகளை பிரயோகித்தும், கல்வீசியும் இராணுவத்தை சீண்டுவதற்கும்; ஈடுபடுத்தப்பட்டனர். இராணுவத்தினர் அஹிம்சையை கடைப்பிடிக்கும் காந்திய வாதிகள் அல்லர். இது சம்பந்தமாக பல விடயங்கள் கூறலாம் ஆனால், திறமை அடிப்படையில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிபெறும் மாணவர்களின் எண்ணிக்கை இன்று வெகுவாக குறைந்துவிட்டது என்பதுடன் நிறுத்திக்கொள்கின்றேன். சில மாணவர்கள் தமது படிப்பை முடிப்பதற்கு 10 ஆண்டுகள் செல்கின்றன. அதற்குரிய காரணத்தை நான் ஏற்கனவே கூறியுள்ளேன். 35 ஆண்டுகாலப் போராட்டத்தின் பின் கல்வித்துறையில் தமிழர்களின் தற்போதைய நிலைமை என்ன? யாழ்ப்பாணத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் 200 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் உங்கள் சிறுவர்படையில் இணைக்கப்படுவதிலிருந்து தப்புவதற்காக பெற்றோரால் கையளிக்கப்பட்டுள்ளார்கள்.

2.புத்திஜீவிகள் கல்விமான்கள் அரச அதிபர்கள், பல்வேறு தரப்பட்ட அரச ஊழியர்கள் பொறியியலாளர்கள் மருத்துவ நிபுணர்கள் அதிபர்கள், ஆசிரியர்கள்

இனப்பிரச்சினையின் 50 ஆண்டு சரித்திரத்தில் மேற் கூறப்பட்ட தரத்தில் உள்ள ஒருவர் தன்னும் அரச படைகளால் கொல்லப்பட்டிருக்கிறார்களா? மாறாக அத்தனை கொலைகளும் உங்கள் அங்கத்தவர்களால் செய்யப்பட்டது. ஒரு சிலரை குறிப்பிடவேண்டுமாயின் மருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் திருமதி ராஜினி திரணகம, சென் ஜோன்ஸ் கல்லூரி; அதிபர் ஆனந்தராஜா, மத்தியகல்லூரி அதிபர் இராஜதுரை, அரசாங்க அதிபர்களான திரு. மக்பூல், திரு பஞ்சலிங்கம், மற்றும் திரு ஞானச்சந்திரன் உட்பட பல நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதை ஏன் அனுமதித்தீர்?

3.கட்டிடப்பொருட்கள்: சீமெந்து தொழிற்சாலை

கட்டிடப்பொருட்கள் அத்தனையும் எமது பகுதியிலேயே பெற்றுக்கொள்ளக் கூடியதாயிருந்தது. தேவைக்கு அதிகமாக உள்ள சீமெந்து தென்னிலங்கைக்கும் வேறு இடங்களுக்கும் அனுப்பப்பட்டு வந்தது. இத்தொழிற்சாலையை நம்பி பல்லாயிரம் உயிர்கள் வாழ்ந்தன. இத்தொழிற்சாலைக்கு இன்று என்ன நடந்தது? தொழிற்சாலையின் தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் ஏழ்மையில் வாடுகின்றார்கள். தென்னிலங்கையில் சிங்கள மக்கள் வாழும் பகுதியில் பல இலட்சக்கணக்கான தமிழர்கள் பணிபுரிகின்ற வேளையில் சீமெந்து தொழிற்சாலையின் உற்பத்தி முகாமையாளரான திரு. போகொல்லாகமவை கொன்றதன் மூலம் தொழிற்சாலையை மூடவைத்தீர்கள். 100 ரூபாவிற்கு விற்கப்பட்ட சீமெந்து இன்று 1700 ரூபா.

4.புன்னாலைக்கட்டுவன்: அஸ்பெஸ்டஸ் கூரைத்தகட்டுத் தொழிற்சாலை

இத் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட கூரைத்தகடுகள் உள்ளுர் தேவைக்கு போதுமானது. அத்தொழிற்சாலை இப்போது எங்கே? அன்றைக்கும் இன்றைக்கும் உள்ள விலை வித்தியாசம் என்ன? இத்தகைய ஒரு தொழிற்சாலையை உருவாக்க இன்று எவ்வளவு முதல் தேவைப்படும்? இத்தொழிற்சாலையை அழித்து நீர் அடைந்த இலாபம் தான் என்ன?

5.மணல்
பல தலைமுறைக்கு போதுமான கட்டிடப் பொருளான மணல் குடத்தனை, அம்பன், மணற்காடு, நாகர் கோவில் போன்ற பகுதிகளில் பெருமளவில் உண்டு. இப்பிரதேசம் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசம.; சொந்த தேவைக்காக தன் உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றி வந்த பல்கலைக்கழக மாணவன் சுட்டுக்கொல்லப்பட்டு அவரது உழவு இயந்திரத்துடன் சேர்த்து எரிக்கப்பட்ட சம்பவத்தை தெரியாதது போல் அவரது சக மாணவர்கள் நடிக்கின்றார்கள், ஏனெனில் உங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் தைரியம் அவர்களுக்கு இல்லை. வடக்கே இயல்புநிலை ஏற்படும் பட்சத்தில் ஒரு வீடு அமைப்பதற்கு தற்போது செலவிடும் தொகையில் 20 வீதம் கூட தேவைப்படாது

6.தொழிற் பேட்டை: அச்சுவேலி

அச்சுவேலி தொழிற்பேட்டையில் கட்டிடப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களை உற்பத்திசெய்யும் 36 தொழிற்சாலைகள் செயற்பட்டன. அங்கிருந்த கடைச்சல் இயந்திரங்கள், மோட்டர்கள் உட்பட பெறுமதியான அத்தனை பொருட்களையும் அகற்றினீர்கள். இது போன்றதொரு தொழிற்பேட்டையை அமைக்க எவ்வளவு முதல் தேவைப்படும்? இவற்றில் தொழில் செய்தவர்களின் கதி என்ன?

7.பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை

ஆயிரம் பேருக்கு மேல் வேலைவாய்;ப்புக் கொடுத்து பல்லாயிரம் பேருக்கு உணவளித்த இத்தொழிற்சாலை இன்று இருந்த இடம்தெரியாமல் போய்விட்டது. ஊழியர்கள் குடியிருந்த 100க்கு மேற்பட்ட வீடுகள் பாழடைந்துவிட்டன. இத்தொழிற்சாலை திரும்ப அமைப்பதற்கு எத்தனை கோடி தேவை? இதனுடைய அழிவை ஏன் நீர் தடுத்து நிறுத்தவில்லை?

8.ஒட்டிசுட்டான் ஓட்டு தொழிற்சாலை, புல்மோட்டை கரிமண் தொழிற்சாலை

இத்தொழிற்சாலைகளும் ஊழியர்களும் எங்கே?

9..ஆனையிறவு உப்பளம்
நாட்டுக்கே தேவையான உப்பை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யக் கூடிய அளவிற்கு விஸ்தரிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் இவ் உப்பளம் முற்றாக அழிக்கப்பட்டது. ஆனையிறவோடு, நாவற்குளி, கல்லுண்டா ஆகியவற்றில் தொழில் புரிந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து ஓட்டாண்டிகளாக வாழ்கின்றார்கள்.

10..உங்களால் சீரழிந்த யாழ்ப்பாண பொருளாதாரம

யாழப்பாணப் பொருளாதாரம் உங்களாலும் உங்கள் சகாக்களாலும் முற்றாக அழிக்கப்பட்டது. கிளிநொச்சியில் ஏ 9 வீதியில் அமைந்துள்ள எனது வீட்டிலிருந்து அவதானிப்பேன். தினமும் 60 தொடக்கம் 70 லொறிகள் மீன் வகை, காய்கறிகள், திராட்சை, வாழைப்பழம் என்பனவற்றை ஏற்றிக்கொண்டு இரவு வேளையில் கொழும்புக்கு செல்வதையும் அதே எண்ணிக்கையான லொறிகள் யாழ்ப்பாணத்திற்கு தேவையான பல்வேறு பொருட்களுடன் திரும்பிவருவதையும் நான் பார்த்திருக்கின்றேன். யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்னதாகவே பல ஆண்டு காலமாக ஏ 9 வ|Pதியை மூடிவைத்து மீனவர்கள் விவசாயிகள் உட்பட சகல உற்பத்தியாளர்களினதும் பொருளாதாரத்தை நாசம் செய்தீர்கள். யாழ்ப்பாண மக்களை பட்டினியை நோக்கி தள்ளினீர்கள். யுத்தநிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின் மீண்டும் தலை தூக்கக் கூடிய நிலை உருவாகிய வேளை உங்களுடைய செயலால் திரும்பவும் மக்கள் அதே நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். உங்களுடைய சட்ட விரோதமான வரியால் உள்ளுர் உற்பத்திச் செலவு இறக்குமதியாகும் பொருட்களின் விலையைவிடவும் அதிகரித்தமையால் அநேக உற்பத்திகள் நின்றுபோயின.

11.புகையிரதசேவை

தினம் கொழும்பிலிருந்தும், காங்கேசன்துறையிலிருந்தும் 5 புகையிரதங்கள், அவற்றில் 3 கடுகதி சேவையில,; ஈடுபடுத்தப்பட்டன. சனிக்கிழமைகளில் மேலதிகமாக குளிரூட்டப்பட்ட புகையிரதம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. அத்தனை புகையிரதங்களிலும் பேத் பெட்டிகளும், சிலிப்பரேற் பெட்டிகளும் இணைக்கப்பட்டிருந்தன. இன்று புகையிரத சேவை முற்றாக நிறுத்தப்பட்டதுடன். 7 – 8 மணி நேரத்தில் செல்லும் பிரயாணத்திற்கு ஒரு முழு நாள் தேவையாகின்றது. உங்களுடைய சகாக்களால் யாழ்ப்பாண புகையிரத பாதையில் 160 கிலோ மீற்றரும் தலைமன்னார் பாதையில் 50 கிலோ மீற்றர் புகையிரத பாதையும் முற்றாக அழிக்கப்பட்டு அதிலிருந்து அகற்றப்பட்ட சிலிப்பர் கட்டைகள், தண்டவாளங்கள், கல் என்பன பங்கர்கள் அமைக்க பாவிக்கப்பட்டன. அதேகதியே தொலைபேசி கம்பங்களுக்கும் ஏற்பட்டன. இந்திய அரசின் உதவியுடன் மீளமைக்கப்பட்ட ரெயில் பாதை மீண்டும் முற்றாக அகற்றப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் செல்லும் கடிதங்கள் இன்று பலநாட்களாக வவுனியாவில் தேங்கிக்கிடக்கின்றன. இவற்றை ஏன் உங்களால் நிறுத்த முடியவில்லை.

12.இந்திய கப்பல் சேவை நிறுத்தம்
இந்திய கப்பல் சேவை இடைநிறுத்தத்திற்கு நீரே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். 300 ரூபாயுடன் சென்னை சென்று வந்த மக்கள் இன்று அப்பிரயாணத்திற்கு 20 ஆயிரம் செலவிடுகின்றார்கள.; நன்றி உங்கள் சகாக்களுக்கு

13.பலாலி திருச்சி விமான சேவை

தினம் கொழும்பு பலாலி திருச்சி சேவையில் ஈடுபடுத்தப்பட்ட விமானத்தை நிறுத்திய பெருமையும் உங்களுக்கே உரியதாகும். இன்று பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்காது தடுத்த பெருமையும் உமக்கே சேரும்.

14.மின்சாரம


கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம் உட்பட யாழ்ப்பாணத்தின் 80 வீத கிராமங்களுக்கு மின்சார விநியோகம் வழங்கப்பட்டிருந்தது. அதனை நிறுத்தி அத்தனை மின்சாரக் கம்பங்களும் தொலைபேசிக் கம்பங்களும் நீக்கப்பட்டு நொருக்கப்பட்டு பங்கர்கள் அமைத்து மக்களை பல ஆண்டு காலம் இருளில் வாழ வைத்தீர்கள். இதனால் விவசாயிகளையும், தொழிற்சாலைகளையும் வருவாயை இழக்கச் செய்த|Pர்கள.; நீங்கள் குடியிருக்கும் பங்கர்களில் ஒருநாளேனும் மின்சாரமி;ன்றி வாழ்ந்திருக்கின்றீர்களா?

நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறுகின்ற மக்களுக்கு நீங்கள் கொடுத்த துன்புறுத்தல் உளவியல் சித்திரவதை, மனச்சங்கடங்கள் என்பவற்றை எந்தளவிற்கு கொடுத்திருக்கிறீர்கள் என்பதை இப்போதாவது உணருகின்றீர்களா?
கால்நூற்றாண்டுக்கு மேல் உயிரிழப்புக்களையும் சொத்தழிவுகளையும் மக்களுக்கு ஏற்படுத்தினீர்களேயொழிய அவர்களுக்கு என்ன நன்மை செய்தீர்கள்? அவர்கள் எதிர் நோக்கியதெல்லாம் அவலங்களே!

15.கிளிநொச்சி

நான் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவேளையில் கிளிநொச்சித் தொகுதியை ஓர் தனி மாவட்டமாக்கினேன். நான் கிளிநொச்சி மக்களுடன் வாழ்ந்து வளர்ந்தவன். எனது முயற்சியால் அவர்களது கல்வியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. எனது விடாமுயற்சியினாலேயே இன்று பல டாக்டர்கள் இயந்திரவியலாளர்கள். பட்டதாரிகள் கிளிநொச்சியி;ல் உருவாக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி தனிமாவட்டமாக ஆக்கப்படும் வரை கிளிநொச்சியிலிருந்து ஒருவரேனும் பல்கலைக்கழகம் புகவில்லை. கிளிநொச்சியின் அபிவிருத்தி;க்கு என்னிடம் ஒரு திட்டம் இருந்தது. நான் அவர்களுடைய கிராம சபை தலைவராகவிருந்து, நகரசபை தலைவராக இருந்து பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டவன். பூனகரி மகாவித்தியாலயத்தில் கல்வி போதித்தவன், அப்பகுதி மக்கள் அனைவரது பெயர்களையும் அறிவேன். கிளிநொச்சியின் ஒவ்வொரு மூலைமுடுக்கும் பாடசாலைகளின் இருப்பிடமும் நன்கறிவேன். கிளிநொச்சி மக்களுக்கு நீர் செய்ததென்ன? அவர்களுடைய வாக்குரிமையை பறித்தீர். கிளிநொச்சியை உயிருக்குயிராக நேசித்த அவர்களது பாராளுமன்ற உறுப்பினரையும் ஒரு சமூகத் தொண்டனையும் இழக்கவைத்தீர். கிளிநொச்சி பிரதேசம் முழுவதும் கண்ணிவெடிகளை விதைத்து பலரை உயிரிழக்கவும் அங்கவீனர்களாகவும் ஆக்கினீர்கள். 15 ஆயிரம் அதிகப்படி வாக்குகள் பெற்று ஒரு அமைச்சரை தோற்கடித்த எனக்கு 187 வாக்குகள் பெற்றுத்தந்தீர்.

கிளிநொச்சியில் வாரம் இரு தடவை சந்தை கூடுவது வழக்கம். யாழ்ப்பாண உற்பத்திப்பொருட்கள் அத்தனையும் விற்பனைக்காக கிளிநொச்சிக்கு கொண்டுவரப்படும். இலங்கையின் பல பகுதியிலிருந்தும் சிங்கள வியாபாரிகள் தமது உற்பத்திப்பொருட்களை அங்கு கொண்டுவந்து விற்பர். கிளிநொச்சி மக்கள் மிகவும் செழிப்பாக வாழ்ந்தார்கள். இப்பொழுது அங்கு மக்களுக்கு மிஞ்சியுள்ளதெல்லாம் பாழடைந்த கட்டிடங்களும், பிரதேசம் பூராவும் விதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளுமே. அவர்களுக்கு இரும்புத்திரை ஆட்சியை கொடுத்திருக்கின்றீர்கள் அவர்களது ஜனநாயக உரிமைகள் அடிப்படை உரிமைகள் ஆகியன பறிக்கப்பட்டுள்ளன. அவர்களுடைய மனித உரிமைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அடிமைகள் போல் நடத்தப்படுகின்றார்கள். சிறுகுற்றங்களுக்கு கூட உங்களுடைய தடை முகாங்களிலும், இருட்டறைகளிலும் கொண்டு சென்று சித்திரவதை செய்கின்றீர்கள். அவர்களை சித்திரவதை செய்ய உமக்கோ உமது சகாக்களுக்கோ என்ன உரிமை இருக்கின்றது? உங்களுக்கு அந்த உரிமையை தந்தவர்கள் யார்? உம்மிடமுள்ள ஆயுதபலத்தால் அவர்களை ஆளுகின்றீர்கள். உங்களுடைய சித்திரவதைக்கு ஆளாகி இறந்தவர்கள் பலர். நீங்கள் உங்களுடையபிள்ளைகளை உயர்கல்விகற்க வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு ஏழை மக்களின் பிள்ளைகளை பலாத்காரமாக படையில் இணைத்திருக்கின்றீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கு இந்த வசதியை செய்து கொடுத்த நாடுகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றி உலகம் முழுக்கப் பேசப்படுகின்றது. அத்தகைய குற்றச்சாட்டுக்கள் அரசுக்கெதிராகவோ அல்லது வேறு குழுக்களுக்கு எதிராகவோ இருப்பின் தங்கள் பெயரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவர்களுடையது. ஆனால், உமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இடம்பெறும் சிறுவர்களை கட்டாயப்படுத்தி படையில் இணைத்தல், ஆள்கடத்தல், கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவை பற்றி கடந்த சில ஆண்டுகளாக நான் முறையிட்டும் சர்வதேச சமூகம் ஏன் பொருட்படுத்தவில்லை என்று நான் அறிய விரும்புகின்றேன்.

உங்களிடம் சம்பளத்திற்கு வேலை செய்கின்ற அல்லது சில சலுகைகளை பெற்று வேலை செய்கின்ற உங்கள் முகவர்கள் பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் பிர்ச்சாரம் செய்கின்றார்கள். அவர்களுக்கு ஒரு தடவை கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட வடக்கிலும் கிழக்கிலும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு விஜயம் செய்து மக்கள் அங்கு எவ்வாறு நடத்தப்படுகின்றார்கள் என்பதை அறிய அவர்கள் ஏன் யோசிக்கவில்லை? தம் பிள்ளைகளை விடுதலைப்புலிகள் சிறுவர் படையில் சேர்ப்பதை வன்மையாக எதிர்த்த பெற்றோர்கள் பலமாகத் தாக்கப்பட்ட கொல்லப்பட்ட சம்பவங்கள் பல நடந்துள்ளன. பலாத்காரமாக ஆள் சேர்ப்பதை ஆட்சேபித்து சிலர் தற்கொலை கூட செய்துள்ளனர். பகல் நேரத்தில் ஒளித்திருந்து விட்டு இரவு வேளை வீட்டுக்கு வருகின்ற பிள்ளைகளை காத்திருந்து பலாத்காரமாக கொண்டு செல்கின்றனர். சர்வதேச சமூகத்திற்கு உமது கட்டுப்பாட்டு பகுதிக்கு விஜயம் செய்ய அனுமதி இல்லாமையால் உமது நிர்வாகத்தில் திருப்தியடையாத மக்கள் தப்பிச் செல்லக் கூடியதாக ஏன் உங்கள் மீது அழுத்தம் கொண்டுவர முடியாது? சர்வதேச சமூகத்தை தவறான வழிக்கு இட்டுச்செல்லாமல் ஐரோப்பா நோர்டிக் நாடுகள் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் செயற்படும் உங்கள் முகவர்களை உங்கள் தலைமையகத்திற்கு திரும்பும்படி அறிவியுங்கள். உமது கட்டுப்பாட்டின் கீழ் வாழுகின்ற மக்கள் சுதந்திரமடைய விரும்புகின்றார்கள். அவர்களின் பிள்ளைகள் வெளியுலகத்தை காண ஆசைப்படுகின்றார்கள். அவர்களுடைய பிள்ளைகள் புகையிரதத்தை கண்டதோ, அதில் பிரயாணம் செய்ததோ இல்லை. ஒரு சிங்களவரையோ ஒரு இஸ்லாமியரையோ அவர்கள் பார்த்ததில்லை. அவர்களுக்கு எதுவிதமான பொழுதுபோக்குமில்லை. அவர்களுடைய உரிமைகளை மறுத்து எதற்காக அவர்களை அடிமைகளாகப் பாவிக்கின்றீர்கள். அவர்களுடைய பிரயாணம் திருமணம் கல்வி வாழ்க்கைமுறை போன்ற விடயங்களில் எதற்காகக் கட்டுப்பாடு விதிக்கின்றீர்கள்

நீங்கள் ஒரு கூட்டம் பினாமி பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கின்றீர்கள் அவர்களின் ஓரே கடமை உங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதும் உங்களுக்காகப் பேசுவதும் மட்டுமே. இலங்கையிலும் இந்தியாவிலும் மட்டுமல்ல உலகின் பெரும்பகுதியான நாடுகளில் உள்ள தமிழ் இலத்திரனியல் அச்சு ஊடகங்கள் உங்களையும் உங்களது சகாக்களையும் பெருமைப்படுத்துவதிலேயே ஈடுபட்டுள்ளார்கள். உங்களுக்கு விரோதமாக ஒரு வார்த்தை எழுதவோ பேசவோ துணிவின்றி வாழ்கின்றார்கள். அவர்கள் பெருமளவில் உண்மையை எழுதாது மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களை கீழ்த்தரமாக விமர்சிப்பதிலேயே ஈடுபட்டுள்ளனர். உம்மை கிண்டல் செய்வதோ அம்பலப்படுத்துவதோ எனது நோக்கமல்ல. நீர் உமது வழிமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றே கேட்டுக்கொள்கின்றேன். தமிழீழம் கிடைக்காதென்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். சர்வதேச சமூகமோ அல்லது இந்தியாவோ அதை என்றும் அனுமதிக்கப்போவதில்லை. அவர்களுடைய ஒத்தாசை இன்றி அது அடையக் கூடியதும் அல்ல. ஆகவே அதை மறந்துவிடுங்கள். தமிழீழம் அடையக் கூடியது என்று மக்களை நம்ப வைக்க உம்மால் முடியாது. உமது முகவர்களாக செயற்படுபவர்களும் உமது கொள்கைகளை பரபபுபவர்களாக செயற்படுகின்றவர்களும் உண்மையானவர்களல்ல. சொந்த நலனுக்காக வியாபாரமாகவே அதைச் செய்கின்றார்கள். தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி வசதியை செய்து கொடுத்து தாமும் ஆடம்பரமாக வாழுகின்றார்கள். உங்களை ஆதரிக்கின்ற தமிழ் நாடு அரசியல் வாதிகளும் அவ்வண்ணமே. உம்மை ஆதரிக்கின்ற பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உமது கொள்கையில் நம்பிக்கை வைத்தல்ல, உமது மூலமாக தமிழர்களின் வாக்குகளை பெறவேண்டும் என்ற சுயநல நோக்கில் மட்டுமே. அரச சேவையிலும் தனியார் துறையிலும் சிறுபான்மையினரின் வேலைவாய்ப்புக்கள் மிகவும் குறைந்து வருகின்றன. 50வருட அகிம்சை போராட்டமும் 25வருட ஆயுதப்போராட்டமும் எம்மை இருந்த இடத்திற்கே கொண்டுவந்து விட்டுள்ளது. தமிழ் இஸ்லாமிய மக்களின் பொருளாதாரம் சீரழிந்துவிட்டது. போக்குவரத்து வசதியின்மையும், ஏ 9 பாதையில் உம்மால் விதிக்கப்படும் கடும் வரியும் விவசாயத்திற்கும், மீன்பிடிக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. மின்சார விநியோகம் தடைப்பட்டதாலும் தொழிற்சாலைகள் கைத்தொழிற்பேட்டையும் அழக்கப்பட்டமையாலும் கைத்தொழில் முழுவதுமாக அழிக்கப்பட்டு மக்கள் அரசின் உதவியிலேயே வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அரச சேவைக்கு சேர்க்கப்படும் சிறுபான்மையினரின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் இளைப்பாறிய ஊழியர்களுடன் அரச சேவை நடைபெறுகின்றது. இராணுவம், கடற்படை, ஆகாயப்படை மற்றும் பொலிஸ் ஆகிய துறைகளில் தமிழர்கள் வேலைவாய்ப்பு பெறுவதை மிரட்டல் மூலம் வெற்றிகரமாக தடுத்து விட்டீர்கள். இந்நிலையில் மக்கள் என்ன செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கின்றீர்கள்?

தமிழீழம் பகல் கனவு என்று தெரிந்தும் ஏன் தொடர்ந்து பலரின் உயிரை பலிகொடுக்கின்றீர்கள், பல விதவைகளையும் அனாதைகளையும் உருவாக்குகின்றீர்கள். சிங்களவர்களோ தமிழர்களோ அல்லது வேறு எந்த இனத்தவர்களோ அவர்களது சொத்துக்களையும் அரச சொத்துக்களையும் அழிக்கின்றீர்கள். நான் கூறியவை எல்லாவற்றையும் கவனத்திலெடுத்து ஐக்கிய இலங்கைக்குள் சமஸ்டி முறையிலான ஒரு தீர்வை ஏற்கக் கூடிய வகையில் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடுவதாக அறிவியுங்கள். அவ்வாறு செய்வீர்களேயானால் பெருந்தொகையான சிங்கள மக்களும் ஏனையோரும் முழு ஆதரவு வழங்குவர். இந்தியாவும் அதற்கு ஆதரவு கொடுக்கும் வேளையில் சர்வதேச சமூகம் அதற்கு ஆதரவாக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும். சிங்கள மக்களுடைய சிந்தனையை நான் அறிவேன். அத்தகைய ஒரு தீர்வுக்கு நீங்கள் உடன்படும் பட்சத்தில் இதுவரை சமஸ்டியை எதிர்த்தவர்கள் கூட நிச்சயமாக தமது நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்வார்கள்

உமது நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கும் அரசுக்கும் ஏற்பட்ட சொத்தழிவுகளை அமைதியாக தனிமையில் ஓர் இடத்தில் இருந்து கணக்கிட்டுப் பாருங்கள். அத்தகைய அழிவினுடைய பெறுமதி உங்களுக்கு அதிர்ச்சியைக்கொடுக்கும். நாட்டுக்குத் தேவையான உட்கட்டமைப்பு, பெருந்தெருக்கள் மற்றும் வீதிகள் பாடசாலைகள் தொழிற்சாலைகள் இன்னும் பல வசதிகளோடு வேலையற்ற அனைவருக்கும் தொழில் வாய்ப்பு முதலியவற்றுக்கு போதுமானதாயிருக்கும். பல்வேறு நாடுகளினுடைய உதவிகள் வந்து குவியும். புதிதாக அமையும் சொர்க்க பூமியில் நாமெல்லோரும் மனநிறைவேடும் ஒருவரை ஒருவர் மதித்தும் அன்பு செலுத்தியும் வாழ முடியும்.

மேலும் நாட்டு நிர்வாகத்தில் ஒரு கணிசமான பங்களிப்பை நீர் பெறுவதன் மூலம் ஐக்கிய இலங்கைக்குள் சமாதான முறையில் உமது கனவை நிறைவேற்ற முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக பல்வேறு நாடுகளிலும் சிதறிக்கிடக்கும் எமது உறவினர்கள் தாம் சேர்த்து வைத்திருக்கின்ற சொத்துக்களோடு நாட்டுக்கு திரும்பி நாட்டை கட்டியெழுப்பவும் உதவுவர்.

இந்த கடித்த்தை உமக்கு எழுதுவதன் ஒரு நோக்கம் தமிழ் மக்கள் இதுவரை காலம் அனுபவித்து வந்த கஸ்டங்கள் துயரங்கள் பற்றியும் இழந்த சொத்துக்கள் பற்றியும், சிங்கள மக்களுக்கு தெரியவைத்து அவர்களது கண்களையும் திறக்க வைப்பதற்குமாகும்.



வீ.ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி


Saturday, June 23, 2007

இஸ்லாமிய இலக்கிய கழக செயலாளர் ஹிதாயத்துல்லாவின் அறிக்கைக்கு பதில்- கசப்பான பதிவு

அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாடு இலங்கை ஒருங்கிணைப்பாளர்கள் ஒத்துழைப்பு தரவில்லையென்ற குற்றச்சாட்டு அப்பட்டமான பொய்
[22 - June - 2007] [Font Size - A - A - A]

* இஸ்லாமிய இலக்கிய கழக செயலாளர் ஹிதாயத்துல்லாவின் அறிக்கைக்கு பதில்

-ஜின்னா ஷரிபுத்தீன்-

ஒரு சர்வதேச மாநாட்டைத் திட்டமிடுவதற்குத் தெரியாமல் நடத்திவிட்டு இந்தியாவில் மட்டுமன்றி இலங்கையிலும் கூட தன்னிலை விளக்கம் அளிக்கும் பரிதாபம் சகோதரர் ஹிதாயத்துல்லாஹ்வுக்கு நேர்ந்திருக்கிறது.

அவரது அறிக்கை சோடிக்கப்பட்ட அப்பட்டமான பொய்களால் ஆனது என்பதை இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்று மாநாட்டில் கலந்து கொண்டோர் தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளதால் அவரது நியாயங்கள் இலங்கையில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை முதலில் அவருக்கும் அவருடைய `இலங்கைப் பினாமி' களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அவரது அறிக்கையில் சொல்லப்பட்ட விடயங்களின் உண்மைத் தன்மையை அம்மாநாட்டின் இலங்கை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவன் என்ற முறையில் தெளிவு படுத்த வேண்டியது எனது கடமையாகும்.

இலங்கை ஒருங்கிணைப்பாளர்களில் இரு பிரிவுகளாகப் பிரிந்து தாங்களாகவே இலங்கைப் பத்திரிகைகளில் தனித் தனி அறிக்கை வெளியிட்டிருந்தனர் என்று ஹிதாயத்துல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.

என்னையும் அஷ்ரஃப் சிஹாப்தீனையும் நண்பர் எஸ்.முத்து மீரானையும் ஒருங்கிணைப்பாளர்களாக அவர்கள் நியமித்திருந்தனர். எனக்கும் அஷ்ரஃப் சிஹாப்தீனுக்குமான கடிதத்தை எனது முகவரிக்கே அனுப்பியிருந்தனர். இந்த நியமனம் நடக்குந் தருணத்தில் எஸ்.முத்து மீரான் சென்னையில் இருந்தார். அவரது கடிதம் அங்கு வைத்தே வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வந்த எஸ்.முத்து மீரான் தினகரன் பத்திரிகையில் இது குறித்து ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அப்பேட்டியில் தன்னுடன் சேர்ந்து என்னையும் அஷ்ரஃப் சிஹாப்தீனையும் ஒருங்கிணைப்பாளர்களாக மாநாட்டுக் குழுவினர் நியமித்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். எங்களுக்கான கடிதம் வந்த போது மாநாட்டுக்குச் செல்ல விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளலாம் என்று செய்தி கொடுத்தோம். எஸ்.முத்து மீரான் கிழக்கில் இருந்தார். நாங்கள் கொழும்பில் இருந்தோம். விபரம் கோரியவர்களிடம் அவர்களது வசதிக்கேற்ப அவரையோ எங்களையோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தோம்.தொலைக்காட்சிப் பேட்டிகளின் போதும் வானொலிப் பேட்டிகளின் போதும் நானும் அஷ்ரஃப் சிஹாப்தீனும் இதைத் தவிர வேறு எதையும் பிரஸ்தாபிக்கவில்லை என்பதை இந்நிகழ்ச்சிகளைப் பார்த்தும் கேட்டும் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அறிவார்கள்.

இதற்கிடையில் இந்திய இலக்கியவாதிகளால் ஒதுக்கப்பட்ட ,இந்தியாவில் தானே பிரபல்யம் மிக்க இலங்கை எழுத்தாளன் என்று பீத்திக் கொள்கிற ஓர் இலக்கியக் கோமாளியின் நச்சுக் கருத்துக்களை அறிந்தோ அறியாமலோ உள்வாங்கிக் கொண்ட ஒரு பத்திரிகையாளர் தப்பான கருத்துக்களை வெளியிட்டுச் சிண்டு முடிவதற்கு முயற்சித்தார் என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட்டேயாக வேண்டும்.

இதில் ஹிதாயத்துல்லாஹ் சொல்வது போன்ற அறிக்கைகளை எந்தப் பத்திரிகைகளுக்கும் நாமோ நண்பர் முத்துமீரானோ கொடுத்திருக்கவில்லை. செய்திக்கும் அறிக்கைக்கும் இடையில் வித்தியாசம் தெரியாத அவர் இம் மாநாட்டின் செயலாளராகச் செயற்பட்டிருக்கிறார் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

பிரிந்திருந்தஎம்மை ஒற்றுமைப்படுத்துவதற்காக இலங்கைக்கு வந்ததாக ஒரு பொய்யை அவர் எழுதியுள்ளார். எமக்குள் அப்படி ஒரு பிரிவினை இருக்கவில்லை. அவர் ஓர் ரெண்டுங்கெட்டான் அரசியல்வாதியாக இருப்பதால் இலங்கைக்கு யசூசி அகாஸி ,எரிக் சொல்ஹெய்ம் போன்ற சமாதானத் தூதுவர்கள் வந்து செல்வதால் தானும் ஒரு சமாதான தூதுவராகப் போய்வர வேண்டும் என்று ஒர் அற்ப ஆசை அவருக்குள் இருந்திருக்கலாம்.

ஸஹீஹ் முஸ்லிம் என்ற ஹதீஸ் கிரந்தத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு விழாவுக்குவிக்கோ,றஹ்மத் அறக்கட்டளையின் அழைப்பில் இலங்கை வருகிறார் என்பதாலும் கவிக்கோவும் மாநாட்டு முக்கியஸ்தர் என்பதாலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாநாட்டுக்குப் பணம் சேர்ப்பதற்காக -அவரது பாஷையில் சொல்வதானால் மாநாட்டின் பெயரால் பிச்சை எடுப்பதற்காகவே - ஹிதாயத்துல்லாஹ் இலங்கை வந்தார். புரவலர் ஹாஷிம் உமர் மற்றும் வர்த்தகர் பாயிக் மக்கீன் போன்றவர்களிடம் உதவிப் பணம் பெற்றுத் தருமாறு அவர் என்னை வற்புறுத்தினார்.வேறு செல்வந்தர்களிடம் பணம் கறக்க முடியுமாயின் கறந்து தரும்படியும் வேண்டுகோள் விடுத்தார். முடியாத பட்சத்தில் அவர்களது தொலைபேசி இலக்கங்களையாவது தாருங்கள் என்று என்னிடம் கேட்டார்.

இது பற்றி நான் புரவலர் ஹாஷிம் உமரிடம் தகவல் தெரிவித்தேன். அவர் இது பற்றி எக்கருத்தையும் வெளியிடவில்லை. ஏற்கனவே இலங்கை வந்த ஒரு பிரபல்யம் மிக்க இந்திய இலக்கியவாதியினால் ஏற்பட்ட கசப்புணர்வு அவர் மனதில் இருப்பதை நான் அறிவேன்.ஆனால் ஒரு விடயத்தை நிச்சயமாக என்னால் குறிப்பிட முடியும். இலங்கைப் புரவலர்கள் பணம் இறைத்திருந்தால் அழைப்பிதழில் அவர்களது பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும். ஏனெனில் பணம் சேர்ப்பதே ஹிதாயத்துல்லாஹ்வின் முழு நோக்கமுமாக இருந்தது.; கடந்த காலங்களில் மாநாடு நடத்துவதற்கு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் எந்தவொரு செயலாளரும் இவரைப்போல் யாசகம் கேட்டு தெருத் தெருவாக அலைந்தது கிடையாது.

இலங்கைக்கு வந்து அமைச்சர் ரவூப் ஹக்கீமையும் அவர் சந்தித்தார். அவரிடமும் கூட பணம் சேர்த்துத் தாருங்கள் என்றுதான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிணங்க அமைச்சர் ரவூப் ஹக்கீம் பெற்றுக் கொடுத்த `சன்டெல்' மற்றும் `ஹட்ச்' நிறுவனங்களின் விளம்பரங்களை நீங்கள் மாநாட்டு மலரில் காணலாம்.

பேராளர்களிடம் சேர்த்த பணத்தை தங்குவதற்கான அறைகள் ஒதுக்கிக் கொண்டிருந்த வேளை அவர்கள் கேட்டும் கூட நாங்கள் கொடுக்கவில்லை என்று ஒரு பெரும் பொய்யை ஹிதாயத்துல்லாஹ் சொல்லியிருக்கிறார்.

எம்முடைய பட்டியலில் உள்ளடங்கியிருந்த 75 பேரில் 56பேர் எங்களுடன் ஒரே விமானத்தில் வந்தவர்கள். இவர்கள் அனைவரும் பேராளர் கட்டணத்தை விமானக் கட்டணத்தோடு சேர்த்து எமக்குச் செலுத்தியிருந்தார்கள். மீதிப் பத்தொன்பது பேரும் மாநாட்டில் எம்முடன் இணைந்து கொள்வதாகத் தெரிவித்து விட்டு சில தினங்கள் முன்பதாகவே இந்தியா சென்றுவிட்டனர். இவர்களில் சிலர் மட்டுமே உரிய வேளையில் பேராளர் கட்டணம் செலுத்தியவர்கள். ஏனையோர் எம்மைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்காததால் இந்தியாவில் வைத்து அதனைச் செலுத்துவதாகத் தெரிவித்திருந்தனர். வந்த முதல் நாளிலேயே தங்கும் அறைக்காக விடுதி விடுதியாக அலைந்து திரியும் போது அவர்களிடம் பணம் கேட்டு நிற்பது அநாகரிகம் என்பதால் அடுத்த தினமே அதனைச் சேகரிக்கத் தொடங்கினோம்.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் நெறியாளர்கள் ஐந்து பேர். துணைத்தலைவர்கள் ஒன்பது பேர், துணைச்செயலாளர்கள் ஒன்பது பேர், தவிர தலைவர், செயலாளர், துணைப்பொதுச்செயலாளர், பொருளாளர் என நான்கு பேர், இவர்களில் பொருளாளரைத் தவிர வேறு எவரும் எமது பக்கமே தலைவைத்து கூடப்படுக்கவில்லை. இவர்களில் பொறுப்புள்ள ஒருவர் வந்து அப் பணத்தைக் கேட்டிருந்தாலோ அல்லது ஒரு நபரை அனுப்பி பணத்தை அனுப்பக் கோரியிருந்தாலோ நாம் அதனைக் கொடுத்திருப்போம். ஏனெனில் நமது நாட்டைச் சேர்ந்த எந்தப் பேராளரும் பிச்சைக்காரர்கள் அல்லர் என்பதால் அவர்களுக்கான பணத்தை மாநாட்டை நடத்துவோரிடம் கொடுத்து விட்டுப் பின்னர் பெற்றுக் கொள்ளத் தயாராயிருந்தோம்.

அப்படியாயின், பணத்தை உங்களைப் பார்க்க வந்த பொருளாளரிடம் கொடுத்திருக்கலாமே' என்று நீங்கள் நியாயமான ஒரு கேள்வியைக் கேட்க முடியும்.` திட்டமிட்டே என்னை ஓரம் கட்டினார்கள்' என்ற தலைப்பில் சமரசம் 16 -30 ஜூன் இதழில் பொருளாளர் சொல்லியிருக்கும் வார்த்தைகளை இங்கு தருவதன் மூலம் இக் கேள்விக்கான தெளிவான விடை உங்களுக்குக் கிடைக்கும்.அவர் இவ்வாறு சொல்கிறார்....

"....பேராளர் கட்டணத் தொகை மற்றும் விளம்பரத்திற்காக கிடைத்த தொகை மட்டுமே வங்கியில் இருந்தது; புரவலர்களிடமிருந்து கிடைத்த தொகைக்கான விபரங்களை அவர்கள் என்னிடம் தெரிவிக்கத் தயாராக இல்லை. இந்நிலையில் `செக்'கில் (காசோலை) கையெழுத்துப் போட்டு மொத்த `செக் புக்' கையும் எங்களிடம் தந்து விடுங்கள். நீங்கள் கணக்கை எழுதிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.

ஆனால் நான் ஒரேயடியாக எல்லா ஆவணங்களையும் செக் புக்கையும் தலைவரிடம் ஒப்படைத்து விட்டு வெளிவந்து விட்டேன்.அதன் பிறகு அவர்கள் என்ன வசூல் செய்தார்கள், என்ன செலவு செய்தார்கள் என்ற விபரம் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. நான் பெயருக்குத்தான் பொருளாளர்"

அவரது பதில் மூலம் நாம் தெரிந்து கொள்வது ,உண்மையில் இலங்கையருடன் இருந்த நட்பின் பேரில் தான் அவர் அங்கு வந்து நலம் விசாரித்தாரே தவிர,பொருளாளராக அல்ல.

இதேவேளை கவிக்கோவும் தலைவர் கெப்டன் அமீர் அலியும் செயலாளர் ஹிதாயத்துல்லாஹ்வும் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் பொருளாளரிடம் வெற்றுக் காசோலையில் கையெழுத்திட்டு தரக்கேட்டதைக் கொண்டு ஓரளவு புரிந்துகொண்டிருப்பீர்கள்.

பேராளர் பணத்தைத் தந்தால்தான் வசதிகள் யாவும் செய்து தரப்படும் என்று ஒரு வார்த்தை எமக்கு ஏற்கனவே சொல்லப்பட்டிருக்குமாக இருந்தால் அதனை இலங்கையிலிருந்தே நாம் அனுப்பி வைத்திருப்போம். 15 500 ரூபாவுக்கு விமானச் சீட்டு வாங்க முடிந்த நமது நாட்டுப் பேராளர்களுக்கு பேராளர் கட்டணமான 660 ரூபாயைத் தருவது சிரமமானது என்று நாங்கள் எண்ணவில்லை.அந்தப்பணம் அத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதியிருந்தால் சென்னை விமான நிலையத்தில் நாம் விமானத்தை விட்டு இறங்கும் போது ஹிதாயத்துல்லாஹ் அங்கு நின்று அதை வாங்கிச் சென்றிருக்கலாம்.

காயல்பட்டினத்தில் நடைபெற்ற மாநாட்டுக்கு நாங்கள் கப்பலில் சென்று இறங்கிய போது மண்டபம் என்ற இடத்தில் எம்மை வரவேற்க வந்திருத்த மாநாட்டுப் பொறுப்பாளர்களில் ஒருவரான மர்ஹூம் ஜமால்தீன் என்னிடம் பேராளர் கட்டணத்தை அறவிட்டு மொத்தமாக தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டார். அதன்படி அனைத்துப் பேராளர்களிடமும் அதனை அறவிட்டு மாநாட்டு மண்டபத்தில் வைத்து அதனை ஒப்படைத்தது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.

உணவுக்காக கூப்பன் இல்லாத வரிசைகளை உருவாக்கியதாக ஹிதாயத்துல்லாஹ் மற்றொரு பொய்யையும் சொல்லியிருக்கிறார். விபரம் வேண்டுபவர்கள் இலங்கையிலிருந்து சென்ற பேராளர்களைத் தொடர்பு கொண்டு ஹிதாயத்துல்லாஹ்வின் வார்த்தைகளின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளலாம்.

40 பேரை அழைத்து வந்த குழுவினர்களில் ஜனாப் நிலாம் தலமையில் வந்த15 நபர்கள் என்று அவரது அறிக்கையில் சொல்கிறார். ஒரு குழுவினர் 75 பேர்களை அழைத்து வந்தவர்கள் என்று ஒரு இடத்திலும் மீதம் இருபத்தைந்து பேர்களை அழைத்து வந்தவர் என்று மற்றொரு இடத்திலும் சொல்கிறார். அவரது அறிக்கையின் ஓரிடத்தில் இலங்கைப் பேராளர்களை அழைத்து வந்த குழுத் தலைவர் இடையூறுகளைச் செய்து கொண்டே இருந்தார் என்று சொல்கிறார்.அவர் எத்தனை பேரை அழைத்து வந்த்து எந்தத் தலைவர் என்று குறிப்பிடாததால் இது குறித்து நம்மால் பதில் தர முடியாது. தவிரவும் சகட்டு மேனிக்கு இடையூறுகள் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இருந்த போதும் அந்தக் குழுவுக்குத் தலைமை வகித்தது நாம் அல்லர்.

இதற்குள் இருக்கும் எனது வினாக்கள் எவையென்றால் விரும்பியவரெல்லாம் ஆளுக்கு ஒரு குழுவை அழைத்து வர முடியும் என்றால் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டது எதற்காக? 40 பேரைஅழைத்து வந்தவர் எந்த ஒருங்கிணைப்பாளர்?

நிலாம் சரியாக நடந்துகொண்டார் என்று குறிப்பிடும் ஹிதாயத்துல்லாஹ் ஒர் இலங்கைப் பேராளனாக இருந்து மாநாட்டில் இலங்கையருக்கு ஏற்பட்ட அசௌகரியங்களைக் குறித்து நிலாம் எழுதிய விடயங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர் எழுதிய கட்டுரைகள் 2007.06.10 ம், 17 திகதிய `தினக்குரல்' பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன. ஹிதாயத்துல்லாஹ் எவற்றை மறைக்க முயற்சிக்கின்றாரோ அவற்றை நண்பர் நிலாம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். நண்பர் நிலாமை சரி கண்டார் என்றால் ஹிதாயத்துல்லாஹ்வின் அறிக்கை பொய்களால் ஆனது என்பதை அவர் ஏற்றுக் கொள்கிறார் என்றும் அர்த்தப்படும்.

ஹிதாயத்துல்லாஹ்வின் அறிக்கையில் உள்ள உச்சக் கட்ட நகைச்சுவையாக நான் கருதுவது `ஜின்னாஹ்வுக்குப் பொற்கிழி வழங்குவதென யாரும் வாக்களிக்கவில்லை' என அவர் தெரிவித்திருப்பது. நான் பொற்கிழி வழங்கக் கோரினேன் என்பதை அவர் முதலில் நிரூபிக்க வேண்டும்.அவர் இலங்கைக்கு வந்திருந்த போது பயணத்துக்கு வாகன ஏற்பாடுகளை இலவசமாகச் செய்து கொடுத்தவன் நான். எனது சொந்தப் பணத்தில் மாநாடு பற்றிய கூட்டத்தை நடத்த தமிழ்ச் சங்கத்தில் மண்டபம் ஏற்பாடு செய்தவன் நான். இலங்கையில் அவர் நின்ற நாட்களி&#

Tuesday, June 19, 2007

வளைந்து கொடுக்காத மனிதர் பிரபாகரன்- புலிகளை பலவீனமாக்குவது மட்டும்தான் நோக்கம்-நிலங்கள் அல்ல: கோத்தபாய ராஜபக்ச


[செவ்வாய்க்கிழமை, 19 யூன் 2007, 14:05 ஈழம்] [சி.கனகரத்தினம்]

தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்- வளைந்து கொடுக்காத மனிதர். நிலங்களைக் கைப்பற்றுவது இராணுவத்தின் இலக்கல்ல. விடுதலைப் புலிகளை பலவீனமாக்குவதுதான் எமது நோக்கம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு வார ஏடு ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்:

முன்னைய ஈழப் போர்களின் போதைய இராணுவ நடவடிக்கைகளுக்கும் தற்போதைய நிலைமைக்கும் பாரிய வித்தியாசம் உள்ளது. இராணுவ உத்தி என்பது இராணுவத்தினர் தொடர்பானது. இராணுவத்தினருக்கு நான் சுதந்திரம் அளித்திருக்கிறேன். இராணுவ உத்தியை வகுப்பது என்பது முற்றாக முப்படைகளின் தளபதிகளிடம் உள்ளது. மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்ட உடன், நிலைமைகளை முழுமையாக ஆய்ந்து உத்திகளை வகுத்தோம். இராணுவ உத்திகளில் எதுவித அரசியல் தலையீடும் இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். இராணுவத்தினரை முப்படைகளின் தளபதிகளே கையாளுவதால் நல்ல வெற்றி கிடைத்துள்ளது. முதல் முறையாக தற்போதைய முப்படைகளின் தளபதிகளும் முன்னைய பாரிய இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள். இராணுவத்தின் மிகக் கீழ் நிலையினரைக் கூட இராணுவ உத்தியில் பங்கேற்க வைத்துள்ளோம்.

முன்னைய இராணுவ நடவடிக்கைளின் மூலம் தற்போதைய இராணுவ தளபதி, எதிரிகளின் வியூகம், எதிரிகளின் இருப்பிடம் ஆகியவற்றை நன்கு அறிந்து வைத்துள்ளார். களத்தை நன்கு கற்றவர். எதுவிதத் தலையீடும் இல்லாமல் இராணுவம் தனது வளங்களைப் பயன்படுத்த அனுமதித்திருக்கிறோம். இத்தகைய அணுகுமுறையால் நல்ல வெற்றிகளை ஈட்டியிருக்கிறோம். உதாரணமாக கிழக்கை எடுத்துக் கொண்டால் முன்னரை விட எதிரிகளின் ஆயுதங்களை பெருமளவில் நாங்கள் கைப்பற்றியிருக்கிறோம். விடுதலைப் புலிகளுக்கு இழப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறோம். கடந்த 3 மாதங்களில் 70-க்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உடல்களை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் ஒப்படைத்துள்ளோம். விடுதலைப் புலிகள் பெரும் எண்ணிக்கையில் சரணடைந்தும் வருகின்றனர். முன்னரை இதுவிட மாறுபட்ட நிலைமைகளையே இது எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில் சிறந்த நிர்வாகம், சிறந்த தந்திரோபாயம், சிறந்த தலைமைத்துவமே காரணம். அதனாலேயே நமக்கு இழப்புகளும் குறைவு.

நாம் டாங்கிகளை இழக்கவில்லை- வானூர்திகளை இழக்கவில்லை- இராணுவத்தினரை இழக்கவில்லை என்று பல இராணுவ அதிகாரிகள் என்னிடம் கூறியுள்ளனர். இராணுவத்தின் கட்டுப்பாட்டுணர்வு அதி உயர்வானது. அத்தகைய உயர்ந்த கட்டுப்பாட்டுணர்வு இருக்கும் நிலையில் நாம் நல்ல முறையில் இயங்க முடியும். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுணர்வை நீடிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. எவர் ஒருவரும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுணர்வை- மன உறுதியைச் சீர்குலைக்கக் கூடாது. இதுவிடயத்தில் நாம் கவலை கொள்கிறோம். நீங்கள் இராணுவத்தினரினது மன உறுதியை சீர்குலைத்தால் இராணுவத்தினர் தங்களது உயிரைக் கொடுக்க நேரிடும் என்பதை நீங்கள் நினைவு கொள்ளுங்கள். எப்போது இராணுவ வீரரின் மன உறுதியை நீங்கள் சீர்குலைக்கிறீர்களோ அப்போது நம்பிக்கையோடு எதிரிக்கு முகம் கொடுக்க முடியாது போய்விடும். எப்போது மன உறுதியோடும் கட்டுப்பாட்டுணர்வோடும் நிற்கிறானோ அப்போது நம்பிக்கையோடு எதிரியை எதிர்கொள்வான். ஆகையால் சில்லறை இலாபங்களுக்காக அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட எவருமே இராணுவத்தினரின் மன உறுதியையும் கட்டுப்பாட்டையும் சீர்குலைக்க வேண்டாம்.

இராணுவம் சுதந்திரமாக இயங்கும் அதே நேரத்தில் அரசியல் ரீதியாக நாட்டுக்குத் தலைமை வகிக்கும் அரச தலைவருக்கு இராணுவ உத்தி தெரியாது. ஆகையால் அவர் தலையிடாமல் இருக்க வேண்டும். முப்படைகளின் தலைவராக இருக்கும் அரச தலைவர் வழிகாட்டுதல்களை மேற்கொண்டாலும் போர் நடவடிக்கைகள், ஆட்சேர்ப்பு, உத்திகள் அனைத்துமே இராணுவத்தினரிடம்தான் இருக்க வேண்டும்.

இந்த நாட்டை ஒரு பயங்கரவாத இயக்கம், பிளவுபடுத்தி அறவிடுதலை அனுமதிக்க முடியாது. நாட்டைப் பாதுகாக்க வேண்டியது அரச தலைவரின் கடமை. அதற்காகத்தான் மக்கள் அவரைத் தெரிவு செய்துள்ளனர். பல்வேறு நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறிலங்காவின் இராணுவச் செலவு அதிகம் இல்லை. இராணுவத்துக்கு மிகக் குறைவாக செலவு செய்து அதிக அபிவிருத்தியைப் பெறுவதுதான் நாட்டுக்கு நன்மையானது. அதே நேரத்தில் அண்மைய அனைத்துலக நடப்புகளைப் பார்த்தால் ஒவ்வொரு நாடுமே தனது பாதுகாப்பு குறித்து கவலை கொள்கிறது. உலகம் முழுவதும் கொடிய பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்களிடையே வேறுபாடு ஏதும் இல்லை. அவர்கள் ஒரு நாட்டின் இராணுவச் செலவுகளை மட்டும் அதிகரிக்கச் செய்யவில்லை. பொருளாதார ரீதியாகவும் பெரும் நாசம் செய்கின்றனர். காப்பீடுகள், கடனுதவிகள் என அனைத்துலக அமைப்புகளையும் நெருக்கடிகளுக்குள்ளாகின்றனர். இந்தச் சூழ்நிலைகளினால் நாம் நமது நாட்டின் பாதுகாப்பு குறித்து அலட்சியமாக இருந்துவிட முடியாது. நமது நாட்டின் பாதுகாப்பை நாம் தியாகம் செய்துவிட முடியாது.

இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுத்து அனைத்துலகிலிருந்து சிறிலங்காவை தனிமைப்படுத்த விடுதலைப் புலிகள் முயற்சிப்பதை நாங்கள் புத்திப்பூர்வமாக கையாளுவோம். ஆனால் அதற்கு முன்னர் இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க வேண்டும். அதுதான் முக்கியமானது. ஏனெனில் வரலாறு அதனையே நமக்குக் காட்டியுள்ளது. எத்தனை அரச தலைவர்கள்- எத்தனை தலைவர்கள் இதுவிடயத்தில் இறங்கியிருக்கிறார்கள். கடந்த கால அனுபவங்களிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும்.

பிரபாகரனின் மனநிலையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அவர் வளையாத மனிதர்.

தனியரசு என்பதைத் தவிர வேறு எந்த ஒரு வார்த்தையையுமே ஒப்புக் கொள்வதாக அவர் சொன்னதே இல்லை.

நமது தலைவர்களை அவர் தவறாகப் புரிய வைத்திருக்கிறார். அதே நேரத்தில் தனது சவாரிக்காக வெளிநாட்டுத் தலைவர்களை பிரபாகரன் கையாளுகிறார்.

இதனை நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். அதற்காக நாம் எதனையும் மூடி வைத்திருக்கவில்லை. பேச்சுவார்த்தைகளுக்காகவும் அரசியல் தீர்வுகளுக்காகவுமான கதவுகள் திறந்தே இருக்கின்றன. என்ன சொல்ல வருகிறேன் எனில், பிரபாகரன் அனைத்து நேரங்களிலும் என்ன செய்வார் என்பதை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம்.

எப்பொழுதெல்லாம் விடுதலைப் புலிகளுக்கு இராஜதந்திர ரீதியாக அழுத்தங்கள் வருகின்றதோ அப்போதெல்லாம் சிறிலங்கா அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்கு பிரபாகரன் தள்ளிவிடுகிறார். ஆகையால் விடுதலைப் புலிகளின் மனோநிலையை புரிந்து கொள்வது என்பது முக்கியமானது. அந்த உத்தியை வீழ்த்துவதை விட அறிவாளித்தனமாக எதிர்வினையாற்ற வேண்டும்.

உதாரணமாக, இராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளின் மீது அரசாங்கம் அழுத்தங்களைத் தருகின்றபோது, மனித உரிமைகள் விடயத்தை பிரபாகரன் பயன்படுத்திக் கொள்கிறார். எதிர்க்கட்சி வரிசையில் உள்ள அரசியல் கட்சிகள், அனைத்துலக ஊடகங்கள் கண்களையும் காதையும் திறந்துவைத்துக் கொண்டு பிரபாகரன் மீண்டும் மீண்டும் பின்னுகிற இந்தச் சுற்றாடலில் சிக்காமல் நிலைமைகளை ஆராய வேண்டும்.

நம்முன் உள்ள ஒரே வழி தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தி பேச்சு மேசையில் அவர்களை உட்கார வைப்பதுதான். ஒவ்வொருவருமே இதற்காக முயற்சிக்கின்றனர். பிரபாகரனோ வெவ்வேறான உத்திகளினூடாக, அரசாங்கத்தின் மீது மீண்டும் மீண்டும் அழுத்தங்களைச் செலுத்த விரும்புகிறார். அதனூடே இராணுவ ரீதியாக வலுப்பெற நினைக்கிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் என கண்டிப்பான ஒரு காலவரறையை வைக்க முடியாது. ஆனால் அதனை எப்படிச் செயற்படுத்துவது என சில திட்டமிடல்களை வைத்திருக்கலாம். கிழக்கைப் பார்த்தால் மீள கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். ஆனால் அதுவல்ல இலக்கு. அந்தப் பகுதியின் மீதான நமது உரிமையை எப்படி நீட்டித்து வைப்பது என்பதும் உரிய சட்டம் ஒழுங்கை அங்கு உருவாக்கி அபிவிருத்திகளை மேற்கொள்வதும்தான் முக்கியமானது. அங்கு அரசியல் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அபிவிருத்திகளைத் தொடங்க தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் நமது முழு கட்டுப்பாட்டில் அது உள்ளதாக பார்க்க முடியும். அங்கு தேர்தல் நடத்துவது என்பது அரசியல் முடிவு. அது தொடர்பில் கருத்து கூற முடியாது.

தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னர் திருகோணமலை, திருகோணமலை வடக்கு, மட்டக்களப்பு மற்றும் வவுனியா என பரவியிருந்தனர். இராணுவத் தளபதிகளும் தங்களது இராணுவத்தினரை உத்திப்பூர்வமாக நகர்த்தினர். பல உத்திகள் உள்ளன. வன்னியை எடுத்துக் கொண்டால் தளபதிகள் வித்தியாசமான உத்தியைக் கையாளுவர். ஏற்கெனவே அவர்கள் கையாண்டதில் நம்பிக்கையிருப்பதால் அதனையே கையாளுகின்றனர்.

நமது இராணுவத்தினர் மீது எமக்கு முழு நம்பிக்கை உள்ளது. சந்தேகம் எதுவுமே இல்லை. அவர்களும் நம்பிக்கையோடு உள்ளனர்.

ஒவ்வொரு நாளும் இராணுவத்தின் கை ஓங்கி வருகிறது. கிழக்கைக் கைப்பற்றியுள்ளனர். வடக்கை கைப்பற்றியுள்ளனர். வன்னியில் மிகச் சிறப்பாக செயற்பட்டுள்ளனர். திட்டமிட்டபடி சரியாக செய்து வருகின்றனர்.

ஒரு பயங்கரவாத இயக்கம் 30 ஆண்டுகாலம் போராடி வருகிறது. அந்த இயக்கத்துக்கு ஆயுதங்கள் பெறுதல் உள்ளிட்டவைகளுக்கு ஒரு சரியான தொடர் வலைப்பின்னல் உள்ளது. 30 ஆண்டுகளாக நீடித்திருக்கும் ஒரு பயங்கரவாத இயக்கத்துடன் நாம் போரிட்டு வருகிறோம்.

வன்னிச் சமரில் அழிவு ஏதும் நமக்கு ஏற்படவில்லை. நாம் மீண்டும் வெற்றியீட்டியுள்ளோம். வன்னியில் நிலங்களை மீட்பது நமது நோக்கமும் அல்ல. விடுதலைப் புலிகளுக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்த வேண்டும். எதற்காக வன்னிச் சமரில் அழிவு ஏற்பட்டதாக நீங்கள் கூறுகிறீர்கள் எனத் தெரியவில்லை. விடுதலைப் புலிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பாரிய இழப்புகளுக்கு நாம் காரணமாக இருந்திருக்கிறோம். ஒட்டுமொத்தமாக நமது இலக்கான அவர்களுக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறோம்.

வன்னியில் மோர்ட்டார் குண்டு ஒன்று தவறுதலாக வெடித்ததில்தான் ஆயுதக் களஞ்சியம் எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியது.

தற்போதைய நிலையிலிருந்து 11 கிலோ மீற்றர் முன்னால் நாம் உள்ளோம். முன்னரங்க நிலையிலிருந்து குறிப்பிட்ட பிரிவினர் வந்திருக்கின்றனர். அதற்காக இழந்துவிட்டோம் என்பது அல்ல. அது ஒரு உத்தி.

உண்மையில் வன்னியை கைப்பற்றுவதில் விருப்பம் இல்லை. அது நடைமுறைச் சாத்தியமும் இல்லை. நாம் விடுதலைப் புலிகளின் பலத்தை போராளிகளை- சொத்துகளை- தளங்களை பலவீனப்படுத்த வேண்டும். அதனைத்தான் வன்னியில் நாம் செய்திருக்கிறோம்.

உண்மையான நிலைமையைப் புரிந்து கொள்ளாமலும் தளபதிகளின் திட்டங்களை அறிந்துகொள்ளாமலும் மக்களுக்குத் தவறான தகவல்களை சில ஆய்வாளர்கள் தருகின்றனர். அரச தலைவரின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் தனிப்பட்ட விடயமாக நினைக்கக் கூடாது. நாட்டின் பிரச்சனையாகத்தான் கருத வேண்டும். பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க நாடு ஒத்துழைக்க ஏண்டும். பயங்கரவாதத்தைத் தோற்கடித்து விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த மக்கள் ஆதரவளிக்க வேண்டும். ஒவ்வொருவரும் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். பொறுப்பற்ற அரசியல் உள்ளிட்ட இதர கருத்து மாறுபாடுகள் இருக்கலாம்- பயங்கரவாதத்தைத் தோற்கடித்து நாட்டில் அமைதியை நிலைநிறுத்த மக்கள் ஆதரிக்க வேண்டும்.

வடக்கில் போர் நடத்த இராணுவத்துக்கு விருப்பம் இல்லை என்று அண்மையில் இராணுவத் தளபதி கூறியிருந்தார். நானும் அதனைத்தான் கூறுகிறேன். அதற்கு அர்த்தம் என்னவெனில் நிலங்களைக் கைப்பற்றுவதில் இராணுவத்துக்கு விருப்பம் இல்லை. புலிகளை பலவீனப்படுத்தவே விருப்பம். அவர்களை பேச்சு மேசைக்குக் கொண்டு வர வேண்டும்.

5 மிக் 29 வானூர்திகளுக்காக 75 மில்லியன் டொலரை சிறிலங்கா அரசாங்கம் செலவு செய்துள்ளதாக எப்படி நீங்கள் கூறுகிறீர்கள்? வான் படையின் தேவை என்னவோ வான் படையின் பாதுகாப்பு என்னவோ அதனடிப்படையிலே கொள்வனவை இறுதி செய்வோம்.

கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட விடயம் ஒட்டுமொத்தமாகவே தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது. உண்மை நிலைமையை வெளிப்படுத்த நாங்கள் தவறியிருக்கக் கூடும். எந்த ஒரு செயற்பாட்டையும் நீதிமன்றின் முன்பாக விவாதித்துக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை.

என்னைப் பொறுத்தவரையில் நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கும் இராணுவத்துக்கும் காவல்துறைக்கும் உதவுகிறேன். அது ஒரு குற்றமெனில் அதனையே நான் செய்வேன். அதற்கு அப்பால் வேறு எந்த ஒரு குற்றமும் நான் செய்யவில்லை. ஆனால் ஏன் என்னை எல்லோரும் தாக்குகின்றனர் எனப் புரியவில்லை.

விடுதலைப் புலிகள் என்னைக் கொல்லப் பார்க்கின்றனர். உளவுத்துறையின் தகவல்கள் இதனைத் தெரிவித்துள்ளன. விடுதலைப் புலிகள் முதல் இலக்கு நான் தான். இப்போது அரசியல்வாதிகளும் என்னை இலக்கு வைத்துள்ளனர். ஏன் என்றுதான் தெரியவில்லை. ஆனால் மக்கள் என்னை ஆதரிக்கின்றனர். மின் அஞ்சல்கள் மூலமாகவும் கடிதங்கள் மூலமாகவும் எனக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நான் மிகவும் நேர்மையான மனிதன். இராணுவத்தில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பது எனது இலக்குகளில் ஒன்று. ஆயுதக் கொள்வனவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் ஆயுதக் கொள்வனவு வெளிப்படையானதுதான் என்பதை உறுதியாக என்னால் கூறமுடியும். இடைத்தரகர் இல்லாமல் - மூன்றாம் நபர் இல்லாமல் அரசாங்க நிறுவனமே ஆயுதக் கொள்வவு செய்து வருகிறது.

யாரேனும் ஒருவர் நான் இந்த ஆயுதக் கொள்வனவு ஒப்பந்தங்களின் மூலமாக ஒரே ஒரு ரெட் செண்ட் பெற்றதாக நிரூபித்தாலும் பதவி விலகுதல் மட்டுமல்ல. வாழ்வதற்கும் நான் விரும்பவில்லை. நான் மிகவும் கௌரவமான மனிதன். எவர் வேண்டுமானாலும் விருப்பபட்டால் விசாரணை செய்து கொள்ளட்டும். நான் மிகவும் மத நம்பிக்கை கொண்டவன். கர்மா மீது எனக்கு நம்பிக்கை உண்டு.

நான் ஐக்கிய நாடுகள் சபையை குற்றம்சாட்டியதாகக் கூறுவது தவறு. 30 ஆண்டுகளாக செயற்படும் விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம். உள்ளுர் சக்திகள் மூலம் அனைத்து இடங்களிலும் விடுதலைப் புலிகள் ஊடுருவ முயற்சிக்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபை இதுவிடயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றுதான் கூறினேன்.

தமிழீழ விடுதலைப் புலிகளைக் கையாளுவதைப் போல் எங்களையும் ஐரோப்பிய ஒன்றியம் கையாளக்கூடாது.

விடுதலைப் புலிகள்- பயங்கரவாத இயக்கம். நாங்கள் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம். பயங்கரவாதத்துக்கு எதிரான போர் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் எங்களுக்குத்தான் அவர்கள் உதவ வேண்டும். அந்த பயங்கரவாதத்தின் ஆணிவேரை அகற்ற எங்களுக்கு உதவ வேண்டும். அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் குற்றம்சாட்டும் சமநிலையைக் கையாளக் கூடாது.

அதேபோல் கொழும்பு கடத்தல்களை ஒப்புக்கொண்டதாக நான் கூறிய விடயத்திலும் உண்மை ஏதும் இல்லை. கடத்தல் சம்பவங்களை நான் எதிர்க்கிறேன். கடத்தல்கள் என்பதும் இராணுவ நடவடிக்கைகள் என்பதும் வெவ்வேறானது. இரண்டையும் சிலர் சமமாகப் பார்க்கின்றனர்.

கடத்தல்கள் என்பது நடக்கின்றனதான். அதனால்தான் நாம் நிறுத்த முயற்சிக்கிறோம். அதே நேரத்தில் அது ஒரு மறைமுக இராணுவ நடவடிக்கை அல்ல. ரணில் தவறாக சொல்கிறார். இராணுவம் சில உளவுரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அதனை கடத்தல் என்றால் அது தவறு என்றுதான் நான் கூறினேன். (What I am saying is, when the military conducts some intelligence operations and if you try to call them abductions, it is wrong).

கொழும்பில் தனிப்பட்ட இலாபங்களுக்காக நடக்கும் கடத்தல்கள் தவறானது என்று கோத்தபாய அதில் கூறியுள்ளார்.

இயல் கவிதை 1

இயல் கவிதை 1

உள்ளங்கைச் சூடு

எனக்குள் தவிக்கும்
உன்
இதயத்தில்
முகம் பதிக்கிறேன்!

இனியவனே!!!
அழக்கூடத்திராணியற்று
நிலம் பார்க்கிறது
வெட்கம் கெட்ட விழிகள்...

உயிர் நிரம்பிய
உன்
உதடுகளின் மௌனம்
பேரிரைச்சலாய்...

நீ
படர்ந்த
மஞ்சள் சோறு ஞாயிறுகள்...

குளியலறைக்குள் தவிக்கும்
உன்
பாடல்களின் சிணுங்கல்...


மரணம்...
மௌனமாய்...
மிக மௌனமாய்...
வந்து
எனக்குள் அதிர்ந்தது!

உலர்ந்து
நீலம் பாரித்த
பூமி
தாகித்திருக்கிறது
மழைத்துளியின் ஈரலிப்பிற்காய்...

உன்
காலடி பதிகையில்
கால் இடற நானோடி வரும்
கதவுகளில்...
துக்கத்தின் கர்ப்பம்!!!

துவைத்து மடித்த
உன்
சேர்ட்டுக்குள்
இதயம் அடம்பிடிக்கிறது...

ஜன்னலின் இடுக்கால்
உன்
துப்பலின் ஓசைகளைத்
தேடுகின்றேன்!!!

இதோ நீ
எழும்பப்போகிறாய்...
ஊடலில் தோற்றதான
பொய்க் கோபத்துடன்...

மரணம்...
மௌனமாய்...
மிக மௌனமாய்...
வந்து
எனக்குள் அதிர்ந்தது!

என் விரல்சிறைக்குள்
கடைசி மட்டும்
உன்
உள்ளங்கைச் சூடு
கைதியாய்...

நாம்
நிலாத்தின்ற
எச்சங்கள்...
மொட்டை மாடியில்

தோட்டா துளைத்த
உன்
பிறை நுதலை...
நம்பமறுக்கிறது மனசு!!!

கொடியவர்களே
கொன்று விடுங்கள்!!!
அடம்பிடித்தழும் ...
என் இதயத்தையும்
கொன்று விடுங்கள்!!!

Friday, June 15, 2007

அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாடு- சில சுமையான பதிவுகள்

அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாட்டு இலங்கை ஒருங்கிணைப்பாளர்கள் மீது குற்றச்சாட்டு
[15 - June - 2007] [Font Size - A - A - A]

* சென்னையிலிருந்து இஸ்லாமிய இலக்கிய கழக பொதுச் செயலாளர் ஹிதாயத்துல்லா அறிக்கை

சென்னையில் கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாட்டுக்கு இலங்கை பேராளர்களை அழைத்து வருவதற்குச் செயற்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முறையாகச் செயற்படத் தவறி விட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் மீது பழி சுமத்தியிருப்பதையிட்டு கடும் விசனத்தை வெளியிட்டிருக்கும் அதன் செயலாளர் எஸ்.எம்.ஹிதாயத்துல்லா `இலங்கை பிரதிநிதிகள் சிலர் தங்கள் நாட்டு அரசியல் மாச்சரியங்களையும், சச்சரவுகளையும் எங்கள் தலையில் போட்டு எம்மை மனச் சங்கடங்களுக்குள் தள்ளிவிட்டனர்' எனவும் வேதனைப்பட்டிருக்கின்றார்.

மாநாட்டுக்கு முன்னரும், பின்னரும் இலங்கையிலும் தமிழகத்திலும் இலங்கைப் பேராளர்களை அழைத்து வரநியமிக்கப்பட்டிருந்த ஒருங்கிணைப்பாளர்கள் நடந்து கொண்ட முரண்பாடுகள் தான் பேராளர்களை நெருக்கடி நிலைக்குத் தள்ளிவிட்டதாகவும் ஹிதாயத்துல்லா விடுத்திருக்கும் விரிவான அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றார்.

அந்த அறிக்கை விபரம் வருமாறு:

சென்னையில் நடைபெற்ற இஸ்லாமிய இலக்கிய மாநாடு நடப்பதற்கு முன்னதாக இலங்கையில் ஒருங்கிணைப்பாளர்களை நியமித்திருந்தோம். அவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து தாங்களாகவே இலங்கை பத்திரிகைகளில் தனித்தனி அறிக்கைகள் வெளியிட்டிருந்தனர். இச்செய்தியை அறிந்தவுடன் எங்கள் மாநாட்டின் குழு சார்பாக இலங்கை சென்று அங்கு செயல்பட்ட இரு அமைப்புகளையும் சந்தித்து சமாதானம் செய்து ஒற்றுமை ஏற்படுத்திவிட்டு, நடைபெறவிருக்கும் அகில உலக இஸ்லாமிய மாநாட்டிற்கு ஒற்றுமையாக முழு அளவில் ஒத்துழைப்புத் தருமாறு கூறிவிட்டு தமிழகம் திரும்பினோம். அதேவேளையில் அங்கு இருசாராரும் தங்களைப் பெரிதுபடுத்தி தனித்தனியே பத்திரிகைகளில் செய்தி வெளியிட்ட விபரம் இலங்கையில் யாவரும் அறிந்த விஷயமாகும்.

மாநாட்டின் முந்தைய நாள் நாங்களும் இலங்கைப் பேராளர்கள் ஒற்றுமையாக மாநாட்டிற்கு வருவார்கள், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பேராளர்கள் விபரப்பட்டியல்களை ஒன்றாகவே தருவார்கள் என்று நாங்கள் மிகவும் நம்பிக்கையாக எதிர்பார்த்திருந்தோம். ஆனால், அவர்கள் பிரிவினைப் பிரச்சினை தொடர்ந்தது.

ஒரு குழுவினர் 75 நபர்களின் பெயர்ப்பட்டியலை மட்டும் எங்களுக்கு அனுப்பியிருந்தனர். அடுத்த பிரிவினர் மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் பேராளர்களின் பெயர்ப்பட்டியலை எங்களுக்கு அனுப்பவில்லை.

பட்டியல் கிடைக்கப் பெற்ற முதல் குழுவினர் சென்னை வந்தவுடன் நாங்கள் அவர்கள் தங்குவதற்கான அறைகளை ஒதுக்கியிருந்தோம். அந்த நேரம் அவர்கள் பேராளர்களிடம் வசூலித்த பணத்தை எங்கள் மாநாட்டின் நிர்வாகிகள் கேட்டும் தரவில்லை. பதிவும் செய்யவில்லை. தொடர்ந்து மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையிலும் அவர்கள் பதிவு செய்யவில்லை. அதனால் அவர்களுக்கு வழக்கமாக வழங்கப்பட வேண்டிய பேட்ஜ், உணவுப் பொருள் கூப்பனைத் தொடர்ந்து வழங்க முடியாத சூழ்நிலைக்கு எங்களை ஆளாக்கினார்கள்.

அவர்கள் வெளிநாட்டு விருந்தினர்கள் என்பதால் உணவு கூப்பன்கள் இல்லாமலேயே அவர்கள் தங்கியிருந்த அறைகளுக்கும் காலைச் சிற்றுண்டிகளை நேராக அனுப்பி வைத்தோம். மாநாடு நடைபெற்ற இடங்களில் இவர்கள் பதிவு செய்யாததால் கூப்பன் இல்லாத உணவு வரிசைகளை உருவாக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். இதன் காரணமாக உள்ளூர் பொதுமக்களும் கூப்பன் இல்லாமல் உணவு அருந்தும் நிலைமையை உருவாக்கினார்கள்.

மேலும், இரண்டாம் நாள் மதியம் உணவு வழங்கும் புதுக்கல்லூரி விடுதியில் சிலரின் பொறுமையின்மை காரணமாகப் பிரச்சினைகளை ஏற்படுத்தினர். அனைத்து நேரங்களிலும் அற்புதமான உணவுகள் வழங்கப்பட்டதாக மாநாட்டிற்கு வந்த அனைவரும் தெரிவித்த நிலைமையில், இவர்களில் சிலர் தொடர்ந்து பிரச்சினை பண்ணிக் கொண்டேயிருந்தனர்.

மாநாடு முடிந்த மறுநாள் பரிசுப் பொருட்களைப் பெறுவதற்காக வேறு வழியின்றி இவர்கள் வசூலித்த மாநாட்டிற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலையேற்பட்டது. அப்பொழுதும் இரண்டு இடங்களில் மாநாட்டின் பரிசுப் பொருட்களைப் பெறுவதற்கு முயற்சி செய்தனர்.

எங்களுக்கு இலங்கைப் பேராளர்களின் ஒத்துழைப்பு கிடைக்காத நிலையிலும் பேராளர்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் செய்து வந்தோம். மேலும் இலங்கைப் பேராளர்கள் தங்களை அழைத்து வந்த மேற்கண்ட குழுவினர் தங்களிடம் அதிகமாகப் பணம் வசூலித்து ஏமாற்றி விட்டதாக எங்களிடம் முறையிட்டனர். அதில் குறிப்பாக கண்டி, மௌலான சலாவூதின் அவர்கள் எங்களிடம் மிகவும் வேதனையாக குழுத் தலைவர் மீது தனது புகாரினை கூறிவிட்டு எங்களிடம் ஒரு கடிதத்தையும் அளித்து விட்டு சென்று விட்டார். தேவைப்பட்டால் அவரிடமும் விசாரித்துக் கொள்ளலாம் (அவருடைய கடிதத்தின் நகல் இத்துடன் இணைத்துள்ளோம்).

அடுத்ததாக 40 பேரை அழைத்து வந்த குழுவினர்களில் நிலாம் தலைமையில் வந்த 15 நபர்கள் சரியான முறையில் கட்ட வேண்டிய பேராளர்களுக்குரிய கட்டணத்தைச் செலுத்தி பேட்ஜ் மற்றும் உணவுப் கூப்பன்களைப் பெற்று முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். அவர்கள் உண்மையான பேராளர்களாக நடந்து கொண்டனர். அவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

மீதம் 25 பேராளர்களை அழைத்து வந்தவர் தான் வசூலித்த பேராளருக்குரிய கட்டணத்தை மாநாடு இறுதியாக முடியும் வரையிலும் செலுத்தவில்லை. எனினும் அவர்களுக்கு தங்குமிடம் உணவு ஆகியவற்றை வழங்கினோம்.

மேலும், தமிழகத்தில் இம்மாநாட்டிற்கு எதிர்ப்பாக இருந்து செயற்பட்ட சிலரின் தூண்டுதலின் பேரில் மாநாடு நடைபெற்ற மூன்று தினங்களும் இலங்கைப் பேராளர்களை அழைத்து வந்த குழுத் தலைவர் இடையூறுகளைச் செய்து கொண்டேயிருந்தார். காவல்துறை அவரைக் கண்காணிக்கும் நிலையை அவரே ஏற்படுத்தினார். மாநாடு முடிந்த மறுநாள் வேறு வழியின்றி பத்து நபருக்கு உரிய கட்டணத்தை மட்டும் செலுத்தி விட்டு இருபத்தைந்து பேராளர்களுக்குரிய பரிசுப் பொருட்களை அலுவலர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக பெற்றுச் சென்றார்.

இலங்கைப் போராளர்களை அழைத்து வந்தவர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால், இவை பயனளிக்காது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதேவேளையில் இலங்கை அமைச்சர்களும் முக்கிய பிரமுகர்களும் உண்மையான போராளர்களும் மிகவும் கண்ணியமான முறையில் நடந்து எங்களது மனக் குறையை முற்றிலும் நீங்கினர்.

முக்கியமாக மாநாட்டிற்கு அழைத்துவரப்பட்டவர்களில் பலர் குடும்பத்தோடு தமிழகச் சுற்றுலா வந்தவர்கள் என்றும் அவர்களிடம் பேராளர்களுக்குரிய விமானக் கட்டணத்தை கூடுதலாகப் பெற்றுத் தமிழகத்தில் பல வசதிகள் செய்து தருவோம் என்று அழைத்து வந்து அவர்களைக் குழுத் தலைவர்கள் ஏமாற்றிவிட்டனர் என்றும் பின்னர் நாங்கள் தெரிந்து கொண்டோம். தங்கள் தவறுகளை மறைக்க எங்களைப் பொறுப்பாளர்களாக ஆக்கமுயன்று எங்கள் மீது குற்றம் சுமத்தினார்கள் என்பதுதான் உண்மை. மேலும் இதைப்பற்றி இலங்கைப் பத்திரிகைகளில் தங்களை நடுத்தெருவில் மாநாட்டினர் நிறுத்திவிட்டனர் எனக் கூறி தங்களைத் தாங்களே தங்கள் நாட்டில் அசிங்கப்படுத்தியது வெட்கப்பட வேண்டியதாகும். ஜின்னா ஷரிபுதீனுக்கு பாராட்டு வழங்க ஏற்பாடு செய்திருந்தும் அவர் அதைப் புறக்கணித்தன் மூலம் அவர் தான் மாநாட்டை அவமதித்தார். அவருக்குப் பொற்கிழி வழங்குவதாக யாரும் வாக்களிக்கவில்லை. வசதியற்றவர்களுக்கும், சக சமயச் சகோதரர்களுக்கும் மட்டுமே பொற்கிழி வழங்க வேண்டுமென்றும் உயர்மட்டக் குழு முடிவு செய்தது.

இலங்கை அமைச்சர்களை நாங்கள் அழைத்தபோது அவர்கள் இருவருமே மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிரும்புவதாகவே கூறினர். எனவே அவர்களை முதல் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்தோம்.

தமிழக முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சி அவருக்கு விருது வழங்குவது மட்டுமே நோக்கமாக அழைக்கப்பட்டது. அதில் விருது வழங்கும் தமிழக ஆளுநர், மாநிலங்களவை துணைத்தலைவர் தவிர வேறு யாரும் பேச்சாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பில்லை. உடல்நிலை காரணமாக தமிழக முதல்வரை விரைவில் அனுப்பிவைத்து விடவேண்டும் என்பது எமக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை. இலங்கை அமைச்சர்கள் யாரும் தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இடம்பெறவேண்டுமென்று எங்களைக் கேட்கவும் இல்லை. மேலும் இதில் பாதுகாப்புப் பிரச்சினைகளும் உண்டு. அப்படியிருக்க நாங்கள் வேண்டுமென்று முதல்வர் நிகழ்ச்சியில் இலங்கை அமைச்சர்களை இடம்பெறச் செய்யவில்லை என்று கூறுவது அப்பட்டமான பொய்.

இலங்கைப் பிரதிநிதிகளில் சிலர் தங்கள் நாட்டு அரசியல் மாச்சரியங்களையும், சச்சரவுகளையும் எங்கள் தலையில் கொண்டு வந்து வைத்து எங்களை மிகவும் மனச் சங்கடங்களுக்கு ஆளாக்கினார்கள் என்பது தான் உண்மை.

வாழ்வு தொடங்கும் - யுத்தம்-3







மிராஜ் விமானங்களில் வந்து இலங்கையின் இறமையையும் மீறி உணவுப்பொதிகள் வீசியது முதல்
17ம் திருத்தச்சட்டம் மூலம் மாகாண முறைமையை அறிமுகம் செய்து
இலங்கையின் இனப்பிரச்சினையின் புதிய அத்தியாயாம் ஒன்றை இந்தியா ஆரம்பித்தது.
July 29, 1987. - Indo Lanka agreement
May 21, 1991 Rajiv Gandhi Assassination

எனினும் 1991 ராஜீவ் காந்தியின் படுகொலையுடன் இன்னுமொரு திசைக்குத்திருப்பம் கண்டது.

Wednesday, June 13, 2007

வாழ்வு தொடங்கும் - யுத்தம்-2



யுத்தம் பரிசளிக்கப்படுகின்றது...1983
இ(ஈ)னக்கலவரம் எம் தீவு முழுக்கப்பரவிக்கொள்கின்றது.
எனக்கு 5 வயதிருக்கும். இன்னமும் அழியாமல் மனதில் பதிந்து விட்டது.
என் மாமனாரை அடிக்கும் பொலிஸார்
என் வீட்டு முற்றதில் வெடிக்கும் கண்ணீர் புகைக்குண்டு
கண்திறக்க அவதிப்படும் என் இளைய தம்பி
கிழிந்த உடையுடன் வீட்டுக்கு வந்த் என் தந்தை
இன்னும் என் மனக்கண்ணில்....
1983-1986 வரை ஒரு மௌனமான யுத்தம்...
விடுதலை இயக்கங்கள் பற்றிய கதைகள்
துண்டுப்பிரசுரங்கள்
இவ்வளவுதான்
1986- முதலாவது ஈழப்போர் உக்கிரமடையும் காலம்
கொழும்பில் தற்காலிகமாக 1 வருடம் தங்கல்
1987- இந்திய அமைதிப்படை வருகையுடன்
மீண்டும் தயகத்தில்.....
1990 எம்மை வேரருக்கும் வரை தமிழ் அன்பர்களுடன் கூட்டு வாழ்கை.
இன்பம், யுத்தம், வளம் என எல்லாம் பகிர்ந்து
வாழ்ந்த இன்பகாலம்.
பதுங்கு குழிக்குள் அடிக்கடி தஞ்சம் கண்டு
இயக்க வீரர்களை- நெருங்கி நேசித்து
எமக்கும் தனி நாடு வேண்டும் என்று பள்ளிக்கூடமெங்கும் சத்த்ம் செய்த
மகத்தான காலம்.

Thursday, June 7, 2007

வாழ்வு தொடங்கும் - யுத்தம்-1

சின்னச்சின்ன ஞாபகங்கள்
வயது 3 முடிந்திருக்கும். ஆசிரியத்தாய்க்கும், வர்த்தக தந்தைக்கும் இயல்பாயுள்ள இடைவெளியில் வாழ்வு தொடங்கும் - யுத்தம்
வளர்ப்புக்கு ஒரு உறவினரிடம் ஒப்படைக்கப்படுகின்றேன்.....
பெற்றோர் மீதுள்ள பாசம் வளர்ப்புப்பெற்றோர் மீது இடம் மாறிப்போகின்றது.
3 வருடங்களின் பின் மீண்டும் பெற்றோரிடம் .........
உள்ளம் தகிக்கும் தணல் தாண்டி......
விரக்தி எனக்கு- 5 வயதில் பழகிப்போக......வாழ்வு தொடங்கும் - யுத்தம்
இரண்டு பாசங்கள்: பெற்றோர்: வளர்ப்புப்பெற்றோர்
யாரிடம் ஒட்டிக்கொள்வது....
இறுதியில் பெற்றோர் என்று யாரோ முடிவு செய்ய
நானும்......

Wednesday, June 6, 2007


நீண்ட நாள் - யாகம் இன்று அரங்கேறுகின்றது